Sunday, September 30, 2012

தலித் ஒரு நிமிடத்தில் ராவுத்தர் ஆகலாம்; அய்யங்காராக முடியுமா...? ?


இந்து சாதியத்தால் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் சமத்துவத்திற்கானத் தேடலில் இன்றுவரை களைப்படையவில்லை. சமயம், தத்துவம், அரசியல் என தங்களின் விடுதலைக்கு உதவும் எந்த வழிமுறைக்கும் அவர்கள் செவிமடுத்திருக்கிறார்கள். அவற்றோடு இணைந்து நிற்கிறார்கள்; இரண்டறக் கலந்தும் விடுகிறார்கள். மிஞ்சியதெல்லாம் ஏமாற்றமே! ஆனால், தமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி அருகே கொடிக்கால் கிராமத்தில் பிறந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ‘இஸ்லாம் ஏமாற்றவில்லை' என்கிறார். அநீதியாகத் தம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட பிறவி இழிவைத் துடைத்தெறிய இலக்கியம், ஊடகம், பகுத்தறிவு, பொதுவுடைமை, மனித உரிமை எனப் பயணப்பட்டு, வழியெல்லாம் ஏமாற்றத்தில் கரைந்து, இறுதியில் இஸ்லாத்தின் மூலம் தனது இழிவு நீங்கியதைப் பெருமையுடன் விவரிக்கிறார். ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்காக, அவர் அனுபவத்தில் தேக்கியவற்றைத் தன் தாய்ச் சமூகத்திடம் வாஞ்சனையுடன் பகிர்ந்து கொள்கிறார்.


நேர்காணல் : பாண்டியன், யாக்கன்



கொடிக்கால் செல்லப்பாவாக இருந்த நீங்கள், எந்த ஆண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாவாக மாறினீர்கள்?

1986 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மாறினேன். 8, 9 வயது இருக்கும்போது எங்கள் பகுதியில் தலித், அதற்கு அடுத்தபடியாக நாடார்கள்தான் அதிகமாக இருந்தார்கள். ‘உயர்சாதி' என்று சொல்லப்படுகிறவர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அறவே எங்கள் பகுதியில் இல்லை. நாடார்களும் தலித்துகளும் பல சாதிக் கொடுமைகளுக்கு ஆளானவர்கள்தான். சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நாடார்களே, தலித்துகள் தங்களுக்குக் கீழ் இருக்க வேண்டும்; தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று அவமானப்படுத்தினார்கள். நாடார்கள் தலித்துகளிடத்தில் நடந்து கொண்ட முறையும் செயல்பாடுகளும் எனக்குள் காயத்தை ஏற்படுத்தியது. இந்தத் தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறையாவது நம்மை மனிதர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. கன்னியாகுமரியில் நடைபெற்ற தனித் தமிழ் நாடு விடுதலைப் போராட்டத்தில், 1954 ஆம் ஆண்டு கலந்து கொண்டு சிறை சென்று வெளியில் வந்தோம். சிறைக்குச் சென்று வந்ததால் சமுதாயத்தில் என்னைப் பற்றி ஒரு பார்வை வருகிறது. இது, மிக முக்கியமான கட்டம். ஏனென்றால், சிறு வயதில் எனக்குப் படிக்கின்ற வாய்ப்பு இல்லை. பொது அறிவு எனக்கு அதிகமாக ஏற்படக் கூடிய நிலை வரும்போது, எங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களின் பார்வை மாறுகிறது. எந்தச் சமுதாயம் எங்களை அவமானப்படுத்தியதோ, என்னை ஒதுக்கி வைத்ததோ, அந்தச் சமுதாயத்தினுடைய அடுத்த தலைமுறை என்னை மதிக்கப் புறப்பட்டது.

அடிமை இந்தியாவில், ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, சட்டமன்றத்தில் ஆதுதிராவிடர் மானியக் கோரிக்கையின் போது ஒரு செய்தியைச் சொல்கிறார் : ‘‘எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் எனக்குக் கிடைத்தது. அதில், சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் ஒற்றைவாடை தியேட்டரில் ‘ஆரியமாலா' என்ற நாடகம் நடத்த இருப்பதாகவும், அது குறித்த செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு அடிக்குறிப்பொன்று அதில் சொல்லப்பட்டிருந்தது. தொழுநோயாளிகள் மற்றும் பஞ்சமர்களுக்கு எக்காரணம் கொண்டும் நாடகம் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.'' ஒரு சமுதாயம் எவ்வாறு இழிவுபடுத்தப்பட்டிருந்தது என்பதைச் சொல்வதற்கு வேறு வார்த்தைகளே இல்லை. இது, அடிமை இந்தியாவில் நடந்த விஷயம்.

இன்னொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஜெகஜீவன்ராம் அவர்கள், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், செல்வாக்குமிக்கத் தலைவராகவும், துணைப் பிரதமராகவும் இருந்து, அவர் ராணுவ அமைச்சராக இருக்கும்போது, ஒரு சம்பவம் நடக்கிறது. காசியிலே சம்பூராணந் சிலையை அவர் திறந்து வைத்துவிட்டு வந்த பிறகு, அவர் ஒரு தலித் என்ற காரணத்தால் அங்கு இருக்கிற சனாதனவாதிகள் எல்லாம் கங்கைக்குப் போய் தண்ணீர் கொண்டு வந்து சிலையை சுத்தம் செய்து கழுவி, உலகிற்கு பகிரங்கமாக தெரிவித்தார்கள். இதை உலகமே பார்த்தது. எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமைகள் இருந்தால், இப்படிப்பட்ட செய்திகள் வந்தால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கக்கூடிய காலத்திலேயே இந்த சம்பவம் நடந்தது. அவர், முப்படைக்கும் தளபதியாக இருந்த காலத்திலேயே இது நடந்தது.


நீங்கள் மதம் மாறுவதற்கான சமூகக் காரணங்களைச் சொல்கிறீர்கள். சமூகக் காரணங்களால் நீங்கள் மதம் மாறினீர்களா? அல்லது உங்களுக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட அனுபவங்களால் மதம் மாறினீர்களா?

சமூகத்தில் நானும் ஒரு அங்கம்தானே! சமூகம் பாதிக்கப்படும்போது அதில் நானும் ஒரு ஆள்தானே! அதை நான் பிரித்துப் பார்க்கவில்லை. பல சம்பவங்களை என்னால் சொல்ல முடியும். ஒரு ஆளை சந்திக்கும்போது, ஒரு வீட்டிற்குப் போகும்போது, என்னை நடத்திய நடைமுறைகள், எனக்கு ஒரு காயத்தை ஏற்படுத்தியது. அந்தக் காயம் நிரந்தரமாகவே உள்ள காயம். சமூகக் காரணங்களால்தான் நான் மதம் மாறினேன். முதன் முதலாக நான் மட்டும்தான் மதம் மாறினேன். நான் ‘கன்வின்ஸ்' ஆனதால் மதம் மாறினேன். என்னுடைய மனைவி கிறித்துவப் பெண். கம்யூனிஸ்ட் இயக்கத்திலேயே அந்தக் குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்ததுனாலே, என்னுடைய மனைவி நாத்திகவாதி. அவர் சர்ச்சுக்கு போவது கிடையாது; சடங்கு சம்பிரதாயங்களில் பங்கெடுத்தது கிடையாது. அப்போது நான் இப்படி ஒரு முடிவு எடுத்த பிறகு, அதை நான் என் மனைவியிடம் சொல்லும்போது, என்னைத் திட்டினாங்க. இருந்திருந்து ஒரு மதவாதியாக மாறிட்டீங்களே! பகுத்தறிவு ஊட்டினவங்க, காலம் முழுவதும் அதற்காகவே பாடுபட்டவங்க, சமூகத்தில் என்னென்னவோ செய்தீங்க. இருந்திருந்து மதவாதியாக மாறிட்டீங்களே என்று வருத்தப்பட்டார்.

Kodikkal Abdulla
அதற்கு உங்களுடைய பதில் என்ன?

அதற்குப் பிறகுதான் அவருக்குச் சில நூல்களை எல்லாம் கொடுத்தேன். நான் என் மனைவியிடம் சொன்னேன்: நாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்றால், அந்த இயக்கம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையில்தான் நீயும், நானும் இரவு பகலாகப் பாடுபட்டோம், உழைத்தோம், கஷ்டப்பட்டோம். பலநாள் ஜெயிலுக்குப் போனோம். எல்லாம் நடந்தது. இதில் ஏதாவது ஒரு மாற்றம் உனக்கு வந்திருப்பதாகத் தெரிகிறதான்னு கேட்டேன். யோசித்த பிறகு, ஆமாம் நம்முடைய தோழர்கள் எல்லாம் தோழமையோடுதான் இருக்காங்க. ஆனால், அவங்க வீட்டில் அப்படியில்லை. நம்ம வீட்டுக்கு வருகிற கட்சித் தோழர்கள் அக்கா, தங்கச்சி என்கிற உறவோடு, அந்த பந்தத்தோடு நம்மிடம் அன்பு செலுத்துறாங்க, அதெல்லாம் சரிதான். ஆனால், அவங்க அப்பாவோ, அம்மாவோ, தம்பியோ, தங்கச்சியோ நம்மள அப்படிப் பார்த்ததில்லையே! இதில் ஒரு உண்மை என்னவென்றால், இதை மாத்தணும்ங்கிறதுதானே எனக்கும் உனக்கும் நோக்கம். ஆமாம். அதற்கு ஒரு வழி என்னன்னு சொன்னா? மதமாற்றம்தான்.

நம்முடைய எல்லாவிதமான முன்னேற்றத்திற்கும் இங்கு தடையாக இருப்பது ஜாதிதான். இந்த ஜாதியை ஒழிக்கணும், இந்த ஜாதி மாறணும். இது எங்கு போனாலும் இருந்திட்டு இருக்கில்ல. இது மாறுவதற்கு ஏதாவது வழி உண்டா? அது கம்யூனிஸ்ட் மூலம் முடியும் என்று நம்பினோம். நம்பிக் கொண்டிருந்தோம். நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். உனக்கு நம்பிக்கை உள்ளதா? என்று கேட்டேன். ஜாதி ஒழியாது. ஜாதி ஒழியவில்லை என்று சொன்னால், மக்களுக்கு அந்தஸ்து எப்படி கிடைக்கும்? அப்ப கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லையே. அது நம்ப இஸ்லாத்து மூலமாக கிடைக்குமா என்று ஒரு கேள்வியை என் மனைவி கேட்டார். அது கிடைக்கும். எப்படி கிடைக்கும் என்று சொன்னால், கம்யூனிசத்தின் மூலமாக இந்தியாவைப் பொறுத்தவரை சாதி ஒழியும் என்பது சாத்தியமில்லை. அந்தத் தத்துவம் சரியா, தப்பான்னு நான் அங்கு போகவில்லை. இந்தியச் சூழ்நிலையில எல்லாவிதமான மாற்றத்திற்கும் தடையாக இருப்பது ஜாதி அமைப்பு முறை. இந்த ஜாதிகள் ஒழியாமல், இங்கு வர்க்கப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. அப்படியிருக்கும்போது, நம் எண்ணங்கள் நிறைவேறாத ஒரு இயக்கத்திலே, ஒரு கொள்கையிலே ஏன் விடாப்பிடியாக நாம் இருக்கணும்? இதுதான் நான் அவருக்குச் சொன்ன பதில்.


நீங்கள் சொல்கிற இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உண்டா?

கம்யூனிச இயக்கங்களின் செயல்பாட்டு முறை, சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரப் போதுமானதாக இல்லை. அதற்குக் காரணம் ஜாதி அமைப்பு முறை. பொதுவாக ஒரு பிரச்சனை என்று வரும்போது, கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய, மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் தலைமை ஏற்க வருகிறார்கள். அவர்கள் ஒரு பொறுப்புக்கு வரும்போது, ஒரு சில தீர்மானகரமான தெளிவான முடிவு எடுக்காமல், ஒவ்வொரு காலகட்டத்திலும் தயக்கம் காட்டுகிறார்கள். அது குறித்துச் சொன்னாலும் கூட, அது எடுபடக்கூடிய நிலையில் இல்லை.


நீங்கள் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்தும், அம்பேத்கர் தழுவிய பவுத்த மார்க்கத்தைத் தேர்வு செய்யாமல் இஸ்லாத்திற்குச் சென்றது ஏன்?

‘நான் இந்துவாக சாகமாட்டேன்' என்று அம்பேத்கர் ஏற்ற உறுதிமொழியின் அடிப்படையில் அவர் பவுத்தராக மாறினார். பவுத்தம் சரியா, தவறா என்ற கருத்துக்குள் நான் செல்லவில்லை. ஆனால், நடைமுறையில் பவுத்தம் இந்து மதத்தின் ஒரு பிரிவாகத் தானே கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பெரியவர் சக்திதாசன், டாக்டர் சேப்பன் இவர்கள் எல்லாம் இந்து மதம் வேண்டாமென்று பவுத்தத்திற்குப் போனார்கள். ஆனால், பழையபடி மீண்டும் எங்களுக்கு சாதி ஒழிய வேண்டும்; சாதிச் சலுகைகள் எங்களுக்கு வேண்டும் என்று போராடுகிறார்களே! கிறித்துவமும் பல நல்ல செய்திகளைச் சொன்னாலும், நடைமுறையில் சாதியத்தை வேரறுக்க முடியவில்லையே. பவுத்தத்தை ஏற்றால் சாதி ஒழியும் என்று சொன்னார்கள். ஆனால், ஒழியவில்லையே! இதற்கு யாரும் சரியான பதில் சொல்ல மறுக்கிறார்கள்.

அந்தக் காலத்தில், அஜிதா என்ற நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு போராளியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் அவரைப் பற்றிய செய்தி வராத நாட்களே இருக்காது. அவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட்டவர். நீங்கள் பல்வேறு சிரமத்துக்கிடையில் பல தியாகங்களைச் செய்திருக்கிறீர்கள்; நானும் என்னுடைய சக்திக்கேற்றவாறு பல தியாகங்களைச் செய்திருக்கிறேன். ஆனால், நாம் விரும்பிய அந்த இலக்கை அடைவதற்கு சாதி அமைப்பு முறை தடையாக இருக்கிறதே. அதை ஒழிக்காமல் நாம் எப்படி வெற்றி பெற முடியும் என்று நான் கேட்டேன். அதற்கு அந்தம்மா சொன்னார்கள் : ‘இங்கு அப்படி எல்லாம் ஒன்றுமில்லை'. இங்கு ஏற்றத்தாழ்வு எல்லாம் சாதி அடிப்படையில் இல்லை என்று சொன்னார்கள். ‘இதை நான் நம்ப முடியாது' என்றேன். நம்பூதிரியும், நாயரும் கேரளத்திலே உண்டா என்றேன். ‘ஆம்' என்றார்கள். ‘தோட்டி' வேலை செய்கிறவர்கள் அங்கு உண்டா என்றேன் ‘ஆம்' என்றார்கள். இந்த வேலையை நாயரும் நம்பூதிரியும் செய்வார்களா என்றேன். ‘இது அவர்களுடைய வேலை அல்லவே' என்றார்கள். அப்ப நான் சொன்னேன் - ஜாதி நம்மிடையே பல வடிவங்களில் இருக்கிறது. ஆனால், நாம் ஏதோ ஒரு வகையில் இதை எல்லாம் மறைத்துக் கொண்டிருக்கிறோம் என்றேன். ஆனால், இதை எப்படி ஒழிக்க முடியும் என்று கேட்டார். நான் சொன்னேன், ஒரே நொடியில் சாதியை ஒழிக்க முடியும். ‘லாகில்லாஹா இல்லல்லா' என்று சொல்லிவிட்டால், ஒரே நொடியில் சாதி ஒழிந்துவிடும். நான் அப்படி ஒரே நொடியில் சாதியை ஒழித்து முஸ்லிமானேன்.


இருப்பினும், நடைமுறையில் மதம் மாறியவர்களை ஏற்றுக் கொள்கிறார்களா?

நானும் ‘முரசொலி' அடியாரும் சென்னையில் இருந்து வேலூர் செல்கிறோம். அங்குள்ள இஸ்லாமிய மய்யத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். அவர் இன்னும் இஸ்லாத்திற்கு வரவில்லை. ஆனால், தொப்பி அணிந்திருந்தார். பார்க்க முஸ்லிம் போலவே இருப்பார். நான் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அவருடைய தொப்பியை அணிய வேண்டும் என்ற ஆசையில், உங்களுக்கு தாடி இருக்கிறது. எனவே, அந்தத் தொப்பியை எனக்குக் கொடுங்களேன் என்றேன். அதற்கு அவர் இன்னொரு நூல் தொப்பி இருக்கிறது; அதை நீ வைத்துக் கொள் என்று அதைக் கொடுத்தார். நான் பயணத்தின்போது, அதைக் கழற்றுவதும்போடுவதுமாக இருந்தேன். பிறகு, தொப்பியைக் கழற்றுவதில்லை என்று உறுதியாக இருந்தேன். ஊர் வந்ததும் அவருக்குப் பின்னால் நான் இறங்குகிறேன்.

 நான் பேருந்திலிருந்து கீழே இறங்கியவுடன் அங்கிருந்த ரிக்ஷாக்காரர் முதல் முதலில் என்னைப் பார்த்து, ‘‘பாய் உங்களுக்கு எங்க போகணும்?'' என்றார். நான் ‘கலிமா' சொல்லவில்லை; முஸ்லிமாக மாறவில்லை; பெயர் மாற்றவில்லை. ஆனால், இந்தத் தொப்பி கொடுத்த அங்கீகாரத்தை வைத்து அந்த ரிக்ஷாக்காரர் ‘‘பாய்'' என்று என்னை அழைக்கிறார்.

பிறகு அந்த இஸ்லாம் நிறுவனத்திற்குச் சென்றோம். அங்கு தென் மாவட்டங்களில் இருந்து முஸ்லிமாக மாறிய பலபேர் இருக்கிறார்கள். 5 லிருந்து 80 வயது பெரியவர்கள் வரை இருக்கிறார்கள். இந்தத் தொப்பியை அதற்குப் பிறகு தூக்கத்திலும் நான் எடுக்கவில்லை. எனக்குள் ஒரே பூரிப்பு. அடுத்த நாள் காலை வெளியே கிளம்பி, அங்குள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அங்குள்ள டீ கடைக்குச் சென்றேன். அந்தக் கடையில் நிறைய இந்து சாமிப் படங்களை கடைக்காரர் வைத்திருந்தார். அங்கு போனதும், ‘கல்லா'வில் இருந்தவர் வாங்க பாய் உட்காருங்க! ‘டேய் பாய்க்கு ஒரு டீ போடு' என்றார். இதைத்தான் மிகப் பெரிய சமூக அங்கீகாரமாக நான் நினைக்கிறேன். இவை எல்லாம்தான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக பலப்படுத்தியது.

நான் இஸ்லாத்திற்கு வந்த பிறகு, எனக்கு சமூகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. எங்கள் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கல்லூரி, 46 ஜமாத்துகளுக்குத் தொடர்புடைய ஒரு கல்லூரி. அது 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடிய புகழ்பெற்ற கல்லூரி. அந்தக் கல்லூரியில் ஆட்சிமன்றத் தேர்தல் வருகிறது. அப்போது நண்பர்கள், நீங்களும் ஆட்சிமன்றக் குழுவுக்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று சொன்னார்கள். நீங்களும் போட்டிப் போடுங்கள் என்று வலியுறுத்தினார்கள். நான் தயங்கினேன். இருப்பினும், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். நான் இன்றளவும் அந்த ஆட்சிமன்றக் குழுவில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறேன். 

இன்றைக்குத் தமிழ் நாட்டில் மிக முக்கியமாக அறியப்படக்கூடிய தலைவர்கள், இஸ்லாம் பற்றியும் அதன் தத்துவம் பற்றியும் அறைக்குள்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய சமூக, மதம், பொருளாதாரம் எல்லாம் அந்தப் பள்ளிவாசலுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. மற்ற சமூகம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யாருக்கும் விளங்காமல் இருந்தது. அவர்கள் எல்லாம் நான் முன்வைக்கக் கூடிய சமூக சீர்திருத்தத்திற்கான செயல்திட்டங்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

Kodikkal Abdulla
இஸ்லாமை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கான சமூகக் காரணங்களைக் கூறுங்கள்...

ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு மதியம் இரண்டு மணி இருக்கும். அந்த வழியா   "ஜனாஸா"  ஒன்று கொண்டு வருகிறார்கள்.  ஜனாஸா  என்றால் சாவு. அந்த வழியே கொண்டு வருகிறார்கள். அதை அடக்கம் செய்யக்கூடிய நேரம் வந்தது. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அந்த அடக்கத்தில் நாங்கள் எல்லோரும் கலந்து கொள்கிறோம். அந்த நேரத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டது. இறந்துவிட்ட அந்தப் பெரியவர் பேர் தெரியாது. எந்த ஊர் என்றும் தெரியாது. அப்படிப்பட்ட ஆளு அங்க ஒரு அனாதையா இறந்து கிடந்தார்.

அதுமாதிரி இறந்து கிடப்பவர் முஸ்லிம் என்று தெரிந்தால், உள்ளூர் போலிசோ, அல்லது மருத்துவமனையோ அங்கிருக்கும் ஜமாத்திற்கு உடனடியாகத் தெரிவிப்பார்கள். உடனே ஜமாத்தில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்றால் (இன்றும் எல்லா ஜமாத்திலும் கடைப்பிடிக்கக்கூடிய ஒன்று. நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்), ஒரு மனிதனுக்கு அடக்கத்திற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்து அதற்கு மரியாதை செலுத்துவார்கள். அதே மாதிரி, அன்றைக்கு முழு மரியாதை அந்த இறந்துபோன பெரியவருக்குச் செய்யப்பட்டது.

ஆனால், அதே நேரத்தில், தஞ்சை மாவட்டத்தில் ஒரு பெரியவர் இறந்து போய்விட்டார். அந்தப் பெரியவரை அடக்கம் செய்வதற்கு எல்லோரும் போகிறார்கள். அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி முடிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்று ஒன்று இல்லை. இக்காலத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கிறது. அப்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளர் திரு. பத்மநாபன், மாவட்ட ஆட்சியர் திரு. ராமு, அம்மாவட்ட எஸ்.பி.யும் ஒரு தலித்துதான். இந்த மூன்று பேருக்கும் மாநில அளவில் முழு அதிகாரம் இருக்கிறது. அதிலும் தலைமைச் செயலாளருக்கு முழு அதிகாரம் உண்டு.

அப்படிப்பட்ட நேரத்தில், அந்தப் பெரியவரின் உடலை அடக்கம் செய்யக் கொண்டு போகிறார்கள். அங்கிருந்த சாதி இந்துக்கள் சாலையை இடைமறிக்கிறார் கள். பெரும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் கூடி விட்டார்கள். கலவரம் ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்படுகிறது. இரண்டு நாளாகப் பிணம் கிடக்கிறது. புதைக்க ஆளில்லை. சாதி இந்துக்கள் புதைக்கவே அனுமதிக்கவில்லை.

 தோழர்களே என்ன நடந்தது தெரியுமா? எஸ்.பி.யும், கலெக்டரும் தலித் தலைவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து, எங்களுக்காக, எங்களுடைய வேலையைக் காப்பாற்றுவதற்காக, தயவு செய்து விட்டுக் கொடுங்கள்; நாங்கள் ஒரு சிக்கலான கட்டத்தில் இருக்கிறோம். ஆட்சியுமில்லை; எனவே, நாங்கள்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும். எனவே, நீங்கள் பிரச்சினை செய்யாதீர்கள் என்று கெஞ்சுகிறார்கள். தெருவில் இருந்த பிணத்தை அவருடைய வீட்டு முற்றத்திலேயே அடக்கம் செய்தார்கள் என்பதுதான் கொடுமையான வரலாறு.

இந்தப் பிரச்சினை இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. யாராவது மறுக்க முடியுமா?

ஆனால், ஒருவர் முஸ்லிமாகி விட்டால், அவருக்கு அந்தச் சமூகத்தில் அங்கீகாரம் இருக்கிறது. அவருக்கு முழு மரியாதை கிடைக்கிறது. அவன் ஒருபோதும் அனாதையாக சாக அந்தச் சமூகம் அனுமதிக்காது. ஆற்றங்கரையிலோ, குளத்து ஓரத்திலோ, ரோட்டு ஓரத்திலோ அல்ல. அந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் அவனை அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் மிக முக்கியமான சமூகக் காரணம்.

இஸ்லாமை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கான வேறு சமூக நிகழ்வுகள் உண்டா?
இன்னொரு செய்தியையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேனி மாவட்டத்தில் ஒரு பெரிய ஜாதிக் கலவரம் நடந்தது. இதில் தலித்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அங்குள்ள துரைராஜபுரம் என்ற கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘எங்க ஊர்ல ஒட்டுமொத்தமாக நாங்க எல்லோரும் முஸ்லிமாக மாறப் போறோம்' என்று அதில் பிரகடனப்படுத்தி இருந்தார்கள். இந்தச் செய்தி, தமிழ்நாட்டின் பிரபலப் பத்திரிகைகளில் வெளி வந்தது. அப்போது நாங்கள் அம்மக்களுடன் இணைந்து களப்பணிகளைச் செய்து வந்தோம். இந்தச் செய்தி வந்ததும் நாங்கள் அந்த இடத்திற்கு விரைந்தோம். அங்கு பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். பத்திரிகையாளர்கள் மதமாற்றம் பற்றி பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் ஒரு வயசான அம்மா பதில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்:

 "அய்யா எங்க காலத்தில நாங்க இந்த அழுக்குத் துணியை கட்டிக்கிட்டு எப்படியோ காலத்தைக் கழிச்சிட்டோம். ஆனால், எங்கள் பிள்ளைகள் காலேஜிக்குப் போகுதுங்க. பள்ளிக்கூடத்திற்குப் போகுதுங்க. அதுக எல்லாம் வெள்ள துணி கட்டணும், பேண்ட் போடணும், செருப்புப் போடணும்னு நினைக்கிறாங்க. ஆனால், இந்த ஊர்ல அதப் போடக்கூடாதுண்ணு சொல்றாங்க. இந்தத் துணிமணிகள நாங்க யாருக்கிட்டயும் போய் கேக்கல; வாங்கல. நாங்க உழைக்கிறோம்; உடுத்தணும்னு ஆசைப்படறோம். குழந்தைங்க நல்ல துணி உடுத்தணும்னு ஆசைப்படறாங்க. ஆனால், குழந்தைங்க இப்படி நல்ல துணி போடக் கூடாதுன்னு சொல்றாங்கய்யா!''

Kodikkal Shiek Abulla"சரி, இதெல்லாம் நீங்கள் முஸ்லிமாக மாறினால் கிடைச்சிருமா?''ன்னு பத்திரிகைகாரங்க அந்த அம்மாவ கேட்கிறாங்க.

அப்போ அந்தம்மா சொன்னாங்க, ‘எங்க சொந்த பந்தங்கள் இதுக்கு முன்னால சில ஆண்டுகளுக்கு முன்னால முஸ்லிமுக்குப் போயிருக்காங்க' என்று தேனீ மாவட்டத்தில் சில ஊர்களைக் குறிப்பிட்டு, அந்தம்மா பதில் சொன்னாங்க. ‘அப்படி மாறினவங்க எல்லாம், முட்டிக்குக் கீழே வேட்டி கட்டுறது, செருப்புப் போடுறது என்றெல்லாம் மாறியிருந்தாங்க' என்று சொன்னாங்க.

 நாங்க எதெல்லாம் எதிர்பார்க்கிறோமோ அதெல்லாம் அங்கு கிடைக்கிறது என்று சொல்லிவிட்டு, ஒரு சுவையான செய்தியை அந்தம்மா சொன்னாங்க. ‘எங்க ஊர்ல ஒரு பெண்ணை கற்பழிச்சுக் கொன்ற பிறகுதான் அதையொட்டி கலவரம் நடந்திச்சு. முஸ்லிமா மாறினா இதெல்லாம் நடக்காதான்னு நீங்க கேட்கிறீங்க. நீங்க இந்த ஊருக்கு வந்து மொதல்ல என்ன செஞ்சீங்க? நாங்க எல்லாம் கவனிச்சிக்கிட்டுதான் இருந்தோம். முதல்ல எங்க போனீங்க?

' ‘நாங்க அந்த டீக்கடையில் டீ குடிக்கப் போனோம்' என்றார்கள் நிருபர்கள். ‘அந்த டீக்கடை யார் டீக்கடை தெரியுமா?' ‘அது ஒரு முஸ்லிம் கடை' என்று சொன்னார்கள். ‘அவரு பேரு உங்களுக்குத் தெரியுமா?' ‘தெரியலையே' என்றார்கள் நிருபர்கள். அந்த டீக்கடை பாய்க்குப் பேரு அல்லா பிச்சை. அவர் மூன்று வருஷத்திற்கு முன்னால, எங்க சமூகத்தில, எங்க பக்கத்து வீட்ல இருந்த ஆளு. அவரும் அவருடைய குடும்பமும் இப்ப முஸ்லிமா மாறிட்டாங்க. அவரு கடையில எல்லாரும் டீ குடிப்பாங்க. அவருடைய கூட பிறந்த தம்பிதான் இன்னொரு கடை வைச்சிருக்காரு. அவர் பேரு துரைப்பாண்டி. அவர் கடையில் நாங்களும் எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்களும் டீ குடிக்கலாம். ஆனால், வேற யாரும் டீ குடிக்க மாட்டாக. ஒரே தாய் தகப்பனுக்குப் பிறந்த பிள்ளைகள்தான். ஆனால், எவ்வளவு பெரிய வேறுபாடு பார்த்தீங்களா... இத நீங்க பார்த்து, கேட்டு, தெரிஞ்சி உண்மைன்னு உங்களுக்குப் பட்டா நீங்க உங்க பேப்பர்ல எழுதலாம். எழுதுவீர்களா?' என்று அந்த அம்மா ரொம்பவும் இயல்பாகக் கேட்டார்கள்.

இஸ்லாத்திற்குச் சென்றவர்களுக்கு சம அங்கீகாரம், சம உரிமை கிடைக்கிறதா?
இரண்டு செய்தியை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மதம் மாறிட்டார் என்றால், அவர் முஸ்லிம் குடும்பத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும். மற்ற மதத்தில் அவர் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. சமூகம் ஏற்றுக் கொள்ளாது. ஆனால், முஸ்லிம் சமூகத்தில் யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். இங்கு இஸ்லாத்திற்குள் எந்தப் பாகுபாடும் இல்லை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். சரத்த ராவுத்தர் என்பவர் மதம் மாறியவர்தான். உத்தமபாளையத்தில் இருக்கிறார். தலித்தாக இருந்தவர்தான். அவர் இன்றைக்கு அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கெல்லாம் அதிபதியாக இருக்கிறார். இவையெல்லாம் இந்த அய்ம்பது ஆண்டுகளுக்குள் நடந்த சம்பவங்கள்தான்.

தமிழ்நாட்டில் முதல் முதலாக மதம் மாறிய கிராமம் ஒரு 63 ஆண்டுகளுக்கு முன்னால சீலயம்பட்டி கிராமம்தான். இந்தக் கிராமத்திற்கு அய்யா பெரியார் போகிறார். மதமாற்றம் நடந்தது பற்றி கேள்விப்பட்டு, அந்த மக்களை எல்லாம் கூட்டிவைத்துப் பெரியார் பேசுகிறார். ரொம்ப உணர்வுப்பூர்வமாகப் பெரியார் பேசுகிறார்: "நீங்கள் காட்டுமிராண்டி மாதிரி மயிர் வளர்த்து வைத்திருந்ததை எல்லாம் இன்றிலிருந்து மழுக்கிவிட்டு மனிதனாகி இருக்கிறீர்கள். நான் இதுவரை எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் பெட்ரோலுக்கு காசு வாங்கிட்டுத்தான் பேசுவதற்குப் போவேன். ஆனால், இப்போது என்னுடைய சொந்தச் செலவில் நான் உங்களை வந்து பார்த்துப் பாராட்டிவிட்டுப் போக இங்கு வந்திருக்கிறேன்' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்கள். 

பெரியார், மனந்திறந்து பேசக்கூடிய மிகச் சிறந்த மனிதாபிமானி அல்லவா! சமூக விடுதலை பெற்ற அந்த மக்களைப் பார்ப்பதற்காகத் தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஒரு மாமனிதன் தன்னுடைய சொந்த செலவிலேயே அந்தக் கிராமத்திற்கு வந்திருக்கிறார் என்றால், ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், மனிதப் பண்புக்கு எடுத்துக்காட்டாகப் பெரியாரைத்தான் சொல்ல முடியும்.

எனக்கும் எனது குடும்பத்திற்கும் என்று சொந்தமாக நிலபுலன் இல்லை. ஆனால், ஒரு கோடீஸ்வரன் எப்படி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறானோ, அதற்கு எந்தக் குறையும் இல்லாமல் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாம் வந்த இடத்தில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நமக்கு மதிப்பும் மரியாதையும். இரண்டாவது, மற்றவர்கள் உதவி செய்வார்கள் என்று நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? அப்படி எதிர்பார்த்தாலே நமது லட்சியம் தோற்றுப் போய்விட்டது என்று அர்த்தம். நானாக உருவாக்க வேண்டும், நானாக உழைக்க வேண்டும், நானாக முன்வந்து எல்லா காரியத்தையும் செய்ய வேண்டும். அதுக்குள்ள ‘லைசென்ச' மதமாற்றம் வழங்கியது. ஒரு தலித் டீ கடை போட வேண்டும் என்றால், பலமுறை யோசிப்பார். ஏனெனில், அவருக்குப் பழக்கமும் பயிற்சியும் இல்லை. ஆனால், இஸ்லாம் சுய முயற்சிக்கான தன்னம்பிக்கையை, அந்த தைரியத்தைக் கொடுக்கிறது. இடஒதுக்கீட்டை வைத்துதான் இந்த தலித் சமூகம் ஓரளவுக்கு முன்னுக்கு வந்தது. இப்பொழுது, அதுவும் இல்லை என்று ஆனபிறகு, அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. நிலமும் நம்ம கையைவிட்டுப் போயிடுச்சி. அப்ப நிலமும் இல்லாமல் நீங்கள் எப்படி வாழ முடியும்?

ஆனால், முஸ்லிம் சமூகத்தைப் பார்த்தீர்கள் என்றால், நடைபாதையில் கடை வைத்திருப்பார்கள். சோப்பு, சீப்பு, கண்ணாடி, பிளாஸ்டிக் விற்பனை செய்வதற்கு ஒரு கடை வைத்திருப்பார். அதற்குப் பெரிய மூலதனம் வேண்டியதில்லை. ஒரு அய்ந்நூறு ரூபாய் இருந்தால் போதும். பெரிய நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் இந்த வியாபாரத்திற்குத் தேவையில்லை. ஆனால், துணிச்சலாக ஒரு கடையை பிளாட்பாரத்தில் போட்டுத் தன்னுடைய வாழ்க்கையை நடத்திவிட்டுப் போகிறான். இதில் நான் இங்கு குறிப்பிட விரும்புவது, இஸ்லாம் அந்தத் தன்னம்பிக்கையை அவனுக்கு அளிக்கிறது. அது ரொம்பவும் முக்கியமானது என்று சொல்ல வருகிறேன். நாடார் சமூகம்கூட இதைவிட மோசமான ஒரு நிலையில் இருந்த ஒரு சமூகம்தான். ஆனால், இன்றைக்குப் பொருளாதாரத்தில், அந்தஸ்தில், அரசியலில் அந்தச் சமூகம் முன்னேறி இருக்கிறது. திட்டமிட்ட ஒரு சமுதாய முன்னேற்றம்தான் அது.

நாடார் சமூகம் மதம் மாறாமலேயே இந்தளவுக்கு முன்னேறியிருக்கிறதே?
அதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. அது ஒரு அடிமைச் சமுதாயம் அல்ல. பல ‘மேல் சாதி' ஆதிக்கத்தினால் அவர்கள் பல கொடுமைக்கு ஆளானார்கள். ஆனால், நிலம் அவர்களிடம் இருந்தது. பல அரசுகள் குறிப்பாக காமராசர் ஆட்சி அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. அரசின் பல நல்ல திட்டங்களை அந்தச் சமூகம் உள்வாங்கி, முன்னேறி இருக்கிறது. ஆனால், தலித் சமூகம் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து தலித்துகள் விடுபட வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இன்னும் பெரிய குற்றச்சாட்டு ஒன்றை நான் சொல்வேன். எந்த ஒரு அரசியல் கட்சியும் வளர்வதற்கு கொடி தூக்குவதும், அவர்களுக்குத் தொண்டூழியம் செய்யும் போக்கும் இன்னும் தலித்துகளிடம் இருந்து கொண்டிருக்கிறது.

 ஒரு சமூகப் புரட்சியை உண்டுபண்ணுவதற்கு நீங்கள் எழுதணும், பேசணும், சிந்திக்கணும், சேரியில் போய் வேலை செய்யணும். இப்படியெல்லாம் செய்வதற்கு ஒரு பெரிய திட்டத்தைச் செய்வதற்கு ஒருத்தர் இருவராவது துணிவுடன் முன்வந்தால்தான் ஏதாவது செய்ய முடியும். அரசாங்கம் இந்த மக்களைக் காப்பாற்றும் என்று நீங்கள் ஒருபோதும் நம்பாதீர்கள். இந்த மக்கள் இப்படியே காலங்காலமாக இருக்க வேண்டும்; நம்மிடம் கையேந்த வேண்டும் என்று நினைக்கிறவர்கள்தான் ஆட்சியிலே இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அரசாங்கம் இதையெல்லாம் செய்யும் என்று நம்புவது எப்படிச் சரியாகும்?

ராவுத்தர், மரைக்காயர் என்று முஸ்லிம்களிடையேயும் பாகுபாடுகள் நிலவுகின்றதே?
தேனீ மாவட்டத்தில் தேவதானப்பட்டிக்குப் பக்கத்தில் துலுக்கன்பட்டி என்றொரு இடம் இருக்கிறது. இங்கு 700, 800 பேருக்கு மேல் மக்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் தலித் குடும்பமும் அங்கு இருந்தார்கள். அதில் ஒரு குடும்பம் அப்துல் காதர். அவரும் அவருடைய பிள்ளைகளும் இஸ்லாத்திற்கு வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நாங்கள் எல்லாரும் போயிருந்தோம். அப்போது முஸ்லிம்களில் ஒருவர் சொன்னார், ‘அய்யா பெயர் வைக்கிறதும் வைக்கிறீங்க... அப்துல் காதர், ராவுத்தர் என்று வைங்கோ' என்றார். அவர் இன்றைக்கும் அப்துல் காதர் ராவுத்தர்தான். அவருடைய பிள்ளைகள் ‘இமாமு'க்குப் படித்து, இப்பொழுது பல இடங்களில் ‘இமாமாக' இருக்கிறார்கள். திருநெல்வேலியில இருக்கக்கூடிய பெரிய ஜமாத்தில் அவர் பையன் ‘இமாமாக' இப்பொழுது இருக்கிறார். நீங்கள் யார் கள ஆய்வுக்குச் சென்றாலும், இந்தக் குறிப்பை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, இந்த மனிதர்களை எல்லாம் அவசியம் சந்திக்க வேண்டும்.

ராவுத்தர், மரைக்காயர் என்பது எதைக் குறிக்கிறது?
ராவுத்தர் என்றால் குதிரை வியாபாரம் செய்தவர்கள்; குதிரையை வைத்திருந்தவர்கள் என்று பொருள். மரைக்காயர் என்றால், கடற்கரையோரம் மரக்கலங்களை தொழில் ரீதியாக வைத்து முன்னுக்கு வந்தவர்கள் என்று பொருள். ஆனால், கொடுத்தல் வாங்கலோ, பெண் கொடுத்து, பெண் எடுப்பதிலோ இவர்களுக்குள் எந்தச் சிக்கலும் இல்லை. எனவே, மதம் மாறிய யார் வேண்டுமானாலும் ராவுத்தர், மரைக்காயர் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், குற்றாலம் பிள்ளை என்றோ, சுப்பிரமணிய அய்யர் என்றோ, அய்யங்கார் என்றோ, நாடார் என்றோ பெயர் வைக்க முடியுமா?

ஒரு இஸ்லாமியர் இறந்து கிடந்தால், அவர் அனாதையாக இருந்தால்கூட, அதை வாரி அணைத்துக் கொள்ளும் சமூகம், அதேவேளை முஸ்லிம் அல்லாத ஒருவர் எவ்வளவு துயரத்தில் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாத போக்கு இந்தச் சமூகத்திடம் காணப்படுகிறதே?
Kodikkal Shiek Abullaஅப்படி இருந்தால், அது முற்றிலும் தவறு. இந்தச் சமூகத்தில் இத்தகைய மனோபாவம் இருக்கிறது என்பதையும் நான் மறைக்கவில்லை. இதற்குக் காரணம், அவர்களின் அறிவின்மைதான்! குரான் இப்படியான மனோபாவம் தவறு என்றுதான் சொல்கிறது. நபிகள் நாயகம் ஒரு யூதரின் பிணம் போவதைப் பார்க்கிறார். அவர் உடனே எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்தினார். சாதாரண மக்கள், ‘நீங்கள் ஏன் இந்தப் பிணத்திற்கு மரியாதை செலுத்துகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, ‘இது அல்லாவின் படைப்பு' என்று நபிகள் நாயகம் பதில் சொல்கிறார். 

இதை எல்லாம் தெரிந்த பிறகும் சில முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் இஸ்லாத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். அறைக்குள்ளேயும், மதராசாவுக்குள்ளேயும், பள்ளிவாசல்களிலும் உட்கார்ந்து கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தது போக, இப்பொழுது அடுத்த தலைமுறை மக்கள் சமூகத்தோடு, அவர்கள் துன்ப துயரங்களில் பங்கெடுக்கக்கூடிய நிலை வந்திருக்கிறது. இப்பொழுதுதான் எழுத, பேச, களத்திற்கு வரத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலை விரைவாக மாற வேண்டும்.

பெரியார் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்றொரு சர்ச்சை கிளப்பப்பட்டது குறித்து தங்கள் கருத்து என்ன?
இஸ்லாமியர்கள் பெரியாரை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள். இஸ்லாமின் பல கருத்துகளைப் பெரியார் பிரச்சாரம் செய்திருக்கிறார். திருமண உறவு, ஒப்பந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் கருத்தைப் பெரியார் வலியுறுத்தினார். திராவிட இயக்கம் பலப்படுவதற்கு இஸ்லாமியர்கள் பொருளாதார உதவி முதல் பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள்; தலித்துகள் அந்த இயக்கத்திற்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். 

பெரியார் மீது குற்றம் சுமத்துவதற்கு எந்தவித நியாயமும் இல்லை. இது, என்னுடைய அழுத்தமான கருத்து. அவர் உள்ளும் புறமும் தெளிவாக இருந்தார். பெரியார் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று கம்யூனிஸ்டுகள்கூட, அவர் மீது ஒரு காலத்தில் குற்றம் சுமத்தினர். ஆனால், இது அவர்களின் அனுமானம்தானே தவிர, அப்படி எந்த நிலப்பிரபுவுக்கும் அவர் ஆதரவாக இருந்தார் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. பெரியார் கொள்கைகளை கம்யூனிஸ்டுகள்தான் பெருமளவில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதன் அவசியத்தை உணர்ந்து, அவர்கள் இன்று காலங்கடந்தாவது எடுத்திருக்கிறார்கள்.

தலித் இஸ்லாமியர் ஒற்றுமையை நீங்கள் வலியுறுத்துகின்றீர்களா?
தலித்துகளிடம் நெருங்கி வருவதன் மூலம் மற்றவர்களின் கோபதாபங்களுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று முஸ்லிம்களிடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது. தொழில் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் முஸ்லிம்கள் மற்ற சமூகத்தினரிடம்தான் அதிகளவு தொடர்பு வைத்திருக்கிறார்கள். களத்தில் அவர்கள் தலித்துகளிடம் இணையாததற்கு இது ஒரு காரணம். ஆனால், இந்த உறவு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. தலித் - முஸ்லிம் கூட்டணியை எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தனியொரு சாதியோ, மதமோ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட எல்லாரும் இணைந்துதான் அதைக் கைப்பற்ற முடியும். எனவே, இதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டு சில புதிய செயல்திட்டங்களை வகுக்கவில்லை எனில், நெருக்கடி நேரங்களில் அவர்கள் தவிக்க வேண்டிவரும்.

இஸ்லாத்திற்குச் சென்ற பிறகு தங்களின் தாய்ச் சமூகமான ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு ஏதேனும் பணியாற்றி இருக்கிறீர்களா?
1989 செப்டம்பர் மாதத்தில், தேனீ மாவட்டக் கிராமங்களில் நடைபெற்ற கலவரத்தில், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டு நேரில் சென்று களப்பணியாற்றினேன். கண்டமனூர் கிராமத்தில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்கள் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்தோம். வழக்குப் பதிவு செய்ய மறுத்த காவல் துறையை வழக்குப் பதிவு செய்ய வைத்தோம். அம்மாபட்டி கிராமத்தில், அருந்ததிய சமூகத் தோழர்கள் 3 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அங்கெல்லாம் மக்களைச் சந்தித்து தேவையான உதவிகளை செய்திருக்கிறேன். கொடியங்குளம் கலவரத்தில் யாருமே ஊருக்குள் செல்ல முடியாதபோது நான் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன். 2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதவெறி சக்திகளை வீழ்த்த முஸ்லிம் - தலித் ஒற்றுமையை வலியுறுத்தி, எஸ். நடராசன், ஏபி. வள்ளிநாயகம் ஆகியோருடன் இணைந்து சமூக விழிப்புணர்வு முகாம்களை நடத்தினோம். சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்காகவும், தலித்துகளுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன்.


  நன்றி:
 "தலித் முரசு" நவ.06 இதழ்.
 கீற்று இணைய தளம்

Tuesday, September 25, 2012

கண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்


ஒரு தமிழனாக, ஒரு முஸ்லீமாக, ஒரு இந்தியனாக, ஒரு தலைவனாக, மாந்தநேயம் உள்ள மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணங்களைத் தனக்குத் தானே வகுத்துக் கொண்டு, அந்த இலக்கணங்களை விட்டு விலகாத இலக்கியமாகத் தானே வாழந்துகாட்டிய பெருமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் ஒருவராக 1948 ஆம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார்.
14.9.49 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வரலாற்றின் பொன்னேட்டில் அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை:
“ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.
அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.
அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்”
ஆனால், விவாத முடிவில் இந்தியை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, வாக்குககுள் இருதரப்புக்கும் சரிசமமாகப் பிரிந்த நிலையில், அவைத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தனது ஒரு வாக்கை இந்திக்கு சாதகமாக அளித்ததால் இந்தி அரியணை ஏறியது.
ஆட்சி மொழி பற்றிய விவாதம் மக்களவையில் வரும்போதெல்லாம், காயிதே மில்லத் இந்திக்கு எதிரான தனது கருத்தை ஆணித்தரமாக வெளியிடத் தயங்கியதே இல்லை. 26.4.63 அன்று மக்களவையில் அவர் உரைத்தார்:
“மொழி என்பது உணர்ச்சிபூர்வமானது. ஒருவன் வாழ்க்கை முழுவதிலும் அது பிரதிபலிக்கிறது. தொட்டு நிற்கிறது. எனவே இதுகுறித்து விளையாட்டாகவோ மேம்போக்காகவோ பேசிவிட்டு நிறுத்திவிட முடியாது.
ஒரு மொழியை மட்டும் மத்திய அரசு ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டால் அந்த மொழியைப் பேசுகிறவர்கள் மட்டும் ஆட்சியாளர்களாகவும், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் ஆளப்படுபவர்களா ஆகி விடுவார்கள்.
ஒரு மொழிதான் ஆட்சி மொழியாக வேண்டுமா? அல்லது இந்நாட்டின் ஒற்றுமை முக்கியமா? இதுதான் இன்று கேள்வி. எனவே நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களின் விருப்பங்களையும், அச்சங்களையும் மதித்து சரியானதொரு முடிவை எடுக்க வேண்டிய நிலைமையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.”
தமிழ் மொழிக்காக மட்டுமல்ல. மாநிலப் பிரிவினையின்போது தமிழன் இழந்த மண்ணுக்காகவும் காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் வாதிட்டார். தேவிகுளம், பீர்மேடு தமிழனிடமிருந்து பறிபோனபோது, குளமாவது மேடாவது என்று காமராசர் குதர்க்கம் பேசினார். ஆனால் 24.12. 1955 அன்று நாடாளுமன்ற மேலவையில் மாநில எல்லைகள் சீரமைப்புக் கமிஷன் அறிக்கை மீது நடந்த விவாதத்தின் போது தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதிகள் என காயிதே மில்லத் வாதிட்டார். திராவிடச் சிக்கல், இந்தியச் சிக்கல் எதுவும் இன்றி தமிழர் பக்கம் நின்று கச்சிதமாக வாதிட்டார் இந்த தென்பாண்டித் தமிழ் மறவர்.
“நான் ஒரு தமிழன். எனது தாய்மொழி தமிழ். தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை. அதேபோல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை. அப்பகுதியில் தமிழ் மொழி பேசுபவர்களே பெரும்பான்மை. ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது. தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும், வந்துபோகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள். கடந்த தேர்தலின்போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்துபோகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?
தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி. தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது. தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள். எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்” 

இங்கே நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். காயிதே மில்லத் அவர்கள் அகில இந்திய அளவில் செயல்பட்டு வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவர். எல்லா மாநிலங்களிலும் அவர் அரசியல் செய்தாக வேண்டும். குறிப்பாக தமிழக முஸ்லிம்களை விடவும், கேரளா முஸ்லிம்கள் அவரது வாக்கைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுபவர்கள். அப்படியிருந்தும் தேவிகுளம், பீர்மேடு பகுதியை கேரளாவுடன் இணைக்கக் கூடாது என்று ஒரு தமிழனாய் நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.
தமிழ் மொழிக்காகவும், மண்ணுக்காகவும் நாடாளுமன்றத்தில் வாதிட்டவர், தமிழ் அகதிகளுக்காகவும் 22.8.63 அன்று வாதிட்டார்.
“அகதிகள் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு பகுதியிலிருந்து வந்த அகதிகள் உரிய முறையில் கவனிக்கப்படுகிறவர்கள். ஆனால் இலங்கை, பர்மா, மலாயா போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகள் நாதியற்றவர்களாய்த் தத்தளிக்கிறார்கள். சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களது அவலக் குரல் டெல்லியில் கேட்பதே இல்லை”
மேலும் இலங்கை மலையகத் தமிழர்கள்களுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றிய விவாதத்தின்போது சட்டசபையில் 25.10.78 அன்று அவர்களுக்கு ஆதரவாக வாதிட்டார்.
“இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்ற தொழிலாளர்கள்தான் அந்நாட்டை வளப்படுத்தினார்கள். செழிப்புள்ளதாக்கினார்கள். நமது மக்களின் உழைப்பின் பலனாகவே இலங்கை வளம் மிக்கதானது. நாலைந்து தலைமுறையாக நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் அத்தீவில் நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள். 1947 ஆம் ஆண்டில்கூட அன்றைய இலங்கைப் பிரதமர் டி. எஸ். சேன நாயகா, இலங்கை வாழ் இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் குடியுரிமை வழங்குவதற்கு பல நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். குடியுரிமை பெற விரும்புவோர் மீது அநாவசியமான நிபந்தனைகளை விதிக்காமல் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.”
ஒரு தமிழனாகத் தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணுக்கும் தமிழர்களுக்கும் அரசியல் தளத்தில் நின்று அவர் ஆற்றிய கடமையை மேலே கண்டோம். அதே நேரத்தில் ஒரு முஸ்லீமாக, விடுதலை பெற்ற இந்தியாவில், மேற்கு, கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்றதுபோக, எஞ்சி நின்ற நான்கு கோடி முஸ்லிம்களை அரவணைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் அவர் செவ்வனே நிறைவேற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது. வேறு யாருடைய பங்களிப்புக்கும் குறைவில்லாதது. மாவீரர் குஞ்சாலி, மைசூர்ப் புலி திப்பு சுல்தான், மாமன்னர் பகதூர்ஷா, என்னிரு கைகளாய் விளங்கும் இரு சிங்கங்கள் காந்தியே போற்றிய மாவீரர்கள் அலி சகோதரர்கள், நேதாஜியின் ஐ,என்.ஏ., வில் பணியாற்றிய முஸ்லிம் வீரப் பெருமக்கள் இவர்களுடைய வரலாறுகளைப் படித்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். ஆனால் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இந்து முஸ்லிம் இரு தரப்பாருமே இரையாகி விட்டிருந்த நேரம் அது.
நாடு இரண்டாக உடைந்ததற்குக் காரணம் யார்? ஜின்னாவா? நேருவா? நடுநிலையாளர்கள் அறிவார்கள். விடுதலை பெறப்போகும் இந்தியாவில் ஜின்னாவிற்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து விடுங்கள். நாடு உடையாமல் காப்பாற்றுங்கள் என காந்தியார் முன்வைத்த கடைசி நேர சமரசத்தை நிராகரித்தது யார்? சகாக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் எனச் சாக்குச் சொல்லி, கடைசி நேர வாய்ப்பையும் கைகழுவி, இந்தியா இரண்டாக உடையக் காரணமாக இருந்தது நேருபிரான் அல்லவா?
நேரு அரசியலில் தனது போட்டியாளர்களாகக் கருதியது இருவரைத்தான். ஒருவர் நேதாஜி. மற்றவர் ஜின்னா. ஒன்று நேருவுக்கு தலைவலி. மற்றது திருகுவலி. இந்தியா விடுதலைப் பெறப் போகிறது. நேதாஜி இனி இந்தியாவுக்குத் திரும்பப் போவதில்லை. ஜின்னாவுக்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து இந்தியா உடையாமல் காப்பாற்றல்லாம். ஆனால் தனது திருகுவலி நிரந்தரமாகிவிடும். சிறந்த சட்ட மேதையான ஜின்னா அரசியல் அமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவர் பதவியை செயல் அதிகாரமுள்ள பதவியாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டால்? தட்டிக் கேட்பார். யாருமின்றி இந்தியாவைத் தன்னால் ஆள முடியாதே? நேருவின் இந்த சர்வாதிகார மனோபாவத்தால்தான் நாடு பிளவுண்டது.

பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதைப் போல இந்தியாவில் எஞ்சி நின்ற நான்கு கோடி முஸ்லிம்களும்தான் பிரிவினைக்கு காரணமானவர்கள் என்று அவர்கள் காங்கிரசாரால் தூற்றப்பட்டார்கள்.

இந்தச் சூழலில்தான் 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்களில், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் நடைபெற்றது. 1906 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சிக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் அது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக இந்தியா பிரிந்துவிட்ட நிலையில் கட்சியைக் கலைத்து விடுவதர்காகக் கூடிய கூட்டம் அது.
கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி கட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஒரு பொறுப்பாளரும், இந்தியாவுக்கு ஒரு பொறுப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரு பொறுப்பாளர்களும் அவரவர் நாட்டில் மூன்று மாதங்களுக்குள்ளாக கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் பொறுப்பாளராக லியாகத் அலிகான் அவர்களும், இந்தியாவுக்கான பொறுப்பாளராக நமது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் உள்ள நான்கு கோடி முஸ்லிம்களைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பு ஒரு தமிழனின் தோள்களில், நம் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தோள்களில் அன்று கராச்சியில் சுமத்தப்பட்டது.
நமது காயிதே மில்லத் இந்திய முஸ்லிம்களைக் காப்பாற்றும் பணியை, அன்றே, கராச்சியிலேயே தொடங்கிவிட்டார். எவ்வாறு?
கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் பிரதமர் அனைவருக்கும் ஒரு விருந்தளித்தார். விருந்தின் முடிவில் லியாகத் அலிகான் காயிதே மில்லத்திடம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும், என்ன உதவி என்றாலும் நாங்கள் செய்யத் தயார் என்றார். அப்போது தெள்ளத் தெளிவாக, ஆணித்தரமாக காயிதே மில்லத் சொன்னார்,
“நீங்கள் ஒரு நாட்டினர். நாங்கள் வேறு நாட்டினர். எங்கள் நாட்டு முஸ்லிம்களின் நன்மை தீமைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம். அதில் நீங்கள் தலையிட வேண்டியதில்லை. எங்கள் நாட்டு முஸ்லிம்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய விரும்பினால், உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு (இந்து, சீக்கியர், கிறித்துவர்) ஒரு துயரமும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுபோதும்!”எவ்வளவு ஆழமும், அர்த்தமும் பொதிந்த வேண்டுகோள் அது!
இந்தியா திரும்பிய காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைக் கூட்டினார். அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தச் சமயத்தில் முஸ்லிம் லீகைச் செத்த பாம்பு என வர்ணித்தார் நேரு. செத்த பாம்பை  எடுத்து ஆட்டிக் காட்டுகிறார் பேட்டை இஸ்மாயில் என காயிதே மில்லத் அவர்களைக் கேலி செய்தார்கள் காங்கிரசார். ஒரு படி மேலே போய், பிரிந்து போய்விட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியிடம், கோடிக்கணக்கில் பணமும் சொத்துக்களும் உள்ளன. இந்தியாவில் மீண்டும் முஸ்லிம் லீக் கட்சியைத் தொடங்கி நடத்தினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பாகிஸ்தானியர் சொன்னதாலேயே காசுக்கு ஆசைப்பட்டு காயிதே மில்லத் கட்சி தொடங்கியிருப்பதாக பட்டேல் குற்றம் சாட்டினார்.
அப்போது கவர்னர் ஜெனரலாய் இருந்த ராஜாஜி, காயிதே மில்லத்தை நேரில் அழைத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீகிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சொத்துக்கள், பணப் பரிமாற்றம் ஏதேனும் செய்ய வேண்டியதிருந்தால் அதற்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் தான் செய்வதாகக் கூறி ஆழம் பார்த்தார். வேற்று நாட்டிலிருந்து தங்கள் கட்சிக்கு எந்த உதவியும் தேவை இல்லை என ராஜாஜியிடம் காயிதே மில்லத் தெரிவித்து விட்டார்.
நாடு என்று வரும்போது நான் முதலிலும் இந்தியன், கடைசியிலும் இந்தியன். மதம் என்று வரும்போது நான் முதலிலும் முஸ்லிம். கடைசியிலும் முஸ்லிம் என அலி சகோதரர்களில் ஒருவர் கூறியதை, தனது ஒவ்வொரு நகர்விலும் நடைமுறைப்படுத்திக் காட்டினார் காயிதே மில்லத்.
ஹஜ் கடமையை நிறைவேற்ற காயிதே மில்லத் ஒருமுறை மக்கா சென்றிருந்தபோது கடுமையாக நோய்வாய்பட்டு விட்டார். மக்காவில் பாகிஸ்தான் அரசின் மருத்துவமனை சிறந்த மருத்துவமனை. சவூதி அரேபியா நடத்தும் மருத்துவமனை சிறந்த மருத்துவமனை, அங்கே போகலாம், இங்கே போகலாம் என உடனிருந்த தோழர்கள் ஆலோசனைகள் சொன்னார்கள். காயிதே மில்லத் அவர்கள் அங்கெல்லாம் என்னைக் கொண்டு சேர்க்கக் கூடாது. இந்திய அரசின் மருத்துவமனை ஒன்றில்தான் கொண்டு சேர்க்க வேண்டும் என உறுதியாகக் கூறிவிட்டு, உடனே மயங்கி விட்டார்கள். மக்காவில் இருந்த இந்தியத் தூதர் உடனே வந்து, தனது வீட்டிற்கே கொண்டு சென்று, இந்திய மருத்துவர்களை வரவழைத்து, தொடர்ந்து சிகிச்சை அளித்தார். காயிதே மில்லத் பிழைத்துக் கொண்டார்.
பிறகு காயிதே மில்லத் தன் பிடிவாதத்திற்கான காரணத்தை விளக்கிச் சொன்னார்.“நோயின் கடுமையினால் நான் இறந்துபடவும் கூடும் என நினைத்தேன். நான் இறந்தால் இந்திய மண்ணில்தான் இறக்க வேண்டும் என விரும்பினேன். அந்நிய நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதர் அலுவலகம், தூதர் வீடு இவை இந்திய மண்ணிற்குச் சமம். இது சர்வதேச மரபொழுக்கம். எனவே இந்திய இந்தியத் தூதர் வீட்டில் சிகிச்சை பெறச் சம்மதித்தேன். இறந்திருந்தால் இந்திய மண்ணில்தான் இறந்தேன் என்ற நிம்மதியோடு இறந்திருப்பேன் அல்லவா?”
இந்தியா பாகிஸ்தானுடன், சீனாவுடன் மேற்கொண்ட போர்களின் போதெல்லாம் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உளப்பூர்வமாக இந்தியாவின் பக்கம் நிற்கச் செய்தார். சீன யுத்தத்தில் தன் மகனையே யுத்த களத்திற்கு அனுப்பத் தயார் எனப் பிரதமருக்கு கடிதம் எழுதினார். வங்கிகள் தேசிய மயம், மன்னர் மானிய ஒழிப்பு போன்ற நாட்டு நலன் சார்ந்த நடவடிக்கைகளில் இந்திராவை உறுதியாக ஆதரித்தார்.
நாட்டுப் பற்று ஈமானின் ஒரு பகுதி என்ற நபிகள் நாயகத்தின் வாக்கின்படியே வாழ்ந்து காட்டினார்.
இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்ற காயிதே மில்லத் அவர்கள், ஒரு உலக சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 1962, 1967 மற்றும் 1971 ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் கேரள மாநிலம் மஞ்சேரி தொகுதியில் நின்று தொடர்ந்து மூன்று முறை வென்று காட்டினார். ஒருமுறை கூட தேர்தலின் போது மஞ்சேரி தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் செல்லவே இல்லை.
தமிழகத் தேர்தல்களில் திருமங்கலம் தில்லுமுல்லுகளையும் சங்கரன்கோயில் திகிடுத்தங்களையும் அறிமுகப்படுத்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காயிதே மில்லத் அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவரது அடக்கத்தலத்திற்குச் சென்று வணக்கம் செய்ய தவறுவதில்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும் காயிதே மில்லத் கடைப்பிடித்த தேர்தல் நெறிமுறைகளை அடக்கம் செய்யவும் தவறுவதில்லை.
காயிதே மில்லத் அவர்களின் வாழ்நாள் சாதனைகள் பலவற்றுள் மிக முக்கியமானது காங்கிரசை தமிழ் மண்ணிலிருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியதுதான்.
1967 பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுவில் காயிதே மில்லத் அவர்கள் ஒரு முடிவினை எடுத்து அறிவித்தார்.
“கொள்கை கோட்பாடுகள் எத்தகையவைகளாக இருந்தாலும் அவற்றை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பொதுவாக, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு குறைந்தபட்ச திட்டத்தின் மூலம் எல்லா எதிர்க் கட்சிகளும் ஒன்றுபட்டு காங்கிரசை எதிர்த்து முறியடிக்க வேண்டும்” இதுவே அவர் அறிவித்த முடிவு. இதற்காக கம்யூனிஸ்டுகள், ஜனசங்கம் இவற்றோடும் கூட்டு சேரலாம் எனவும் தெரிவித்தார்.
அவர் திட்டம் வேலை செய்யத் தொடங்கியது. அவர் திட்டத்தில் அண்ணா சேர்ந்தார். ராஜாஜி சேர்ந்தார். ம.பொ.சி. சேர்ந்தார். ஆதித்தனார் சேர்ந்தார். இடது கம்யூனிஸ்டு சேர்ந்தது. பார்வர்டு ப்ளாக் கட்சி சேர்ந்தது. ஏழு கட்சிக் கூட்டணி அமைந்தது. 1967-ல் காங்கிரஸ் கட்சி வீழ்த்தப்பட்டது.
இந்தச் செயலைச் செய்து முடிக்க காயிதே மில்லத் அவர்கள் பொறுமையுடன் இருபதாண்டுகள் காத்திருந்தார். “காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர்” என்ற குறளுக்கேற்ப இருபதாண்டுகள் கலங்காது காத்திருந்தார்.
முஸ்லிம் லீக்கை 1947 ஆம் ஆண்டு செத்த பாம்பு என வர்ணித்தார் நேரு. 1967-ல் இருபதாண்டுகள் கழித்து, தமிழகத்தில் காங்கிரசை செத்த பாம்பாக்கினார் காயிதே மில்லத்.
வீழ்ச்சியுற்றுக் கிடக்கும் தமிழினத்தை எழுச்சிபெறச் செய்யத் துடிக்கும் இளந்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவற்றுள் பலவும் புயலைத் தனக்குள் பொத்தி வைத்திருந்த தென்றலாம் காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக்குள் புதைந்துகிடக்கின்றன.

பொதுவாழ்வில் நேர்மைக்கு நிரூபணமாய் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் சொந்த வாழ்வில் எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்.
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்க  போதுமான அறையணிகள் இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி, ரிக் ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார்.
அவருக்கு ஒரு காரை வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஒரு உதவி கேட்டார். “ஐயா என்னிடம் வெளிநாட்டுக் கார் உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்” என்றார். அதற்கு என் வீட்டில் கார் கொட்டகை இல்லையே என்றார் காயிதே மில்லத். “கார் கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்” என்றார் மலேசிய அன்பர். நேரடியாக காரை பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு காரை வாங்கி சாவியை காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஒன்றின் உபயோகத்திற்கு அந்தக் காரை அங்கேயே கொடுத்து விட்டார்.
ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஒரு உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு காயிதே மில்லத் அவர்கள் இது எனது சகோதரருக்கு எழுதுகின்ற கடிதமாகையால் அலுவலகப் பணத்தை இதற்கு செலவழிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.  அலுவலகப் பொறுப்பாளர் உடனே, தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தானே, எனவே கட்சிப் பணத்தை செலவு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டானாவை அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்பி விடுங்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டார்.
இதுபோல்  காயிதே மில்லத் அவர்களின் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள். நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்.
காயித் என்றால் வழிகாட்டி. சாயிக் என்றாலும் அரபியில் வழிகாட்டிதான். ஒட்டகத்தின் முதுகில் ஏறி அதை வழி நடத்துபவனுக்குப் பெயர் சாயிக். ஆனால் ஒட்டகத்தின் மூக்கணாங் கயிற்றைத் தன் கையிலே பற்றிக் கொண்டு, தான் முன்னால் நடந்து, பாதையில் உள்ள கரடு முரடுகளில் ஒட்டகத்தின் கால் இடறி விடாமல் அதை வழிநடத்துபவருக்குப் பெயர்தான் காயித். இன்று அரசியலில் சாயிக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. காயித்தேக்களைத்தான் காணவே யில்லை. புதிய தலைமுறைத் தமிழர்களுக்குத் தலைமை தாங்க முனைபவர்கள் காயிதே மில்லத்தின் தடம் பற்றி நடப்பார்களாக!

சீதையின் மைந்தன் 

http://siragu.com/?p=3534


 காய்தே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் பேட்டி.






 மீலாது விழா மேடையில், திராவிட இயக்கத்தை சார்ந்த ஒரு பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கிறார். அடுத்து பேச வேண்டிய காயிதே மில்லத் அவர்கள் அவருடைய பேச்சை உற்றுக்கவனித்து வருகிறார். அந்த பேச்சாளரோ பேச்சின் நடுவே பிள்ளையாரின் பிறப்பை கேலி செய்து பேச, காயிதே மில்லத் அவர்கள் தன் அருகிலிருந்தவரிடம் ஏதோ சொல்ல, அந்த பேச்சாளரின் உரை உடனடியாக முடிக்கப்படுகிறது.

அடுத்து பேசிய காயிதே மில்லத், இது மீலாது மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றி பேசுவது தான் நாகரிகமாக இருக்கும். பிற மதத்து கடவுளை கேலி பேசுவதற்கு உகந்த மேடை இதுவல்ல. இஸ்லாம், பிற மத கடவுள்களை கேவலப்படுத்தி பேசாதீர்கள் என்று முஸ்லிம்களுக்கு சொல்லியுள்ளது. எனவே இது போன்ற செயல்களை இந்த மேடையில் அனுமதிக்க முடியாது என்றார்.





Thursday, September 20, 2012

பாவிகளின் சூழ்ச்சிக்கு பலியான அப்பாவி முஸ்லிம்கள்!!

யாருடைய கவனித்திற்கும் வராமல் குப்பைக்கு போயிருக்க வேண்டிய ஒரு ஆபாசமும் வக்கிரமும் கொண்ட ஒரு படத்திற்கு உலகலாவிய முஸ்லிம் சமூகம் விளம்பரம் கொடுத்து விட்டது. முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை வன்முறையாளர்களாக காட்ட முயன்றவர்களுக்கு முஸ்லிம்களே வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் முஸ்லிம்கள் அப்பாவிகளே. ஏனெனில் எதிரிகளின் சூழ்ச்சியறியாமல் தங்களின் மித மிஞ்சிய உணர்ச்சி மேலிட்டால் தாங்களே பலியாகி விட்டார்கள். நன்மையைக் கொண்டல்லவா தீமையை தடுத்திருக்க வேண்டும்.

மத சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் உரசி பற்றிக்கொண்ட இந்தப் பிரச்சினைப் பற்றியும் தமிழக தலைநகரில் நடந்த முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம் பற்றியும் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் "நேர்பட பேசு" நிகழ்ச்சியின் விடியொ.

இதில் "மானுட வசந்தம்" புகழ் ஹபிப் முகம்மது, பத்திரிகையாளர் ஞாநி, பேராசிறியர் கிளாட்சன் ஆகியோர் இப்பிரச்சினை குறித்த தங்களது கருத்துக்களை முன் வைக்கின்றனர்.







உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை இவை நான்கும் மனிதனின் மிக முக்கிய அடிப்படை உரிமைகளாகும். இவற்றில் எதைப் பறித்தாலும் மனிதன் பொங்கி எழுவான். தன் இனம், மொழி, மதம், கலாசாரம், நாடு ஆகியன இழிவுபடுத்தப்படும்போது மோதல்கள் உருவாகின்றன.
தலைவர்களின் சிலைகள் சிதைக்கப்படும்போது, தேசியக் கொடி அவமதிக்கப்படும்போது, மதிப்பிற்குரிய தலைவர்களை இழிவுபடுத்தும்போது, வரலாற்றைத் திரித்து எழுதி கொச்சைப்படுத்தும்போது உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் வெளியான "இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' எனும் திரைப்படம் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்ததால் உலகெங்கும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆர்ப்பாட்டம், பேரணி என்று ஆரம்பித்து சில இடங்களில் வன்முறையில் முடிந்திருக்கிறது. லிபியாவுக்கான அமெரிக்கத் தூதரகத்தில் மூன்று தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து அதிகமுள்ள அண்ணா சாலையில் நான்கு நாள்களாக, சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் தொல்லைக்குள்ளாயினர். படத்தைத் தயாரித்தவர்கள் "இது எங்களின் கருத்துச் சுதந்திரம், எங்கள் உரிமை' என்கிறார்கள். எதிர்ப்பாளர்களோ "எதிர்ப்பது எங்களின் உரிமை' என்கிறார்கள். இது பற்றிய விவாதங்களை அலசும் முன் இந்தத் திரைப்படம் குறித்து சில தகவல்களைப் பார்க்கலாம்.
"இந்தப் படம் முஹம்மது நபியை முட்டாளாகவும் பெண் பித்தராகவும் மோசடிக்காரராகவும் சித்திரிப்பதாக' "ராய்ட்டர்' செய்தி நிறுவனம் கூறுகிறது.
"இப்படம் எல்லை மீறியது; வெறுப்பைத் தூண்டும் அருவருப்பான பழிவாங்கும் எண்ணமுடைய ஒரு குப்பையாகும்' என்கிறார் சல்மான் ருஷ்தி.
"இப்படம் முஹம்மது நபியைப் பெண் பித்தர், ஒருபால் உறவினர், குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர் என்ற வகையில் சித்திரிக்கிறது' என்கிறது என்பிசி செய்தி நிறுவனம்.
அத்தோடு, எகிப்தில் முஸ்லிம்கள் கிறித்தவர்களைத் தாக்குவதாகவும், அவர்களின் வீடுகளை எரிப்பதாகவும் அதை எகிப்திய காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதை எழுதித் தயாரித்தவர் நக்கோவ்லா பாஸ்லி நக்கோவ்லா என்ற காப்டிக் கிறித்தவர். இவர் அமெரிக்காவில் குடியேறி வாழும் எகிப்திய கிறித்தவர் ஆவார். முதலில் தனது பெயரை சாம் பாஸ்லி என்றும், யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும், யூதர்கள் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கப் பணம் கொடுத்தனர் என்றும் அவர் சொல்லிவந்தது பொய் என்பதும் வெளியாகியுள்ளது.
இவர் 1990இல் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டார். அத்தோடு வங்கியை ஏமாற்றிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு 21 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்டவர். இவரோடு சேர்ந்து எகிப்து, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 காப்டிக் கிறித்தவர்களும் எவான்ஜலிகல் கிறித்தவர்களும் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத் தயாரிப்புக் குழுவில் அமெரிக்காவில் திருக்குர்ஆனை எரித்துப் பதற்றம் உண்டாக்கிய டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் அடங்குவர்.
ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு "டெசர்ட் வாரியர்' - பாலைவன மாவீரன் என்று பெயரிட்டனர். பின்னர் அதை "இன்னோசன்ஸ் ஆப் பின்லாடன்' என்று மாற்றினர். இறுதியில் "இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' (முஸ்லிம்களின் அப்பாவித்தனம்) என்று பெயர் சூட்டினர். 2012 ஜூலையில் இதை யூ டியூபில் ஏற்றினர்.
இது அதிக மக்களின் கவனத்தைப் பெறாமல் போகவே மாரிஸ் சேதக் எனும் எகிப்திய காப்டிக் கிறித்தவர் இதனை அரபியில் மொழிமாற்றம் செய்து 2012 செப்டம்பரில் யூ டியூபில் ஏற்றினார். இந்தப் படத்தை செப்டம்பர் 12இல் எகிப்தில் உள்ள "அல் நாஸ்' என்ற இஸ்லாமியத் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய பின்னரே விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்களில் 80 சதவீதத்தினர் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகச் சொல்கின்றனர். முஹம்மது நபி பற்றி படம் எடுப்பதாகத் தங்களிடம் சொல்லப்படவில்லை என்கின்றனர். இந்தப் படத்தின் முக்கிய நடிகரான கிளின்டி லீ ரோசியா என்பவர் தாம் ஏமாற்றப்பட்டதாக படத் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் வாழ்க்கை முறை பற்றிய படம் என்றும், அந்தப் படத்தின் பெயர் "டெசர்ட் வாரியர்' என்று தம்மிடம் சொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். முக்கிய பாத்திரத்தின் பெயர் "மாஸ்டர் ஜார்ஜ்' என்றுதான் வைக்கப்பட்டதாகவும் அவர் சொல்கிறார்.
லில்லி டயோனா என்ற இன்னொரு நடிகையும் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். தாங்கள் பேசிய வசனங்களை வேறுவிதமாக மாற்றி "டப்பிங்' செய்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தை ஆர்த்தடக்ஸ் கிறிஸ்டியன் கவுன்சிலும், உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பும் (வேர்ல்டு கவுன்சில் ஆப் சர்ச்) கண்டனம் செய்துள்ளன. இந்தப் படம் முஸ்லிம்களின் இதயங்களையும் இறை நம்பிக்கையாளர்களின் உணர்வுகளையும் புண்படுத்துவதாகவும் அந்தக் கிறித்தவ அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இப்போது சில நாடுகளின் இணையதளங்களிலிருந்து இப்படம் நீக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் ஒரு மதத்தை அல்லது சித்தாந்தத்தை விமர்சனம் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியும். முஸ்லிம் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் ஒரு வக்கிர உணர்வு தெளிவாகத் தெரிகிறது.
பல நூற்றாண்டுகளாகவே மேலை நாட்டினர் இஸ்லாத்தின் மீது வெறுப்பைக் கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் எழுதிக்குவித்துள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வெறுப்பு நூல்களே சான்றாகும். அந்த நீண்டகால வெறுப்புதான் இதுபோன்ற திரைப்படங்களும் கார்ட்டூன்களும் வருவதற்குக் காரணம் ஆகும்.
அத்தோடு எகிப்தில் நடைபெற்ற முபாரக்கிற்கு எதிரான போராட்டங்களில் முஸ்லிம்களுக்கும் காப்டிக் கிறித்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒற்றுமையை உடைப்பதும் ஒரு நோக்கமாகும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவிவிரும் இஸ்லாத்தைப் பற்றி அங்குள்ள மக்களிடையே ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவதும் அவர்களின் எண்ணமாகும்.
அத்தோடு முஸ்லிம்களைச் சீண்டிவிட்டு அவர்களைப் போராட்டக் களத்தில் இறக்கி அதன் மூலம் அவர்களை நாகரிமற்றவர்களாகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாவும் உலகத்திற்குச் சித்திரிக்க வேண்டும் என்ற நோக்கமும் இருக்கலாம்.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் புத்தகங்கள், கட்டுரைகள், திரைப்படங்களைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இவற்றை அனுமதிக்க முடியாது. விமர்சனம் என்பதும் இழிவுபடுத்துதல் என்பதும் வெவ்வேறானவை.
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது, குர்ஆன் இறைவாக்கு அல்ல, பலதார மணம், தலாக், மணவிலக்கு செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுத்தல் போன்ற விஷயங்களில் இஸ்லாத்தைக் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது எந்த முஸ்லிம் அமைப்பும் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவற்றை விமர்சனமாகவே எதிர்கொண்டனர்.
தமது மதம் பற்றி எந்தக் கேள்விகளும் கேட்கலாம் என்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் உலகெங்கும் நடத்தி வருகின்றனர். அந்த நிகழ்ச்சிகளில் முஸ்லிமல்லாதவர்கள் தொடுக்கும் கடுமையான விமர்சனங்களையும் எற்றுக்கொண்டு தக்க பதில்களையும் அளித்து வருவதை இன்றும் காணலாம், இங்கும் காணலாம். விமர்சனங்களை அனுமதிக்கலாம் ஆனால், இழிவுபடுத்துவதை எப்படி அனுமதிப்பது?
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதுபோல கருத்துச் சுதந்திரத்துக்கும் ஓர் எல்லை உண்டு. கட்டுப்பாடற்ற முழுச் சுதந்திரம் என்ற ஒன்று கிடையாது. "அடுத்தவனின் மூக்கில் இடிக்காதவாறு தெருவில் தாராளமாகக் கைவீசிச் செல்லலாம். அடுத்தவன் மூக்கு ஆரம்பமாகும் இடம், உனது சுதந்திரம் முடிவடையும் இடம்' என்பது அனைவரும் அறிந்த கருத்தாகும்.
நமது அரசியல் சாசனத்தின் 19ஆவது பிரிவு சுதந்திரம் பற்றிய பிரிவாகும். அதில் (ரைட் டூ பிரீடம்) நாட்டின் ஒருமை, இறையாண்மை, பாதுகாப்பு, வெளிநாட்டவருடனான நட்புறவு, பொது அமைதி, ஒழுங்கு, நீதிமன்ற அவமரியாதை, குற்றங்களைத் தூண்டுதல் போன்ற விஷயங்களில் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்று கூறுகின்றது.
சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகளில், அவைத் தலைவர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் விஷயத்தை வெளியிட முடியாது. சமூகங்களிடையே மோதல் உண்டாக்கும் பேச்சுகளைக் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிப்பதில்லை.
கருத்துச் சுதந்திரம் பற்றி உரக்கப் பேசும் அமெரிக்கா, விக்கி லீக்சின் ஜூலியன் அசான்ஜை ஏன் துரத்திப் பிடிக்க முயல்கிறது? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அவரைச் செயல்பட விடலாமே?
இன்னும் பல ஐரோப்பிய நாடுகளில் யூதர்களை ஹிட்லரின் நாஜிப் படைகள் படுகொலை செய்த "ஹோலோகாஸ்ட்' பற்றி ஆட்சேபங்களோ சந்தேகங்களோ எழுப்பக்கூடாது என விதிகள் உள்ளன. கருத்துச் சுதந்திரத்தில் இரட்டை நிலைகள் இருப்பதையே இவை காட்டுகின்றன.
எனவே வெறுப்பையும் துவேஷத்தையும் உண்டுபண்ணக்கூடிய அனைத்து எழுத்து, பேச்சு, காட்சிகளைத் தடைசெய்ய வேண்டும். ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக எழுத்தில், பேச்சில் கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்றால், அமைதி, ஒற்றுமை, நம்பிக்கை ஆகியவற்றுக்காகவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரலாம் அல்லவா?
ஒருவரின் மத உணர்வுகள் காயப்படுத்தப்படும் வேளைகளில் பாதிக்கப்பட்டவர்களும் கட்டுப்பாடாக நடந்துகொள்ள வேண்டும். வெறுப்பை விதைக்க விரும்புபவர்களின் எண்ணம் வெற்றி பெறாமலும் அவர்கள் விரும்பும் விளம்பரமும் வியாபாரமும் அவர்களுக்குக் கிடைக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். இழிவுபடுத்தும் கட்டுரைகள், படங்களால் ஒரு மதத்தின், கொள்கையின் மேன்மையை வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது. பலவீனமான கொள்கை உடையவர்கள்தான் விமர்சனங்களைக் கண்டு அஞ்சுவார்கள்.
இஸ்லாம் விமர்சனங்களை எதிர்கொண்டே வளர்ந்திருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலத்திலேயே பல வசைமொழிகள் வெளிப்பட்டன. மந்திரவாதி, சூனியக்காரர், பொய்யர், குறிசொல்பவர் என்று வசைகளை மொழிந்தபோது பெருமானார் தமது தோழர்களை ஏவி அவர்களைத் தாக்கவில்லை. மாறாக, அவர்கள் எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும்படி கூறினார்.
கவிதைகள் மூலம் பெருமானாரை வசை பாடியபோது தமது அணியிலிருந்த கவிஞர்கள் மூலம் அவர்களுக்குப் பதில் அளிக்குமாறு செய்தார். தமது மனைவி ஆயிஷாவின் (ரலி) கற்பு குறித்து எதிரிகள் அவதூறு சுமத்தியபோதும் பொறுமை காத்தார்.
இத்தகைய தருணங்களில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென குர்ஆன் மூலம் இறைவன் வழிகாட்டினான். வசைமொழிகளைக் கேள்வியுறும் வேளைகளில் பொறுமையையும் இறையச்சத்தையும் மேற்கொள்ளுமாறும் (குர்ஆன் 3:186) அறிவீனர்களின் வாதங்களைப் புறக்கணிக்குமாறும் (குர்ஆன் 25:63)) திருக்குர்ஆன் கூறுகிறது. அத்தோடு அவர்கள் எடுத்துவைக்கும் வாதங்களுக்கு அழகிய முறையில் பதில் அளிக்குமாறு கட்டளையிடுகிறது. (குர்ஆன் 25:33, 16: 124)
"குர்ஆன் இறைவாக்கல்ல, முஹம்மதால் புனையப்பட்டது' என்று கூறியபோது, "அப்படியாயின் இதுபோன்ற ஒரு திருக்குர்ஆனை நீங்களும் கொண்டு வாருங்களேன்' என்று பதில் அளிக்கப்பட்டது. "எழுத, படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இலக்கியத் தரமிக்க கவித்துவமிக்க ஒரு நூலை உருவாக்க முடியுமா?' என்று கூறி அவர்களின் சிந்தனைக்குச் சவால் விடப்பட்டது. எனவே அறிவை அறிவால் சந்திக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பிற மதங்களைப் பழிக்க வேண்டாம் என்றும் அவர்கள் வழிபடும் தெய்வங்களைத் திட்ட வேண்டாமென்றும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. (குர்ஆன் 6: 108) இந்தக் கட்டளைப்படியே கடந்த 1,400 ஆண்டுகளாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். எந்த மதத்தையும் புண்படுத்தும் இலக்கியங்களை, பிரசாரத்தை முஸ்லிம்கள் செய்ததில்லை.
விமர்சனங்கள் கீழ்த்தரமானவையாக இருந்தால் அவற்றைப் புறக்கணித்துவிடலாம் அல்லது அறிவுபூர்வமாகப் பதில் அளிக்கலாம். அல்லது எவருக்கும் தொல்லை தராத அமைதிப்பேரணி நடத்தலாம். ஆனால், பேரணிகள் நடத்தும்போது கலந்துகொள்ளும் அத்தனைபேரையும் கட்டுப்படுத்துவது இயலாது. கூட்டம் அதிக அளவில் இருக்கும்போது ஒருவகையான ஆவேசம் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு குறிப்பாக பயணிகள், நோயாளிகள் படும் அவஸ்தைகள் அனைவரும் அறிந்ததே.
அமைதிப் பேரணியுடன் கருத்தரங்குகள் ஏற்பாடுகள் செய்து சர்வ சமயத்தவர்கள், மனிதநேயர்கள், சமயச் சான்றோர்கள், நல்லிணக்கம் நாடுவோர் எனப் பலதரப்பினரையும் அழைத்து - மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நிகழ்வுகளைக் கண்டிப்பதோடு - நபிகள் நாயகம் பற்றி உண்மையான சித்திரத்தை மக்களுக்கு எடுத்துரைக்கலாம். அமைதியை ஏற்படுத்தலாம். மதவெறியர்களின் திட்டங்களைத் தவிர்க்கலாம். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
 இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் துணைத்தலைவர்.
Source: Dinamani