Sunday, February 28, 2010

கட்டாய திருமண சட்டமும் இசுலாமிய எதிர்ப்பும்

உலகலாவிய இசுலாமிய எதிர்ப்பு என்பதுதான் இந்த நூற்றாண்டின் முற்போக்கு சிந்தனை என வல்லரசு நாடுகளும், இந்தியா போன்ற அமெரிக்க அடிமை நாடுகளும் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான தொடர் தாக்குதல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிகழ்த்திய வண்ணம் உள்ளனர்.

உலக கொடுங்கோலன் ஜார்ஜ் புஸ், தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இஸ்லாமிய எதிர்ப்பினை இன்னொரு சிலுவை யுத்தம் என பிரகடனப்படுத்தி முடுக்கிவிட்ட பணி, இன்று உலகம் முழுவதும் அமெரிக்க நட்பு நாடுகளின் முதல் முக்கிய பணியாக செயல்படுத்தப்படுகிறது.

அமெரிக்க மற்றும் அடிமை நாடுகளில் ஒரு மதத்தினருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் பேரழிவு வேலைகளை நியாயப்படுத்தும் விதமாக தீவிரவாத ஒடுக்குமுறை, நாட்டின் பாதுகாப்பு என்ற வேறு பெயர்களில் மனித உரிமைகள் மீறப்படுகிறது. இந்த பிரச்சாரங்களினால் நடுநிலையாளர்களையும், முற்போக்குவாதிகளையும் வெகுஜனங்களையும் தனது நிலை குறித்து நியாயப்படுத்துகின்றனர். இதற்காகவே உலகலாவிய செய்திகளும் தயாரிக்கப்படுகின்றது. இந்தத் தொடர் பிரச்சாரங்களால் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வுகளை உற்பத்தி செய்து இசுலாமியர்களின் மேல் வெறுப்பு அலைகள் உருவாக்கப்படுகிறது.
இசுலாமியர்களை மட்டும் தனி சோதனை எனும் பெயரில் பொது இடங்களில் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தி மன அளவில் காயப்படுத்துவது என்பது அமெரிக்கா தொடங்கி இன்று எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

புவி வெப்பமயமாதலை விட மிக முக்கிய அச்சுறுத்தலாக இசுலாமியப் பெண்கள் அணியும் புர்கா - பாரம்பரிய உடைகளை மேலை நாடுகள் தடை செய்கின்றன‌. புர்கா அணியும் பெண்கள் எல்லோருமே உடம்பில் வெடிகுண்டுடன் இருப்பவர்கள், தொப்பி, தாடி வைத்திருக்கும் ஆண்கள் எல்லோருமே தீவிரவாதிகள் என்பது போன்ற உணர்வினை மக்கள் மத்தியில் திட்டமிட்டே எல்லா ஊடகங்களும் செய்து வருகின்றன‌. ஒரு மதத்தைச் சார்ந்த குழந்தைகளின் அருகில் தங்கள் குழந்தைகளை அமர்த்த வேண்டாம் என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தில் கேட்பது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது. பள்ளி குழந்தைகளிடம் கூட மதத்தின் பெயரால் பகைமை பாராட்டுவது என்பது எத்தனை இழிசெயல்.

இது ஒரு மதத்தவரை மட்டும் சமுக ஓட்டத்திலிருந்து பிரித்து அன்னியப்படுத்தும் முயற்சியாகும். அவர்களின் மத சம்மந்தப்பட்ட எந்த ஒரு அடையாளமும் சமுகத்தின் அச்சுறுத்தலாக கருத வைப்பது, அவர்களை சுய குற்றவுணர்வு உள்ளவர்களாக்கி ஒட்டுமொத்த மக்களின் பார்வையிலும் மிகவும் கீழ்த்தரமான‌வர்கள் என்ற நிலைக்கு உட்படுத்துவது தான் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் நோக்கமாகும்.

இந்த முயற்சி இந்தியாவிலும் இந்துத்துவா எனும் உட்கருவுடன் நாட்டின் கட்டமைப்புகளில் எல்லா நிலைகளிலும் இசுலாமிய அழிப்பு வேலைகளை செய்து வருகிறது. அதை நம் நாட்டில் நடக்கும் போலி என்கவுண்டர்கள், ஆள்கடத்தல்கள், மதக்கலவரங்கள், வழிபாட்டு நிலையங்களை அபகரித்தல், நீதி மறுத்தல், இட ஒதுக்கீட்டில் புறக்கணித்தல், வாழ்வுரிமை மறுக்கப்படுதல் என ஒரு மதத்திற்கு எதிராக பல்முனை தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

இசுலாமியர்களின் சமுக உரிமைகளில் இந்திய நீதித் துறையின் நிலைபாடுகளும் பல இடங்களில் விஷ‌த்தைக் கக்குவதாகவே உள்ளது.
"பிரதியும் சாவான், வாதியும் சாவான் ஆனால் வழக்கு மட்டும் தலைமுறை கடந்து நிலுவையில் இருக்கும்” என கேலி செய்யும் அளவிற்கு நாட்டில் எத்தனையோ லட்சம் வழக்குகள் நிலுவையில் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, சில நீதிபதிகள் எப்பொழுதாவது அரசுக்கு அறிவுரை கூறுவதும் உண்டு. அதில் ஒன்றுதான் கட்டாய திருமணச் சட்டம். ஏற்கனவே திருமணங்களைப் பதிவு செய்யும் இசுலாமிய சமுகத்தினர் இதை எதிக்கும் அவசியம் என்ன இதுவும் பிறப்பு ,இறப்பு சான்றிதழ் போலத்தானே என சில கற்றறிந்தவர்களும் கூறிவருகின்றனர்.

உண்மை தான் பிறப்பும், இறப்பும் எந்த ஒரு மாற்றம் இல்லாதது. ஒருவன் இந்த உலகத்தில் பிறந்து விட்டான் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதை போல் ஒருவன் இந்த உலகத்தை விட்டு மரணித்தாலும் அதையும் யாராலும் மறுக்க முடியாது. இந்த இரண்டு விசயங்களுக்கும் கட்டாயப் பதிவுகள் இருப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. ஆனால் திருமண உறவுகளுக்கு பதிவு சட்டங்கள் என்பது அதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், அவசரமாக சட்டம் அமுலாக்கப்பட்டதன் நோக்கத்தினையும் மனதில் கொண்டு யோசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்த சட்ட அறிவுரைகளை உடனடியாக அமுல்படுத்திய மாநிலங்களில் முதன்மையானது இசுலாமியர்களைப் பொது எதிரியாய்க் கருதும் மோடியின் குஜராத் தான். இதில் தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த அவசர ஆர்வம் எனத் தெரியவில்லை.

ஒரினச்சேர்க்கைவாதிகளும் திருமணம் செய்துகொள்ளலாம் என சட்டம் இயற்றபடுகிறது. விரைவில் மிருகத்திற்கும் மனிதனுக்கும் திருமணம் செய்யலாம் எனவும் சட்ட்ங்கள் தீட்டலாம். ஆனால் மிகவும் பண்பாட்டுடன் மற்ற எல்லாருக்கும் முன் மாதிரியாய் நடக்கும் இசுலாமிய தனியார் திருமண சட்டத்தினால் பெரிய பேரிழப்பு வருவதுபோல கட்டாய பதிவுச் சட்டம் உடனடியாக அமுலாக்க வேண்டும் என்ற அவசர ஆர்வம்தான் ஏன்?

மணமகன், மணமகள், தாய், தந்தை சாட்சிகள், உறவுகள் என எல்லாரும் கூடி அரசு காஜியின் பதிவு ஒப்பந்தத்துடன் பதிவு செய்து நடத்தி வைக்கப்படும் ஒரு திருமணத்தை ஒரு சார்பதிவாளர் சரிபார்த்து இந்தத் திருமணம் செல்லும், செல்லாது என தீர்மானிக்கும் அதிகாரம் யார் கொடுத்தது? லஞ்சம், அலட்சியம், அதிகாரம் என ஊறிப்போய் உள்ள அதிகாரிகளுக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டால் என்னவாகும் நிலைமை? ஏற்கனவே போதிய கல்வி இல்லாத, பொருளாதாரத்தில் தாழ்வு நிலையில் இருக்கும் இசுலாமிய சமுகம் இதை எப்படி எதிர் கொள்ளும்?

திருமணமாகிய 90 நாட்களுக்குள் முறைப்படி திருமணச் சான்றிதழ் பெறவேண்டும், அப்படி இல்லையென்றால் அந்தத் திருமணம் செல்லாது என சார்பதிவாளரால் அறிவிக்கப்பட்டால், திருமணமாகிய 90 நாட்களில் புது தம்பதிகள் குடும்பம் நடத்தி, மணப்பெண்ணும் கருவை சுமக்கும் நிலையில், ஒரு பதிவாளர் இந்தத் திருமண உறவு செல்லாது எனக் கூறிவிடமுடியுமா? இல்லை கருவில் இருக்கும் குழந்தையின் தகப்பன் இவன் இல்லை என்று கூறிவிடமுடியுமா?

ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் சாதாரண‌மாக ஒரு ரேசன் கார்டு பதிய வேண்டும் என்றோ, இல்லை உறுப்பினர் நீக்கவோ, சேர்க்கவோ நாம் படும்பாடு நமக்குத்தான் தெரியும். ரேசன் கார்டில் ஆரம்பித்து, சாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் என அரசு அலுவலகங்களுக்கு அலைந்து, அலைந்து நாம் ஒரு வழியாகிவிடும் சூழலில், போதாக்குறைக்கு திருமணப் பதிவு சட்டம் வேறு.

இப்பொழுது தாராள‌மாக சாட்சிக் கையெழுத்து போட முன்வரும் இசுலாமிய சமூகத்தார்கள் இந்த சட்டம் வருமேயானால் சாட்சி கையெழுத்துப் போட தயக்கம் காட்டுவார்கள். சார்பதிவாளர் இந்தத் திருமணத்தை அங்கீகரிக்கும் வரைக்கும் மணமக்கள், பெற்றோர்களுடன் சேர்ந்து சாட்சி கையெழுத்துப் போட்டவனும் இது சரியில்லை, அது சரியில்லை என பதிவாளர் அலுவலகம் நோக்கி அழைய வேண்டிவரும்.

பெண் குழந்தைகள் அதிக விகிதாச்சாரம் உள்ள, வறுமை சூழலில் இருக்கும் சமுகம் திருமணப் பந்தங்களை மணமகன், மணமகளின் உடல் மன முதிர்சியின் அடிப்படையில் திருமணங்களை நடத்தி வைக்கின்றனர். இதில் சில நேரங்களில் அரசாங்கம் சொன்ன வயது வரம்பினை அடைவதற்கு முன்னமே திருமணங்கள் நடக்கும் சூழலும் உள்ளது. பொதுவாக அதிக பெண் குழந்தைகள் இருக்கும் வறுமையான குடும்பங்களில் வயதான பெற்றோர்கள் மற்ற பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு அரசு நிர்ணயம் செய்த திருமண வயதிற்கு முன்னமே திருமணம் செய்யும் பழக்கங்கள் மற்ற மதத்தினர் போலவே இசுலாமியர்கள் மத்தியிலும் உள்ளது.

கட்டாய திருமணப் பதிவு சட்டம் என்று கொண்டு வந்தால் அதன் மூலம் இது போன்று முடிந்த திருமணங்களை செல்லாது என அறிவித்து விடுமா? பலதார மணம் புரியும் இசுலாமியர்களுக்கு எத்தனை முறை பதிவுகள் நடக்கும்? பொது சட்டத்தினை ஏற்றுக் கொண்டு வாழும் இந்திய இசுலாமியர்கள் திருமணம், சொத்துரிமை, வாரிசு, மண விலக்கு, அனாதைகள் பேணுதல், பொது நிதி சம்பந்தபட்ட 10 வகையான விசயங்களில் மட்டும் இசுலாமிய தனியார் சட்டத்தினைப் பேணுகின்றனர்.

ஒரு இசுலாமியர்களின் தனிமனித ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையில் மட்டும் கடவுளின் சட்டங்கள் எனக் கருதும் இந்த 10 விதமான சட்டதிட்டங்களை சுமார் 1341 வருடங்களாக எந்த காலகட்டத்திலும் ஒரு சிறு மாற்றம் கூட இல்லாமல் கடைபிடித்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவிற்கு முன்னதாகவே ஆங்கிலேயன் காலத்திலேயே இசுலாமியர்கள் அவர்கள் மத வழி தனியார் சட்டங்களை கடைபிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு, சுதந்திரத்துக்குப் பிறகும் தனியார் சட்டங்களைத் தொடர்ந்து கடைபிடிக்கவும் இந்திய சட்டங்கள் இசுலாமியர்களுக்கு வழிவகை செய்துள்ளது.
இசுலாமியர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதுமாக இறைவனின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக வாழும் சூழலில் இது போன்ற திடீர் திடீர் தலையிடுகள், சட்ட மறுபரிசிலனை போன்றவைகள் தங்களின் மத உரிமைகள் அனைத்தையும் பறித்து பொது சிவில் சட்டம் என்ற நிலைக்குள் இட்டுச் சென்றுவிமோ என்ற அச்சம் இயல்பாகவே உள்ளது.

இன்றைய சூழலில் இந்துத்துவா வர்க்கவாதிகளின் கோரிக்கையும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதேயாகும். அதன் பிரதிபலிப்புகள் சில சமயங்களில் பார்ப்பனிய‌ சாயம் உள்ள எல்லா கட்டமைப்புகளிருந்தும் இசுலாமிய எதிர்ப்பினை பல்வேறு முனைகளில் நடத்திக் கொண்டுள்ளது.

சுமார் 800 வருட இசுலாமிய ஸ்பெயின் நாட்டில் இன்று ஒரு இசுலாமியாரும் இல்லாமல் அழிக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் முதன் முதலில் இயற்றப்பட்ட சட்டமே திருமண சட்டம் தான். இதற்குப் பின்னர் 70 வருடங்களில் ஸ்பெயினில் ஒருவர் கூட இசுலாமியர்களாய் இல்லை எனும் அளவிற்கு அந்த நாட்டிலிருந்து முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டனர். பார்ப்பன‌ ஆரியன் ஆள‌ப்போகும் அகண்ட பாரத கன‌விற்கு ஸ்பெயினை முன்னுதாரணம் எடுத்தால், இந்திய முசுலிம்களும் அதே ஸ்பெயினில் இருந்து படிப்பினை பெறத்தான் வேண்டும்.

கட்டாய திருமணச் சட்டம் இசுலாமிய கூட்டு சமுகத்தினை தகர்க்கும் முயற்சி. சாட்சிக்கு மட்டும் ஆளிருந்தால் போதும் பதிவாளர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என பள்ளிவாசலுக்கும் இசுலாமியனுக்குமான உள்ள தொடர்பை துண்டிக்கும் செயல். அரசியல் கட்டமைப்புகளில் எந்த அதிகாரத்திலும் இல்லாத ஒரு சமுகத்திற்கு ஜமாத் என்ற சமுக கூட்டமைப்பின் மூலமாகத்தான் ஒற்றுமையுடன் தங்களது வாழ்வுரிமைகளை பாதுகாத்து வருகின்றனர். இந்த கூட்டமைப்பும் தகர்க்கப்படுமானால் இசுலாமியர்கள் இந்த நாட்டில் முழுவதுமாய் சிதறடிக்கப்பட்டு, வாழத் தகுதியற்ற சமுகமாய் ஆகிவிடும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டு நம்பிக்கை இழந்த இளைஞர்களால் நாடு அமைதியின்மையை எதிர்கொள்ள நேரலாம். இந்த அச்சம் மிகைபடுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், சம காலத்திய தொடர் நிகழ்வுகளின் ஒருங்கிணைந்த போக்கு இந்த அச்சங்களை உறுதிசெய்கிறது.

சட்டசபையில் இந்த சட்டம் கொண்டுவரும்போது அதை எதிர்த்து கருத்து சொல்லக்கூட முடியாத ஒரு சமுகமாகத்தான் இருந்தது. ஆனால் ஜமாத் எனும் சமுக கூட்டமைப்பின் தொடர் முயற்சியால் முதல்வர் அவர்கள் மறுபரிசீலனை செய்வதாக சமீபத்தில் கூறியுள்ளது சற்று ஆறுதலான செய்தியாகும்.

இசுலாமிய சமுகம் அரசியல்,அதிகார கட்டமைப்புகளுக்குள் நுழையாதவரை இது போல பல அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து சந்திக்க வேண்டிவரும்


இராசகம்பீரத்தான் மால்கம் X

FarookMo@hcl.in


Saturday, February 27, 2010

ஊடகங்கள் மற்றும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு!


இவ்வருட சுதந்திரதினத்தின்போது, இந்நாட்டின் தேசிய கொடியை மரியாதை செய்ய பாபுலர் பிரண்ட் என்ற அமைப்பினர் முஸ்லீம்கள் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்களின் இச்சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றே சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் கொண்டாட முடிந்தது.

மதத்தின் பெயரால் வேறுபாடு காட்டுவது அரசுக்கு நியாயமானதல்ல. ஆனால் நமது சமூகத்தில் உருவாகியுள்ள பகைமை உணர்வு முஸ்லிம்களின் சுதந்திர தின விழாவைக் கூட தடுக்கும் வகையில் வளர்ந்துள்ளது.

இந்நாட்டின் விடுதலைக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாட்டு விடுதலைக்கு இரத்தம் சிந்தியுள்ளனர். ஆனால் தேசபக்தி என்பது பெரும்பான்மை மதத்தவரின் உடமை போன்ற சித்திரங்கள் ஊடகங்களில் கட்டமைக்கப்படுகிறது.

சமீபத்தில் ஒரு சில ஆண்டுகளில் வெளியாகியுள்ள பல தமிழ் திரைப் படங்களில் முஸ்லிம்கள் வில்லன்களாகவும், பயங்கரவாதிகளாகவும், கோயில்களில் குண்டு வைப்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.இந்த அருவருக்கதக்க விஷமத்தை எந்த குற்ற உணர்வுமின்றி இந்த திரைப்படங்கள் தணிக்கையில் சான்று பெற்று வெளிப்படுத்தியுள்ளது.
ஆரம்ப கால 1920 ஆண்டுகளில் மேற்கத்திய திரைப்படங்களான பேச்சற்ற படங்களில் கூட தாடி வைத்த அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களே வில்லன்களாகவும், போக்கிரிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். இந்த அபத்தம் இன்னமும் தொடர்கிறது. பல்வேறு அமெரிக்க திரைப்படங்களில் அரேபிய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தொடர்ந்து முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வருகிறது. சிமி என்ற முஸ்லீம் அமைப்பிற்கான தடை அடிப்படையில் தவறானது என நீதிமன்றம் முடிவு செய்த செய்தி வெளிவந்தவுடன் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அகமதாபாத் குண்டு வெடிப்புக் காட்சிகளையும், செத்துக் கிடந்த மனிதர்களையும் காட்டியது.

பின் சிமியின் கைது செய்யப்பட்ட ஊழியர்களைக் காட்டியது. ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் இந்தக் கொடூரத்தை செய்து முடித்தது ஆங்கிலக் காட்சி ஊடகங்கள். சராசரி மனிதனின் மனதில் பயங்கரவாத அமைப்புத் தடையை நீதிமன்றம் நீக்கினால் மீண்டும் குண்டுவெடிக்கும் என்ற கருத்தை அது ஆழமாகப் பதிய வைக்க முயன்றது.

பயங்கரவாத அமைப்பு என்பது சிமி என்ற வட்டத்தை தாண்டி ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகம் என்ற பதிவு ஏற்கனவே சராசரி பார்வையாளர்கள் மத்தியில் தொடர்ந்து இந்த ஊடகங்கள் பதிய வைத்துள்ளது.முஸ்லீம் பயங்கரவாதத்தைப் பற்றி பேசிய ஊடகங்கள் வசதியாக இந்து வெறியின் கோரத்தை மறக்கச் சொல்லுகிறது.

சிறுபான்மை என்பது பெரும்பான்மைக்குக் கட்டுப்பட்டது என்ற எண்ணம், அரசியல் ஊடகங்களில் மேலோங்கியும் உள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது. முஸ்லீம்கள் கையில் உள்ள ஊடகங்கள் கூட இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு தங்களை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது. எனவே தான், முஸ்லீம்கள் சுதந்திர தின விழாவைக் கொண்டாடி இச்சுதந்திரத்திற்கு தாங்களும் தியாகம் செய்தவர்கள் என நிரூபித்துள்ளனர்.
உலகம் முழுவதும் முஸ்லீம்கள் இந்த ஊடக வழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னிட்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஊடகங்களில் இது வெகு அதிகமாக அதிகரித்துள்ளது. சாதாரண முஸ்லீம் ஒரு பயங்கரவாதியாகவும், பயங்கரவாத செயல் புரியும் தன்மை கொண்டவனாகவே கருதப்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனது நண்பர் ஒருவர் சிறந்த மனித உரிமைப் போராளி. அவரும், அவர் மனைவியும் ஒரு மனித உரிமைப் பயிலரங்கில் பங்கேற்க வேண்டி அமெரிக்காவிற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சென்றார்கள். அவர் முகத்தில் அடர்த்தியான தாடி வைத்திருந்தார்.அமெரிக்காவின் ஒவ்வொரு விமான நிலையத்திலும் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு கடும் வேதனைக்கு உள்ளானார். சில இடங்களில் அவரின் மல வாயிலும் கூட கை நுழைத்து ஏதேனும் மறைக்கப்பட்டுள்ளனவா என போலீசார் சோதனை செய்தனர். அவரின் நிலைக்கு காரணம் அவர் தோற்றத்தில் ஒரு முஸ்லீம் போல காணப்பட்டது தான்.

பெங்களூரைச் சார்ந்த முஸ்லீம் மருத்துவர் & அமீது ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதி என சந்தேகப்பட்டதையும் ஊடகங்கள் அவரைப் பற்றி தாறுமாறாக சித்தரித்ததையும் பின் அவர் அப்பாவி என விடுவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களின் தார்மீக உரிமையான முஸ்லீம் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை (தாடி வளர்ப்பது, குல்லா அணிவது) பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

ஒரு முறை ஊடகங்களால் பதியப்பட்ட பொய்யான பிம்பம் சராசரி மனிதர்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்து விடுகிறது.கடந்த 2006 ஜூலை 22ம் தேதி கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த சமயம். பத்திரிகைகளில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. 5 முஸ்லீம் இளைஞர்கள் கோவையை தகர்க்க சதி செய்ததாகவும், வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் பின்னர் போலீசார் போட்ட பொய் வழக்கு என வேறு ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் முந்தைய செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சதவீதத்தைக் கூட பிந்தைய செய்திக்கு வழங்கவில்லை.

ஊடகங்களில் இந்த ஜனநாயக விரோதப் பார்வை நாட்டின் வளர்ச்சி, பண்பாடு மற்றும் ஒற்றுமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் ஆழமான பிரதிபலிப்பை காவல் துறையில் நாம் காண முடியும். காவல் துறை எப்போதும் முஸ்லிம்களை சந்தேகத்துடனேயே பார்க்கிறது.1996ஆம் ஆண்டு நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற முசோரியில் உள்ள ஆட்சித் துறையினருக்கான பயிற்சி கழக ஆய்வில் முஸ்லிம்களை எதிரிகளாகவும், பொது அமைதியை குறைப்பவர்களாக கருதுவதையும் கலவர சமயங்களில் இந்த சார்பு மற்றும் ஓரவஞ்சனையுடன் காவல் துறையில் பணிபுரிபவர்கள் நடந்து கொள்வதையும் வெளிப்படுத்தி உள்ளது.
இந்த நாட்டின் குடிமகன் அவன் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவன் நம்பும் ஆன்மீகத்தின் வெளிப்பாடுகளால் சிறுமைப்படுத்தப்படுவதும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுவதும் ஜனநாயகம், சுதந்திரம் என்ற கருத்துக்களுக்கு அவமானகரமானது. ஊடகங்கள் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இழிவை, சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளில் ஆழ வேரூன்றி உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு கலவர காலங்களில் அமைதியான நிலை உருவாகுவதற்கு பதிலாக கடுமையான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது. வி.என்.ராய் என்ற உத்திரபிரதேசமாநில காவல்துறை மூத்த உயரதிகாரி தனது ஆய்வில் காவல்துறையில் வேரூண்றி உள்ள இந்த பாதக பார்வையை மாற்றி சில வழிவகைகளை தெரிவித்தார்.

1. காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளில் கணிசமான அளவு முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் காவல்துறையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வெள்ளையர்களுக்கு இணையாக கருப்பர்களையும், ஆங்கிலேயர்களையும் வெற்றிகரமாக பணியமர்த்தி பாகுபாடுகளை களைய முயன்றுள்ளனர்.

2. காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படைகளுக்கு மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் மத ஒற்றுமை குறித்த அறிவுப்பூர்வமான பயிற்சிகளைத் தொடர்ந்து பயிற்றுவிக்க வேண்டும். பணி உயர்வு பெறும் சமயம் கட்டாயம் இப்பயிற்சிகளை அதிகாரிகள் பெற வேண்டும். உயர் அதிகாரிகள் முறையான கலந்தாய்வினை மேற்கொள்ள வேண்டும். மேலும் தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (2002 கோவையில் பொய் வழக்குப் போட்டு 5 முஸ்லீம்களை சிறைப்படுத்திய அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) உயர் அதிகாரி தவறுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

3. மக்களின் பங்களிப்பு காவல்துறையினரின் சிந்தனை மாற்றத்திற்கு காரணம். கலவரப் பகுதிகளில் மக்களின் கருத்து மற்றும் ஒற்றுமைக்கான வழிகளை கேட்டு பரிசீலிக்கவும் வேண்டும். இக்கருத்துக்களை நாம் பரிசீலிப்பது அவசியம்.
நன்றி :
ச. பாலமுருகன்
சமூக விழிப்புணர்வு
தொடர்பான பதிவுகள் :
சுட்டி மூன்று

Friday, February 19, 2010

புனே குண்டு வெடிப்பு: இந்துத்துவா தீவிரவாதிகள் சதி?


புனே, பிப். 19 கடந்த வாரத்தில் நிகழ்ந்த புனே குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணிக்கு காரணமானவர்கள் இந்துத்துவா தீவிரவாதிகள்தான் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர். அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்து வருவதால் மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட அதேகும்பல்தான் மீண்டும் தனது கோர மதவெறியை காட்டி இருக்கலாம் என்று காவல்-துறையினர் தமது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மாலேகான் நகரில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை
ஹேமந்த் கர்கரே தலைமையிலான மகாராஷ்டிர "தீவிரவாதத் தடுப்புப் பிரிவு" காவல்துறையினர் விசாரித்து வந்தனர். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் கர்கரே. மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவராகப் பொறுப்பேற்றவுடன் மாலேகான் வழக்கை துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டினார்.
மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணமான இந்துத்துவாவாதிகள் என்பதைக் கண்டுபிடித்த கர்கரே கொல்லப்பட்டது ஏன்?
மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணமான அதே இந்துத்துவா தீவிரவாதிகள்தான் இப்பொழுது நடைபெற்றுள்ள புனே குண்டுவெடிப்புகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்பதற்கான தடயங்கள் சிக்கிவிட்டன. வீடியோ கிடைத்திருக்கிறது. நேபாளம் சென்று ஆயுதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ள இந்துத்துவா தீவிரவாதிகளின் சதியும் அம்பலமாகியுள்ளது. இன்னும் என்னென்ன சதிகளில் எல்லாம் இந்த இந்துத்துவா தீவிரவாதக் கும்பல் ஈடுபட்டுள்ளது என்ற திடுக்கிடும் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்று தெரிகிறது.
அவரது தீவிரமான, ஆழமான விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பெண்
சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், சாமியார் பான்டே உள்ளிட்ட பல இந்துக்கள் இதில் கைதாகினர்.

இந்து தீவிரவாதிகள்தான் இந்த செயலுக்குக் காரணம் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கினார் கர்கரே. வழக்கு துரித கதியில் போய்க்கொண்டிருந்த நிலையில்தான் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானார் கர்கரே. அவர் கொல்லப்பட்டதில் மர்மம் இருக்கிறது என்ற அலை இன்றுவரை ஓய்ந்துவிடவில்லை. மாலேகான் விசாரணையில் சம்பவத்தை திட்டமிட்டு நிறைவேற்றியது ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோஹித் தான் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யசெய்தவர் கர்கரே! இதில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கு நாசிக் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை ஆரம்பமான அடுத்த நாளே கடந்த வாரத்தில் புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 12 பேர் பலியாகினர்.ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் இசு-லாமிய தீவிரவாத அமைப்புகளுக்குத்தான் தொடர்பு இருக்கலாம் என்று முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 10க்கும் மேற்பட்ட இசுலாமிய இளைஞர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தொடர்-விசாரணையில் திடீர் திருப்பமாக இந்துத்துவா தீவிரவாதிகளுக்கு தொடர்பிருக்கலாமோ என்ற சந்தேகம் வலுத்-துள்ளது.அதற்கான் வலுவான ஆதாரங்களும் கிடைத்து வருவதாகத் தெரிகிறது.

ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பும்- இந்துத்துவா தீவிரவாதிகளும்!!
நாசிக் நீதிமன்றத்தில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்கு விசாரணை தொடங்கிய மறுதினமே புனே ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பை நியாயப்-படுத்தும் நோக்கிலும், நீதிமன்ற விசாரணைக்கு தமது எதிர்ப்பைத் தெரி-விக்கும் வகையிலும் இந்த சதி சம்பவத்தில் இந்துத்துவா தீவிரவாதிகள் ஈடுப்பட்டிருக்க முழு வாய்ப்பு இருப்பதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

புனே குண்டுவெடிப்புக்கும் அபிநவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்த அமைப்பு ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோஹித் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்தியாவை இந்து தேசமாக உருவாக்குவது, இந்துக்களுக்கான சட்டத்தை உருவாக்குவது, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது ஆகியவைதான் இந்த அமைப்பின் நோக்கம்.

இதற்காக நாட்டில் பல்வேறு தீவிரவாதச் சதி வேலைகளில் ஈடுபட இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த அமைப்பினர் மாலேகான் குண்டு வெடிப்பை அரங்கேற்றி தங்களின் கோர முகத்தை உலகத்துக்கு காட்டினர். தற்போது அதே கும்பல் மீண்டும் புனேயில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இதுவரை புனே குண்டு வெடிப்பு தொடர்பாக இந்துத்துவா தீவிரவாதிகள் எவரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை.

தலைமறைவானார் சாமியார்!
அபிநவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுவாமி ஆசிமனாந்த் ஆதிவாசி மக்கள் வசிக்கும் குஜராத் மலைப்பகுதியில் தலைமறைவாகி உள்ளார். அங்குதான் அபிநவ் பாரத் அமைப்புக்கு ஆயுதப் பயிற்சி, வெடி-குண்டு தயாரிப்பு பயிற்சி போன்றவை அளிக்-கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்புத்தான் இந்துத்துவா தீவிரவா-தத்தின் மூளையாகச் செயல்பட்டு வருகிறது. இதே அமைப்பினர் கல்வி அறக்கட்டளை ஒன்றையும் 2006 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் தலைவராக காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேயின் சகோதரர் மகளான ஹிமாமி சவர்க்கார் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்களுக்கும் குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக மகாராட்டிர அரசு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பினர் பல்வேறு இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்தி-யாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்றும், அதற்காக இங்குள்ள இசுலாமியர்களை படுகொலை செய்ய வேண்டும் என்பதுதான் அபிநவ் பாரத் அமைப்பின் நோக்கமாகும். அதற்காக இந்தியாவில் இந்து மதப்புரட்சி நடத்த ராணுவ அதிகாரியும் இந்து மத வெறியனுமான புரோகித் பல்வேறு சதிகளில் ஈடுபட்டுள்ளார்.

நேபாளத்தில்ஆயுதப் பயிற்சி
இதற்காக நேபாளத்தில் இந்துத்துவா புரட்சி நடத்தவும், அந்நாட்டின் அப்போதைய (2006-_2007) மன்னர் ஞானேந்திராவுக்கு ஆயுதங்கள் மற்றும் கூலிப்படை அனுப்பவும் புரோகித் திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக ஞானேந்திராவுடன் புரோகித் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அபிநவ் பாரத் அமைப்பின் தீவிரவாதிகள் நேபாளம் சென்று முகாமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அபிநவ் பாரத் அமைப்பின் தீவிரவாதிகளுக்கு இசுரேலில் ஆயுதப் பயிற்சி பெறவும், தேவைப்பட்டால் அரசியல் அடைக்கலம் பெறவும் புரோகித் திட்டமிட்டிருந்தார். இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கும் அபிநவ் பாரத் தீவிரவாத அமைப்பே காரணம் என்று பலரும் சந்தேகமடைந்துள்ளனர். அந்த அமைப்பின் பின்னணியை ஆராயும் போது பல்வேறு சதி நடவடிக்கைகளை அரங்கேற்றி இருப்பது உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது.

சதிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன
2007 ஆம் ஆண்டு அய்தராபாத்தில் உள்ள மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, அதனை தொடர்ந்து இசுலாமியர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான அஜ்மரில் நடந்த வெடிகுண்டுச் சம்பவம் இப்படி பலவற்றிலும் அதன் பங்கு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனாலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக அபிநவ் பாரத் அமைப்பிடம் காவல் துறையினரால் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தீவிரவாத அமைப்புகளைப் போல நடத்தப்படும் தீவிரவாதச் செயல்களுக்கு ஒரு போதும் இந்த அமைப்-பினர் பொறுப்பேற்பதில்லை. வெளி உலகத்துக்கு தெரியாமல் சாமியார்கள், பக்திமான்கள், மத சேவகர்கள் என்ற போர்வையில் தங்கள் சதி செயலை மேற்கொள்வதை அபிநவ் பாரத் அமைப்பினர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் அவர்கள் பக்கம் காவல் துறையின் விசாரணை வளையம் இதுவரை நெருங்காமல் இருந்து வந்தது.

மேலும் குண்டு வெடிப்பு என்ற உடன் அது இசுலாமியத் தீவிரவாதிகளின் கைவரிசை தான் என்ற தவறான மனப் போக்கும் இந்துத்துவா தீவிரவாதிகளுக்கு கை கொடுத்து வருவதால் இதுபோன்ற சதிச் செயல்களுக்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லை என்ற போலித் தோற்றம் இருந்து வருகிறது. ஆனால் புனே சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நடத்தி வரும் தீவிர விசாரணையில் இந்துதுத்துவாவின் நிழல் உலக கொடுஞ் செயல்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி உள்ளன.

சிக்கி உள்ளது வீடியோ
இதேபோல் கடந்த ஆண்டின் இறுதியில் கோவாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திலும் இந்துத்துவா தீவிரவாதிகளே ஈடுபட்டனர் என்று கண்டறியப்பட்டது. அதேபாணியில் மீண்டும் புனேயில் குண்டு வைத்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தீவிரமாக நம்புகின்றனர். புனே சம்பவம் தொடர்பாக 3 பேர் நடத்திய சதி ஆலோசனை சம்பந்தமாக தெளிவில்லாத நிலையில் வீடியோ காட்சிப் படம் ஒன்றை ஜெர்மன் பேக்கரியிலிருந்து காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் யார்? அவர்கள் பேசியது என்ன?என்பது எல்லாம் தெரியவரும்போது உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். இதற்கான விசாரணைக்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், சதி நடவடிக்கைகள் தெரியாமல் இருக்கப்போவதில்லை என்று விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அப்போது இந்துத்துவா தீவிரவாதிகளின் மதவெறி வெட்ட வெளிச்சமாகும் என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சிலர் கூறு-கின்றனர்.

Wednesday, February 17, 2010

இடஒதுக்கீடு சட்டமும்-முஸ்லிம்கள் கடமையும்





இடஒதுக்கீடு சட்டமும்- முஸ்லிம்கள் கடமையும்


Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.
[ ஆந்திர அரசின் 4 சதவீத இட ஒதிக்கீட்டின் சட்டம் ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.? அதற்குக் காரணம் அந்த அரசு மொத்த முஸ்லிம்களுக்க்கும் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு செய்தது. அரசு எவ்வாறு முஸ்லிம்கள் ஆந்திர மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அதன்பின்பு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு தள்ளுபடியாகியிருக்காது. தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீத ஒதுக்கீட்டில் ஆந்திர உயர்நீதி மன்ற உத்தரவினால் பாதிப்பு எற்படுமோ என்ற ஐயப்பாடு நமக்கு இருப்பது நியாயமே. ஆனால் தமிழக அரசு இடஒதுக்கீடு எவ்வாறு முஸ்லிம்கள் மற்ற பின்தங்கிய மக்களுடன் பின்தங்கியுள்ளார்கள் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையிலான 1985 ஆம் ஆண்டு நியமிக்கப் பெற்ற கமிட்டி தனது அறிக்கையின் மூலமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள்.]



என் இனிய சொந்தங்களே!
இட ஒதிக்கீடு சம்பந்தமாக சமீப காலத்தில் பரபரப்பாக செய்திகள் வெளி வந்த வண்ணமுள்ளன.
நீதிபதி சச்சார் முஸ்லிம்கள், தலித் மக்களை விட படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் பின் தங்கி உள்ளனர் என்றும்,
அந்த முஸ்லிம் மக்களுக்கு 10சதவீத ஒதிக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வழங்கப் பட வேண்டும் என்றும்
முன்னாள் உச்ச மன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவும்,
ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் முஸ்லிம்களுக்கு அந்த மாநில அரசு வழங்கிய நான்கு சதவீத ஒதுக்கீடு செல்லாது என்றும்,
மேற்கு வங்க முதல் அமைச்சர் முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழக்கப்படும் என்றும்
ஏற்கனவே கர்னாடகா மற்றும் மணிப்பூர் அரசுக்கள் 4 சதவீத ஒதுக்கீடும்
கேரளா அரசு 10-லிருந்து 12 சதவீதம பல் வேறு ஒதுக்கீடு முறையில் இடம் ஒதுக்கி அறிவிப்பு வந்தவண்ணம் இருக்கிறது.



இந்திய குடியுரிமைச் சட்டத்தில் இட ஒதுக்கீடு பற்றி என்ன சொல்கிறது என்பதைப்பற்றியும் அந்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் ஒதுக்கீடு பெற்று சமூகத்திலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் முன்னேற என்ன செய்யலாம் என இந்தக் கட்டுரையில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கிறேன்.



அரசமைப்புச் சட்டம் பிரிவு 14ன் படி, சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்றும், ஒத்த தகுதி நிலையில் உள்ளவர் அனைவரும் சட்டத்தால் ஒரே சீராக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.




சட்டப்பிரிவு 15(1) ஒத்த தகுதி நிலை கொண்ட எவரையும் மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதாவது காரணத்தால் அரசு வேற்றுமை பாராட்டுவதைத் தடை செய்கிறது, ஆனால் வேறுபட்ட நபர்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தி சட்டம் இயற்றுவது தவறாகாது என்கிறது இட ஒதுக்கீட்டுக் கொள்கை. பிரிவு 15(3)ன் படி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பு வகை முறைகள் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் உண்டு.



அதே போல் பிரிவு 15(4)ன் படி சமூகம் மற்றும் கல்வி வழி பின்தங்கிய குடிமக்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்கு சிறப்பு வகைமுறை செய்வதற்குத் தடையில்லை என்று சொல்கிறது. ஆகவே தான் தலித் மக்கள், பழங்குடியினர் ஹிந்து மதத்தவராக இருந்தாலும் அவர்கள் ஹிந்து சமூக அமைப்பில் நசுக்கப்பட்டு பின் தங்கியிருந்ததால் அவர்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.



ஏன் ஹிந்து மதத்தில் சில நலிந்த ஹிந்து மதத்தினவருக்கும் பிற்பட்டவகுப்பினர் என்ற தகுதி சட்டத்தில் வழிவகுக்கப்பட்டது?

சட்டப்பிரிவு 16(4)ன் படி அரசின் கவனத்தில் எந்த பிற்பட்ட சமூகமும் அரசு நிறுவனங்களில் சரியாக பணியமர்த்தப்படவில்லையென அறிந்தால் அவர்களுக்காக தனிச்சட்டம் இயற்றலாம் என்று சொல்கிறது.



பின் ஏன் ஆந்திர அரசின் 4 சதவீத இட ஒதிக்கீட்டின் சட்டம் ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.?

அதற்குக் காரணம் அந்த அரசு மொத்த முஸ்லிம்களுக்க்கும் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு செய்தது. அரசு எவ்வாறு முஸ்லிம்கள் ஆந்திர மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அதன்பின்பு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு தள்ளுபடியாகியிருக்காது.



தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீத ஒதுக்கீட்டில் ஆந்திர உயர்நீதி மன்ற உத்தரவினால் பாதிப்பு எற்படுமோ என்ற ஐயப்பாடு நமக்கு இருப்பது நியாயமே. ஆனால் தமிழக அரசு இடஒதுக்கீடு எவ்வாறு முஸ்லிம்கள் மற்ற பின்தங்கிய மக்களுடன் பின்தங்கியுள்ளார்கள் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையிலான 1985 ஆம் ஆண்டு நியமிக்கப் பெற்ற கமிட்டி தனது அறிக்கையின் மூலமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள். அந்த அறிக்கையில் இஸ்லாமிய சிறுபான்மையினரைச் சார்ந்த 27,05,960 மக்களில் பிற்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் 25,60,195 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல் கிறித்துவ சிறுபான்மை 31,91,989 மக்களில் 24,69,519 பேர் பிற்பட்ட மக்களின் பட்டியலிலும் , 78,675 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் பிற்பட்ட வுகுப்பபில் யாரையும் சேர்க்கவில்லை. இத்தனைக்கும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் தலித் மக்களைவிட கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்pறார்கள் என்று அறிந்தும் கூட.
அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு தமிழ்நாடு சட்டம் 45, 1994 படியும், அதன் பின்பு தமிழிநாடு சட்டம் பிரிவு 12, 2006 ன் படியும் பிற்பட்ட மக்கள் கல்வி நிலையங்களிலும், அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களில் தனி ஒதுக்கீடு பெற்று வருகின்றனர். அதன் பின்பு கிறித்துவரும், இஸ்லாமியரும் மற்ற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலுள்ள பிற சமூகத்தினருடன் போட்டியிட இயலவில்லை என்பதால் தங்களுக்கென்ற தனி ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டது.



அவர்களின் கோரிக்கையினை பிற்பட்டோர் கமிஷனிடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன் அறிக்கையில் இரு சமூகத்தினரின் கோரிக்கை சரியானதுதான் என்று சொல்லப்பட்டிருந்தது. அதனை எற்று அரசு 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு அவசர சட்டம் பிரிவு 4, 2007 ன் படி கிறித்துவ மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் கல்வி நிலையங்கள்(தனியார் கல்வி நிலையம் உள்பட) அரசு நியமனங்களில் அல்லது பதவி ஒதுக்கீடுகளில் கிறித்துவர்களுக்கு 4 சதவீதமும், முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.



ஆனால் அதன்பின் வருங்காலங்களில் அதிகம் படித்த கிருத்துவ மக்கள் தொகையினைக் கொண்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் படித்த இளைஞர்கள் அதிகமாக கல்வி, அரசு வேலை வாய்ப்புகள் பெற முடியவில்லையென அறிந்து அந்த நான்கு சதவீத ஒதுக்கீடு தேவையில்லை என்றும் தாங்கள் பிற்பட்போருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி அடிப்படையில் அதிக பயன் பெற முடியும் என அரசிடம் சொல்லி அதனை ரத்துச் செய்ய சொல்லி விட்டார்கள். அந்த கிறித்துவ மக்கள் கூற்றுப்படிப் பார்த்தால் அதிகம் படிக்காதவர்கள், கல்வி, அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெற முடியாதவர்கள் முஸ்லிம் பிற்படுத்தப்பட்டபவர்கள் தான் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிதல்லவா நண்பர்களே!



இந்திய நாட்டில் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் பிற்படுத்தப் பட்ட மக்கள் 41 விழுக்காடு ஆகும். ஆனால் பிற்பட்டோருக்கு இட ஒதிக்கீடுக்கு இந்திய நாட்டில வழிவகுத்த முன்னோடி மண்டல் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு 1979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு தனது 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாத அறிக்கையின் படி பிற்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கை 52 விழுக்காடு ஆகும். ஆகவே தான் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கி சட்டம் வகுத்தது மத்திய அரசு.



இந்த பிற்படுத்தப்பட்ட மக்களில் 78 விழுக்காடு கிராமப் புறத்திலும், 22 விழுக்காடு நகரப் பகுதியிலும் வசிக்கிறார்கள். ஆனால் முற்பட்ட மக்கள் ஊரக, நகரப் பகுதி இரண்டிலும் 37.7 விழுக்காடு வாழ்கின்றனர். ஆகவே தான் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தால் முற்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் கூடிய இடத்தினை பெற்று விடுகின்றனர் இந்தியாவிலே தமிழகத்தில்தான் 74.4 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். இது தேசிய மாதிரி ஆய்வு நிறுவனமான (என்.எஸ்.எஸ்.ஓ) நடத்திய ஆய்வின் கூற்றாகும். ஆகவே தான் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு 20 விழுக்காடு ஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கு மூன்றரை விழுக்காடு ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் கிறித்துவ மக்கள் நான்கு சதவீத ஒதுக்கீடு போதாது நாங்கள் பிற்பட்டோர் ஒதுக்கீடுகளில் அதிக ஒதுக்கீடு பெற வாய்ப்புண்டு என்று சொல்லி அதனை அரசும் ரத்து செய்தபோது, தமிழகத்தில் ஒரே ஒரு முஸ்லிம் பெரியவர் மட்டும் முஸ்லிம் மக்கள் ரிசர்வேஷன் பெறாது முன்னேற வேண்டுமென்றும் சொன்னதோடு மட்டுமல்லாமல் புனித ஹஜ் செய்ய அரசின் சலுகையினைப் பெறாது செல்ல வேண்டுமென்றும் சொன்னதாக அனைத்து பத்திரிக்கையிலும் வெளி வந்து அதனை கண்டித்து நோட்டீசும் சில அமைப்பினர் வெள்ளிதோறும் பள்ளிவாசலில் கொடுக்கப்பட்டது.




அவர் யார் என்று கேட்கிறீர்களா?
அவர் தான் பிரிட்டிஷ் அரசின் எடுபடியாக இருந்து, வட மாவட்டங்களில் அவர்களுக்கு வரிவசூல் ஏஜெண்டாக இருந்ததோடு மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஆதிக்கத்தினை எதிர்த்த மதுரை மருதநாயகம் என்ற அஹமது கான், சிவகங்கை மன்னராக இருந்த சின்ன மருது, பெரிய மருது, வேலு நாச்சியார், ஊமைத்துரை போன்றவர்களை வேட்டையாட பிரிட்டிஷ் படையினருடன் தன் கூலிப்படையையும் அனுப்பியதின் பயனாக பிரிட்டிஷ் இந்திய நாட்டினை விட்டு வெளியேறியபோது அவருக்கு மட்டும் இந்தியாவில் தனி கொடியுடன் உள்ள அந்தஸ்து கொடுத்து, தனது சமஸ்தான சொத்தினையும் அநுபவிக்க உரிமை வழங்கப்பட்டுள்ள ஆற்காடு நவாப்பின் சந்ததி ஆவார்.



ஆனால் பிரிட்டிஷாரல் தன் மகன்கள் கொல்லப்பட்டாலும் கடைசி மூச்சு இருக்கும் வரை எதிர்த்த டெல்லி முகலாய கடைசி சக்கரவர்த்திக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? பர்மாவிற்கு கடத்தப்பட்டு சொந்த இந்திய மண்ணில் கூட தனது கடைசி வாழ்வினை கழிக்க முடியாத நிலை பரிதாபமாகத் தெரியவில்லையா உங்களுக்கு?


அந்த நவாப் தான் சொல்கிறார் முஸ்லிம்கள் அரசில் விசேஷ சலுகை பெறக்கூடாது என்று. பின் என்ன செய்வது ஏழை, எளிய மக்கள் வாழ்வினுக்கு ஒளியேற்ற! அவர்களுக்கு இனாமான கோடிக்கணக்கான சொத்தா இருக்கிறது? அரசின் சலுகையினைத்தானே நாட வேண்டியிருக்கிறது ஏழை முஸ்லிம்கள். ஆற்காடு நவாப் போன்ற பெரியவர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருந்தால் ஏழை, எளிய முஸ்லிம்கள் சலுகை பெற வாய்ப்பாக அமையும்.





[ தமிழ்நாடு மைனாரிடி கமிஷன் தலைவராக எப்போதும் கிறித்துவ மதத்தினரையே தேர்வு செய்கின்றனர். ஆனல் ஆனால் முஸ்லிம்கள் தான் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள்.
அத்தோடு அல்லாமல் அம்பாசங்கர் அறிக்கை மூலம் முஸ்லிம்களில் 27,60,195 பிற்பட்டவர்களும், கிறித்துவர்கள் 25,48,194 பிற்பட்டோர்களும் உள்ளனர். ஆகவே பிற்பட்டோர் பட்டியலில் சமநிலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் மைனாரிட்டி சேர்மன் பதவியினைக் கேட்டுப்பெற முடியவில்லை. அப்படி பெருவதின் மூலம் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்ய அவர்களால் முடியும்.



ஆகவே அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் சமமாக ஒவ்வொரு தடவை தலைவர் பதவி கொடுக்க வற்புறுத்த வேண்டும்.]



இந்தியாவில் இட ஒதிக்கீடு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்க பரிசீலனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே முஸ்லிம் அதற்கு நமது கடமை என்ன என்பதை விளக்கலாம் என கருதுகிறேன்.



இதற்கு 12.2.2010 டெல்லியில் நடந்த என்.எம்.எம்.ஆர் (நேஷனல் ரிசர்வேஷன் ஃபார் முஸ்லிம் ரிசர்வேஷன்) அதாவது முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெற வேண்டி முஸ்லிம் இயக்கம் முன்னாள் ஐ.எப்.எஸ் அதிகாரி செய்யது சகாபுதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நீதிபதி சச்சார் கமிட்டியில் இடம் பெற்ற செயலர்-உறுப்பினர் அஃப்சாலே ஷரீஃப் அவர்கள், ''சமுதாயத்தில் உயர்ந்த நிலையிலுள்ள முஸ்லிம்கள் பிற்பட்ட முஸ்லிம் மக்கள் முன்னேற வழிதேட வேண்டும்'' என சொல்லியுள்ளார். அதனை உதாரணமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் மேன்பட்ட மக்கள் என்ன என்ன செய்ய வேண்டுமென விளக்க ஆசைப்படுகிறேன்.




1) 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஓட்டுரிமை உண்டு. மக்கள் தொகை கணக்கெடுக்க வரும்போது கண்டிப்பாக வீட்டிலுள்ள அனைவரையும் சேர்க்கச் செய்ய வேண்டும். கண்டிப்பாக ஓட்டர்ஸ் லிஸ்ட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு அடையாள அட்டைக் கேட்டுப் பெறவேண்டும். வெளி நாட்டில் வாழும் முஸ்லிம்களையும் அதனில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இந்திய நாட்டில் 13 விழுக்காடு உள்ள முஸ்லிம்களுக்கு மக்கள் பிரதிநித்தவ அடிப்படையில்(புரப்போஷனல் ரெப்பரசென்டேஸன்) இட ஒதிக்கீடு வந்தால் அது நிச்சயமாக பலனளிக்கும்.



2) கல்வியில் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என் அறிய ஒவ்வொரு ஊரிலும் 1) பள்ளி இறுதி வரை படித்தவர் 2)பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர் 3)கல்லூரி வரை படித்தவர் 4) தொழில் கல்லூரி கல்வி படித்தவர் 5) டிப்ளமோ பட்டம் பெற்றவர் 6) பள்ளிப்பக்கம் தலை காட்டாதவர் என்ற கணக்கெடுப்பு வேண்டும். அப்போது தான் நாம் எவ்வளவு அளவிற்கு கல்வியில் முன்னேறியிருக்கிறோம் என அறியலாம்




3) டவுண் பஞ்சாயத்து, தாலுகா, முனிசிபாலிடி, மாநகரங்கள் தோறும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் அரசு வேலைக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும். அதேபோன்று பள்ளி மேல் படிப்பிற்கு மேல் என்ன படிக்கலாம், மேலை நாடுகளில் எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கலாம், இந்தியாவில், வெளிநாட்டில் திறமை வாய்ந்த மாணவர்கள் மேல் பட்டப்படிப்பு படிக்க என்னன்ன ஸகாலர்ஷிப் கிடைக்கிறது, விசாவிற்கு எப்படி மனு செய்யலாம் போன்ற தகவல் மையம் அமைக்கவும், இந்திய நாட்டில் அரசு வங்கிகளில் மாணவர்கள் மேல்படிப்பிற்கான அரசு லோன் பெறுவதிற்கு உதவியும் செய்யலாம்.



4) தோல், கட்டிட அமைப்பு, ஷிப்பிங் போன்ற பெரிய தொழில் முனைவர்களை அனுகி வேலை வாய்ப்பு முகாம்களில் முஸ்லிம்களுக்கு ''ஹிந்து'' பத்திரிக்கை, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது போல ''ஜாப் பேர்ஸ்'' நடத்தலாம்.



5) கிராமங்களில், நகர பஞ்சாயத்துகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து அருகில் உள்ள பிளாக் டெவலப்மெண்ட்(பி.டி.ஓ) அவர்களின் அரசு உதவி வாங்கிக் கொடுத்து சிறு கைத்தொழில் தொடங்க உதவி செய்யலாம்.




6) அரசுக் கல்லூரிகளில் பி.காம், பி.எஸ்ஸி படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே வேலை வாய்ப்பினைப் பெற அவர்களுக்கான ஆறுமாத அல்லது ஒரு வருட தொழில் கல்விசான்றிதழ் படிப்பை படிக்க உயர்கல்வித்துறை அரசு கடந்த 8.2.2010 வகை செய்துள்ளது.



அந்தப்படிப்பில்
1. மல்டி மீடியா, 2. டேலி,
3. ஏ.சி.டெக்னாலஜி, 4. கம்ப்யூட்டர் கார்டுவேர்,
5. டொமஸ்டிக் ஒயரிங், 6. நெட் ஒர்க்கிங்,
7. வெப் டிசைனிங் மற்றும் அனிமேசன், 8. இ.காமர்ஸ்,
9. டிரைவிங், 10. பியூட்டிசியன்,
11. கார்மென்ட் குவாலிடி இன்ஸ்பெக்சன் அண்டு; எக்ஸ்போர்ட்மெர்கண்டிசிங் 12. கம்யூனிகேஷன் ஸ்கில்,
13. ஆபிஸ் ஆட்டோமேசன்,
14. சர்வேஈ 15. டி.டி.பி
ஆகியவை உள்ளன. அந்த படிப்பிற்கான சான்றிதழ் உயர்கல்வித்துறை வகை செய்ய வழிவகுத்துள்ளது.



அந்தப்படிப்பிற்கு ஆறு மாதத்திற்கு கட்டணமாக ரூபாய் 1500, வருடக் கட்டணமாக ரூபாய் 3000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நமது மாணவர்களை அந்தப் படிப்பில் சேர்ந்து வாய்ப்பினைத் தேடிக்கொள்ளச் செய்ய வேண்டும்.
அதே போன்ற படிப்புகளை 20க்கு மேல் முஸ்லிம் அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செல்ஃப் பைனான்ஸிங் வழியில் தொடங்கவேண்டும்.
அதேபோன்ற படிப்புகளை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஜஸ்டிஸ் பஷீர் அஹமது மகளிர் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.




7) மத்திய அரசின் மைனாரிடிக்கான 15 அம்ச திட்டத்தின் படி முஸ்லிம்களின் வேலை வாய்ப்பு ரயில்வேயிலும், அரசுத்துறையிலும் 2006-2007 6.92 சதவீதத்திலிருந்து 2008-2009ல் 9.19 விழுக்காடு அதிகரித்தாலும் முஸ்லிம்களின் ஜனத்தொகை 13 விழுக்காடுகளுக்கு அது குறைவே எனலாம்.



ஆனால் பொது நிறுவனங்களிலும், அரசு வங்கிகள், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு வெறும் 2008-2009ல் 7.9 விழுக்காடிலிருந்து 8.87 விழுக்காடு 48,070 வேலைகளில் தானே இருக்கிறது. இன்னும் முஸ்லிம்கள் அரசு வங்கிகளுக்கும், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கோல் இந்தியா, ஸ்டீல் அத்தாரிடி ஆப் இந்தியா போன்ற பொது நிறுவனங்களில் வேலை வாய்பபிற்கு மனு செய்து வேலை வாய்ப்பினைப் பெற முஸ்லிம் கல்வி நிலையங்களும், தொண்டு நிறுவனங்களும் இளைஞர்களை தயார் படுத்த வேண்டும்.
அரசுடமையாக்கப் பட்ட வங்கிகளில் முஸ்லிம் மாணவர்கள் படிப்பு கடன் பெற எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதினை ஏழை பெற்றோர்களைக் கேட்டால் தெரியும். முஸ்லிம்கள் அந்த வங்கிகளில் இருந்தால் நமது மாணவர்களுக்கு அரசு படிப்பு லோன் வழங்க உதவி செய்வார்களல்லவா? இது போன்று தான் மற்ற பொது நிறுவனங்களிலும் வேலை கிடைத்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதோடு, மற்றவர்களுக்கும் உதவி செய்வார்களல்லவா?




8) தமிழ்நாடு மைனாரிடி கமிஷன் தலைவராக எப்போதும் கிறித்துவ மதத்தினரையே தேர்வு செய்கின்றனர். ஆனல் ஆனால் முஸ்லிம்கள் தான் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள். அத்தோடு அல்லாமல் அம்பாசங்கர் அறிக்கை மூலம் முஸ்லிம்களில் 27,60,195 பிற்பட்டவர்களும், கிறித்துவர்கள் 25,48,194 பிற்பட்டோர்களும் உள்ளனர். ஆகவே பிற்பட்டோர் பட்டியலில் சமநிலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் மைனாரிட்டி சேர்மன் பதவியினைக் கேட்டுப்பெற முடியவில்லை. அப்படி பெருவதின் மூலம் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்ய அவர்களால் முடியும். ஆகவே அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் சமமாக ஒவ்வொரு தடவை தலைவர் பதவி கொடுக்க வற்புறுத்த வேண்டும்.



மேற்கூறிய யோசனைகள் நமது சமூதாயம் முன்னேறுவதிற்கான கடல் போன்ற யோசனைகளில் சிறு துளி நீர் போன்றதே. துடிப்பான இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சழூக அமைப்புகள் நமது சமூதாயத்தில் இல்லாமலில்லை. அந்த இளைஞர்கள், நிறுவனங்கள் நமது சமூதாய மக்கள் பின்தங்கிய சழூதாயத்திலிருந்து முன்னேறிய சமூதாயமாக மாற்ற வேண்டும். அத்துடன் அரசு சலுகைகளை நாம் நழுவ விடக்கூடாது என வேண்டுகிறேன்.


நன்றி : நீடூர் இன்போ

Monday, February 15, 2010

குஜராத் முஸ்லிம்களை சிறைப்படுத்த ஒரு சட்டம்!







பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவது என வரிந்து கட்டி முட்டி மோதுகிறது மோடி அரசு. ஆனால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற பெயரில் சிறுபான்மையின மக்களை குறி வைக்கும் மோடி அரசின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட மத்திய அரசு, அதற்கு கடிவாளம் போட முயற்சிக்கிறது. ஆயினும் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது குஜராத்தின் மோடி அரசு.

2009 ஜூலை மாதம் 28ந் தேதி பயங்கரவாத தடுப்புச் சட்ட மசோதாவை குஜராத் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மோடி அரசு அதனை மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்தது. அதன் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அது முயற்சித்தது.
இந்தச் சட்டத்தின் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்த மத்திய உள்துறை அமைச்சகம், குஜராத் அரசின் சட்ட மசோதவில் ஆட்சேபனை இருக்கிறது. அதனால் இந்தச் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது.

இன்னொரு புறம், இந்தச் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ள ஆட்சேபகரமான சட்டப் பிரிவுகளை குஜராத் அரசுக்கு சுட்டிக்காட்டி அந்த சட்டப்பிரிவுகளை நீக்கி புதிய மசோதா தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.

அது என்ன ஆட்சேபகரமான இரண்டு பிரிவுகள்?
முதலாவது, போலிஸ் அதிகாரியின் முன்னிலையில் அளிக்கப்படும் வாக்கு மூலத்தை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது என்பது.
அடுத்தது, குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் ஜாமீன் கோரி மனு செய்யும் பட்சத்தில், அரசு வழக்கறிஞர் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபித்தால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பது!

இந்த இரு அமசங்களைத்தான் குஜராத் சட்ட மசோதாவிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு கடந்த ஆண்டு வலியுறுத்தியிருந்தது. எந்தச் சட்டப்பிரிவுகளுக்காக ஒட்டு மொத்த பயங்கரவாத தடுப்புச் சட்ட மசோதா உருவாக்கப்பட்டதோ அந்த சட்டப் பிரிவுகளை மத்திய அரசு நீக்கச் சொல்கிறதே என அதிர்ச்சியடைந்த குஜராத் அரசு, அந்த இரண்டு பிரிவுகளையும் நீக்காமலே குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று விடத் துடியாகத் துடித்தது.

இதற்காக மத்திய அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற பொருந்தாக் காரணத்தைக் கூறி மீண்டும் இந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைத்தது குஜராத் அரசு. மஹாரஷ்டிராவில் தற்போது உள்ள அமைப்பு சார்ந்த குற்ற எதிர்ப்புச் சட்டத்தைப் போன்று தான் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் அதனால் இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வியாக்கியானமும் செய்தது தான் அந்தப் பொருந்தாக் காரணம்!

ஆனால் சளைக்காத மத்திய உள்துறை அமைச்சகமோ, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசு, மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து சட்ட மசோதாவை பழைய வடிவிலேயே அனுப்பியுள்ளது. இதனால் இச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என குடியரசுத் தலைவரை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.

தடா,பொடா போன்ற பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் மனித உரிமை மீறலாக இருப்பதாகவும், இதனால் பயங்கரவாதம் ஒழியவில்லை என்பதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்த மத்திய மாநில அரசுகள் அத்தகைய கறுப்புச் சட்டங்களை காலாவதியாக்கி விட்டன.
ஆனால் நரேந்திர மோடி அரசோ, கறுப்புச் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை மீண்டும் கருவறுக்கத் துடிக்கிறது. இந்தச் சட்டம் இல்லாத நிலையிலேயே குஜராத் முஸ்லிம்கள், அடுத்து என்ன நடக்குமோ என அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். 2002 குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது மோடி அரசின் காவல் துறையும், சட்டத் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், நீதிபதிகள் சிலரும் கூட முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டனர் என்பதை டெஹல்கா வார இதழ் வாக்கு மூலங்களாக வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், போலிஸ் அதிகாரி முன்பு தரப்படும் வாக்குமூலத்தை அப்படியே ஏற்க வேண்டும், அரசு வழக்கறிஞர் ஆட்சேபித்தால் ஜாமீன் வழங்கக் கூடாது என்பது போன்ற சட்டப் பிரிவுகளை இந்தச் சட்ட மசோதாவில் சேர்த்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கும் மோடி அரசின் உள்நோக்கம் எதைக் காட்டுகிறது என்பது எல்லோருக்கும் விளங்கும்.

குஜராத் அரசின் பயங்கரவாத தடுப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியிருப்பதை தேச அமைதியை விரும்புவர்கள், சமூக அக்கறையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்கின்றனர்.சமயம் கிடைக்கும் போதெல்லாம் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சாட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றன பிஜேபி உள்ளிட்ட இந்துத்துவா கட்சிகள்.
லிபரஹான் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே அறிக்கையில் சில பகுதிகள் பத்திரிகைகளில் கசிந்துவிட்ட விஷயத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என பிஜேபியினர் எம்பிக் குதித்தார்கள்.இவற்றையெல்லாம் குஜராத் அரசின் பயங்கரவாத தடுப்புச் சட்ட மசோதாவோடு முடிச்சுப் போட்டுப் பார்த்தால் பிஜேபியின் சூட்சுமம் புரிகிறது.

ப.சிதம்பரத்திற்கு பதிலாக வேறொருவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில் இந்த சட்ட மசோதாவிற்கான ஒப்புதலை குஜராத் அரசு நிச்சயம் நிறைவேற்றிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்ட தலைவர்கள் மிகைத்தே இருக்கிறார்கள்.

இதை நாம் சொல்லவில்லை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச் செயலாளர் மோகன் பகவத் சொல்கிறார்.

மூலம்: மக்கள் ரிப்போர்ட்

Friday, February 5, 2010

ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன

"குண்டு வெடிச்சிருச்சா பழியைத் தூக்கி முஸ்லிம்கள் மீது போடு" என்ற நிலையில் தான் ஊடகங்கள் பொறுப்பற்றத் தன்மையோடு இருக்கின்றன. முஸ்லிம்களின் மீது வெறுப்பு என்பது எல்லா துறைகளிலும் விதைக்கப்பட்டு வருகிறது. அதிலும் செய்தி ஊடகங்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் முஸ்லிம்களைக் குற்றவாளியென்றே தீர்ப்பும் எழுதி விடும் அராஜகப் போக்கில், தனித்து நின்று சங்பரிவார் பயங்கரவாத கும்பலின் கோரமுகத்தை தோலுரித்து வருகிறது "தெகல்கா".

இந்தியாவில் நடத்தப்பட்ட "மும்பை குண்டு வெடிப்பு", "கோவை குண்டு வெடிப்பு" தவிர வேறு எந்த குண்டு வெடிப்பிலும் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டதாக தீர்ப்பு வந்த மாதிரி தெரியவில்லை. ஆனால் பல குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதையெல்லாம் யார் செய்தார்கள்,? ஏன் செய்கிறார்கள் ? எப்படி மறைத்து திசை திருப்புகிறார்கள் ? இந்த்துத்துவ பயங்கரவாதம் மட்டும் ஏன் மறைக்கப்பட்டு வருகிறது?
உதயம் .
----------------------------------------------------------------------------------------------------------------------------
"ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் முன்னர் ஒருமுறை கூறியிருந்தார்.

தெஹல்கா அவரைப் பேட்டிக்கண்டபோது, "குண்டுவெடிப்புகள் நடந்துள்ள நேரங்களை அவதானித்து, அதனை மையமாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.
தெஹல்காவினுடனான அவரது பேட்டி சத்தியமார்க்கம் வாசகர்களுக்காக இங்குத் தமிழில் தரப்படுகிறது:


தெஹல்கா:
பாஜக பிரச்சனைகளைச் சந்தித்த போதெல்லாம் நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதாக நீங்கள் கூறியுள்ளீர்களே?

தி.வி.சிங்:
நான் என்ன கூறினேன் என்றால், "குண்டுவெடிப்புகள் நடைபெறும் நேரம் முற்றாகக் கூர்ந்து கவனிக்கப்படுவதில்லை. எப்போதும்
பாஜக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வேளைகளில் மட்டும் மிகச் சரியாக நாட்டில் குண்டுவெடிப்புகள் நடைபெறுவது ஏன்? அவ்வழியில் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்பதுவே என் கோரிக்கை. அல்லாமல் நான் யாரையும் குற்றப் படுத்தவில்லை.

தெஹல்கா:
"பாஜகவுக்குப் பிரச்சனைகள் ஏற்படும் போது" என்று நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன?

தி.வி.சிங்:
பாஜகவுக்கு எதிரான தெஹல்காவின் வெளிப்படுத்தல்களைக் குறித்து மக்களவையில் சர்ச்சை செய்யப்பட்டபோது, மூன்று நாட்களுக்கு மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் மக்களவையில் அது குறித்துச் சர்ச்சை செய்யப்பட்ட வேளையில் மக்களவை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குஜராத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியும் முதலமைச்சரான
மோடி வெறும் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேளையில்தான் கோத்ரா சம்பவம் நிகழ்ந்தது. சமீபத்திய கர்நாடகா தேர்தலில், ஓட்டளிப்புக்கு முதல் நாளில் ஹூப்ளியில் குண்டுவெடித்தது. அதேபோன்று இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பு ஜெய்ப்பூரில் குண்டு வெடித்தது. நிச்சயமாக இது விசாரணை நடத்தப்பட வேண்டியதாகும்.

தெஹல்கா:
உங்களின் இந்தப் பதில், காங்கிரஸின் மீது சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியதற்கான எதிர்வினையா?

தி.வி.சிங்:
இல்லை. அதைக் குறித்த கேள்வியே தேவையில்லை. பாஜகவின் பிரச்சனைகளின்போது குண்டுவெடிப்புகள் நடந்து வருவதை நான் நீண்டகாலமாக கவனித்து வருகிறேன்.

தெஹல்கா:
ஆனால், சுஷ்மா சுவராஜ் காங்கிரஸின் மீது குற்றம் சுமத்தியது....

தி.வி.சிங்:
குண்டுவெடிப்புகளில் காங்கிரஸுக்கு நேரடியான பங்குண்டு என்றே சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். நான் அவ்வாறு கூறவில்லை. மேலும், அவரின் அந்தப் பேச்சில் ஏதாவது உண்மையுள்ளதா?
ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் குண்டுகள் தயாரிக்கின்றன என்பது உண்மை.

தெஹல்கா:
வெடிகுண்டுகள் தயாரிப்பில் பாஜக, வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவை ஈடுபட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கின்றனவா?

தி.வி.சிங்:
ஆம். உண்மையில், 1992ஆம் ஆண்டு மத்தியபிரதேசத்திலுள்ள வி.ஹெச்.பி அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்தது. அதில் ஒரு வி.ஹெச்.பி தொண்டர் பலியானார், இருவர் காயமடைந்தனர். இவர்கள் வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் எதிர்பாராத விதமாகக் குண்டு வெடித்தது. அதன் பின் 2002 ல், அதே மத்தியபிரதேசம் இந்தோர் மாவட்டத்திலுள்ள மோவில் கோவில் ஒன்றில் குண்டு வெடித்தது. தொடர் விசாரணையில் காவல்துறை விஹெச்பி தொண்டர்களைக் கைது செய்தது. அவர்கள், "வெடிகுண்டுகள்
உருவாக்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராமல் குண்டு வெடித்ததாக" குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களின் அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் வீடியோ கேசட் ஆதாரம் என்னிடம் உள்ளது. மீண்டும் 2006 ல், நாண்டடிலுள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் வீட்டில் குண்டு ஒன்று வெடித்து இரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாகினர். அதன் பின் 2008 மார்ச்சில், தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. தொடர் விசாரணையில் இரு வி.ஹெச்.பி தொண்டர்களைத் தமிழக காவல்துறை கைது செய்தது. அவர்கள் தான் அக்குண்டுகளை வைத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சூரத்தில் திடீரென மரங்களில் வைக்கப்பட்டிருந்ததாக 18 வெடிகுண்டுகளைக் குஜராத் காவல்துறை கண்டறிந்ததே, அது எப்படி?

தெஹல்கா:
எனவே, சமீபத்திய தொடர்குண்டுவெடிப்புகளின் பின்னணியில் பாஜக உள்ளதாக நீங்கள் கூறுகிறீர்களா?

தி.வி.சிங்:
இல்லை, அவ்வாறு எதுவும் நான் கூறவில்லை. நான் கூறுவதெல்லாம், குண்டுவெடிப்புகள் நடைபெறும் வேளைகளில் நடந்துள்ள முக்கிய சம்பவங்கள் கூர்ந்து கவனிக்கப்படுவதில்லை.
ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்பி தொண்டர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பதாக கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்; அவர்களின் அலுவலகங்களிலிருந்து குண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன; தெளிவான மூன்று-நான்கு வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. எவருமே இவற்றைக் கவனிப்பதில்லையே ஏன்?

தெஹல்கா:
தீவிரவாதத்திற்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றிணை வேண்டுமா?
தி.வி.சிங்:
நிச்சயமாக, ஆனால் முஸ்லிம்கள் மட்டுமே குறிவைக்கப்படுவார்கள் எனில், அது சரியல்ல.

தெஹல்கா:
பின்னர் ஏன், இந்தப் பழிசுமத்தும் விளையாட்டுத் தொடர்கிறது?

தி.வி.சிங்:
தேசியவாத சிந்தனை கொண்டோர் வெடிகுண்டுகள் தயாரிப்பில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. பாஜக பிரிவினை அரசியலை நம்புகிறது. முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரிக்காமல் அவர்களால் பிழைப்பு நடத்த முடியாது. ஏதாவது நடைபெறும் ஒவ்வொருமுறையும் அவர்கள் தங்களின் ஹிந்துத்துவ கனவுக்குள் திரும்பிச்செல்கின்றனர்.


தெஹல்கா Vol 5, Issue 33இலிருந்து
தமிழாக்கம் அல்-அமீன்

சத்தியமார்க்கம்.காம்-
-------------------------------------------------------------------------------------------------------------------------
எப்படி மததுவேசமும், வெறியும் ஊட்டப்பட்டு சங்க பரிவார பயங்கரவாத கும்பல் வார்த்தெடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு அதிர வைக்கும் விடியோ ! குண்டு வெடிப்பினால் இவர்கள் எவ்வாறு பயனடைகிறார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ள முடிகிறது. இதோ பயங்கரவாதத்தின் நிஜ முகம். பார்க்க http://www.youtube.com/watch?v=zcgWxknfzcU

Wednesday, February 3, 2010

முஸ்லிம்களை வேரறுக்கத் துடிக்கும் இந்துத்துவ தீவிரவாதம்!


Who Killed Karkare’ நூல் வெளியிடப்பட்டது


இந்தியாவை இந்துராஷ்டிரமாக உருவாக்கவேண்டும் என்று நினைப்பது இந்துக்கள்கூட அல்ல. இந்து மதப் போர்வையில் மதங்கொண்டு திரியும் மூன்று சதவிகிதப் பார்ப்பனர்களே!

பார்ப்பனர்கள் வெளிப்படையாக நாங்கள் தான் அரசாளத் தகுந்தவர்கள் என்று மார்தட்டினால், மார்பும் இருக்காது, மண்டையும் இருக்காது.
அதற்காக அவர்கள் திசை திருப்பும் யுக்திதான் முஸ்லிம்கள் எதிர்ப்பு முஸ்லிம் தீவிரவாதம் என்ற பூச்சாண்டி!

தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் என்று முத்திரை குத்த இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அதனைப் பெருக்கிட, பதாகை பிடித்துக் காட்ட பார்ப்பன ஊடகங்கள் இருக்கின்றன.
இந்தியாவில் புலனாய்வுத் துறை இருக்கிறது. நிருவாக வர்க்கம் இருக்கிறது.
இவற்றை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு நூல்தான் who Killed Karkare?.

நூலின் ஆசிரியர் மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் அய்.ஜி. காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அய்.பி.எஸ்.
ஓய்வு பெற இன்னும் பல ஆண்டுகள் இருந்தும், இதற்குமேல் பெரும் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தும், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு (VRS) கொடுத்துவிட்டு, பார்ப்பனப் பாசிசக் கும்பலால் திட்டமிட்ட வகையில் பலியாக்கப்படும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வீர சாகச பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.


மாலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த ஒரு சதிகார கும்பலின் சிண்டைப் பிடித்து இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்தியவர் கர்கரே என்னும் காவல்துறை அதிகாரியாவார்.


மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாலேகான் என்னும் இடத்தில் சிமி அலுவலகத்தின்முன் குண்டுவெடிப்பு 29.9.2008 அன்று நிகழ்ந்தது. 5 பேர் பலி; 90 பேர் படுகாயம்.மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்-தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. அந்த மோட்டர் காருக்கு உரிமையானவர் ஒரு பெண் சந்நியாசி. அவர் பெயர் சாத்வி பிரக்யா தாக்கூர். மாணவர் பருவந்தொட்டு பல்வேறு இந்துத்துவா அமைப்பில் இருந்தவர்.
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கின் ஆதரவும் உண்டு.


இந்தக் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளி இராணுவத்தில் புலனாய்வுத் துறையில் பணியாற்றிய சிறீகாந்த் புரோகித் என்பவர்; மகாராட்டிர மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருபவர்.
வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையாளுவது எவ்வாறு? என்பன போன்ற பயிற்சிகளை இந்துத்துவாவாதிகளுக்கு அளிக்கும் இராணுவ அதிகாரி இவர்.


இவர்கள் பயன்படுத்திய வெடிகுண்டு தயாரிப்புக்கான வெடிமருந்தோ இராணுவத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்க முடியாதது. மேலும் பல இராணுவத்-தினர் இந்த வெடிகுண்டு குற்றத்தில் தொடர்புடையவர்கள்.
பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்தை இந்து மயமாக்கும் ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது.
விமானப்படைத் தளபதியாக இருந்து விடுபட்ட விஷ்ணுபகவத் இந்த உண்மையைப் பட்டாங்கமாய்ப் போட்டு உடைத்தார்; ஊடகங்களிலும் வெளிவந்தது.


நாசிக் இராணுவத்தில் பயிற்சி பெற்ற இந்துத்துவாவாதிகள் இந்திய இராணுவத் துறையில் ஆயிரக்கணக்கானோர் ஊடுருவியுள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய, அதிரும் தகவலாகும்.


இந்தியாவை இந்து மயமாக்கு!, இந்திய இராணு-வத்தையும் இந்து மயமாக்கு! என்பது இந்துத்துவாவாதிகளின் ஏற்றப் பாட்டாகும்.
அவர்கள் அதிகாரத்தில் இருந்த நேரத்தில், அத-னைத் திட்டமிட்டுச் செய்துவிட்டனர். இராணுவத்-திலிருந்து ஓய்வு பெற்ற 96 உயர்மட்ட அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவ அதிகாரிகள் அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும்.
மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.


மாலேகானில் மட்டுமல்ல; பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் அரங்கேற்றப்பட்ட குண்டுவெடிப்புகளிலும் இதே கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது.
இராணுவ அதிகாரி புரோகித் தயாரித்து வைத்திருந்த திட்டமோ வெகு பயங்கரமானது. இசுரேலில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து இந்தியாவில் ஒரு போட்டி அரசை, இந்துத்துவா அரசை நடத்திடவெல்லாம் திட்டமிட்டு இருந்தனர். வரைபடம், அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை முதற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.


மடிக் கணினி (லேப்டாப்)யில் இருந்த பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன.இவற்றையெல்லாம் கண்டுபிடித்தவர், விரிவாகக் குற்றப்பத்திரிகை தயாரிக்கக் காரணமாக இருந்தவர்தான் கார்கரே என்னும் காவல்துறை அதிகாரி.


4000 பக்கங்களைக் கொண்ட தகவல் அறிக்கை-யாக அது உருவாக்கப்பட்டு இருந்தது.அவை வெளியில் வந்தால் ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பூர்வோத்திரமான அத்தனை அங்க மச்ச அடையாளங்கள் எல்லாம் பளிச் பளிச்சென்று மக்கள் மத்தியிலே அம்பலமாகியிருக்கும்.
இப்படிப்பட்ட ஓர் அதிகாரியை ஆரியம் விட்டு வைக்குமா? இதற்குமுன் விட்டு வைத்ததுதான் உண்டா?


ராமராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று சொன்னவரை மகாத்மாவாக்கியவர்களும் அவர்களே. நான் சொல்லும் ராமன் வேறு; இராமாயண இராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்பித்ததும், அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டு பாய்ச்சி ரத்தம் குடித்த கும்பலாயிற்றே!


திட்டமிட்டார்கள், தீர்த்துக் கட்டிவிட்டார்கள் காவல்துறை அதிகாரி கர்கரேயை.
அதைப்பற்றிய நூல்தான் மகாராட்டிர மாநில முன்னாள் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட ‘‘Who Killed Karkare?’’ என்ற நூலாகும். 2009 இல் முதல் பதிப்பாக வெளி-வந்து, 2010 இல் மூன்றாவது பதிப்பாகவும் வெளிவந்துவிட்டது.


அந்த நூலைப் பற்றிய அறிமுக விழாதான் திராவிடர் கழகத்தின் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் நேற்று (2.2.2010) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றதாகும்.


336 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 300. நேற்றைய விழாவில் ரூபாய் 250_க்கு அளிக்கப்பட்டது.


திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் பேராசிரியர் பி.ஆர். அரங்கசாமி, தணிக்கையாளர் ஆர். இராமச்சந்திரன், அப்துல் காதர், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு, பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன், புதுச்சேரி மு.ந. நடராசன் முதலியோர் பெற்றுக்கொண்டனர்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.


வேர்கள் பதிப்பக உரிமையாளர் எம். குலாம் முகம்மது அவர்கள் தன் உரையில் பார்ப்பனியத்தின் பயங்கரத் தன்மையை எடுத்துக் கூறினார்.
பார்ப்பனர்களால் இந்தியாவுக்கே பேராபத்து சூழ்ந்துவிட்டது.
இவர்களிடமிருந்து இந்தியாவை மீட்கவேண்டும்.
பெரியார் தமிழ்நாட்டிலிருந்து மகாராட்டிரத்திற்குச் சென்றுள்ளார். இந்நூலில் பெரியார்பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமுறையினருக்குப் பெரியார் பற்றி சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரப்போகும் தலைமுறையில் நடக்க இருக்கும் புரட்சிக்கு பெரியார்தான் கட்டியம் கூறுவார் என்று அவர் சொன்னபோது கலகலப்பான கைதட்டல்.


பார்ப்பனர்களின் கைக்குள் இருக்கும் உளவுத் துறையை விமர்சிப்பது என்பது சாதாரணமானதல்ல. முஷ்ரிஃப் அவர்கள் மிகவும் விரிவாகவே உளவுத் துறையை விமர்சித்திருக்கிறார்.


குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி அவர்கள் கூட அண்மையில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்." உளவுத் துறை என்பது யார் ஒருவருக்காவது பதில் சொல்லக் கடமைப்பட்டதாக (Accountability) இருக்கவேண்டும் " என்று கூறியிருப்பது இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நூலுக்குப் பிறகுதான் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த பாலக்காட்டுப் பார்ப்பனரான எம்.கே. நாராயணனும் அந்தப் பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளார்.


திராவிட இயக்கப் பாரம்பரியம் உள்ள பெரியார் அவர்களுக்குப் பிறகு அந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் வீரமணியார் தலைமை வகித்து நடத்தும் இந்த நிகழ்ச்சி புதிய தொடக்கத்தின் வீச்சு என்று குறிப்பிட்டார் குலாம் முகம்மது அவர்கள்.


வி.டி. ராஜஷேகர் ஷெட்டி
தலித் வாய்ஸ் ஆசிரியரும், சமூகநீதித் தளத்தில் தடம் பதித்து வருபவருமான பெங்களூரு வி.டி. ராஜஷேகர் அவர்கள் தம் உரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டதாவது:
இந்நாட்டில் பார்ப்பனர்களின் முதல் பலி முசுலிம்களே; ஆனால், இந்த உண்மையை எந்த அளவுக்கு முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தமது ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினார்.


இந்தியா முழுமையும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். முஸ்லிம்கள் முஷ்ரிஃப் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த-போதே 1925 ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் தொலைநோக்கோடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருக்கும் போதே பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர்களின் வல்லாண்மைக் கொடுமையின்கீழ் துன்பப்பட நேரிடும் என்று எச்சரித்தார்.


அதுதான் இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது.
முஷ்ரிப் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல் அறிவுப்பூர்வமான வெடிகுண்டாகும். இந்த நூல் வெளிவந்த பின் இந்தியாவின் ரா, அய்.பி. போன்ற அமைப்புகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் கி.வீரமணி

நூலினை அறிமுகப்படுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரும் அளவு ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடையிடையே தமிழிலும் விளக்கினார்.


இங்குள்ள முசுலிம்கள் கைபர் கணவாய் வழியாக இந்த நாட்டிற்கு வந்தவர்கள் அல்லர். இங்குள்ளவர்கள் இங்கே பிறந்தவர்கள்தாம். அவர்களை அந்நியர்கள் என்று கூறக் கூடியவர்கள் தான் உண்மையிலே அந்நியர்கள்.
முஸ்லிம் தீவிரவாதி என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதிகளில் என்ன முஸ்லிம் தீவிரவாதிகள் இந்து தீவிரவாதிகள்? முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்பவர்கள் இந்து தீவிரவாதி என்று சொல்கிறார்களா?


இங்கு இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவராக இருந்தவர் கரண் சிங். ஏன் அவர் அந்த அமைப்பிலிருந்து விலகினார்? அதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரே.


அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்று சொல்லித்தானே கரண்சிங் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார் என்ற ஓர் அரிய தகவலை மன்றத்தில் தெரிவித்தார் ஆசிரியர்.


கர்கரேயை அவர்கள் கொல்லவில்லை, உண்மையை, நீதியைக் கொன்று இருக்கிறார்கள். அந்த உண்மைகளையும், மறைக்கப்பட்ட நீதிகளையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.
நம் எதிரிகள் நாணயமானவர்கள் அல்லர். என் உயிருக்கே மூன்று முறை குறி வைத்தனர். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்-பிட்டார். (உரை முதல் பக்கம் காண்க).


எஸ்.எம்.முஷ்ரிஃப்:

நூலாசிரியர் எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்கள் ஏற்-புரையாகக் கூறியதாவது.
நான் இந்த அளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. இந்தப் பிரச்சினைக்காக இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே கூடியிருக்கிறது என்றால், அதற்குக் காரணமான பெரியார் ராமசாமி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன் (கைதட்டல்).


இதனை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


மும்பையில் தீவிரவாதிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. முன்கூட்டியே அய்.பி.க்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை மாநில அரசுக்கு அய்.பி. தெரிவிக்காதது ஏன்?


மராட்டியத்தில் குண்டு வெடிப்பை நடத்தியவர்-கள் இந்துப் பயங்கரவாதிகள். அவர்களின் சதித் திட்-டம் அவர்களிடம் இருந்த லேப்டாப் மூலம் கண்டு-பிடிக்கப்பட்டது. அவற்றையெல்லாம் வெளியில் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி தான் கார்க்கரே.


அவரைத்தான் திட்டமிட்ட வகையில் படு கொலை செய்துள்ளார்கள். வேறு வகையில் இதனைச் செய்திருந்தால் அது வெளிச்சத்துக்கு வந்துவிடும். இது போன்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்வது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.


அபிநவ் பாரத் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.தான். பார்ப்பனர்கள் அதிக ஆதிக்கம் கொண்ட அமைப்பு இது. இஸ்ரேல் நாடுவரை தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.


நாக்பூர், புனே போன்ற இடங்களில் 53 இடங்களில் கூட்டங்கள் நடத்தியிருக்கின்றனர்.காமா மருத்துவமனைக்கு இராணுவத்தினரை அனுப்புமாறு கர்க்கரே கேட்டுக் கொண்டும், அதனைச் செயல்படுத்தத் தவறியுள்ளனர். இந்த நிலையில் கர்க்கரே அங்கே சென்றபோது சுட்டுக் கொன்றுள்ளனர்.


இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளியில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன். இந்த நூலை வெளியிட்டபோது பார்ப்பனர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். புனே மிரர் என்னும் ஓர்ஏடு மட்டும் விமர்சித்திருந்தது.


எனக்குக் கொஞ்சம் சோர்வுகூட இருந்தது. ஆனால் இந்தப் பெரியார் மண்ணுக்கு நான் வந்த பிறகு அந்தக் சோர்வு எல்லாம் ஓடோடிவிட்டது. எனக்குப் புதுத்தெம்பே ஏற்பட்டு விட்டது!


பார்ப்பனர் அல்லாதார் விழிப்புணர்வு பெற வேண்டும்.
பார்ப்பனர் அல்லாதாரின் எழுச்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இசுலாமியர்களை பயங்கரவாதிகள் என்று காட்ட முயற்சிக்கின்றனர். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்
என்று கூறினார்.
தென்சென்னை பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.செங்குட்டுவன் நன்றி கூறினார்.


இரவு 9.30 மணிக்கு விழா நிறைவுற்றது. மன்றம் நிரம்பி வழியும் அளவிற்குப் பலதரப்பட்ட மக்களும் கூடியிருந்தனர்.


தொகுப்பு: மின்சாரம்

Thanks to Viduthalai.