Saturday, December 27, 2008

அரசு அதிகாரியின் லஞ்சக் குவியலும் கொஞ்சல் வாழ்க்கையும்.. (ரிப்போர்ட்டர்)



தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக வசமாக மாட்டிக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, என வர்ணிக்கப்படும் அளவுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட கரூர் டி.ஆர்.ஓ. ஜவஹர் சாந்தகுமார், கோடி கோடியாகக் குவித்திருக்கிறார் என கண்டுபிடித்திருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார்.


இன்னும் ஓரிரு நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஓரிரு மாதங்களில் கலெக்டராக பதவி உயர்வு என குதூகலத்தில் இருந்த ஜவஹர் சாந்தகுமாருக்கு, கடந்த 23-ம் தேதி இரவில்தான் துப்பாக்கி லைசென்ஸ் வடிவில் விதி வந்து விளையாடிவிட்டது. அன்று மாலை வரை தனது அதிகாரத்தால் அத்தனை பேரையும் ஆட்டுவித்த அந்த அதிகாரி, இப்போது சிறைக்குள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.


கரூர் மாவட்டம் பெரிய வடுகப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார், தனது துப்பாக்கி லைசென்ஸைப் புதுப்பிக்க இந்த அதிகாரியை நாடியிருக்கிறார். குறிப்பிட்ட காலத்திற்குள் அது புதுப்பிக்கப்படாததால் அதற்கு ஆறாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டிருக்கிறார் ஜவஹர் சாந்தகுமார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், விஷயத்தை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.


லஞ்சம் கேட்கும் அதிகாரியை பொறி வைத்துப் பிடிக்க நினைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், கரூருக்கு வந்து செல்வகுமாரைச் சந்தித்து இதற்கான திட்டத்தைத் தீட்டியிருக்கின்றனர்.ஆனால், அன்று ஜவஹர் சாந்தகுமார், திங்கட்கிழமை அரவக்குறிச்சி அருகே மயானப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காகச் சென்றுவிட்டதால், அன்று திட்டம் நிறைவேறவில்லை. செவ்வாய்க்கிழமை குளித்தலையில் மனுநீதி நாள் முகாமுக்குச் சென்று மாலையில்தான் திரும்பியிருந்தார். இனியும் காத்திருக்க முடியாது என முடிவெடுத்து, செல்வகுமாரை லஞ்சப் பணத்தோடு உள்ளே அனுப்பி வைத்துவிட்டு வேட்டி கட்டி, துப்பட்டியைப் போர்த்திக்கொண்டு அதிகாரியைப் பார்த்து மனு கொடுக்க வந்த ஏழை விவசாயிகளின் கெட்டப்பில் வெளியே காத்திருந்தனர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. அம்பிகாபதியும் ஓர் இன்ஸ்பெக்டரும்.செல்வகுமாரிடமிருந்து லஞ்சமாகப் பெற்ற ஆறாயிரம் ரூபாயில் ஆயிரத்து ஐநூறை, தனது அலுவலக உதவியாளரான ஆனந்தசேகருக்குக் கொடுத்திருக்கிறார் ஜவஹர் சாந்தகுமார். லஞ்சப் பணம் பாக்கெட்டிற்குப் போவதற்குள் வெளியே விவசாயி கெட்டப்பில் இருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். தொடர்ந்து ஜவஹர் சாந்தகுமாரின் அலுவலகம் முழுக்க ரெய்டு நடத்திய அதிகாரிகள், கரூரில் அவர் தங்கியிருந்த அரசு வீடு மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளிலும் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இந்த ரெய்டில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகை, பணம், சொத்து ஆவணங்களோடு விதவிதமான வெளிநாட்டு மதுவகைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.


இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, கதை கதையாகச் சொல்லி அதிர வைத்தார் அவர்.``லஞ்சம் வாங்குவதிலும் இதைப் பாதுகாப்பதிலும் வல்லவர் இவர் என்பது, இவரைப் பற்றி நாங்கள் விசாரிக்கத் தொடங்கியபோதே தெரிந்து கொண்டோம். தொட்டதற்கெல்லாம் லஞ்சம் வாங்கி வந்த இவர், ஆளுங்கட்சிப் பிரமுகர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. காரியம் சாதித்துக் கொண்ட மற்றவர்களைவிட, இவரை சிக்க வைக்க தருணம் பார்த்துக் காத்திருந்ததே அவர்கள்தான். ஆனால், சின்னத் தொகையில் சிறுபிள்ளைத்தனமாக சிக்கிக் கொண்டார் சாந்தகுமார்.



ஏற்கெனவே திருவள்ளூரில் ஆர்.டி.ஓ.வாக இருந்த காலத்தில் லஞ்ச வழக்கில் மாட்டிக் கொண்ட இவர்மீது, வழக்கு ஒன்றும் நிலுவையில் இருக்கிறது. போதிய ஆதாரம் இல்லை எனக் காரணங்காட்டி, அந்தத் தீர்ப்பு தனக்குச் சாதகமாக அமையும் பட்சத்தில், ஓரிரு மாதங்களில் தனக்கு கலெக்டராக பதவி உயர்வு கிடைத்துவிடும் என தனது நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறார்.அதே போல கரூர் - அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்காக சாலையின் இருபுறங்களிலும் நில ஆர்ஜிதம் செய்த வகையில் குறிப்பிட்ட அந்த நில உரிமையாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகிறார்கள் வருவாய்த்துறையினர். அதற்காக ஒதுக்கப்பட்ட இருபது கோடி ரூபாய்க்கான 600 காசோலைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காமல், கடந்த சில மாதங்களாக தனது பாதுகாப்பிலேயே வைத்திருக்கிறார் ஜவஹர் சாந்தகுமார்.


தங்கள் நிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பத்து சதவிகிதத்தை கமிஷனாகப் பெற்றுக்கொண்டு சிலருக்கு மட்டுமே காசோலைகளை வழங்கியிருக்கிறார். மீதமுள்ள காசோலைகளை நாங்கள் கைப்பற்றி அத்துறை தாசில்தாரிடம் ஒப்படைத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கச் சொல்லியிருக்கிறோம். அவரது வீட்டில் இருந்து இருநூறு பவுனுக்கு மேற்பட்ட நகைகள், நாலு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துப் பத்திரங்கள், விதவிதமான வெளிநாட்டு மது பாட்டில்கள், மூட்டை மூட்டையான தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகள் என ஏறத்தாழ ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன!'' என்றார் அவர்.


இது ஒருபுறமிருக்க, அரசு அதிகாரிகள் சிலரும் அவரோடு நெருங்கிப் பழகும் சிலரும் அவரைப் பற்றி காமக் கதைகள் சொல்லியும் அதிரவைக்கிறார்கள்.``ஐம்பத்தைந்து வயதைத் தாண்டிய இந்த அதிகாரி, எப்போதுமே முப்பது வயது வாலிபருக்குண்டான மிடுக்குடனும் தோற்றத்துடனும்தான் இருப்பார். மாலை மயங்கினால் மதுவோடும் மாதுவோடும் மயக்கத்தில்தான் இருப்பார். இவர் தனது குடும்பத்தைச் சென்னையில் வைத்துவிட்டு, தான் மட்டும் இங்கே தனியாக இருப்பதால் இவரது `ஆட்டங்கள்' எல்லாவற்றுக்கும் வசதியாகப் போய்விட்டது.


ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவரை இவர் தனது இன்பச் சுரங்கமாகவே வைத்திருந்தார். பல குடும்பப் பெண்களைக் கூட காரியம் சாதித்துக் கொள்ள இவர் பயன்படுத்தி வந்திருக்கிறார். குறிப்பிட்ட சில ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து இவரது காமப்பசிக்கு தீனிபோட தினமும் இளம் பெண்களை சப்ளை செய்திருக்கிறார்கள் சில உரிமையாளர்கள். அதே போல நில புரோக்கர்கள் சிலர் இவருக்கு பலவித புரோக்கர்களாகவும் செயல்பட்டிருக்கிறார்கள்!'' என்கிறார்கள் அவர்கள்.


பணிக் காலம் முழுக்க கைநிறையச் சம்பளம், ஓய்வுக்குப் பிறகு அதில் பாதி, பணிக் காலத்தில் இறந்தால் வாரிசுக்கு வேலை, பிராவிடண்ட் ஃபண்ட் என லட்ச லட்சமாய் கொட்டிக் கொடுத்தாலும், ஏழைகளின் வயிற்றில் அடிப்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் எத்தனையோ அதிகாரிகளில் ஒருவர்தான் இப்போது மாட்டியிருக்கிறார். மற்றவர்களும் மாட்டும் நாள் எப்போதோ, அப்போதுதான் மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.


Thanks to Kumudam Reporter.

Thursday, December 25, 2008

ஹிந்துத்துவா என்றால் மறைக்கப்படும் பயங்கரவாதம்!

யார் தீவிரவாதி?

ஹிந்துத்துவா என்றால் மறைக்கப்படும் பயங்கரவாதம்! என்ற பெயரில் "அவுட்லுக் இந்தியா" இதழில் திருமதி. ஸ்மிதா குப்தா ஆங்கிலத்தில் எழுதிய செய்திக் கட்டுரை!


இக்கட்டுரையின் சாரம்சம் - அவுட்லுக் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்கள்:
கடந்த 2006ம் ஆண்டில் Nanded இல் நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது பஜ்ரங்தள்தான் என்பது மஹாராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புத்துறை (ATS) நடத்திய புலனாய்வில் வெளியானது.
பஜ்ரங்தள்ளின் முக்கியக் குறி பள்ளிவாசல்களாக இருந்தன. கடந்த 2003-லும் மூன்று பள்ளிவாசல்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் ATS & CBI இனரால் திட்டமிட்டு கைவிடப்பட்டது.


கடந்த ஆகஸ்ட் 2008 இல் கான்பூரில் குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக வெடித்து இரு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் இறந்தனர். அதைத் தொடர்ந்து இந்தியா உட்பட உலகமே அதிரும் வகையில் பல்வேறு இடங்களில் வண்டி வண்டியாக வெடிகுண்டுகள் கைப்பற்றப் பட்டன.
பெங்களூரு, அஹ்மதாபாத், டெல்லி ஆகிய பெருநகரங்களில் கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான குண்டு வெடிப்புகளினால் உலகமே உறைந்து போயிருந்தது.


இதில் பாதிப்புக்குள்ளானவர்கள், வெடிகுண்டுகளில் இறந்து போனவர்களும் அவர்தம் உறவினர்கள் மட்டுமல்ல; இந்திய முஸ்லிம்களும் அடக்கம். இன்று வரை எந்த ஓர் இஸ்லாமிய இயக்கமோ, குழுவோ இந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்காத சூழலில் இப்பழி இந்திய முஸ்லிம்களின் மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டது இந்திய முஸ்லிம்கள் என்றால், நன்மையடைந்தது?
வேறு யார்? பிஜேபிதான்.

இல்லாத இயக்கங்கள் பெயரை உருவாக்கி பாமரன் கூட "முஸ்லிம்கள் தான் செஞ்சாங்களாம்" என்று முணுமுணுக்க வைத்தது பிஜேபியின் ஒரு வெற்றிகரமான போர் தந்திரம் என்றால் அது மிகையில்லை.
இந்திய சட்டதிட்டங்களுக்கு எதிராக குறிப்பிட்ட சமூகங்களைக் கொன்றொழிக்கவென்றே பிரத்யேகமான இராணுவ பயிற்சி முகாம்களை பகிரங்கமாக நடத்திவரும் பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP)இன் இளைஞர்களுக்கான பிரிவாகச் செயல்பட்டு வரும் பிரிவு என்பது
அனைவரும் அறிந்த ஒன்று.


இத்தகைய பயங்கரவாதச் செயல்கள் அனைத்திற்கும் பின்புலமாகச் செயல்படுவது பஜ்ரங்தள் என்பது காவல்துறையினரின் புலனாய்விலிருந்து வெளிப்படும் விஷயங்கள்.
இங்கே கூறப்படும் எவையும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.
உதாரணத்திற்கு, மஹாராஷ்ட்டிராவின் தீவிரவாதத் தடுப்புத்துறையின் புலனாய்வில் வெளியான உண்மைகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்:


ஓய்வு பெற்ற PWD பொறியாளரான எல்.ஜி. ராஜ்கொண்டுவார், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராவார். கடந்த ஏப்ரல் 2006 இல் மஹாராஷ்ட்ராவின் Nanded பகுதியில் உள்ள இவரது வீட்டில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் இவர் பலியானார். இவருடன் இறந்தவர் ஹெச்.பான்ஸே. காயமடைந்தவர்கள் எம்.கே.வேக், ஒய்.தேஷ்பண்டே, ஜி.ஜே.துப்தெவார் மற்றும் ஆர்.எம்.பாண்டே ஆகியோர்.இவர்கள் அனைவரும் பஜ்ரங்தள் அமைப்பின் கட்டளையைச் செயல் படுத்திக் கொண்டிருந்தவர்கள்.


பதிவான FIR அறிக்கையில் "சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியதால் அசம்பாவிதம் ஏற்பட்டது" என்று பஜ்ரங்தள் கூறியிருந்தது.
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்த விசாரணையில் திடுக்கிடும் பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாயின. அவற்றில் ஒன்று, மஹாராஷ்ட்ராவில் சில பள்ளிவாசல்களைக் குறி வைத்து நிகழ்த்த இருந்த பெரும் குண்டு வெடிப்புகளுக்கான தயாரிப்புப் பணியில் பஜ்ரங்தள் உறுப்பினர்களான மேற்கண்ட நபர்கள் ஈடுபட்டிருந்த வேளையில், வெடிகுண்டுகளை இடம் மாற்றும்போது தவறுதலாக வெடித்திருக்கிறது. ஆனால், அதிர்ச்சியில் உறைய வைத்த காவல்துறையின் ஜோடனையில், அனைத்து குண்டு வெடிப்புக்களையும் முஸ்லிம்கள் செய்ததாகக் காண்பிக்கும் வண்ணம் "உருவாக்கப்பட்ட தடயங்கள்" பதிவான FIR அறிக்கை அவசர அவசரமாக மாற்றி எழுதப்பட்டது.


புத்தம் புதிய FIR அறிக்கை, "இஸ்லாமியத் தீவிரவாதி"களே இதனைச் செய்ததாகக் கூறியது. தீவிரவாத அமைப்புக்கு பேரும் சூட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 16 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கையில் மேற்படி நடந்த குண்டு வெடிப்புக்கான வரைபடங்கள், பொருட்கள் இருந்ததாகவும் இவர்களே இதற்கு முன் நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்கள் என்றும் ரிமாண்ட் விண்ணப்பத்தில் எழுதப்பட்டபின் செய்தியாளர்களை அழைத்து, அழுத்தம் திருத்தமாக செய்தி கொடுக்கப்பட்டது.


கடந்த மே 4, 2006இல், இந்த வழக்கு ATS இன் கைக்கு மாறியது.அதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் 24 ந்தேதியில் ATSஇன் முதல் குற்றப்பத்திரிகையின்படி பஜ்ரங்தள் மற்றும் சங் பரிவாரின் பயங்கரவாதப் பின்னணி முழுமையாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது:இந்தியாவில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களில் முஸ்லிம்களே வைத்துக் கொண்டதுபோல் உருவாக்கப்பட்டு உலகத்தை உலுக்கிய, பேரிழப்பை உண்டாக்கியவர்கள் பஜ்ரங்தள் குழுவினர்.


இவர்கள் நிகழ்த்திய சில பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் பின்வருமாறு:
பர்பானி பகுதியில் உள்ள முஹம்மதியா பள்ளிவாசல் (நவம்பர் 2003)
ஜல்னா பகுதியில் உள்ள காதிரியா பள்ளிவாசல் (ஆகஸ்ட் 2004)
பர்பானி மாவட்டத்தில் உள்ள பூர்ணா நகரத்தின் மெராஜுல் உலூம் பள்ளிவாசல் / மதரஸா (ஆகஸ்ட் 2004)


அவுரங்காபாத் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பெரும் குண்டு வெடிப்பினை நிகழ்த்துவதற்காக பஜ்ரங்தள் குழுவினால் தயாரிக்கப்பட்ட குண்டே தவறுதலாக வெடித்துள்ளது. இதில் பன்ஸே மற்றும் வேக் ஆகியோர் கடந்த மே மாதம் 2004 இல் அவுரங்கபாத் பள்ளிவாசலுக்குச் சென்று எடுத்துக்கொண்ட குறிப்புகளும், குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கு அவ்விருவரும் கலந்தாலோசனை செய்து பேசிய பேச்சுகள் பதிவாகிய செல் போன்களும் சிக்கியுள்ளன.


இந்து இளைஞர்களைக் கவரும் வகையில் உடற்பயிற்சி மையத்தைத் துவங்கிய பன்ஸே மற்றும் பாண்டே, முஸ்லிம் எதிர்ப்பு வெறியை இந்துக்களுக்கு ஊட்டப் பல்வேறு செமினார்கள் / வகுப்புகளை நடத்தினர். அதில் குறிப்பாக முஸ்லிம்கள் என்றாலே இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் முஸ்லிம்களை அழித்து ஒழிக்க "ஏதாவது" செய்தே ஆக வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு இரத்தம் சூடேற்றும் பாடங்கள் எடுக்கப் பட்டன.


புனே, கோவா மற்றும் நாக்பூர் போஸ்லாவில் உள்ள இராணுவப் பயிற்சிக் கூடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்கும் பயிற்சியினை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் இவர்கள். மேற்கண்ட நகரங்களில் உள்ள RSS முகாம்களில் கராத்தே, துப்பாக்கி சுடும் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.தவறுதலாக நடந்த குண்டு விபத்தில் பலியான ஹெச்.வீ.பன்ஸேவின் வீட்டைச் சோதனையிட்டபோது, ஒட்டு தாடி, ஒட்டு மீசை மற்றும் முஸ்லிம்கள் அணியும் உடைகள் ஆகிய பொருட்கள் கிடைத்தன.


இந்த ஒட்டுமொத்த நாடகத்தின் நோக்கம் என்ன?
எங்குப் பார்த்தாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்கள் சமூகத்தில் இருந்து அப்புறப் படுத்தப் படவேண்டும். அமைதி மார்க்கம் என்ற எண்ணம் கொண்டு இஸ்லாத்தில் இணையும் மக்களின் எண்ணிக்கை, இத்தகைய நிகழ்வுகள் மூலம் பெருமளவு குறைக்கப் படல் வேண்டும். மொத்தத்தில் இஸ்லாத்தின் மீதான வெறுப்பு நாடெங்கிலும் நிலவ வேண்டும் என்பதே இந்த சதித் திட்டத்தின் நோக்கம் என்பதை, கிடைத்துக் கொண்டு வரும் ஆதாரங்கள் தெளிவு படுத்துகின்றன.


ATS இன் புலனாய்வு அறிக்கை இவ்வாறு முடிகிறது:
பஜ்ரங்தள் மற்றும் சங் பரிவாரின் குறி மஹாராஷ்ட்ராவின் முஸ்லிம்களே!மஹாராஷ்ட்ரா முழுவதும் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பங்களில் மேற்கூறிய இரு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்."குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியது முஸ்லிம்களே!" என்று உலகிற்குக் காண்பிக்கும் வகையில் முஸ்லிம்களில் ஒருபிரிவினர் இன்னொரு பிரிவினருக்கு தனிப்பட்ட விரோதம் காரணமாக குண்டு வைத்ததாக ஜோடிக்கப் பட்டது
ATS துப்புத் துலங்கவும் அதன் புலனாய்வில் பல்வேறு உண்மைகளை உடைத்து வெட்ட வெளிச்சமாக்கவும் உதவிய, தான் எழுதிய Communalism Combat என்ற நூலை எழுதிய தீஸ்ட்டா செட்டால்வாட் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.


"ATSஇன் இந்தப் புலனாய்வு இந்திய மண்ணில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்ததில் அதன் பங்கு மிக முக்கியமானதாகவும் உள்ளது. ஹிந்துத்துவாவின் சாயம் வெளுத்த நிமிடத்தில் இருந்து ATS மீது விழுந்த கனத்த அழுத்தம் காரணமாக அதன் அறிக்கைகளில் யூ-டர்ன் அடிக்க ஆரம்பித்தன. இதில் CBI இன் நடவடிக்கைகள் கேள்விக்குரியவையாகும். இந்த வழக்கினை வலுவிழக்கச் செய்யும் அனைத்து அயோக்கியத் தனங்களையும் CBI செய்தது"ATI இன் புலனாய்வின் மூலம் வெளிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளையும் அதன் பின்னணியில் இருந்து செயல்பட்ட பஜ்ரங்தள்ளும் அதைப் பின்னணியில் இருந்து கொண்டு இயக்கிய சங் பரிவார் ஆகியன CBI யின் குற்றப்பத்திரிகையில் மாற்றி எழுதப் பட்டன. அதாவது, வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டபோது இறந்தவர்களுக்கும் எந்தவொரு பயங்கரவாதச் செயலுக்கும் தொடர்பு இல்லை என்ற தொனியில் வழக்கின் போக்கினை CBI மாற்றியமைத்தது. (The CBI chargesheet, which Setalvad procured on an RTI application, reveals that the agency simply diluted the ATS's charges of criminal conspiracy involving terrorist acts.) இதன் மூலம் மஹாராஷ்ட்டிராவில் உள்ள எந்தவொரு பயங்கரவாத அமைப்பினையும் தொடர்பு படுத்தி விசாரிக்க வழியில்லாமல், தனிப்பட்ட வழக்காக CBI மாற்றி அமைத்தது.


இதன் மூலம் பஜ்ரங்தளுக்கோ சங் பரிவாரத்தின் எந்தவொரு குழுவுக்கோ வெடிகுண்டுகள் தயாரித்து நாட்டை நிர்மூலமாக்கும் மிகப் பெரிய சதித்திட்டத்தில் எந்த விதச் சம்பந்தமும் இல்லை என்று CBI கதை கட்டியது.கான்பூரில் கடந்த ஆகஸ்ட் 24, 2008இல் சக்தி வாய்ந்த குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பஜ்ரங்தள் ஐச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ரா மற்றும் புபிந்தர் சிங் ஆகிய இருவரும் உடல் வெடித்துச் சிதறி இறந்தார்கள்.இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கான்பூர் மண்டல ஐ.ஜி.ப்பி. எஸ்.என்.சிங், "உத்தரபிரதேசத்தின் Special Task Force சிறப்புப் படையினர் நடத்திய புலனாய்வில் நாட்டையே சுடுகாடாக்கும் பெரும் வெடிகுண்டுகளுக்கான திட்டம் தீட்டப்பட்டிருப்பது வெளியாகியுள்ளது" எனக் கூறியிருந்தார்.

பஜ்ரங்தள் தயாரித்த வெடிகுண்டுகளில் உள்ள கிரானேடுகள் இராணுவப் படையில் பயன்படுத்தும் இரகங்களைச் சார்ந்தவை என்று வெளியான தகவல் இன்னும் சந்தேகங்களைக் கூடுதலாக்குகிறது.இறந்துபோன பஜ்ரங்தள் புபிந்தர் சிங்கின் லாஜ்பட் நகரில் உள்ள ஸ்டுடியோவையும் அவனது வீட்டையும் காவல் துறையினர் சோதனையிட்டபோது அதிர்ந்து போயுள்ளனர்!. அங்கே சிக்கிய புபிந்தர் சிங்கின் டயரியில் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் ஃபெரோஜாபாத் நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் கடுமையான உயிர்ச்சேதம் விளைவிக்கும்படியாகக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்காக வைத்திருந்த குறிப்பேடுகள் சிக்கின. இதில் அனைத்து குண்டு வெடிப்புகளும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமளான் மாதத்தில் நடத்த திட்டமிடப் பட்டிருந்தன என்பதைக் கான்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.கான்பூர் வெடிகுண்டு சம்பவத்தில் பஜ்ரங்தள்தான் குற்றவாளிகள் என்ற ரீதியில் வலுவான ஆதாரங்களுடன் வழக்கு சென்று கொண்டிருக்கும் சூழலில், அதைப் பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் ஒரிஸா, கர்நாடகா, கேரளா என்று மாநில வாரியாக கிறித்துவர்கள் மீது வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டு வருகிறது பஜ்ரங்தள்.

மனிதம் எனும் உணர்வை ஆழமாகக் குழி தோண்டி புதைத்து, மதத்தினைக் காரணம் காட்டி, தொடர்ந்து இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் ஹிந்துத்துவா எனும் தீய சக்தி நாட்டில் திகிலைத் தொடர்ந்து கிளப்பி வருகிறது.


இந்திய நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வரும் இந்திய மக்களுக்கு, இத்தகைய ஆதிக்க சக்திகளை அடியோடு வேரறுக்கும் கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே ஆறுதலாய் இருக்கும்.


பஜ்ரங்தள் : பின்னணி என்ன?
ராம் ஜானகி யாத்ராவின் பாதுகாப்பிற்கு ஒரு குழு என்ற பெயரில் கடந்த 1984 இல் விஷ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கிய அமைப்பே பஜ்ரங்தள் ஆகும்.அதன் பின் கடந்த 1993 இல் உத்தரபிரதேச எல்லையைத் தாண்டி மிகப் பெரிய அளவில் விஸ்தீரணம் செய்யப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவாக பஜ்ரங்தள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.வருடங்கள் உருண்டோட, ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளின் பக்கம் பஜ்ரங்தள்ளின் கவனம் திரும்பியது. பிரச்னை தீர்க்க 'அவதாரம் எடுத்ததாக' அதன் தலைவர் ப்ரகாஷ் ஷர்மாவினால் வர்ணனை செய்யப்பட்டது.
"பசுக்களை கொல்பவர்களையும், ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என்று நாங்கள் அடையாளம் காட்டும் முஸ்லிம்களையும் இந்திய அரசு தண்டிக்காவிட்டால், அரசின் அப்பணிகளை நாங்களே கையில் எடுத்துக் கொள்வோம்!" - உத்தரபிரதேசத்தின் வி.ஹெச்.ப்பி தலைவரான ருக்குன் சிங் பாயல் பஜ்ரங்தள் பற்றிக் கூறிய வாக்கு இது!


இந்தியாவின் குருட்டுப் பார்வை!
குற்றமிழைத்தவர் சிறுபான்மையினர் என்றால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் இந்திய மாநிலங்கள், சங்பரிவாரங்கள் சட்டத்தை மீறுகையில் சும்மா இருப்பதேன்?


அவுட்லுக் இதழின் கேள்விக்கு சிலரின் பதில்கள்:
"கர்நாடகா மற்றும் ஒரிஸ்ஸாவில் பஜ்ரங்தள் மேற்கொண்டு வரும் வெறியாட்டங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் அரசு இயந்திரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன!. கிறித்துவர்கள் ஓட்டுவங்கிகளாக இல்லை என்பது அரசின் நினைப்பாக இருக்கலாம்."
-டொமினிக் இம்மானுவேல், டெல்லி கத்தோலிக் சர்ச் செய்தித் தொடர்பாளர்


"இது இந்திய முஸ்லிம்களின் அழிவுக்காலம் என்று சொல்லலாம். ஏனெனில் அநீதியான முறையில் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று காண்பிப்பதன் மூலம் தேசிய அளவில் ஒரு நபர் புகழ் பெறுகிறார்
-ஷாஹித் சித்திக்கி, ஆசிரியர் - நயி


மாநில அளவில் நடந்து வரும் இத்தகைய நிகழ்வுகள் அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. இதில் சிறுபான்மையினரைக் குற்றம் சொல்வது தவறு."
-குர்சரன் தாஸ், பத்திரிகையாளர்


ஹிந்துத்துவக் குழுக்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும்போது மட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குவதற்கு என்ன காரணம்?
ஆம்
இல்லை
அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த நோக்கம்தான் காரணம்
81%
19%
நடவடிக்கை எடுத்தால் அது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதால்...
68%
32%
காவல்துறையில் பெரும்பாலோனோர் ஒருமதச் சார்புடன் நடப்பதால்...
55%
45%
இந்திய அரசு பஜ்ரங்தள்ளைத் தடை செய்ய வேண்டுமா?
69%
27%
பஜ்ரங்தள்ளின் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற நடவடிக்கைகள், பயங்கரவாதத்தில் சேருமா?
70%
27%

thanks to : அவுட்லுக், And Taminadus.blogspot.com

Tuesday, December 23, 2008

அரசியல்வாதிகளில் அந்துலே என்றொரு மானஸ்தன்

நாடாளுமன்றத்தில் நெறிக்கப்படும் உரிமைக்குரல்

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ.ஆர் அந்துலே, மராட்டிய மாநில தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்துலே தனது பதவியை சுய இழப்பு (ராஜினாமா) செய்யும் அளவுக்கு நிர்பந்திக்கப்பட்டார்.

இந்துத்துவ பாசிச சக்திகள் கர்கரேயின் மரணத்தால் மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த மகிழ்ச்சியில் மண் அள்ளிப்போடும் ஒரு கேள்வியைத் தான் அந்துலே எழுப்பினார். மராட்டிய மாநிலத்தின் மலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஸ்ரீ காந்த் புரோகித் என்ற ராணுவ அதிகாரி, அமிர்தானந்தா என்ற ஆண் சாமியார், பிரக்யாசிங் தாக்கூர் என்ற பெண் சாமியார் உட்பட 10 இந்துத்துவ தீவிரவாதிகளின் கூட்டுச் சதியைக் கண்டறிந்து கர்கரே தேசத்துக்கு வெளிப்படுத்தினார். இது, தீவிரவாதிகள் எல்லாம் முஸ்லிம்கள் என்று கூறிவந்த இந்துத்துவ பாசிஸ்டுகள் வயிற்றில் சயனைடை கரைத்தது.


முஸ்லிம்களின் கணக்கில் வரவு வைத்த சாமியார்களின் குண்டுவெடிப்புகளை சல்லடை போட்டு அலசியவர் என்பதால் கர்கரேயின் திடீர் மரணம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் தந்தது. தில்லி ஜாமியா நகர் துப்பாக்கி சூட்டில் முஸ்லிம் இளைஞர்களால் சுட்டு கொல்லப்பட்டார் என்று கூறப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சர்மாவின் சடலப் பரிசோதனை காவல்துறை அறிவித்த தகவலை புரட்டிப் போட்டது அனைவரும் அறிந்ததே. பின் மண்டையில் சுடப்பட்டு முன் நெற்றி வழியே துப்பாக்கி ரவை வெளியேறியதாக மருத்துவ அறிக்கை கூறியது.


இச்சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், காவல்துறை அதிகாரிகளை தீவிர வாதிகள் மட்டும் கொல்வதில்லை என்ற பூடகமான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. இந்துத்துவ சக்திகளால் கடுமையாக கண்டிக்கப்பட்ட கர்கரே தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறியிருந்தார். இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் மும்பை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை சாதகமாக்கிக் கொண்டு வேறு சக்திகள் கர்கரேயை கொன்றிருக்க முடியுமோ என்ற சந்தேகம் பரவலாக உள்ளது. இதையே அந்துலேயின் கேள்வியும் உறுதி செய்கிறது. மக்கள் மனதில் உள்ள எண்ணங்களையே தனது கேள்வி வெளிப்படுத்தியதாக அந்துலே கூறியுள்ளார்.


மும்பை நகரத்தை பயங்கரவாதிகள் தாக்கிக் கொண்டிருந்த போது அந்த பயங்கரவாதிகள் சுடும் இடத்தை நோக்கி மூன்று முக்கிய அதிகாரிகளை வழி நடத்தியது யார் என்று தான் நாடாளுமன்றத்தில் அந்துலே கேள்வி எழுப்பினார். இக்கேள்வியை எதிர்கொண்ட நேரத்தில் ஜனநாயகத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ஆவேசக் குரல் எழுப்பினர், வெளிநடப்பு செய்தனர். அவையில் குளறுபடி செய்ய இதனை ஒரு வாய்ப்பாக்கினர். தாவூத் இபுராஹிம், ஐ.எஸ்.ஐ. யின் கைப்பாவை என்றும் அந்துலேயை அவமானப்படுத்தினர். அந்த நேரம், லல்லு பிரசாத்தை தவிர வேறு யாரும் ஆதரவாக பேசவில்லை. காங்கிரஸில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மௌனிக்க, அதிலும் ஒரு கூட்டம் அந்துலேவுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பியது.


பிரதமர் மன்மோகன் சிங் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்துள்ளார். தனது கட்சியை சார்ந்த ஒருவர் அதுவும் குறிப்பாக, சிறுபான்மை நலத்துறை சார்ந்த அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு இருக்கும் உரிமை குறித்து பிரதமர், சபாநாயகர் முதலானோர் பேசாமல் இருந்தது கண்டிக்கத்தக்கது. தனது கட்சியே தனக்கு ஆதரவளிக்காததும், அதில் இருந்தே எதிர்ப்புக் குரல் எழுந்ததும், பிரதமரே மௌனமாக இருந்துள்ளதும், அந்துலே தனது பதவியை சுய இழப்பு (ராஜினாமா) செய்யக் காரணமாக அமைந்தது. கர்கரேயின் திடீர் மரணத்தால் சிறுபான்மை சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியில் குறைபாடு வந்து விடுமோ என்ற ஆதங்கம் சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு ஏன் வரக் கூடாது? இதைக்கூட கேட்காமல் பின்னர் எதற்காக அவர் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்க வேண்டும். அதே நேரம் கர்கரே பற்றி நரேந்திர மோடி கூறிய விமர்சனம் விவாதிக்கப்படுவதில்லை என்பதையும் கவனிக்க. மோடி விமர்சித்த காரணத்தால் அவர் வழங்கிய நிவாரண தொகையை கர்கரே மனைவி வாங்க மறுத்தது பற்றி விவாதிக்கப்படுவதில்லை.


பாபர் மஸ்ஜித் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படக்கூடாது என்பதற்காகவே இந்த வருடம் டிசம்பர் 6க்கு பிறகு நாடாளுமன்றத்தை கூட்டியிருக்கும் காங்கிரஸிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அமரும் பொதுக்கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை, மனக்குறைகளை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் தனது அமைச்சர் பொறுப்புக்கு ஏற்ப நடந்து கொண்ட அமைச்சர் அந்துலே பாராட்டுக்குரியவர்.சிறுபான்மை நலனுக்காக கேள்வி கேட்க முடியாத ஒரு பதவி தனக்குத் தேவையில்லை என்று பதவியை இழக்க முன்வந்துள்ளார் அந்துலே.


குலாம் மஹ்மூது பனாத்வாலா போன்ற உறுதிமிக்க அறிவுசார் முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசிய தருணங்களில் எல்லாம், பல கட்சியினர், அவர்களது உரையின் குரல்வளையை நெறிக்கப்பார்ப்பார்கள். இன்று முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக் கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே சிறுபான்மை உறுப்பினர்கள் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர். அதனால் அதிர்வுகள் அதிகரிக்கின்றன. அதே நேரம், கேள்வி கேட்டும் உரிமைகள், முஸ்லிம் சமூகத்திற்கு நாடாளுமன்றத்திலும் மறுக்கப்படுகிறது என்ற உண்மை அந்துலே வழியாக வெளிப்படுகிறது. அந்துலேவுடன் இணைந்து குரல் கொடுக்கவும் வெளிநடப்பு செய்யவும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை இருந்திருக்குமானால் பாசிஸ்டுகளின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் குரல்வளை நெறிக்கப்படுவதற்கு எதிராக முஸ்லிம் சமூகம் எழுச்சி பெற வேண்டும்

Thanks to TMMK website.

Thursday, December 18, 2008

ஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்?

நாட்டு நடப்பைப் பற்றி 11ஆம் வகுப்பின் 52 மாணவர்களடங்கிய ஒரு கலந்துரையாடலின்போது, ப்ரஜ்வி மல்ஹோத்ரா என்ற மாணவன் மேற்காணும் கேள்வியை என்னிடம் கேட்டான். சரியான தருணத்தில் கேட்கப்பட்ட நியாயமானதொரு கேள்வி. ப்ரஜ்விக்கும் அவனைப் போன்ற மற்ற மாணவர்களுக்கும் மனதில் தோன்றிய இக்கேள்விக்கு ஒரு முஸ்லிம் என்ற முறையில் பதிலளிக்க வேண்டியது என்மீது கடமையானது.
"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தாம்!" என்ற கருத்துருவாக்கம் மேற்கத்திய ஊடகங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, 'அது உண்மையாக இருக்குமோ!' என நம்ப வைக்கப்பட்ட ஏராளமானோரில் ப்ரஜ்வியும் ஒருவன்.


'இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது' எனப் பல்வேறு குரல்களில் தொடர்ந்துப் பிரச்சாரம் செய்யப்படுவதால், இன்று இஸ்லாம் என்பது கண்காணிப்பு வளையத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொய்க் கருத்துருவாக்கத்தைப் பொதுமக்கள் நம்புகிறார்கள் என்றால் அதற்கும் சில காரணங்கள் இல்லாமலில்லை. சில சமயங்களில் அவர்கள் கண்ணால் காண்பவற்றைக் கொண்டே முடிவு செய்கிறார்கள். தீவிரவாதிகள் சிலர் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுவதை மக்கள் காண்பதால் அவ்வாறு முடிவுக்கு வருகின்றனர்.
நான் ப்ரஜ்வியிடம் சொன்னேன்: "எல்லா மதங்களின் நல்லொழுக்க வழிகாட்டுதல்களும் ஒன்றேதான். இஸ்லாமும் அதுபோன்ற நல்ல வழிகாட்டல்களையும் கொள்கைகளையுமே போதிக்கிறது. ஆனால் சிலர் இறைவனின் பெயரைச் சொல்லி மற்ற சிலரை தவறான பாதையில் வழி நடத்துகின்றனர்".


மும்பை, டெல்லி, காஷ்மீர் குண்டு வெடிப்புகள், அல்-காயிதா அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகள் ஆகியன என்னைத் தலைகுனியச் செய்கின்றன. மனிதத் தன்மையற்ற பயங்கரவாதச் செயல்களில் ஒரு முஸ்லிமின் பெயர் சம்பந்தப்படும் போதெல்லாம் மனம் குமைந்து போகிறது!
ஜிஹாத் பற்றி முஸ்லிமல்லாத சகோதரர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்கள் பலருமே தவறாகப் புரிந்து வைத்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.


ஜிஹாத் என்பதன் உண்மையான கருத்து பிற மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கல்ல; மாறாக, ஒருவர் தனது உள்மனதில் புதைந்திருக்கும் சுயநலச் சிந்தனைகள், இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடியிருக்கும் ஒழுக்கக்கேடுகள் மற்றும் குறைபாடுகள், தீயசக்திகள், அநீதி, சமத்துவமின்மை, கல்லாமை, அறியாமை ஆகியற்றை எதிர்த்துப் போராடுவதே ஜிஹாதாகும். முதலில் அவர் தன் உள்மனதுடன் ஜிஹாத் செய்து (போராடி) அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் அவர் தம் மனைவி, குடும்பத்தினர், அண்டை அயலார் மற்றும் முழு சமுதாயத்தினரிடையேயும் தமது முயற்சிகளைத் தொடர வேண்டும். இதுவே 'ஜிஹாதே அக்பர்' (மாபெரும் போராட்டம்) எனப்படும் மிகச் சிறந்த ஜிஹாத் ஆகும். ஜிஹாத் என்பதன் சரியான விளக்கமும் இதுதான்.


தீவிரவாதம் என்பது ஓர் அரசியல் நடவடிக்கையே தவிர, மதங்களுக்கும் மதங்கள் சார்ந்த சமூகங்களுக்கும் இவற்றுடன் எந்தத் தொடர்புமில்லை. எந்த மதமும் அப்பாவிகளை கொல்லும்படி போதிக்கவில்லை. ஆனால் தீவிரவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். எந்த மதம் சார்ந்தச் சமூகமும் தங்கள் சார்பாக பயங்கரவாதச் செயல்களைச் செய்யும்படி தீவிரவாதிகளைத் தேர்ந்தெடுத்து பணியிலமர்த்துவதில்லை.
இருந்தபோதிலும், இத்தகைய பயங்கரவாதச் செயல்களின் பின்விளைவாக, அவற்றுடன் எந்தச் சம்பந்தமுமில்லாத ஒரு சராசரி இந்திய முஸ்லிம் பலவிதப் பிரச்னைகளைச் சந்திக்க நேர்கிறது. முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வில் நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள், பணியிடங்களிலும் கல்வி நிலையங்களிலும் காட்டப்படும் பாரபட்சம், வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்னைகள், நம்பிக்கையின்மை போன்றவையே அவை. 1984இல் சீக்கிய சமுதாயத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரங்களைப்போல நடந்துவிடக் கூடாதே என்பதும் முஸ்லிம்களின் அச்சமாக இருக்கிறது.


சமுதாயங்களுக்கிடையே பிரிவினை உண்டாக்க முயலும் தீவிரவாதிகளுக்கு எவ்வகையிலும் உதவி சென்றடையக் கூடாது. மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பிளவினை உண்டாக்க முயன்றனர். ஆனால், அதற்கு மாறாக, இந்த பயங்கரவாத நிகழ்வினால் தோன்றிய அதிர்ச்சி அலைகள் இந்திய மக்களை ஒருங்கிணைத்ததைக் காண முடிந்தது.


பாகிஸ்தான் மீதான கண்டனங்களை இந்திய முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள் என சில அரசியல் தலைவர்கள் தப்புக் கணக்குப் போடுகின்றனர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; சென்ற பொதுத் தேர்தலின்போது இந்திய முஸ்லிம்களின் வாக்குகளைக் கவருவதற்காக, பாரதிய ஜனதா கட்சி தங்கள் ஆட்சியின்போது லாகூருக்குப் பேருந்து சேவை தொடங்கியதையும் பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தியதையும் மாபெரும் சாதனை போல விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தனர். இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானின் கைப்பொம்மைகள் போல இன்னும் இவர்கள் கருதுவது உண்மையில் வருந்தத் தக்கது!.


ஒரு சில தீவிரவாதிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே பிரதிநிதிக்காது என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருந்தும் 'முஸ்லிம் வாக்குகளை இழந்து விடுவோமோ' என்ற பயத்தாலோ என்னவோ நமது அரசு பாகிஸ்தானுடன் சீரியஸான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடாது வெறும் வாய்ச் சவடால்களில் காலம் கழித்துக் கொண்டிருக்கிறது.


'தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள் இந்திய முஸ்லிம்களைத் தனிமைப் படுத்துவதாக ஆகிவிடும்' என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இந்திய அரசியல்வாதிகள் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிக் கருதுவது இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் எனத் தவறாக முத்திரை குத்துவதற்கு ஒப்பாகும் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்? இந்திய முஸ்லிம்களை இதைவிட மோசமாக வேறு யாராலும் கேவலப் படுத்த முடியாது.


தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறையை மேற்கொள்வது முஸ்லிம்களை மகிழ்ச்சியடையச் செய்யாது. ஏனெனில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தங்கள் இலக்குகளை மதரீதியில் பிரித்துப் பார்ப்பதில்லை. "தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முஸ்லிம்கள் நம்மை பாராட்டுவார்கள்" என்று நம் நாட்டு அரசியல்வாதிகள் நினைத்தார்களென்றால் அவர்கள் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


மத உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வோரை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள். சமீபத்திய டெல்லி தேர்தல் முடிவுகள் இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
மத நம்பிக்கைகள் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகளுடன் தொடர்புடையது. மதங்களுக்குச் சொந்தம் கொண்டாடும் சில தனிநபர்கள் மற்றும் குழுவினரின் கட்டுப்பாட்டிலிருந்து அவை விடுவிக்கப்பட வேண்டும். அடிப்படையில் மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பதை மறந்து விடலாகாது.


-ஃபிரோஸ் பக்த் அஹமது (http://www.twocircles.net/2008dec14/sir_why_are_all_terrorists_muslims.html)
(கட்டுரையாளர் விடுதலைப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனாவார்).

Thanks to Satyamargam.com

Tuesday, December 16, 2008

ஆப்கான் தீவிரவாதிகள் பிரான்ஸுக்கு மிரட்டல்




கடந்த நவம்பர் மாதம் தாலிபானின் ராணுவ தளபதி "பிரெஞ்சு துருப்புக்கள் ஆப்கானை விட்டு வெளியேறாவிட்டால் இதன் எதிரொலி பாரிஸில் கேட்கும்" என்று சொன்னதன் தொடர்ச்சியாக பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் வெடிக்காத குண்டு கண்டெடுக்கப்பட்டது.



"ஆப்கான் புரட்சி முன்னணி" என்ற பெயரில் பிரெஞ்ச் செய்தி ஏஜென்ஸிக்கு அனுப்பப்பட்ட ஒரு மிரட்டல் கடிதத்தில் "ஆப்கானில் இருந்து பிரெஞ்சு ராணுவம் வரும் பிப்ரவரி 2009 க்குள் திரும்ப வேண்டும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிஸில் உள்ள மிகப் பிரமாண்டமான "ப்ரெந்தாம்" என்கிற கடையில் பல இடங்களில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது டிசம்பர் 17,புதன்கிழமை வெடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கவே பரபரப்பானது பாரிஸ் நகரம்.



அது போல் அந்த குறிப்பிட்ட கடையின் ஆண்கள் பிரிவில் உள்ள டாய்லெட் பகுதியில் குண்டு கண்டெடுக்கப்பட்டது. அது இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்ததால் அவர்களின் நோக்கம் மிரட்டல் அல்லது எச்சரிக்கையாக இருக்கலாம். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Wednesday, December 10, 2008

பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?

யூ ட்யூபில் பாபர் மசூதி பற்றி மேய்ந்துக் கொண்டிருந்த போது கிடைத்த விடியோ தான் இது. கேள்வியும் பதிலும் சுவாரஸ்யமாக இருந்ததால் பதிவிட்டுள்ளேன்.


இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான். தீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது. மதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.

வஞ்சிக்கப்பட்டு, அபகரிக்கப்பட்டு, இடிக்கப்பட்ட அந்த நிகழ்வுக்குப் பின் தான் இந்தியாவில் பயங்கரவாதத்தின் துன்பப் பயணம் தொடருகிறது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படுவதற்கு சமமே. சிறுபான்மை சமூகத்திற்கு அனீதம் இழைப்பது ஒரு ஜன நாயக நாட்டிற்கு அழகல்ல.

Saturday, December 6, 2008

அத்வானியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்: பாக். அரசியல்வாதிகள் கோரிக்கை


தாவூத் இப்ராகிமை ஒப்படைக்கக் கோரும் இந்தியா முதலில் அத்வானி உள்ளிட்டோரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என லஷ்கர் இ தொய்பா அமைப்பும், சில பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் குதர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான் இந்தக் கோரிக்கையை அரசியல்வாதிகள் சிலர் வைத்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள், தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவர், ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோருவது போல, எல்.கே.அத்வானி போன்றோரை நாமும் கேட்க வேண்டும்.இவர்கள் பாகிஸ்தானின் மோஸ்ட் வான்ட்டட் பட்டியலில் உள்ளவர்கள். இவர்களை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இந்தியா முன்வர வேண்டும் என்று கோரினார்களாம்.

இருப்பினும் பெரும்பாலான தலைவர்கள் இந்தியாவுடன் அமைதியாக போகலாம். இந்தியத் தரப்பில் நிலவும் கோபத்தைத் தணிக்க தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் இன்னொரு முகமான ஜமாத்துல் தாவா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹியா முஜாஹித் மற்றும் அந்த அமைப்பின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,எல்.கே.அத்வானி மற்றும் இந்துத் தீவிரவாதிகளை நாடு கடத்தக் கோரும் உரிமை பாகிஸ்தானுக்கு சட்டப்படி உள்ளது.லஷ்கர் இ தொய்பா தலைவர் சயீத் ஒரு மதத் தலைவர். அவர் எந்த நேரத்திலும், எப்போதும், தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை. அதுபோன்ற செயல்களிலும் அவர் ஈடுபட்டதில்லை.அவர் எந்தக் குற்றத்தையும் செய்ததில்லை. பாகிஸ்தானிலும் சரி, உலகின் வேறு எந்தப் பகுதியிலும் சரி அவர் எந்தவிதமான தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்று கூறியுள்ளார்.

ஏன் அத்வானியை கேட்கிறார்கள்?:

அத்வானியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தான் தரப்பில் கோரப்படுவது இது 2வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.தாவூத், சயீத், மசூத் அஸார் ஆகியோர் உள்ளிட்ட 20 பேரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு விடுத்த கோரிக்கைக்குப் போட்டியாக அத்வானி உள்ளிட்ட சிலரின் பட்டியலை கடந்த 2001ம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவிடம் தந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், கராச்சி போலீஸ் ஆவணங்களின்படி அத்வானி உள்ளிட்ட 12 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்.1947ம் ஆண்டு பாகிஸ்தானின் தந்தையான முகம்மது அலி ஜின்னா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களைக் கொலை செய்ய முயற்சித்ததாக அவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.இதுதொடர்பாக ஜாம்ஷெட் குவார்ட்டர்ஸ் காவல் நிலையத்தில் அத்வானி உள்ளிட்டோர் மீது 1947ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் முதல் தகவல் அறிக்கை எண் 4/47 ஆகும்.முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தவர் இன்ஸ்பெக்டர் தூத்தி ராம். அத்வானி உள்ளிட்ட 18 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.அவர்கள் மீது, முகம்மது அலி ஜின்னா, பிரதமர் லிகாயத் அலி கான், காஜா நசிமுதீன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டனர். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 6 பேரும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் என்றார் அவர்.

அத்வானியை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதை விட முக்கியமான பிரச்சினைகள் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது

News source. Thatstamil

Wednesday, December 3, 2008

தினமலருக்கு எனது கண்டனம்

பயங்கரவாதிகள் இல்லவே இல்லை என்கிறது பாகிஸ்தான்: இந்திய கோரிக்கையை நிராகரித்து அதிபர் சர்தாரி திமிர் பேச்சு

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2423&cls=row3

.மேற்கண்ட தலைப்பில் தினமலர் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் இந்திய முஸ்லிம்களை தவறாக சித்தரித்து தன் வழமையான பாணியை (முஸ்லிம் வெறுப்புணர்வு) கையாண்டிருக்கும் அவ்விதழை கண்டிக்கிறேன். அதில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.....





""பார்லிமென்ட் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், பாக்.கிற்க்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் முஸ்லிம்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமே என்றும் மத்திய அரசு அஞ்சிகிறது. அதனால் என்ன நடவடிக்கை என்பதில் கடும் குழப்பம் நீடிக்கிறது.""

இந்த வரிகளை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த வரிகளின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?


இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதை விரும்பவில்லை என்கிறீர்களா? அல்லது கார்கில் போரை முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லையா,? அல்லது இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் அபிமானியாக இருக்கிறார்கள் என்கிறீர்களா,? மும்பை தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியாக தெரிந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் மத்திய அரசுக்கு நெருக்கடியே தவிர நீங்கள் சொல்வது போல அல்ல.


ஊடகங்கள் மூலமாக இதுபோல பொத்தாம்பொதுவாக இந்திய முஸ்லிம்களைச் சாடுவதை முதலில் நிறுத்துங்கள். உங்கள் செய்தியை படிக்கும் வாசகனின் மனதில் தோன்றும் முதல் எண்ணமே பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்திய முஸ்லிம்கள் தான் தடையாக உள்ளது போல சித்தரித்துள்ளீர்கள்.

மாலேகானில் குண்டு வெடித்த போதும் இதே பத்திரிக்கை மசூதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தாக கற்பனையான ஒரு புலனாய்வை எழுதி யாரையோ திருப்தி படுத்தினார்கள். பின்னர் நடந்த விசாரணையில் அது சங்பரிவாரங்களின் செயல் என்பது நிரூபனமாகி வருகிறது.


தினமலர் திருந்த போவதில்லை; நாம் தான் புறக்கணிக்க வேண்டும்.