Thursday, October 4, 2012

குடி குடியைக் கெடுக்கும்; அரசாங்கமே ஊத்திக் கொடுக்கும்!






அரசாங்கம் நடத்த வேண்டிய பள்ளிக்கூடங்களை தனியாரும், தனியார் நடத்த வேண்டிய மதுக்கடைகளை அரசாங்கமும் நடத்துவதிலிருந்தே அறிய முடிகிறது சமூகம் பாழ்பட்டு கிடப்பதை. குடிப்பழக்கத்தைச் சாடுபவர்களைக் கண்டு குடிக்காரர்கள் ஓடிய காலத்திலிருந்து, குடிக்காரர்களின் நிதானமிழந்த அநாகரிக செயல்களைக் கண்டு குடிக்காதவர்கள் ஓடக்கூடிய அளவிற்கு சமூகம் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.




அரசாங்கம் தன்னுடைய வருமானத்திற்காக மக்களின் ஆரோக்கியத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வருங்கால இளைய தலைமுறை தள்ளாட்டத்துடன் தடுமாறப் போவது நிச்சயம். மதுவின் தீமையைப் பற்றி திருக்குறள் முதற்கொண்டு திருக்குரான் வரை எடுத்துச் சொன்னாலும் போதையில் பிடியில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் பிடிப்பதில்லை.



சிறு வயது குடிப்பழக்கம் என்பது சமீப காலமாக சமூகத்தை அச்சுறுத்தி வரும் ஆபத்து. குடிப்பது நாகரிகம் என்பது மாதிரியும் ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. மனிதனின் சிந்தனையை மழுங்கடிக்கும் மது எப்படி நாகரிகத்தை கொடுக்க முடியும்?



ஜாலிக்காக கொஞ்சம் குடிக்கலாம் தப்பில்லை என்ற எண்ணத்துடன் பவ்யமான வேலைக்காரன் போல வரும் மதுப்பழக்கம் மனிதனையே ஆட்டிப்படைக்கும் எஜமானி ஆகி விடுகிறது.



காந்தி ஜெயந்தி ஏனடா வருகிறது என்று ஏசும் அளவிற்கு குடிக்காரர்கள் நவீன கோட்சேக்களாகி விடுகின்றனர்.



மதுப்பழக்கம் மதி மயக்கும்: மது ஒழிப்புப் பிரச்சாரத்திற்கு வலைப்பதிவுக்களும் துணை புரிய வேண்டும்.



தள்ளாட்டமில்லா தமிழ் நாட்டிற்கு வேண்டும் மதுவுக்கு தடை.