Wednesday, November 21, 2007

பிரான்ஸில் ரயில்கள் வேலை நிறுத்தம்.



ஒரு வாரத்திற்க்கும் மேலாக தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறது. தொலை தூர ரயில்களும்,மெத்ரோ எனப்படும் பாரிஸ் நகரின் சுரங்க ரயில்களும் சரிவர இயங்கவில்லை. இதனால் பயணிகள் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.

Friday, November 16, 2007

முகமூடி கிழிந்த மோடித்துவம்

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை



குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் ""எஸ்6'' பெட்டி எரிந்து போனதையும்; அத் தீ விபத்தில் 58 பேர் இறந்து போனதையும், ""உள்ளூர் முசுலீம் மதவெறியர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்''; ""ராம பக்தர்களைக் கொல்ல பாக். உதவியுடன் நடத்தப்பட்ட சதி'' என இந்து மதவெறிக் கும்பல் ஊதிப் பெருக்கியது. ஆனால், இச்சம்பவம் குறித்து நடந்து வரும் விசாரணையில், குஜராத் முசுலீம்கள் மீது இனவெறிப் படுகொலையை ஏவிவிடக் காத்திருந்த இந்து மதவெறிக் கும்பல், அதற்கொரு வாய்ப்பாகவே கோத்ரா சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டது என்ற உண்மை சட்டபூர்வமாகவே அம்பலமாகி வருகிறது.

""கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் தீவிரவாதிகள், 60 லிட்டர் பெட்ரோலை வெளியே இருந்து எஸ்6 பெட்டிக்குள் ஊற்றி, அதற்குத் தீ வைத்தனர்'' என்பதுதான் இச்சம்பவம் பற்றி இந்து மதவெறிக் கும்பல் குஜராத் போலீசு கூட்டணியின் முதல் புலனாய்வுக் கண்டுபிடிப்பு.

இக்கண்டுபிடிப்பை குஜராத் மாநிலத் தடய அறிவியல் துறை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி அளித்த இரண்டு அறிக்கைகளுள் முதலாவது அறிக்கை, ""தீப்பற்றிய விதம், அது பரவிய முறை, எரிந்த தன்மை இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, உள்ளுக்குள் இருந்துதான் தீயைப் பற்ற வைத்திருக்க முடியும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது அறிக்கை, ""ரயில் வண்டியின் ஜன்னல் தரைமட்டத்தில் இருந்து சுமார் 7 அடி உயரம் உள்ளது. எனவே, வெளியில் இருந்து எரிபொருளை ரயிலுக்குள் ஊற்ற முடியாது. எரிபொருள் திரவம் வெளியில் இருந்து ஊற்றப்பட்டிருந்தால், பெட்டியின் வெளியில் இருக்கும் அடிப்பாகமும் எரிந்திருக்கும். ஆனால், அடிப்பாகம் எரியாததால், எரிபொருள் வெளியே இருந்து ஊற்றப்படவில்லை என்பது உறுதி'' எனக் குறிப்பிட்டது.
இதுவொருபுறமிருக்க, ""முசுலீம் தீவிரவாதிகள்'' பெட்ரோல் வாங்கியதாகச் சொல்லப்பட்ட பெட்ரோல் நிலையத்தைச் சேர்ந்த பிரபாத் சிங் மற்றும் ரஞ்சித் சிங் என்ற இரு ஊழியர்கள், ""தங்களிடமிருந்து பெட்ரோல் வாங்கப்படவில்லை'' என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்து மதவெறிக் கும்பலின் முதல் ""கண்டுபிடிப்பு'' புஸ்வானமாகிப் போனபிறகு, ""எஸ்6 மற்றும் எஸ்7 பெட்டிகளை இணைக்கும் இணைப்பை கிழித்துவிட்டு, எஸ்6 பெட்டிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், திரவ எரிபொருளை கீழே கொட்டிவிட்டு, அதன்பின் வெளியே இறங்கிப் போய் தீ வைத்ததாக'' இரண்டாவது கண்டுபிடிப்பை வெளியிட்டனர். இதற்கு ஏற்றாற்போல, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய முதல் தகவல் அறிக்கையும் திருத்தப்பட்டது.
கோத்ரா சம்பவம் பற்றி விசாரணை நடத்திவரும் கே.ஜி.ஷா நானாவதி கமிசன் முன்பு சாட்சியம் அளித்துள்ள பூபத் பாய் என்ற பயணி, ""வெளியில் இருந்த கும்பலில் இருந்து எவரும் ரயில் பெட்டிக்குள் ஏறியதை நான் பார்க்க வில்லை'' எனக் கூறியுள்ளார்.

துவாரகா பாய் என்ற பயணி, ""நான் தப்பித்து வெளியேறும்வரை... எத்தகைய திரவப் பொருளும் உள்ளே வீசப்பட்டதை நான் பார்க்கவில்லை. யாரும் எந்த நபரும் எத்தகைய திரவத்தையும் தெளிப்பதையோ அல்லது பெட்டியைக் கொளுத்துவதையோ நான் பார்க்கவில்லை'' எனச் சாட்சியம் அளித்துள்ளார்.
டி.என். திவிவேதி என்ற பயணி, பெட்டியின் இடதுபுற மேல்பாகத்தில் இருந்துதான் கரும்புகை எழுந்து தீப்பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.
எஸ்6 பெட்டி தீக்கிரையானதைப் பற்றி விசாரிக்க ரயில்வே அமைச்சகத் தால் நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிசன், தனது இடைக்கால அறிக்கையில், ""அரி பிரசாத் ஜோஷி என்ற பயணி பெட்டியின் பின்பக்கம் வழியாக இருக்கை எண் 72 அருகில் இருந்து வெளியே இறங்கியிருக்கிறார். இருக்கை எண் 72 அருகே உள்ள ரயிலின் தரை தளத்தில் பெட்ரோல் வீசப்பட்டு அதன் காரணமாகத் தீ பற்றியிருந்தால், அந்தப் பகுதியில் இருந்து ஜோஷி உயிர் தப்பியிருக்க முடியாது'' எனக் குறிப்பிட்டுள்ளது.

பானர்ஜி கமிசன் விசாரணைக்கு உதவி புரிந்த துனுராய், பேரா. தினேஷ் மோகன் என்ற இரு தொழில்நுட்ப வல்லுனர்கள், ""எஸ்6 மற்றும் எஸ்7க்கு இடையே உள்ள இணைப்பு இரும்புச் சுவரால் ஆனது மட்டுமன்று; இது, ""நியோபிரீன் ரப்பர்'' என்ற பொருளால் நிரப்பப்பட்டது. எனவே, இதனை உடைப்பதோ வெட்டி வழி ஏற்படுத்துவதோ சற்றும் இயலாத காரியமாகும்'' எனச் சான்று அளித்துள்ளனர்.

இந்து மதவெறியர்கள் கூறுகிறபடி முசுலீம்கள் பெட்டிக்கு வெளியில் இருந்தோ, அல்லது பெட்டிக்குள் நுழைந்தோ பெட்ரோல் போன்ற திரவ எரிபொருளைக் கொட்டியிருந்தால் உடனடியாக தீப்பற்றியிருக்கும். ஆனால், நானாவதி ஷா கமிசனிலும், பானர்ஜி கமிசனிலும், சாட்சியம் அளித்துள்ள பயணிகள், ""முதலில் மூச்சு முட்டும் அளவிற்குக் கரும்புகை வந்தது; அதன்பின் சில நிமிடங்கள் கழித்துதான் நெருப்பு எரிந்ததாக''ச் சாட்சியம் அளித்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று எஸ்6 பெட்டியில் பயணம் செய்தவர்களுள் பெரும்பாலானோர் குஜராத் மாநில விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள்தான். இது, பயணிகள் முதன்பதிவு பட்டியலின் மூலமும்; முன்பதிவு செய்து எஸ்6 பெட்டியில் பயணம் செய்த 52 பயணிகளில் 41 பேர் உயிர் பிழைத்திருப்பதை வைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எஸ்6 பெட்டியில் பயணம் செய்த விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் கையில் திரிசூலத்தை வைத்துக் கொண்டு இருந்துள்ளனர். எனவே, இப்படிப்பட்ட நிலையில், ""எவ்வித எதிர்ப்பு இன்றி சிலர் பெட்டிக்குள் புகுந்து திரவ எரிபொருளைக் கொட்டியோ அல்லது திரவ எரிபொருளை ரயில் பெட்டிக்கு வெளியில் இருந்து விசிறி அடித்தோ தீ வைத்திருப்பார்கள் என்பது நம்ப முடியாததும், அபத்தமானதும் ஆகும்'' எனக் குறிப்பிட்டுள்ள பானர்ஜி கமிசன், எஸ்6 பெட்டி தீக்கிரையானதை, ""ஒரு தற்செயலான தீ விபத்துதான்'' என முடிவு செய்து, இடைக்கால அறிக்கையை அளித்திருக்கிறது.
இச்சம்பவம் நடந்த சமயத்தில் குஜராத் மாநில போலீசுத் துறையின் உளவுப் பிரிவில் கூடுதல் போலீசு இயக்குநராகப் பணி புரிந்து வந்த சிறீகுமார், நானாவதி ஷா கமிசனிடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ""எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாதபொழுதும், கோத்ரா தீ விபத்திற்கு பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பின்புலம்தான் காரணமாக இருக்கும் என்பதை "நிரூபிக்கும்' வகையிலேயே புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என மத்தியமாநில அரசுகளிடமிருந்தும், மோடிக்கு நெருக்கமான அதிகாரிகளிடமிருந்தும் நெருக்குதல் வந்ததாக''க் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநில விசுவ இந்து பரிசத், நானாவதி கமிசனில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், எஸ்6 பெட்டியை எரிக்க எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டது பற்றி ஒரு வார்த்தைக் கூட குறிப்பிடவில்லை.

குஜராத் மாநில செய்தித் தொடர்பாளர் நளின் பட், ""எளிதில் பற்றக்கூடிய பொருள் எதுவும் எஸ்6 பெட்டிக்குள் வெளியில் இருந்து வீசப்பட்டதற்கான தகவல் எதுவும் தங்களின் சாட்சிகளிடம் இல்லை'' எனக் கூறியுள்ளார்.
கோத்ரா சம்பவம் தொடர்பாக உள்ளூரில் இருந்து பாகிஸ்தானுக்குத் தொடர்பு கொண்டதாகச் சொல்லி, 6 தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டிருந்தது, விசுவ இந்து பரிசத். இது தொடர்பாக நானாவதி கமிசனில் நடந்த குறுக்கு விசாரணையில், ஒரு தொலைபேசி எண் சூரத்தைச் சேர்ந்த கணேஷ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு உரிமையானது; மற்ற ஐந்து தொலைபேசி எண்ணும் உபயோகத்தில் இல்லாதவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக, கோத்ரா சம்பவம் ""பாக். உதவியோடு உள்ளூர் முசுலீம்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்'' என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லாதபொழுதும், எஸ்6 ரயில் பெட்டி தீக்கிரையான வழக்கு, காலாவதியாகிப் போன ""பொடா'' சட்டத்தின் கீழ் நடந்து வருகிறது.

நீதியை நிலை நாட்டுவது என்பதைவிட, சிறுபான்மையினரான முசுலீம் மக்களை நிரந்தரப் பீதியில் வைத்திருப்பதுதான் இந்த வழக்கின் நோக்கம் என்பதை விசாரணையின் போக்கே அம்பலமாக்கி வருகிறது.
கோத்ரா வழக்கில் 54ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள இஷாக் முகம்மது பார்வையற்றவர். ""இஷாக் முகம்மது 100 சதவீதம் பார்வையற்றவர்'' என 1997ஆம் ஆண்டே குஜராத் அரசு மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர். எனினும், இவ்வழக்கில் இவரைக் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, கோத்ரா சம்பவம் நடந்த பிறகு, ""இஷாக் முகம்மது பார்வையற்றவர் என்ற பொழுதும், ஒரு மீட்டர் தொலைவிற்கு இவரால் பார்க்க முடியும் எனச் சான்றிதழ் பெறப்பட்டு இஷாக் முகம்மது சிறையில் தள்ளப்பட்டார். ""எஸ்6 பெட்டிக்கு வெளியே கூடி நின்ற கும்பலில் இஷாக் முகம்மதுவும் இருந்தார்'' என்பதுதான் இவர் மீது சுமத்தப்பட் டுள்ள குற்றச்சாட்டு. அதாவது "வேடிக்கை பார்க்க' நின்ற குற்றத்திற்காக இவர் மீது ""பொடா'' பாய்ந்திருப்பதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளாக பிணையும் மறுக்கப்பட்டு வருகிறது.

சலீம் அப்துல் கலாம் பதாம் உள்ளிட்டு ஐந்து குற்றவாளிகள் கோத்ராவைச் சேர்ந்த திலீப் உஜ்ஜம்பாய் தசரியா என்ற பள்ளி ஆசிரியர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறி வருகிறது. ஆனால், அந்தப் பள்ளி ஆசிரியரோ, தான் அப்படிப்பட்ட எந்த சாட்சியமும் அளிக்கவில்லை என்றும்; சம்பவம் நடந்த அன்று, கோத்ராவில் இருந்து 25 கி.மீ. தள்ளியுள்ள ஊரில் தனது பள்ளியில் இருந்ததாகப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதோடு, அதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்திடம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அந்த ஐந்து "குற்றவாளிகள்' மீதான வழக்கைத் திரும்பப் பெற, மோடி அரசு மறுத்து வருகிறது.

முகம்மது அன்சார் குத்புதீன் அன்சாரி, பைதுல்லா காதர் தெலீ, ஃபெரோஸ்கான் குல்சார்கான் பத்தான், இஷாக் யூசூப் லுஹர் உள்ளிட்ட 20 பேர் மீது, கோத்ரா சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் இல்லாமலேயே, அவர்கள் அனைவரும் சம்பவம் நடந்த பிப். 27, 2002 அன்று காலை 9.30 மணிக்குக் கைது செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்துதான் அவர்கள் மீதான புகார் பதிவு செய்யப்பட்டது.

கோத்ரா சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுள் 36 பேர், எஸ்6 பெட்டி தீக்கிரையான அன்றுதான், மற்றொரு வழக்கில் இருந்த நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர். ""நீலம் தங்கும் விடுதி வழக்கு'' என்ற அந்த வழக்கில், இந்த 36 பேருக்கு எதிராக போலீசாரால் சாட்சிகளாக நிறுத்தப்பட்டவர்கள்தான், கோத்ரா வழக்கிலும் இவர்களுக்கு எதிராக புகாரும், சாட்சியமும் அளித்துள்ளனர். குஜராத் போலீசின் காவித்தனமான பழி தீர்த்துக் கொள்ளும் வெறிக்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் மதகுருதான், சம்பவம் நடப்பதற்கு முன்பாக, மசூதியின் மேலேறி நின்று, மதவெறியைக் கக்கும் விதமாக உரை நிகழ்த்தி, ராம பக்தர்களைத் தாக்கும்படி உள்ளூர் முசுலீம்களைத் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த மதகுரு சம்பவம் நடந்த அன்று மகாராஷ்டிராவில் இருந்தார் என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும், அவர் மீதான சதி வழக்குத் திரும்பப் பெறப்படாததால், அவர் இன்றுவரை தலைமறைவாக இருந்து வருகிறார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். கும்பல் தலைமை தாங்கி நடத்திய இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி செய்வதில் முன்னணியில் நின்ற மௌலானா உமர்ஜி, ஹரூண் அபித், ஹருண் ரஷீத் ஆகிய முசுலீம் மதத் தன்னார்வ தொண்டர்களும், ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு, ""பொடா''வின் கீழ் சிறையில் தள்ளப்பட்டனர். இதன் மூலம் அநாதரவான முசுலீம்கள் தங்களுக்குள்ளேயே உதவி செய்து கொள்வதைக் கூட வக்கிரமாகத் தடுக்க முனைந்தது, மோடி அரசு.

கோத்ரா சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 135 பேரில், 22 பேர் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 100 பேரில் 16 பேருக்கு மட்டும் பிப்.14, 2003 அன்று குஜராத் மாநில உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. மீதி பேருக்கு பிணை கிடைத்துவிடக் கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்ட மோடி அரசு, பிணை தீர்ப்பு வெளிவந்த ஐந்தாவது நாளே, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடந்துவந்த கோத்ரா வழக்கை, சட்டவிரோதமான முறையில் ""பொடா'' வழக்காக மாற்றியது.

மைய அரசின் கீழ் அமைக்கப்பட்ட பொடா மறுஆய்வு கமிட்டி, கோத்ரா வழக்கை பொடா சட்டத்தின்கீழ் விசாரிக்கத் தேவையில்லை என மே16, 2005 அன்றே கூறிவிட்டாலும், குஜராத் அரசும், ""பொடா'' சிறப்பு நீதிமன்றமும் இவ்வழக்கை இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வர மறுத்து வருகின்றன. பொடா மறு ஆய்வு கமிட்டியின் முடிவை அம்பலப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கூட, கடந்த இரண்டாண்டுகளாக விசாரணையின்றி தூசி படிந்து கிடக்கிறது.

குஜராத்தில், நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்குப் பிறகு, அகதி முகாம்களில் வசித்துவரும் முசுலீம்களுக்கு அடிப்படையான வசதிகளைச் செய்து தர வேண்டும் எனக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், குஜராத் உயர்நீதி மன்றம் அரசுக்கு எந்த உத்தரவும் இட மறுத்துவிட்டது. மாறாக, அகதி முகாம்களில் வசித்துவரும் ஒவ்வொரு முசுலீமுக்கும் கொடுக்கப்படும் தினப்படியை ஆறு ரூபாயில் இருந்து எட்டு ரூபாயாக உயர்த்திக் கொடுப்போம் என்ற வாக்குறுதியை அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்திடம் அளித்தால் போதும் எனக் கூறி, தனது "கடமையை' முடித்துக் கொண்டது.
இப்படிப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து ""பொடா'' வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களுக்கு; இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ள முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று நம்ப முடியுமா? நரேந்திர மோடி, அவரது அமைச்சர்கள், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட 63 மேல்தட்டு குற்றவாளிகளும்; பிற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளும் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என நாம் கையைக் கட்டிக் கொண்டு மௌனமாக இருந்துவிட முடியுமா?·

-செல்வம்-

Thanks to TamilArangam

Thursday, November 15, 2007

குஜராத் இனப்படுகொலை கொந்தளிக்கும் கண்டனங்கள்

"இந்துக்கள் இதுவரை இப்படி அறியப்படவில்லை" ரவிசங்கர் (இந்து ஆன்மீகத் தலைவர்)'
வாழும் கலை' என்ற அமைப்பின் குருவாக அழைக்கப்படுபவரும் ஹிந்து சமயத்தின் மரியாதைக்குரிய ஆன்மீக சாமியாராக போற்றப்படுபவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்கு மூலங்கள் குறித்த தெஹல்கா பதிவுகள் தம்மை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியதாகக் குறிப்பிட்டார்.''ஹிந்துக்கள் இத்தகைய கொடும் செயல்களை செய்பவர்களாக இதுவரை அறியப்படவில்லை'' என்ற அவர், கொலை செய்வதும் எரிப்பதும் ஹிந்து சமுதாயத்தின் இயல்பு அல்ல என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

குஜராத் இனப்படுகொலையாளர்களை இந்து மதத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று சர்வதர்ம சன்சாத் அமைப்பு (இந்து மத நாடாளுமன்றம்) வலியுறுத்தி உள்ளது. சமூக சேவகர் சுவாமி அக்னி வேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற முக்கிய மதத் தலைவர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர்.

'ஹிந்து மதம் ஓர் அபாயம்' என்ற தவறான ஒரு கருத்துருவாக்கத்தை சுயநலத்துடன் செயல்படும் ஹிந்துத்துவ அரசியல் கிரிமினல்கள் உருவாக்கி விட்டதாகவும் நாகரீகம் முன்னேறிய சமூகத்தில் வாழும் நாம் இத்தகை யவர்களை தண்டிப்பதிலும் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது"என்றும் சுவாமி அக்னிவேஷ் கூறினார்.

"பிரதமர் இதற்கு பதில் சொல்லட்டும்" அருந்ததிராய் (பிரபல எழுத்தாளர்)
குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படு கொலை என்பது மதவெறியைக் கிளப்பி மக்கள் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடனே நடந்த தாகும். ஏனெனில் அதற்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மோடி அங்கு படுதோல்வி அடைந்திருந்தார்.குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை சில முக்கிய வினாக் களை எழுப்பியுள்ளது. குஜராத் இந்தியாவில் ஒரு அங்கம்தானா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டங்கள் குஜராத் துக்குப் பொருந்தாதா? குஜராத்தில் தற்போது முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர்.முன்பு அங்கிருந்தவர்கள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள்? எப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள்? இக்கேள்விகளுக்கெல்லம் பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும்.இந்தியா என்ற உடலின் ஒரு பகுதி அழுகிப் போய் அது இப்போது உடல் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டி ருக்கிறது. பாசிசம் வந்து விட்டால் நான் இந்துவாக இருந்தாலும் அது தனக்கு உதவாது என்று புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்திருக்கிறார்.

தீஸ்தா செடல்வாட் (மனித உரிமை போராளி)
இந்த தெஹல்கா பதிவுகளை ஆதாரமாக வைத்து மோடி உள்ளிட்ட சங்பரிவரத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசியல் சாசன சட்டம் குஜராத்திற்குப் பொருந்தாதா?நியாய நெறி பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதை இல்லைலி பிரதமர் மன்மோகன்சிங்குஜராத் இனப்படுகொலை குறித்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்த போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கினார் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி. இத்தகைய சக்திகளுக்கு நீதி நெறிகளைப் பற்றிப் பேச தகுதி கிடையாது.பாஜக ஆட்சியில் நடந்த ஆக்ரா உச்சி மாநாடு குளறுபடிகளுக்கும் அந்நிய தீவிரவாதிகளின் ஊடுருவலின் போது மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த இவர்களின் மத்திய ஆட்சி தூங்கிக் கொண்டிருந்தது என்றும் சூடாகக் கேட்டார்.

"மனிதத்தன்மையற்ற செயல்":
சோனியா

குஜராத்தில் நடைபெற்றவை மனித குல விரோதமானவை என காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்திருக் கிறார். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாளர்கள் தங்களது ஒப்புதல் வாக்குமூலங்களை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டதற்கு பின், முதன்முறையாக சோனியாகாந்தி தெரிவித்துள்ள கருத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திரா ஒருமைப்பாடு விருது வழங்கும் விழாவில் சோனியா காந்தி பேசினார். இந்திய சமூகமும் அனைத்து காங்கிரஸ்காரர்களும் இந்த தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.நாம் இந்த மதவாத சமூக விரோத சக்திகளை எதிர்த்துப் போராடாமல் இருப்பின் அத்தகைய சக்திகள் நமது மதசார்பின்மை கொள்கைக்கும் நாட்டின் மக்களாட்சி கட்டமைப்புக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.இந்திரா காந்தி ஒருமைப்பாட்டுக்கான விருது பந்துக்வாலா மற்றும் ராம்புன்யானி இருவருக்கும் விருது வழங்கப்பட்டது.

குஜராத் இனப்படுகொலை ஒட்டுமொத்த நாட்டிற்கே கேவலம் : மாயாவதி
21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப்படு கொலை ஒட்டுமொத்த நாட்டுக்கே மிகப்பெரிய கேவலம் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் செல்வி மாயாவதி தெரிவித்திருக்கிறார்.2002ல் நிகழ்ந்த இனப்படுகொலை அனைத்துக்கும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறிய மாயாவதி தெஹல்கா வெளிப்படுத்திய உண்மைகளால் ஒரு மாநில அரசு உள்நோக்கத்துடன் செய்த படுகொலை களும், அதற்கு பாரதீய ஜனதா மற்றும் ஹிந்துத்துவ சக்திகள் ஈடுபடுத்தப்பட்ட விதமும் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் செல்வி மாயாவதி தெரிவித்திருக்கிறார்.

மோடியையும், அத்வானியையும் உடனே கைது செய்ய வேண்டும்!பிரதமரிடம் கொந்தளித்தார் லாலு
"குஜராத் இனப் படுகொலையாளர் பாசிஷ மோடியையும் அவரது செயலுக்கு வக்காலத்து வாங்கிய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக்கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.தெஹல்கா ஊடகத்தின் வாயிலாக வெளியான உண்மைகள் உலுக்கத் தொடங்கிடயுள்ள சூழலில் மதசார்பின் மையை கடைப் பிடிக்கும் நாகரீக அரசியல்வாதியும், நெஞ்சுரமும் மிக்க தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது குமுறலை வெளிப்படுத்திய தோடு தனது கோரிக்கையையும் வலியுறுத்தினார்.தெஹல்கா வெளியிட்ட வீடியோ பதிவுகளின் அடிப்படையில் நரேந்திர மோடியை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 302ன் படியும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி படியும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்வானியையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.குஜராத் படுகொலைகள் குறித்து மோடி மற்றும் சங்பரிவார் சக்திகளை நோக்கி எங்கள் விரல்கள் நீண்டபோது. நாங்கள் பொய்யுரைப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் இன்று பாபு பஜ்ரங்கியும், குஜராத் அரசு வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியாவும் ஒப்புக் கொண்டிருப்பது நாங்கள் ஏற்கெனவே கூறியது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்றார்.ரயில்வே துறை கோத்ரா விபத்து குறித்து பானர்ஜி கமிஷனை அமைத்தது. அது தனது விசாரணை அறிக்கையின் முடிவில் கோத்ரா ரயில் எரிந்தது விபத்து தான் சதிச்செயலை அல்ல என்று தெரிவித்திருந்தது. இதைக் குறிப்பிட்ட லாலு, ''நாம் இதை அன்றே சொன்னோம். தெஹல்கா இரண்டாவது முறையாக நிருபித்துள்ளது'' என்றார்.இந்திய மக்களை பிளவுப்படுத்த பாப்ரி மஸ்ஜிதை நோக்கி ர(த்)த யாத்திரை நடத்திய அத்வானியை தடுத்து நிறுத்தி முதன் முறையாக கைது செய்தவர் லாலு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச் செயல் ஒடுக்கப்பட வேண்டும் : குல்தீப் நய்யார் ( பத்திரிக்கையாளர்)
அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவது எப்படி ஒரு அல்ப சந்தோஷத்துக்குரிய விஷய மாக மாறி மோடிக்கு வாக்குகளை அதிகரிக்க உதவுகிறது? இது உண்மை என்றால் இந்த குற்றம் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் தெரிவித் துள்ளார்.

அரசியல் கட்சிகள் இதை செய்திருக்க வேண்டும்":நீதியரசர் ராஜேந்திர சச்சார் குஜராத் மாநிலத்தில் மதவெறி பாசிச சக்திகளுக்கு எதிராக உறுதியான வகையில் அங்குள்ள அரசியல் கட்சிகள் போராடாதது வருத்தத்தை அளிக்கிறது. பல்வேறு ஊடகங்களும் குஜராத் முஸ்லிம் மக்கள் மீதான இனப்படு கொலைகளை வெளியுல கிற்கு கொண்டு வந்திருந்த போதிலும் அடிப்படையில் அங்குள் அரசியல் கட்சிகள் தான் அதைச் செய்திருக்க வேண்டும் என சச்சார் கூறியுள்ளார்.

நன்றி: மக்கள் உரிமை

Friday, November 9, 2007

குஜராத் முஸ்லிம்களின் இன்றைய நிலை...

இப்போது குஜராத்தில் முஸ்லிம்கள் எப்படி இருக்கிறார்கள்?..
அகதிகள் முகாமில் இன்னமும் இருக்கும் முஸ்லிம்களின் துயரம் தொடர்கிறது. இனப்படுகொலைக்குப் பின் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இன்றி ஒரு வித அச்சமுடன் காலம் தள்ளிக்கொண்டு உள்ளனர். முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகின்றது. ஏதாவது தொழில் செய்யவேண்டுமானாலும் ஒரு இந்துவுடன் கூட்டாகத்தான் செய்யவேண்டுமாம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன. சொத்துக்கள் சூறையாடப்பட்டதாலும் அபகரிக்கப்பட்டதாலும் வறுமையின் விளிம்பில் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளவே அச்சமான சூழ்னிலை நிலவுகிறது. அரசால் கைவிடப்பட்டு அனாதை சமூகமாக வைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளும் வாய் மூடி மவுனமாக இருப்பதால் அரசாங்கம் சொல்லொன்னா கொடுமைகளை அரங்கேற்றி வருகிறது. மற்ற சமூகங்களோடு உறவாட முடியாமல் தனிமைபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.குஜராத் இந்தியாவிற்குள் ஒரு தேசமாக இந்து பயங்கரவாதம் ஆளும் அரசாங்கமாய் இருந்து வருகிறது. இந்துக்களின் மத உணர்வை தூண்டி இஸ்லாமியர்களுக்கெதிராக ஒரு இனப்படுகொலையை செய்து முடித்த மோடி அரசு, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. முஸ்லிம்களின் வாக்குகளை இந்து மத பயங்கரவாதிகளே போடவும் பிரகாசமான வாய்ப்புள்ளது. குஜாத்தின் ஊடகங்களில் இந்து பயங்கரவாதிகளின் பங்கு கணிசமாக இருப்பதால் அங்குள்ள செய்திகள் திரிக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.