Friday, June 12, 2009

அப்ஸல் குரு குற்றவாளியானது எப்படி?

புதுதில்லி, ஜூன் 12: இந்திரா காந்தியை கொன்றவர்களையே இன்னும் தூக்கில் போடவில்லை. அதற்குள் அப்சல் குருவை எவ்வாறு தூக்கில் போட முடியும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.


தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
பாஜக கூட்டணி ஆட்சியின் போது நடந்த நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் அப்சல் குரு. இவரது தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரி வருகின்றன. சிறுபான்மையினரை விரோதித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் அரசு அவரை தூக்கில் போடுவதை தள்ளிப்போட்டு வருகிறது என்று அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.




இதை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். தூக்கில் போட வேண்டி மொத்தம் 28 பேர் கருணை மனு போட்டு காத்திருக்கின்றனர். 22-வது நபர்தான் அப்சல் குரு. எனவே பட்டியலில் அவருக்கு முன்பு உள்ளவர்களின் கருணை மனு மீது முடிவு எடுக்கப்பட்ட பின்னர்தான் அப்சல் குருவின் கருணை மனு மீது முடிவு எடுத்து தூக்கில் போட முடியும் என்று கூறி வருகின்றனர்.



புதிய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும் இதே கருத்தைக் கூறியுள்ளார். அப்சல் குருவா அல்லது வேறு நபரா என்பது அல்ல கேள்வி. ஒரு பட்டியல் இருக்கும் போது குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கில் போட முடியாது என்றார் அவர்.



தூக்கில் போட வேண்டியோர் பட்டியலில் அப்சலுக்கு முன்பு பல தீவிரவாதிகள் உள்ளனர். இந்திரா காந்தியைக் கொன்ற தீவிரவாதிகள் கூட இன்னும் தூக்கில் போடாமல் உள்ளனர். அதுபோல் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவரையும் தூக்கில் போட வேண்டி உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.


நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் சில நடைமுறைகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்று மொய்லி கூறினார்.



பாகிஸ்தானில் கூட தூக்கில் போட வேண்டிய பலர் தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளனர். அவர்களில் இந்தியர்களும் உள்ளனர். அவர்களை உடனடியாக தூக்கில் போட வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா என்று அவர் கேட்டார்.


நன்றி :தினமணி .



மேற்கண்ட செய்தியை வாசித்த போது இயல்பாக எனக்கு தோன்றிய ஐயம் யார் இந்த அப்சல் குரு? ஏன் இவரை மட்டும் தூக்கிலிட துடிக்கின்றனர் இந்த சங்பரிவாரங்கள்? இதன் தொடர்பான செய்திகளையும் தகவல்களையும் திரட்டியதன் விளைவே இந்தப்பதிவு.


'1990-ல் அப்ஸல் 'ஜே.கே.எள் எஃப்' என்ற இயக்கத்தால் கஷ்மீரில் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் போல் கவரப்பட்டார். பாகிஸ்தானுக்கும் ஒரு முறை சென்றார். இயக்கத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளால் மனம் உடைந்து டெல்லி சென்றார். டெல்லியில் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட முடிவு செய்தார்.அவர் எப்போதும் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.அதற்கு முன் அவர் எம்.பி;பி;எஸ் (மருத்துவப் பட்டத்திற்காக )படித்துக் கொண்டிருந்தார்.


"என் கணவர் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்திட விரும்பினார். அதனால் நமது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவருடைய சான்றிதழ்களைத் தர மறுத்து விட்டனர். சான்றிதழ்களை தந்திட வேண்டும் என்றால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்திட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினர். இதனால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்தார். அதன் பின்னர் அஃப்ஸலுக்கு ஒரு சான்றிதழைத் தந்தார்கள். அதில் 'அவர் ஒரு சரணடைந்தவர்' எனக் குறிப்பிட்டிருந்தார்கள். சரணடைந்த ஒருவராக கஷ்மீரில் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிக்கலான ஒன்று. ஆனாலும் அவர் தன் குடும்பத்தோடு கஷ்மீரிலேயே வாழ்ந்திடுவது என முடிவு செய்தார்.



1997-ல் அவர் ஒரு சிறு வியாபாரத்தைத் தொடங்கினார். அது மருத்துவம் - மருந்து ஆகியவை தொடர்பான வியாபாரம். மருத்துவ கருவிகளை வாங்கி விற்பதும் இதில் அடங்கும். அடுத்த வருடம் நாங்கள் திருமணம் முடித்துக் கொண்டோம். அப்போது அவருக்கு வயது 28. எனது வயது 18. நாங்கள் கஷ்மீரில் வாழ்ந்த காலங்கள் வரை இந்திய பாதுகாப்புப் படையினர் எங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கின்றதோ அவர்களைப் பற்றிய தகவல்களைத் தந்திட வேண்டும். அவர்களை உளவு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என அழுத்தங்களும் அல்லல்களும் தந்து கொண்டே இருந்தார்கள்.



'22 ரைஃபிள்ஸ்' என்ற ராணுவப் பிரிவைச் சார்ந்த மேஜர் இராம் மோகன் ராய் என்பவர் அஃப்ஸலை சித்திரவதை செய்தார். அவருடைய மரம ஸ்தானத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்தார். அஃப்ஸலை அவமானப் படுத்தினார். கேவலமான சொற்களைக் கொட்டி வைதார்.''சில நாட்கள் கழித்து சிறப்புக் காவல் படையினர் அவரைத் தங்களுடைய ஹம்ஹமா முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த முகாமில் வைத்து டி.எஸ்.பி.டாரிந்தர் சிங், டி.எஸ்.பி. வினாய் குப்தா ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்கள். இந்த ஒரு லட்சம்ரூபாயை கொடுக்கும் அளவிற்கு நாங்கள் வசதியானவர்கள் அல்ல. அதனால் நாங்கள் எங்களிடமிருந்தவை அனைத்தையும் விற்றுவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம்.என்னுடைய திருமணத்தில் கிடைத்த சிறிய தங்க நகையையும் விற்பனை செய்ய வேண்டியதாயிற்று. இத்தனையையும் அஃப்ஸலை இந்தச் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றிட இழக்க வேண்டியதாயிற்று.


அஃப்ஸலை குளிர்ந்த நீரில் நிறுத்தி வைத்தார்கள். பெட்ரோலை அவருடைய மலத் துவாரத்தில் ஊற்றினார்கள்.ஒரு அதிகாரி சாந்தி ஷிங் என்பவர் அஃப்ஸலை கடுங்குளிரில் தலை கீழாக தொங்க விட்டார். மணிக்கணக்கில் தொங்க விட்டார். அவருடைய மறைவிடத்தில் மீண்டும் மின் அதிர்ச்சியைப் பாய்ச்சினர். இந்த சித்திரவதை ரணங்களிலிருந்து வெளியே வந்திட அவர் பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அஃப்ஸல் ஏதேனும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். அதனால்தான் அவரை இப்படி சித்திரவதை செய்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். இப்படிச் சித்திரவதை செய்யப் பட்டது அவரிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கத்தான் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் கஷ்மீரில் இருக்கும் சூழலை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். கஷ்மீரில் வாழும்; ஒவ்வொருவருக்கும் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். அவர் அங்கு நடப்பவற்றில் பங்கு பெறுகிறாரோ இல்லையோ அங்கு என்ன நடக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மக்கள் அனைவரையும் தகவல் சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம் அண்ணனுக்கு எதிராக தம்பியையும், கணவனுக்கு எதிராக மனைவியையும், பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோரையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.



அஃப்ஸல் தன் குடும்பத்தோடு அமைதியாக வாழவே விரும்பினார். ஆனால் எஸஃ.டி.எஃப் என்ற சிறப்புக் காவல் அதற்கு அனுமதிக்கவில்லை. இது போன்ற குரூரமான சூழ்நிலையிலிருந்து அஃப்ஸல் தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பினார். அவர் தன் வீட்டை விட்டு வெளியேறினார்.தன் குடும்பத்தையும் தொடர்ந்தார் டெல்லி வந்தார்.டெல்லியில் வந்து வயிறு பிழைக்க விரும்பினார். அங்கே தன்னுடைய வாழ்க்கையைச் சீர் செய்திட முயற்சி செய்தார். வாழ்க்கை ஓரளவுக்கு நிலை பெற்றதும் என்னையும் எங்களது நான்கு வயது மகனையும் டெல்லிக்கு அழைத்து வாழ வைப்பதாக முடிவு செய்தார்.எல்லாக் குடும்பங்களையும் போல நாங்கள் ஒன்றாய் வாழ்ந்திட விரும்பினோம். ஆனால் மீண்டும் சிறப்புக் காவல் படையினர் என் கணவரை டெல்லியிலும் துரத்த ஆரம்பித்தனர். அத்தோடு எங்களுடைய எல்லாக் கனவுகளும் தகர்ந்து தவிடு பொடியாயின.'சிறப்புக் காவல் படையினர் என் கணவரிடம் முஹம்மத் என்பவரை கஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கணவர் இந்த முஹம்மத் என்பவரையும், தாரிக் என்பவரையும் சிறப்புக் காவல் படையின் கஷ்மீர் முகாமில் வைத்தே சந்தித்தார். இவர்களைப் பற்றி என்னுடைய கணவருக்கு எதுவும் தெரியாது. அதே போல் ஏன் இப்படியொரு பணியைச் (கஷ்மீர் சிறப்புக் காவல் படையின் முகாமிலிருந்து இவர்களை டெல்லிக்கு அழைத்து வரும் பணியை) செய்யச் சொல்கிறார்கள் என்பதும் என் கணவருக்குத் தெரியாது. இவற்றை எல்லாம் என் கணவர் நீதி மன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார். ஆனால் நீதி மன்றமோ பாதியை எடுத்துக் கொண்டது. மீதியை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டது. என்னுடைய கணவர் முஹம்மதை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பதை எடுத்துக் கொண்டது. ஆனால் முஹம்மதை சிறப்புக் காவல் படைதான் தன் முகாமிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி பணித்தது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.


கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதை கேட்க மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார். 'உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார்.


என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது. வேறு வழியின்றி என் கணவர் எஸ்.ஏ.ஆர் ஜீலானியைக் காப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட வழக்கறிஞர் குழுவுக்கு கடிதம் எழுதினார். இந்தக் குழு 'சுசில்குமார்' என்ற வழக்கறிஞரை வைத்தது. ஆனால் இவரால் உச்ச நீதிமன்றம் சாட்சியங்களுக்குள் செல்ல முடியாது. அதனால் என் கணவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. என் கணவரைத் தூக்கில் போட்டு விடக் கூடாது என்றும் அவருடைய வழக்கை நியாயமாக நீதியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.தன்னுடைய தரப்பு வாதத்தைச் சொல்லிட வாய்ப்பளிக்கப்படாத ஒருவரை நீங்கள் (உச்சநீதி மன்றம்) தூக்கிலிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சம்பவம் நடந்தவுடன் காவல் துறையினர் என் கணவரை ஊடகங்களின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் தந்திட கட்டயப் படுத்தினார்கள். இது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே நடைபெற்றது. காவல் துறையினர் அவரை அவமானப் படுத்தினார்கள். அடித்தார்கள். சித்திரவதை செய்தார்கள்.அவருடைய வாயில் மூத்திரத்தைப் பெய்தார்கள்.''இவற்றை எல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கமாகவெ இருக்கின்றது. ஆனால் சூழ்நிலைகள் என்னைக் கட்டாயப் படுத்தியதால்தான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று. இவற்றை எல்லாம் எழுத்தில் வடிப்பதற்கு மிகையான தைரியம் தேவைப்பட்டது.


இப்பொது ஆறு வயதாகி விட்ட என் மகனின் தந்தையைக் காப்பாற்றிடுவதற்காக நான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று. என்னுடைய கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச நீதி மன்றம் பேசுமா? என் சார்பில் நீங்கள் பேசுவீர்களா?நான் என் கணவருக்காகவும் என் மகனின் தந்தைக்காகவும் வாதாடுகிறேன் என்பது உண்மைதான். அதே நேரத்தில் கஷ்மீரில் வாடும் என்னைப் போன்ற பெண்களுக்காகவும் வாதாடுகின்றேன்.'"

இந்த மொத்த விவகாரத்திலும் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்பது புலப்படும். இதனால்தான் விருப்பு வெறுப்பற்ற ஒரு விசாரணை நாடாளுமன்றத் தாக்குதலில் மேற் கொள்ளப்பட வேண்டும் என ஜன நாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம் கேட்கிறது.

நாடாளுமன்ற தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக அப்ஸல் என்ற கஷ்மீரி கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தலைமை நீதிபதி திங்காரா அவர்களாலும், பின்னர் உச்ச நீதி மன்றத்தாலும் தண்டிக்கப் பட்டவர். இந்த தண்டனையைப் பற்றி அஃப்ஸலின் மனைவி தபஸ்ஸூம் தான் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தமிழாக்கத்தைத்தான் நாம் மேலே பார்த்தது.
Source : Annexe 18 of : December, 13,Terror Over Democracy By Nirmalangshu Mukherji:A Wifes Appeal for justice :Published by Promilla & co, New Delhi.

அஃப்ஸல் நம் பாராளுமன்றத்தை தாக்க திட்டம் தீட்டியிருந்தால் உண்மையிலேயே தூக்கு தண்டனை கொடுக்க தகுதியானவர்தான். ஆனால் இங்கு அன்றைய பி.ஜே.பி அரசும், இந்துத்துவ வாதிகளும், நீதிபதிகளும் திட்டமிட்டு ஏற்கெனவே அவர்களின் கஸ்டடியில் இருந்தவர்களை வைத்து நடத்திய நாடகமாகத்தான் மேற்சொன்ன மனுவின் மூலம் தெரிய வருகிறது. இந்த மனுவில் உள்ள விபரங்கள் உண்மையாகும் பட்ஷத்தில் உண்மைக் குற்றவாளிகளை மக்கள் முன் கொண்டு வந்து உச்ச பட்ச தண்டனையை கொடுக்க வேண்டும்.




எஸ்.ஏ.ஆர். ஜீலானி!

தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவர்களில் நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதி செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜீலானி என்பவரும் உண்டு. இவர் டெல்லிப் பல்கலைக் கழகத்தில் அரபித் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஜீலானி அவர்களை டெல்லி உயர்நீதி மன்றம் வழக்கிலிருந்தே விடுதலை செய்தது. அவரை விடுதலை செய்திடும் போது இந்த வழக்கில் சமர்ப்பிக்கப் பட்ட சாட்சியங்கள் எத்துணை பொய்யானவை போலியானவை என்பதைத் தெளிவுபடுத்தியது.ஜீலானியின் மீது பதினெட்டு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக கீழ் நீதிமன்றம் கூறிற்று. அதனால் மரண தண்டனையும் வழங்கிற்று. அந்த பதினெட்டு சாட்சியங்களும் போலியானவை என உயர் நீதி மன்றம் கூறிற்று. அத்தனை சாட்சியங்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தது உயர் நீதி மன்றம்.அதே போல் அஃப்சல் என்பவரைப் பற்றிய காவல் துறையின் கூற்றுக்கள் முழுமையாக உடைந்து தகர்ந்து துகள் துகள்களாகப் போய்விட்டன.

'செல் போன்களைத்தான்' மிக முக்கியமான சாட்சியமாக அரசு தரப்பு காட்டுகிறது. அதற்கும் ஆதாரமாக குற்றம் சுமத்தப் பட்டவர்களின் வாக்கு மூலங்களையே காட்டுகின்றது. இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் கொடுமையும் குரூரமும் நிறைந்த சித்திரவதைகளுக்குப் பின் வாங்கப் பட்டவை. ஆகவே இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் யதார்த்தமானவை அல்ல. அவை உருவாக்கப் பட்டவை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் உண்மைகள் வெளிவர தவறி விட்டன.அதே போல் 'சுயமான சாட்சியங்கள்' எனக் காவல் துறை கொண்டு வந்து நிறுத்திய சாட்சியங்களும் வாங்கப்பட்ட சாட்சியங்கள்.

குற்றவாளிகளிடம் வாக்கு மூலங்கள் என வாங்கப் பட்டவை 'பொடா' என்ற பாசிச பயங்கர வாதச் சட்டத்தின் கீழ் வாங்கப் பட்டவை. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த வாக்கு மூலங்கள் காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கப் பட்டவை அல்ல. அவை பார தூரமான சித்திரவதைகளின் கீழ் வழங்கப் பட்டவை என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.இந்த வாக்கு மூலங்கள் - அதாவது காவல் துறையினர் முன் வழங்கப் பட்ட இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் பின்னர் நீதிபதிகளின் முன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (criminal procedure code) பிரிவு முன்னூற்றுப் பதின் மூன்றின் கீழ் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களுக்கு முற்றிலும் மாறானவை.இப்படி நீதிபதிகளின் முன் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களில் (அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்கு மூலங்களில்)பல வழக்கின் போக்கையே மாற்றுபவை. இதில் முஹம்மது அஃப்ஸல் என்பவர் வழங்கிய வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது.அந்த வாக்கு மூலம் நம்பத் தகுந்தது. இதனால் நீதி மன்றங்கள் இதில் சில பகுதிகளை நம்பின. இந்த வாக்கு மூலம் இந்த வழக்கில் மறைத்து வைக்கப் பட்ட பல முக்கிய பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாக்கு மூலத்தை இதர வாக்கு மூலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்திடும் போது இந்த சதியில் பாதுகாப்பு முகவர்களின் (security agencies) பங்கு முண்டோ என்ற கசப்பான சர்ச்சையும் கிளம்பியிருக்கின்றது.

முஹம்மது அஃப்ஸலுக்கு அவருடைய வரலாற்றையும் வாதத்தையும் முழுமையாக சொல்லிட எந்த வாய்ப்பும் வழங்கப்பட வில்லை. இதோடு முஹம்மது அஃப்ஸல் என்பவரின் தரப்பை நீதிமன்றத்தில் யாரும் சமர்ப்பிக்வில்லை.இதனால் முழு வழக்கிலும் காவல் துறையினரின் கூற்று நிரூபிக்கப் படாமலேயே நின்றது. பெரிய திரிபுகளும் கற்பனைக் கதைகளும் இயற்கையான நீதி மறுக்கப் பட்ட நிலையிலுமே (Against National Justice) வழக்கு முடிந்தது.

நிர்மலாங்ஷு
ஜனநாயக‌ உரிமைகளுக்கான மக்கள் குழு
மேற்கண்ட தகவல்கள் சுவனப்பிரியனின் வலைப்பதிவில் பெற்றேன் . நன்றி.
இனி.. யுவகிருஷ்ணா என்ற லக்கி லுக்கின் பதிவில் மேலும் கிடைத்த தகவல்கள் . நன்றி .


அப்சல் என்பவர் யார்?
முகம்மது அப்சல் உங்களையும், என்னையும் போல இந்தியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவரே. டெல்லியில் மருத்துவம் படித்தார். 15 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு JKLF (ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி) இயக்கத்தில் இணைந்தார். தீவிரவாதப் பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு சென்றவர் அங்கே 2 மாதம் தங்கியிருந்திருக்கிறார்.பாகிஸ்தானுக்கு காஷ்மீர் விடுதலையில் எந்த ஆர்வமும் இல்லை. காஷ்மீர் இளைஞர்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு தலைவலி கொடுக்க மட்டுமே பாகிஸ்தான் விரும்புகிறது என உணர்ந்தவர் தாயகம் திரும்பி எல்லைப் பாதுகாப்புப் படையிடம் இரு சக தீவிரவாதிகளுடன் மனந்திருந்தி சரணடைந்தார்.திருந்திய பின்பே அப்சலுக்கு சத்திய சோதனை நேர்ந்தது. காஷ்மீரில் மனம் திருந்திய தீவிரவாதிகளுக்கு அரசு வேலை கிடைக்காது. அவர்களால் போலிஸ் இன்பார்மர் தொழில் மட்டுமே செய்ய இயலும். வேண்டுமானால் அங்கிருக்கும் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலிசார் உதவியுடன் தாதாவாக மாறி சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை அதிகார வர்க்கத்துக்கு லஞ்சமாக கொடுத்து வாழலாம்.தீவிரவாதப் பாதையில் இருந்து திருந்தி பாதை மாறியவர்களுக்கு நித்திய கண்டமாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உண்டு. எப்போது வேண்டுமானாலும் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாயலாம். இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் இருந்தார் அப்ஸல்.

எப்படி சமாளித்தார் அப்ஸல்?
வேலையிலும் சேர முடியாது, இன்பார்மராக பணிபுரிந்து தீவிரவாதிகளின் விரோதத்தையும் சம்பாதிக்க முடியாது என்ற நிலையில் இருந்த அப்ஸல் மருத்துவ உபகரணங்களை வாங்கி வினியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். வாழ்க்கை நல்லமுறையில் பயணிக்கத் தொடங்கியது. புதிய வாழ்க்கை அமைத்துக் கொண்டதின் சாட்சியாக அவருக்கு திருமணமும் நடந்தேறியது.

அப்ஸலை நெரித்த அராஜகம்!
இந்நிலையில் தான் முகம்மது அப்ஸலுக்கு வில்லனாக முளைத்தார் அதிரடிப்படையின் டி.எஸ்.பியான திராவிந்தர் சிங். அப்ஸல் தொழிலில் நன்றாக வளர்ந்து வருவதை கண்டு மனம் பொறுக்க முடியாத அந்த மிருகம் லாபத்தில் பங்கு கேட்கத் தொடங்கியது. இல்லாவிட்டால் தீவிரவாதி என்று கூறி என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறது. அப்ஸலும் பல ஆயிரத்தைக் கொட்டிக் கொடுத்துக் கூட அந்த மிருகத்தின் பணவெறியைத் தணிக்க முடியவில்லை. தன் மனைவியின் நகையை விற்று பணத்தைக் கொடுத்திருக்கிறார். அப்ஸல் புதியதாக வாங்கிய இரு சக்கர வாகனத்தைக் கூட அந்த மிருகம் இரக்கமில்லாமல் பிடுங்கியிருக்கிறது.

இந்நிலையில் அப்ஸல் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்குச் சென்று பிழைப்பைப் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். அவர் மருத்துவம் படித்த டெல்லிக்கே சென்று தொழிலை தொடர நினைத்தார். அவர் இடம் மாறப்போவதை அறிந்த திராவிந்தர் சிங் அவரை அழைத்து தனக்கு வேண்டிய ஒருவரையும் டெல்லிக்கு உடன் அழைத்துச் செல்லவேண்டும் என மிரட்டியிருக்கிறார்.

திராவிந்தர் சிங்குக்குக்கு வேண்டிய ஒருவர் தான் முகம்மது. நாடாளுமன்றத் தாக்குதலின் மூளை.டெல்லிக்கு முகமதுவை அழைத்துச் சென்ற அப்ஸல் திராவிந்தர் சிங்கின் பரிந்துரையின் பேரில் அவருக்கு ஒரு வீடு வாடகைக்கு அமர்த்தி ஒரு காரும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த நேரத்தில் அப்ஸலும், காஷ்மீர் அதிரடிப்படை டி.எஸ்.பி. திராவிந்தர் சிங்கும் பலமுறை மொபைல் போனில் பேசியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தாக்குதலில் அப்ஸலின் பங்கு மொத்தமே இவ்வளவு தான். மனம் விரும்பி அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக எந்த சாட்சியமும் இல்லை. அவர் அழைத்து வந்த முகமது நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபடப்போகிறார் என்று அப்ஸலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

அதன் பிறகு நடந்தது என்ன?
இந்நிலையில் டெல்லியில் தானும் தன் குடும்பமும் தங்குவதற்கு வீடு பார்த்து விட்டு காஷ்மீருக்கு தன் குடும்பத்தை அழைத்துவரச் சென்ற அப்ஸல் கைது செய்யப்பட்டு நாடாளுமன்றத் தாக்குதலின் சூத்திரதாரி என்று டெல்லி போலிசால் குற்றம் சாட்டப்படுகிறார். நிருபர்கள் முன்னிலையில் அப்ஸல் பேச அனுமதிக்கப்படவில்லை. இதை ஆஜ்தக் சேனலின் நிருபர் கூட நீதிமன்றத்தில் சாட்சியாக சொல்லியிருக்கிறார்.

போலிஸ் எப்படி அப்ஸலை தீவிரவாதியாக சித்தரிக்கிறது?
அப்ஸலின் மொபைல் போனில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நவம்பர் 6 முதல் பலமுறை பேசியிருப்பதாக போலிஸார் கூறுகிறார்கள். அதை வைத்தே அப்ஸல் தான் இந்த தீவிரவாதச் செயலின் மூளை என்பதாக வர்ணிக்கிறது டெல்லி காவல்துறை. அந்த மொபைல் போனின் சிம்கார்டே (மொபைல் எண் 9811489429) டிசம்பர் 4ல் தான் வாங்கப்பட்டிருக்கிறது. அதற்கான பில்லும் அப்ஸலின் வசம் இருக்கிறது. அதாவது ஒரு மாத காலமாக Activate செய்யப்படாத ஒரு எண்ணில் தீவிரவாதிகள் அப்ஸலிடம் பேசியிருக்கிறார்கள் என்று போலிஸார் நீதிமன்றத்தின் காதுகளில் பூச்சுற்றுகிறார்கள். அந்த பூச்சுற்றலையும் சந்தோஷமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.நீதிமன்றத்தில் அப்ஸலின் சார்பாக வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை.

இதுமாதிரி நேரத்தில் நீதிமன்றமே குற்றவாளிக்கு ஒரு வக்கீலை நியமிப்பது வழக்கம். அந்த நடைமுறை அப்ஸலின் வழக்கில் மட்டும் மீறப்பட்டது ஏனோ?தன்னுடைய மொபைல் எண்ணுக்கு காஷ்மீர் மாநில போலிஸ் அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்திலும், போலிஸ் விசாரணையிலும் அப்ஸல் கூறியிருக்கிறார். அதுகுறித்து போலிசார் எந்த விசாரணையும் நடத்தாது ஏன்? விரும்பத்தகாத உண்மைகள் ஏதாகினும் வெளிவந்துவிடப் போகிறது என்பதாலா?நீதிமன்றத்தின் அடாவடிஅரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே குற்றத்தின் கொடூரத்தன்மையைக் கணக்கில் கொண்டு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்பது இந்திய நீதித்துறையின் அரிச்சுவடி.

ஆனால் அப்சலுக்கு மரணதண்டனை வழங்கிய நீதிமன்றம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று தீர்ப்பு எழுதியிருக்கிறது. நூறுகோடி மக்கள் ஒன்று சேர்ந்து அப்ஸலுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்களா என்ன? நீதிபதி குறிப்பிட்ட "மக்கள்" என்பவர் யார்? யார்?அப்படி மக்களின் உணர்வுகள் இருந்திருந்தால் இன்று காஷ்மீரிலும், இந்தியாவின் எஞ்சிய பகுதிகளிலும் அப்ஸலின் மரண தண்டனைக்கு எதிரான கடுமையான குரல் ஏன் எழுகிறது. இந்த எதிர்ப்புக் குரல் ஒருவேளை மக்களின் உணர்வுகள் இல்லையா?

அப்சல் ஏன் இதுவரை ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பவில்லை?அதுமாதிரி ஒரு கருணைமனு கோரினால் என் மீது சொல்லப்பட்டுள்ள குற்றத்தை நானே ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஒருவேளை நான் மரணமடையவேண்டும் என்று இறைவன் விரும்பினால், இறைவனின் தீர்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்" என்கிறார் அப்ஸல்.


அப்ஸலை தூக்கில் போடவேண்டும் என்று கோருபவர்கள் யார்? யார்?அப்ஸல் இஸ்லாமியர் என்பதால் அவரை தூக்கில் போடவேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. தீவிரவாதத்தை அடக்க இதுதான் சிறந்தவழி என்பது அவர்கள் எண்ணம். தாங்கள் "தேசபக்தி கொண்டவர்கள்" என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்வதை மட்டும் செய்யாத சில தேசியவியாதிகளும் இவர்களோடு சேர்ந்து ஜால்ரா அடித்து வருகின்றனர்.இன்னொரு தரப்பினர் இஸ்லாமியத் தீவிரவாதிகள். அப்பாவியான அப்ஸல் தூக்கிலிடப்பட்டால் அதன் மூலம் இஸ்லாமிய இளைஞர்களிடையே மத வெறியையும், தீவிரவாத மனப்பான்மையையும் ஏற்படுத்தி தீவிரவாதத்தை வளர்க்கலாம் என்பது அவர்கள் எண்ணம்.ம்ம்ம்.... மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.

ஏன் சங்பரிவார்களும் பிஜேபி யின் பக்த கோடிகளும் அப்சலின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற துடிக்கின்றனர்? என்ற கேள்விக்கு "வினவு, வினை செய்" வலைப்பதிவு பதில் சொல்கிறது.
அப்சல் குருவின் இந்த உண்மையான வாக்குமூலத்தை மறைத்த போலீசார் அவரை சித்திரவதை செய்து தங்களுக்கேற்ற வாக்குமூலத்தை வாங்கிக் கொள்கின்றனர். முறையான நீதிமன்ற விசாரணையும், சட்ட உதவியும் அவருக்கு மறுக்கப்படுகிறது. இதைத்தான் அருந்ததிராயும், சிவில் குடியுரிமை அமைப்புக்களும் இந்த வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு போராடினர். அப்படி மறுவிசாரணை செய்தால் 2001 பாரளுமன்றத் தாக்குதலில் போலீசாரும் அவ்வகையில் பா.ஜ.க கூட்டணி அரசும் ஈடுபட்டிருப்பது தெரியவரும். இது மத்திய அரசுக்கு தெரிந்தே நடந்த பயங்கரவாதம் என்பதையும் அதை வைத்தது பாக்குடன் போரில் ஈடுபட்டு அரசியல் ஆதாயம் அடைய முயன்ற கதையும் அம்பலத்திற்கு வரும் என்பதால்தான் அத்வானி அன்கோ அப்சல் குருவை உடனே தூக்கில் போட வேண்டுமென இப்போதும் வற்புறுத்துகின்றனர். ஒருவேளை அவர்கள் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இதை முதல் வேலையாகச் செய்வதற்கு வாய்ப்புண்டு.


இந்தப்பதிவுக்கு உதவிய சுட்டிகள்
http://suvanappiriyan.blogspot.com/2008/12/blog-post_14.html
http://www.luckylookonline.com/2006/10/blog-post_116115372637699678.html
http://www.vinavu.com/beta/?p=1298