Wednesday, September 10, 2008

ஆட்டோமொபைல் மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

"சார், என் பைக்கை நிறுத்திட்டு கடைக்குள்ள போயிட்டு வர்றதுக்குள்ள எவனோ திருடிட்டுப் போயிட்டான் சார். எப்படியாவது கண்டுபிடிச்சுக்கொடுங்க.."

தில்லாலங்கடி திருடர்களின் திருவிளையாடல்களால் தினசரி போலிஸ் ஸ்டேஷன் வாசலைத் தட்டும் இது போன்ற புகார்கள் பல. சைடு லாக்கையும் உடைத்துத் திருடும் கும்பல்களிடம் இருந்து பைக்குகளைக் காப்பற்றத்தான் "ரிமோட் லாக்கை" அறிமுகம் செய்தார்கள். ஆனால், அதன் மூச்சையும் நிறுத்திவிட்டு, திருடும் கும்பல்களை என்ன செய்வது,?


இதை தடுக்க ஒரு கருவி கண்டுபிடித்திருக்கிறார், தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி. இவர் இங்குள்ள சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ படிக்கிறார். " நான் வடிவமைத்திருப்பது மொபைல் போன் மூலமாகச் செயல்படும் ஒரு லாக். அதாவது, மொபைல் போன் மதர் போர்டில், லைப் டைம் சிம் கார்டு ஒன்றைப் பொருத்தி, அதனுடன் "ஆக்ஸிலேஷன் போர்டு" என்ற சர்க்கியூட்டையும் பைக்கின் சீட் அடியில் பொருத்தி இருக்கிறேன். இஞ்சினின் இயக்கத்தை எனது செல்போன் நம்பரில் இருந்து மட்டும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த போர்டிலிருந்து இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் லாக் செய்த பைக்கை, சைடு லாக்கை உடைத்தோ அல்லது கள்ளச்சாவி மூலம் திருட முயன்றால், அடுத்த வினாடியே உரிமையாளரின் செல்போனுக்கு தகவல் வரும் வகையில் இந்த சர்க்யூட் அமைக்கப்பட்டிருக்குது. பைக் திருடப்படுகிறது என்பதைத் தெரிந்துக்கொண்டு, போன் இணைப்பை கட் செய்துவிட்டு காரியத்தில் இறங்கும் வரை தொடர்ந்து பல முறை தொலைபேசி அழைப்பு வந்துகொண்டே இருக்கும். கிக்கரை உதைத்தோ வயரை கட் செய்துவிட்டோ தள்ளிவிட்டோ பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாது. அதையும் மீறி தள்ளிக்கொண்டே சென்றுவிட்டால் சிம் கர்ட் மூலம் பைக் எந்த எல்லைக்குள் இருக்கிறது என்று காவல்துறை மூலம் தோராயமாகக் கண்டுபிடித்துவிடலாம். மேலும், லாக் செய்ய மறந்து நீண்ட தூரம் சென்றுவிட்டால் கூட, செல்போன் மூலம் லாக் செய்துகொள்ளலாம்" என்று தனது கண்டுபிடிப்பைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார் முனியசாமி.


"சோதனை முயற்சி என்பதால் இதற்கு 1,100 ரூபாய் வரை செலவாகி இருக்கிறது. அதே நேரம், இந்த உபகரணத்தை தற்காலிகமாக பைக்கில் பொருத்தியிருப்பதால் இந்த நிலையில் திருடர்கள் இந்த உபகரணத்தையும் செயலிழக்கச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதை வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிலேயே, இதை சேதப்படுத்த முடியாத இடத்தில் பொருத்திவிட்டால், கண்டிப்பாக காலத்துக்கேற்ற சிறந்த பாதுகாப்பு கருவியாக இருக்கும்" என்கிறார்.


இந்த செல்போன் லாக் தயாரித்த பின்னணி பற்றி முனியசாமி கூறுகையில், " அப்பா மீன்பாடி வண்டி ஓட்டுறதால குடும்பம் வறுமையிலதான் ஓடுது. இந்த லாக் சிஸ்டத்தையே நண்பர்கள் தங்கமணி, கோமுசங்கர், ராபர்ட் மூணு பேரோட உதவியாலத்தான் செஞ்சேன்" என்று நண்பர்களின் உதவியை குறிப்ப்பிட்டவர்,"குறிப்பிட்ட தூரத்தில் இருந்து மட்டும் லாக் செய்யக்கூடிய, நடைமுறையில் இருக்கும் ரிமோட் லாக்கைவிட இது மிகவும் சிறந்தது" என்கிறார் நம்பிக்கையுடன் முனியசாமி.


நன்றி: மோட்டார் விகடன்.

Sunday, September 7, 2008

வெளிப்பட்டது தினமலரின் சுயரூபம்.


தமிழ் நாட்டில் ஒவ்வொரு தினசரிக்கும் ஒரு கேரக்டர் இருப்பது அதை வாசிக்கும் வாசகர்களுக்கு தெரியும். ஒரு தினசரி பத்திரிக்கையின் பெயரை சொன்னவுடனே அதன் சார்பு என்ன, அதன் பின்புலம் என்ன, என்பது தமிழ் மக்கள் அறிந்ததே. அதனால் "தினமலர்" என்று சொன்னவுடன் அது உண்மையை நேர்மையுடன் வெளியிடும் நாளிதழ் என்றும் அதற்கு கட்சி சார்போ, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவாக அல்லது எதிராக எழுதாத பத்திரிகை என்று வக்காலத்து வாங்க மாட்டீர்கள் என்று தெரியும்.

தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் கேட்டால் "தினமலர் எங்கள் சமுதாயத்தை குற்றப்பரம்பரையாக்க திட்டமிட்டே விஷம பிரச்சாரம் செய்து வருகிறது" என்கிறார்கள். இணையத்தில் எழுதும் தமிழ் முஸ்லிம் பதிவர்களின் பதிவுகளில் ஒரு பதிவாவது தினமலரை கண்டித்து இல்லாமல் இருக்காது.

இந்த வருடம் இஸ்லாமியர்களின் புனித மாதமான "ரம்லான்" துவங்கிய நாளில் அவர்கள் பெரிதாக மதிக்கும் இறைத்தூதர் முகம்மது அவர்களின் கார்டூனை வெளியிட்டது. அந்த கார்ட்டூன் ஏற்கனவே டென்மார்க் நாட்டின் ஒரு பத்திரிகையில் வெளிவந்து உலக முஸ்லிம்களின் கண்டனத்திற்குள்ளானது.
இதை மீள்பிரசுரம் செய்தது ஏன்? இவர்களின் உள்னோக்கம் என்ன?

தினமலரின் தரப்பில் இந்த சம்பவத்தை கவனக்குறைவு காரணமாக நடந்ததாக வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது பச்சை பொய் என்பது கடந்த வருடம் அக்டொபர் மாதம் தினமலரின் இதழ்களை புரட்டினால் தெரிந்து கொள்ளலாம். சம்பந்தமில்லாத ஒரு கட்டுரையில் அந்த கார்டூனை சாமர்த்தியமாக நுழைத்து விட்டது. இதுவும் புனித ரம்லான் மாதம் தான் நடந்தது. ஆனால் அந்த நிகழ்வு யார் கவனத்திற்கும் வராமல் போனது.

ஏற்கனவே "வினாயகர் சதுர்தி" காலங்களில் பதற்றமாக இருந்து வரும் தமிழகத்தில் மேலும் இது போன்ற செயல்கள் மூலம் தினமலர் அமைதியின்மையை ஏற்படுத்தி எதை சாதிக்கப்போகிறது.

நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நாளேடு அல்ல என்றும் ஒரு மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை சன் டிவி யும் தினகரனும் உலகம் முழுவதும் கொண்டு சென்றது என்றும் இப்போது நீதிமன்றத்தின் படியேறிக்கொண்டுள்ளனர்.

வினை விதைத்தால் அறுத்து தானே ஆக வேண்டும்.