Sunday, August 29, 2010

பின்லேடன் ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட். பிடல் காஸ்ட்ரோ பகீர் தகவல்.


ஹவானா: ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த காலத்தில் அவரால் சிஐஏ ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டவர்தான் ஒசாமா பின் லேடன். இது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.


லிதுவேனியாவைச் சேர்ந்த எழுத்தாளர் காஸ்ட்ரோவை சந்தித்தார். அப்போது உடன் இருந்த பத்திரிக்கையாளர்களிடம் காஸ்ட்ரோ பேசுகையில், சிஐஏவால் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டவர்தான் பின் லேடன். ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது அவருக்கு சாதகமாக நடந்து கொள்ளவே பின் லேடனை விலைக்கு வாங்கியது சிஐஏ.உலகம் முழுவதையும் பயமுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் புஷ்ஷின் பிரதான எண்ணம். அதற்கு வசதியாக அவர்கள் லேடனை பயன்படுத்திக் கொண்டார்.


தான் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பதை பின்லேடன் அறிவிப்பார். அவரைத் தொடர்ந்து புஷ் எச்சரிக்கும் வகையில் பேசுவார். இரண்டுமே திட்டமிட்ட நாடகங்கள். புஷ்ஷுக்கு எப்போதுமே ஆதரவாக இருந்தவர் லேடன். புஷ்ஷுக்குக் கீழ்ப்பட்டவராகவே அவர் இருந்து வந்தார்.லேடன் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்பது ஆப்கன் போர் ரகசியம் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன என்றார் காஸ்ட்ரோ.


84 வயதாகும் காஸ்ட்ரோ சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். தற்போது அவர் நலமடைந்து செய்தியாளர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிக்களுக்கும் போக ஆரம்பித்துள்ளார். வழக்கமான முறையில் செயல்பட ஆரம்பித்தது முதல் பரபரப்பு பேச்சாக பேசி வருகிறார் காஸ்ட்ரோ. ஈரானை அமெரிக்கா தாக்கினால் அணு ஆயுத யுத்தம் வரும் என்று சமீபத்தில் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்த நிலையில் ஒசாமா பின்லேடன்,அமெரிக்காவின் ஏஜென்ட் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Saturday, August 28, 2010

மதானிக்கு நீதி காவி புழுதியால் மறைக்கப்படுகிறதா?

அப்துல் நாசர் மதானி – அதிகாரத்தின் இரை

இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்ப்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ”ஹே ராம்” என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளைக் கொன்றொழித்த பயங்கரவாதத்தைச் செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தழைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல் வாரிசான இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இரத்தமும் சதையுமாக இந்திய மண்ணை நேசித்த முஸ்லிம்களின், இரத்தம் குடித்து தன் சதை வளர்க்கும் இழி செயலை, இந்தியாவின் அதிகார வர்க்கமும், ஊடகங்களும் வெளிப்படையாக செய்து வருகின்றன. முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.

நாம் வாழும் காலத்தில், நம் கண் முன்னாலேயே ஒரு மிகப்பெரும் அக்கிரமம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சட்டம் அதன் கயமையைச் செய்கிறது. நீதிக்கு கல்லறை கட்டப்படுகிறது, எளிய மனிதர்களைச் சூறையாடும் அரச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், மறு மலர்ச்சிக்காகவும் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு அப்பாவி மனிதரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன இந்தியாவின் அரசுகள்.

சட்டம், நீதி, ஜனநாயகம், இறையாண்மை என்றெல்லாம் வாய்கிழியப் பேசப்படுகின்ற ஒரு மண்ணில், அப்பட்டமாக மீறப்படுகின்றன மனித உரிமைகள். மாந்த நேயத்திற்கான அத்தனை இலக்கணங்களும் குழி தோண்டிப் புதைக்கப் படுகின்றன. ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஈரமற்றப் பாறையாய் மாறி வருகின்றன. இதற்குப் பிறகும் சட்டம் பற்றியும், நீதி பற்றியும், ஜனநாயகத்தின் மாண்பைப் பற்றியும் பிதற்றுபவர்களை காணும்போது கடும் எரிச்சலும், கோபமும் தான் வருகிறது.

1992 டிசம்பர் 6 – இல் பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள். 450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, முஸ்லிம்களின் புனிதமிக்க வழிபாட்டுத் தலத்தை அநீதியான முறையில் தகர்த்து எறிந்தார்கள். எப்படியாவது தங்களின் பள்ளிவாசல் காப்பாற்றப்பட்டு விடும் என்று கடைசி வரை நம்பியிருந்த முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டார்கள். இந்த நாட்டின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தையும், ராணுவத்தையும், போலீசையும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளையும் நம்பி, நம்பி ஏமாந்து போனது முஸ்லிம் சமூகம்.
அவநம்பிக்கை மிகுந்த நிலையில், தமது இருப்பு குறித்த பாதுகாப்பின்மையும், எதிர்காலம் குறித்த அச்சமும் முஸ்லிம்களை வாட்டத் தொடங்கியது. தமக்கான பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படி நாடு முழுவதும், ஜனநாயகப் பாதையில் நின்று உரிமை கேட்பதற்காக வெடித்து முளைத்த விதைகளில் ஒருவர்தான் அப்துல் நாசர் மதானி.

அடக்குமுறைகளுக்கு எதிரான கர்ஜனை, எவருக்கும் எதற்கும் அடங்காத கம்பீரம், நெருப்பை உமிழும் உரை வீச்சு, சமுதாய மறுமலர்ச்சியே உயிர் மூச்சு என்று தனிப்பெரும் அடையாளத்துடன் கேரள அரசியல் வானில் வலம் வந்தவர் அவர். அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அவர். கொள்கைச் சமரசமற்ற அவரது அரசியல் நிலைப்பாடுகளும், இந்துத்துவ எதிர்ப்பில் அவர் காட்டிய உறுதிப்பாடும்தான் அவரை இன்று இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையைச் சார்ந்த அப்துஸ் சமத் மாஸ்டர், அஸ்மா பீவி தம்பதியருக்கு 1965 ஜனவரி 18 – இல், மூத்த மகனாக பிறந்தார் மதானி. பள்ளித் தலைமை ஆசிரியரான மதானியின் தந்தை, அவரை மார்க்க அறிவும் நல்லொழுக்கமும் உடைய பிள்ளையாக வளர்த்து எடுத்தார். பள்ளிக் கல்விக்குப் பின் கொல்லத்தில் உள்ள ‘மஅதனுல் உலூம்’ அரபிக் கல்லூரியில் இணைந்து இஸ்லாமிய மார்க்க அறிஞராக பரிணாமம் பெற்றார் மதானி. அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்ட ‘மஅதனி’ என்ற பட்டமே பின்னாளில் அவரது அடையாளத்துக்குரிய பெயராக மாறிப் போனது.

இளம் மார்க்கப் பிரச்சாரகராக தன் பயணத்தைத் தொடங்கிய மதானி, அனல் பறக்கும் உரை வீச்சுக்களால் அனைவரையும் ஈர்த்தார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. கேரளாவின் சொற்பொழிவு மேடைகளில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் பேச்சாளர் ஆனார் மதானி. 1990 களில் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மதானியைப் பாதித்தது. மண்டல் கமிசன் அறிக்கைக்கு நேர்ந்த கதியும், அத்வானியின் தலைமையில் அரங்கேறிய இந்துத்துவ எழுச்சியும், முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஆர். எஸ்.எஸ் கும்பலின் தீவிரவாத நடவடிக்கையும் கண்டு கொதித்து எழுந்தார் மதானி.

ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்க ஐ.எஸ்.எஸ். [இஸ்லாமிக் சேவா சங்] என்ற அமைப்பை, 1990 ஆம் ஆண்டு தொடங்கினார். 1992 டிசம்பர் 6 – இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மதானியின் ஐ.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து சூறாவளியாய் சுழன்றார் மதானி. பாபர் மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகளையும், அதற்குத் துணை நின்ற காங்கிரசையும் நெருப்பு உரைகளால் காய்ச்சி எடுத்தார்.
மதானியின் உரை வீச்சில் பொசுங்கிப்போன இந்துத்துவ சக்திகள், அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் தீர்த்துக்கட்டும் சதியில் இறங்கினர்.

ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அன்வார்சேரியில் மதானி உருவாக்கிய ஜாமியா அன்வார் என்னும் கலாசாலையில் இருந்து இரவு அவர் வெளியே வரும்போது, ஆர். எஸ்.எஸ் கும்பல் அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. 1992 இல் நடைபெற்ற அந்த தாக்குதலில் தனது ஒற்றைக் காலை இழந்து ஊனமுற்ற மதானி, அதன் பின்னர் சக்கர நாற்காலியில் தவழ்ந்து கொண்டே சரித்திரம் படைத்தார்.

இந்தியச் சூழலில் முஸ்லிம்கள் தனித்து நின்று போராடுவதன் மூலம் இலக்கை அடைய முடியாது என்ற உண்மையை உணrந்து தெளிந்த மதானி, 1993 இல் மக்கள் ஜனநாயகக் கட்சி [PDP] என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட தலித் மக்களும், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களும் ஓரணியில் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக எழுச்சி பெறும் வியூகத்தை வகுத்தார். தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை கேரளாவின் முதலமைச்சராக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்தார். குருவாயூர், ஒற்றப்பாலம், திரூரங்காடி இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு கேரளாவின் mainstream அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார்.

முஸ்லிம்களோடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணி திரட்டும் மதானியின் தொலை நோக்குப் பார்வையைக் கண்டு கேரளாவின் அரசியல் கட்சிகளுக்கு நடுக்கம் வந்தது. அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த மதானி 1998 மார்ச் 31 – அன்றுகோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மதானி கோவை சிறையில் இருந்தபோது அவர் அனுபவித்த ரணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. விசாரணைக் கைதியாக சிறையில் பூட்டப்பட்டு கசக்கி எறியப்பட்டார். 105 கிலோ எடை கொண்ட கனத்த தேகத்துடன், 33 வயதே நிரம்பிய துடிப்பு மிக்க இளைஞராக சிறைக்குச் சென்ற அவர் அதிகாரத்தின் கொடும் பசிக்கு இரையானார். நாளாக நாளாக அவரது உடல் எடை குறைந்து இறுதியில் 45 கிலோ ஆனது. உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளும் குடியிருக்கும் நோய்களின் கூடாரமாக மாறி அவரது உடல் நலியுற்றது. ஒரு விசாரணைக் கைதிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகள் கூட மதானிக்கு மறுக்கப்பட்டன.

1200 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஒருவர்கூட அவருக்கு எதிராக சாட்சி சொல்லாத நிலையிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. அவரது பாட்டி இறந்தபோது பரோலில் சென்று பட்டியின் உடலை பார்த்து வருவதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. நீண்ட நாள் ஆகிவிட்டதால் பழுதடைந்த தனது செயற்கை காலை புதுப்பிக்கவும், சிகிச்சைக்காகவும் வேண்டி மதானி அனுப்பிய மனுக்கள் குப்பைக் கூடையில் எறியப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மதானி விசயத்தில் மிக மூர்கத்தனமாக நடந்து கொண்டார்.

மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட அப்பாவிகளின் விடுதலைக்கு வழிவகுத்தது.

கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்பட்டன. மதானிக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு 2007 ஆகஸ்ட் 1 – இல் விடுதலையாகி வெளியே வந்தார் மதானி. பரபரப்பான அவரது அரசியல் பயணத்தை முடக்கி, கம்பீரமான அவரது தோற்றத்தை ஒடுக்கி, இயங்க முடியாத நிலைக்கு அவரைத் தள்ளிய பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது நீதிமன்றம்.

விடுதலைக்குப் பின் மதானியைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நலிந்த தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பொது வாழ்வுக்கு ஓய்வு கொடுத்திருப்பார்கள். வெகு மக்களிடம் தன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அரசியல் லாபத்திற்கான அறுவடையாகக் கருதி காங்கிரசோடு பேரம் நடத்தி இருப்பார்கள். முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளைப் பேசியதனால் தானே வம்பு ; பேசாமல் ‘பதவி அரசியல்’ நடத்துவோம் என்று கொள்கை அரசியலை கை கழுவி இருப்பார்கள்.

ஆனால் அப்படி எந்த முடிவுக்கும் வரவில்லை மதானி. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சிக்கான தனது பயணத்தை முன்பை விடவும் வேகமாகக் கூர் தீட்டினார். பேச்சில் இருந்த வீச்சைக் குறைத்து அதை செயலில் காட்டினார். தன் உடல் நிலையைப் புறம் தள்ளி விட்டு கேரளா முழுவதும் வலம் வந்தார். ஒன்பதரை ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த தனது தொண்டர்களை மீண்டும் தட்டி எழுப்பினார்.
மதானியின் கதை முடிந்து விட்டது என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தியவர்களுக்கு, அவரது இத்தகைய மீள் எழுச்சி எரிச்சலைத் தந்தது. ஏற்கனவே கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அவரைச் சிக்கவைத்து குளிர் காய்ந்தவர்கள் மீண்டும் அதே பாணியில் அவரைக் குதறத் தொடக்கி உள்ளனர்.
****
2008 ஆம் ஆண்டு ஜூலை 25 – ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கர்நாடக மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி சேர்க்கப்பட்டுள்ள விதத்தையும், வழக்கின் போக்கையும் பார்க்கின்ற போது , மதானியை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி வலைகள் பின்னப்படுவதை அறிய முடிகின்றது.
கேரளாவைச் சார்ந்த ‘தடியன்டவிட’ நசீர் என்பவர் 2009 ஆம் ஆண்டு, பங்களாதேசத்தில் வைத்து அங்குள்ள ரைபிள் படையினரால் கைது செய்யப் பட்டார். லஷ்கரே தொய்பா தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட நசீர், கொடுத்ததாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இப்போது மதானி வேட்டையாடப்படுகிறார்.

2005 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கலமச்சேரியில், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில், ‘தடியண்டவிட’ நசீரிடம் கேரள போலீசார் விசாரித்ததாகவும், விசாரணையில், ”தமிழக அரசுப் பேருந்தை எரிக்கச் சொன்னது மதானியின் மனைவி சூஃபியாதான் ” என்று நசீர் சொன்னதாகவும் கூறி 2009 டிசம்பரில் சூஃபியா கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அது தனிக் கதை.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூர் மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் மதானி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, மதானியின் சார்பில் அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு எதிராக கர்நாடக காவல் துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்தனர்.

57 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில் காவல்துறை கையாண்டிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்தவையாக இருக்கின்றன. மதானிக்கு எதிரான சதியின் முழுப் பரிணாமமும், முஸ்லிம்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வெறுப்புணர்வும் அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

” பெங்களூரில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் மதானியும், கைது செய்யப்பட்ட நசீர் உள்பட 22 குற்றவாளிகளும், கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள குடகு நகரில் ஒன்று கூடி, அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வைத்து சதித்திட்டம் வகுத்ததாகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம் என்றும், இதற்காக இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையூறு செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் போலீஸ் கூறியுள்ளது.
மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெடி பொருட்களை ரகசியமாக கேரளத்துக்கு கடத்தி, அங்கு வெடிகுண்டைத் தயாரித்துள்ளனர் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட குண்டுகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்க வைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளார்” என்றும் நீளுகிறது போலீஸ் அறிக்கை.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து மதானி குற்றமற்றவராக விடுவிக்கப் பட்டாலும், மதானியை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே போலீசின் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் மதானியின் முழு செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் மத்திய மாநில புலனாய்வுக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறது. அவரது சுற்றுப்பயணம் குறித்த முழு தகவலும் கேரள காவல் துறையிடம் இருக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒருவர், எப்படி குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட முடியும்? குடகு நகரில் ரகசியமாகக் கூடி திட்டம் தீட்ட முடியும்? என்றெல்லாம் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் ஜனநாயக நாட்டில் விடை இல்லை.

நசீர் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ”’மதானிக்கும் குண்டுவெடிப்பில் பங்குண்டு” என்று அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி மதானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் காவல் துறையின் இந்த மோசடித்தனத்தை, கொச்சி உயர் நீதி மன்றத்தில் இருந்து வெளியே வரும் போது பத்திரிகையாளர்களை சந்தித்த நசீர் பகிரங்கமாக அம்பலப் படுத்தினார். ‘‘பெங்களூர் குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு உண்டு என்று தான் கூறவே இல்லை” என்று உறுதியாக மறுத்தார். ஆனாலும் காவல் துறையும், நீதி மன்றமும் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மதானியை சூறையாட வேண்டும் என்று அதிகார வர்க்கம் முடிவு செய்து விட்ட பிறகு எந்த உண்மையைத் தான் அவர்களால் ஏற்க முடியும்?

இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க சதி நடக்கிறது என்று கர்நாடக பாஜக அரசின் காவல்துறை சொன்னதைப் போலவே, கேரளாவின் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் வாந்தி எடுத்தார். முஸ்லிம்களை ஒடுக்குவதில் இந்துத்துவத்திற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் அம்பலத்திற்கு வருகிறது.

குற்றமே செய்யாமல், விசாரணைக் கைதியாக கோவை சிறையில் மதானி இழந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு, பதில் சொல்ல வக்கற்றவர்கள், தற்போது மதானி விசயத்தில் ‘சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அவர் குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் முடிவு செய்யட்டும்’ என்றும் கூறி தப்பிக்க முயலுகின்றனர்.

மதானி கைது செய்யப்பட்டுள்ள ‘அன்லாஃபுல் ஆக்டிவிட்டீஸ் பிரிவென்சன் நடைமுறைச் சட்டம் – 2008 ‘ என்ற சட்டம் எந்த வகையிலும் நீதி வழங்காது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதே போன்ற கறுப்புச் சட்டங்களால் ஏற்கனவே முஸ்லிம்கள் பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட ரணங்களும் இன்னும் ஆறாத வடுவாய் இருக்கிறது. இந்தக் கொடுஞ்சட்டத்தின் படி, சப் இன்ஸ்பெக்டர் ரேன்கிலுள்ள எந்த ஒரு அதிகாரியும், நாட்டில் யாரையும் சந்தேகத்தின் பேரில் குற்றவாளியாக்க முடியும். அதன் பின்னர் 150 நாட்கள் வரை ஜாமீனில்லாமல் சிறையில் அடைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தால் நீதி மன்றமும் எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் நீதிமன்றத்தின் எந்த ஒரு அனுமதியும் இன்றி 150 நாட்கள் வரை சிறையில் அடைக்க காவல்துறைக்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு.
வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, சாதாரண நிலையில் ஒருவரை கைது செய்தால், அவரை 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். நீதி மன்றம் அவரை 14 நாட்கள் ரிமாண்ட் செய்யலாம். தொடர்ந்து பொறுப்பில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் 15 ஆம் நாள் மீண்டும் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.


குற்றவாளி என்று நிறுவப்படும் வரை, ஒரு குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டே சட்டத்தில் இவ்வாறெல்லாம் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள இத்தகைய உரிமைகளை காலி செய்து அநீதி இழைக்கவே, அரசு அதிகாரம் புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. அப்படி என்றால் சட்டம் யாருடைய வழியில் செல்கிறது?

வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து, குற்றம் சற்றப்பட்டவர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்டால், சட்டம் போனது எந்த வழியில் என்று மானமுள்ள எவராவது விடையளிப்பார்களா?

அச்சுதானந்தனும், பிரணாய் விஜயனும், ரமேஷ் சென்னிதாலாவும், குஞ்சாலிக் குட்டியும் கூறுகின்ற, சட்டத்தின் யோக்கியதை இவ்வளவுதானே.. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமேனும் மானமும், சூடு உணர்ச்சியும் இருந்தால் ”சட்டம் சட்டத்தின் பாதையில் செல்லட்டும்” என்று கூச்சமின்றி கூறுவார்களா?

மதானி விசயத்தில் யாரைக் கேட்டாலும் ‘சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்’ என்று கூறி சட்டத்தைக் கை காட்டி விட்டு பதுங்கி விடுகின்றனர். இந்தச் சட்டம் என்றைக்குத்தான் முஸ்லிம்களுக்கு நீதியை வழங்கி இருக்கிறது? முஸ்லிம்கள் என்றாலே சட்டம் ஒரு வழியிலும், நீதி வேறு வழியிலும் அல்லவா செல்கிறது… இங்கே சங்கராச்சாரிக்கும், அப்துல் நாசர் மதானிக்கும் ஒரே சட்டம்தான்… ஆனால் நீதி?

சங்கரமடப் பூசாரி சங்கர ராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் சங்கராச்சாரிக்கு, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிணை கொடுக்கிறது நீதி மன்றம். விடுமுறை நாளில் கூட சங்கராசாரிக்காக திறந்தன நீதிமன்றத்தின் கதவுகள். சுவாமிகளை சிறையில் அடைக்காமல் நீதிபதிகளின் குடியிருப்பிலேயே காவலில் வைக்கலாமே என்று யோசனை சொன்னார் ஒரு நீதிபதி. சிறையில் மலம் கழிக்க வாழை இலை கொடுக்கும் அளவுக்கு சங்கராசாரிக்காக வளைந்து கொடுக்கிறது சட்டம். ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டது நீதி… ஆனால் குற்றமற்ற மதானிக்கு?

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை; அல் உம்மாவுக்குத் தடை.. ஆனால் குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்த, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரத்தை, முன்னின்று நிகழ்த்திய இந்துத்துவக் குண்டர்களுக்கும், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய காவல் துறையினருக்கும் தடையுமில்லை, தண்டனையுமில்லை!

பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டிக்குத் தடை.. பழனி பாபாவைக் கொன்றவர்களுக்கோ விடுதலை!

இஸ்லாமிய மாணவர் அமைப்பான ‘சிமி’ க்குத் தடை.. ஆனால் சிமியின் பெயரால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஆர் எஸ் எஸ்ஸுக்கு சகல சுதந்திரம்!

மாலேகான், புனே, அஜ்மீர், ஹைதராபாத், கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி ஆகிய இந்துத்துவ தீவிரவாதஅமைப்புகளையும், அவற்றை பல்வேறு பெயர்களில் இயக்கிக் கொண்டிருக்கும் மூல அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸையும் தடை செய்ய அரசுக்குத் துணிவில்லை.
குண்டுவெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு இருப்பதற்கான அனைத்து வகையான ஆதாரங்களும், வீடியோ காட்சிகளும் கிடைத்த பிறகும், ஹெட்லைன்ஸ் டுடே , தெஹல்கா போன்ற பெரிய ஊடகங்கள் அதை அம்பலப் படுத்திய பிறகும், ஆர் எஸ் எஸ் தலைமையகத்தை சோதனை செய்யவோ, ஆர் எஸ் எஸ் தலைவர்களை விசாரணைக்கு அழைக்கவோ துப்பில்லாத தொடை நடுங்கி அரசுகள், மதானியைக் குதறுவதில் முனைப்புக் காட்டுகின்றன.

நந்திகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் ஊழியர் வீட்டில் குண்டு வெடிப்பு; கான்பூரில் பஜ்ரங்தள் நிர்வாகி வீட்டில் குண்டு வெடிப்பு; தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, என… ஆர் எஸ் எஸ் காரர்கள், குண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வெடித்து சிதறிய குண்டுகள் ஏராளம், தாராளம்… இப்படி, பட்டவர்த்தனமாக ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரவாதம் அம்பலப்பட்ட பிறகும், மதானி வெடிகுண்டு தயாரித்து சப்ளை செய்தார் என்று கதை விடுகிறது காவல்துறை.

2006 – லிருந்து நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர் எஸ் எஸ்ஸின் கள்ளக் குழந்தையான அபினவ் பாரத்துடன், உறவு வைத்துள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரைப் பற்றிய விபரங்கள், புலன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், அவர்களில் எவரும் விசாரணைக்கு அழைக்கப் படுவதில்லை. ‘தடியன்டவிட’ நசீரை தேடிப்பிடித்து, நோண்டி நொங்கெடுத்தவர்களுக்கு, இந்த இந்துத்துவ அதிகாரிகளெல்லாம் கண்ணில் தெரிவதில்லை.

பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள், குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.

போபாலில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் பயங்கரவாதி ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி தப்பி ஓடச் செய்து விட்டு, செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழிபோடுகின்றனர். மதானியை விரைவாக ஒப்படைக்காத கேரள அரசின் மீது, கர்நாடக காவல்துறைக்கு வந்த கோபம், ஆண்டர்சனை ஒப்படைக்காத அமெரிக்கா மீது வருவதில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் மிக முக்கிய குற்றவாளிகளாக லிபரான் கமிஷனால் அடையாளப்படுத்தப்பட்ட அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்ற 68 குற்றவாளிகளில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. 8 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து, 17 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு , 1000 பக்கங்களில் சமர்பிக்கப் பட்ட லிபரான் அறிக்கை, இப்போது எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறதோ தெரியவில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின், மும்பையில் நடைபெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி என, நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனால் அறிவிக்கப்பட்ட, மும்பை பயங்கரவாதி பால்தாக்கரே மீது இதுவரை எந்தச் சட்டமும் பாயவில்லை.

சந்தேகத்தின் அடிப்படையிலும், புனையப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களை வேட்டையாடும் காவல் துறைக்கு, அரசால் நியமிக்கப் பட்ட விசாரணை ஆணையத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களை கைது செய்ய துணிவில்லை.

பன்முகத் தன்மை உடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்திற்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராக, மும்பையில் வட இந்தியர்களை, குறிப்பாக பீகார் மாநில எளிய மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது நவ நிர்மான் சேனா. ‘என்னை கைது செய்தால் மும்பையே பற்றி எரியும்’ என்று பகிரங்கமாக கொக்கரிக்கும் ராஜ் தாக்கரேக்களெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவதில்லை.

48 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய ஆகப் பெரிய குற்றவாளி ஸ்ரீ ராம்சேனா பிரமோத் முத்தலிக் மீது தடாவும் இல்லை, பொடாவும் இல்லை.பெரும் தொகையை பேரம் பேசி கலவரம் செய்யும் புது வகை பயங்கரவாதியான முத்தலிக் மீது இந்தியாவின் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்வதில்லை.

ஸ்ரீராம் சேனாவைத் தொடங்குவதற்கு முன் முதாலிக் பஜ்ரங்தளத்தில் இருக்கும்போதே பல்வேறு வழக்குகளில் சிக்கிய பின்னணி கொண்டவன்.அப்படி இருந்தும் அவர்களால் எந்தத் தடையும் இன்றி அமைப்பு நிறுவ முடிகிறது; சுதந்திரமாக இயங்க முடிகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பில் ஸ்ரீராம் சேனாவின் கூலிப் படைக்குத் தொடர்பு உண்டு என்று ஊடகங்கள் உண்மையை உரைத்த பிறகும், அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கி விடாமல், கேரளாவுக்குச் சென்று மதானியைக் கொத்தி வந்துள்ளது கர்நாடக பாஜக அரசு…
***
மதானியின் விசயத்தில் நடப்பவை அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது நன்கு தெரிந்த பிறகும், அவர் குற்றம் புரியாத அப்பாவி என்பது புரிந்த பிறகும், கேரளாவின் அரசியல் கட்சிகள் அவரை வெறுப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. மதானியின் கைது விவகாரத்தில் கேரளாவில் பாஜகவும், காங்கிரசும், கம்யுனிஸ்ட்டும், முஸ்லிம் லீக்கும் ஓரணியில் நின்று முழங்குகின்றன. மதானி ஒழிக்கப்பட்டால் தான் தாங்கள் நிம்மதியாக அரசியல் நடத்த முடியும் என்று எல்லா கட்சிகளும் எண்ணுகின்றன.

மதானியை உலவ விட்டால் அவர் முஸ்லிம்களை அணி திரட்டுவார்; கேள்வி கேட்கும் படி உசுப்பி விடுவார்; அடிமை அரசியலுக்கு சாவு மணி அடித்து விடுவார் என்று, மதானியின் வலிமை குறித்த பயம் கேரள அரசியல் கட்சிகளை பிடித்தாட்டுகிறது. அதிகார ருசி கண்ட முஸ்லிம் லீக், பதவியை இழக்கவோ அல்லது வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வரவோ சிறிதும் அனுமதிக்காது. பதவி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற வெறி முற்றிய பிறகு எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்பட மனம் வராது.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவ சக்திகளுக்கு பக்கத் துணையாக நின்ற, காங்கிரஸ் கட்சியின் நயவஞ்சகத்தனத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று, முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கர்ஜித்தபோது, முஸ்லிம் லீக்கின் பதவி வெறி பிடித்த கேரள தலைவர்கள்தான் அதற்கு முட்டுக் கட்டையாக நின்றனர். மனம் வெறுத்துப் போன சுலைமான் சேட், கொள்கை காக்கும் போராளியாக முஸ்லிம் லீக்கில் இருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கும் நிலை வந்தது.

மதானி ஒழிந்தால் பாஜக வை விட அதிகமாக மகிழ்ச்சி அடையும் கட்சியாக முஸ்லிம் லீக் திகழ்கிறது. மதானியின் மீதான அடக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே, கேரளாவில் பிற முஸ்லிம் அமைப்புகளான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதும், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மீதும் அரச மற்றும் ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.
நியாயமான வழியில் நின்று, சமரசமற்ற முறையில், உயிரோட்டமான அரசியலை முன்னெடுக்க முனையும் முஸ்லிம் அமைப்புகளை முடக்கிப் போடுவதில் அதிகார வர்க்கம் குறியாய் இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் எழுச்சியை ஊடகங்கள் விரும்புவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை.

முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஜனநாயக வழியில் அரசியல் நடத்துகிறவர்களை அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரிக்கின்ற போக்கு, நாடு விடுதலை பெற்ற நாள் முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .

இந்திய முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் இயக்கமான முஸ்லிம் லீக், பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானின் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், இந்திய முஸ்லிம்கள் தமது தனித்த அடையாளத்தோடு மீண்டும் அரசியல் நடத்தப் புறப்பட்டதை, அன்றைய ஆளும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இந்திய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்க காயிதே மில்லத் துணிந்த போது, அவரை முடக்கிப் போடுவதற்கான எல்லா ஆயுதங்களையும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது.

முதலில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பு உருவாகி விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியது; முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவர்களின் வாயாலேயே ”முஸ்லிம் லீக் இனி நமக்கு வேண்டாம்” என்று சொல்ல வைத்தது; முஸ்லிம் லீக்கை விட்டு வெளியேறி எங்களோடு இணைந்தால், உயர் பதவிகளைத் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது; காயிதே மில்லத் மசிய மாட்டார் என்று தெரிந்ததும், அபுல் கலாம் ஆசாத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களை வளைக்கப் பார்த்தது; காங்கிரசின் இத்தகைய எல்லா தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு, இந்திய முஸ்லிம்களுக்குத் துணிச்சலாக தலைமை ஏற்றார் காயிதே மில்லத்.

அதன் பிறகு அவரை கண்காணிக்கத் தொடங்கியது இந்திய அரசு. தேச விரோத செயலில் அவரை சிக்க வைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தது அரசு. காயிதே மில்லத் வெளிநாடு சென்ற போது, அவரது நடவடிக்கைகளை உளவு பார்க்க காங்கிரஸ் அரசு காமராஜரை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.
ஆனால், இன்றைக்கு முஸ்லிம் லீக்கையோ அல்லது முஸ்லிம் லீக் தலைவர்களையோ, ஆளும் வர்க்கம் அப்படிப் பார்ப்பது இல்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி இன்றைய முஸ்லிம் லீக், காயிதே மில்லத்தைப் போல் பேசுவதில்லை. வகுப்பு வாதத்துக்கு எதிராக வீச்சோடு களமாடுவதில்லை.

அவர் தவறாக நினைத்து விடுவாரோ, இவர் தவறாக நினைத்து விடுவாரோ…அல்லது கூட்டணித் தலைமை கோபித்துக் கொள்ளுமோ என்று பல கணக்குப் போட்டு மென்மையான முறையில் அரசிய நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே பதவியை தக்க வைத்துக்கொள்கிற சுயநல அரசியல். ஆகையினால் இன்றைய முஸ்லிம் லீக்கை, ஆளும் வர்க்கமோ அல்லது ஊடகங்களோ கண்காணிப்பதுமில்லை; பிரச்சனைக்கு உரியவர்களாக கருதுவதுமில்லை.

அன்றைக்கு காயிதே மில்லத்தைப் போல், இன்றைக்கு கொள்கை சமரசமற்ற முறையில் யார் யாரெல்லாம் அரசியலை முன்னெடுக்கின்றர்களோ; போர்குணத்தோடு அமைப்பு நடத்துகிறார்களோ அவர்களின் மீதே, ஆளும் வர்க்கத்தின் பார்வையும் , ஊடகங்களின் பார்வையும் ஒரு சேரக் குவிகிறது. காயிதே மில்லத்தை தேச துரோகி என்றார்கள்; கண்காணித்தார்கள்; அவரது சகாக்களை அவரிடமிருந்து பிரித்து, அவரை பலவீனப் படுத்த முயன்றார்கள்; மிதமான அணுகுமுறை உள்ள மாற்றுத் தலைமையை முன்னிறுத்தினார்கள்…. இன்றைக்கும் அதே வழிமுறையை, அதே நடைமுறையை ஆளும் வர்க்கம் பின் பற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அன்றைக்கு அரசோடு கூட்டுச் சேர்ந்து, காயிதே மில்லத்தை விமர்சித்த, சுயநலம் கொண்ட முஸ்லிம்களின் இடத்தை, இன்றைக்கு முஸ்லிம் லீக் பிடித்துக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.

மதானியையும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவையும்,
ஜமாத்தே இஸ்லாமியையும் கேரளாவில் முடக்கிப் போடுவதற்கு, ஆளும் தரப்பு கையாளுகின்ற அத்தனை வழிமுறைகளையும் முஸ்லிம் லீக் ஆதரிக்கிறது. போர்க் குணமிக்க முஸ்லிம் அமைப்புகள் விசயத்தில் அரசும், காவல் துறையும், ஊடகங்களும் என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு வரி விடாமல் வார்த்தை விடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற மனநிலைக்கு, பாரம்பரிய முஸ்லிம் தலைமை தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.
***
மதானி கைது செய்யப் பட்ட போது, ஊடகங்கள் அதைக்கையாண்ட விதம் மிகவும் அருவருப்பானது. ஒரு குற்றவாளியை கர்நாடக அரசுக்கு கை மாற்றுவதில், கேரள அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி விட்டதாக கேரள ஊடகங்கள் விஷத்தைக் கக்கின. தமிழ் நாட்டின் பிரதான ஊடகமான சன் தொலைக்காட்சியின் செய்தி சேனலில், மதானியைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்தி வாசிக்கப் பட்டது.

தான் குற்றவாளி அல்ல என்ற போதும் இறைவனுக்கு அடுத்த படியாக நீதி மன்றத்தின் மீது தான் வைத்துள்ள மரியாதையின் காரணமாக, சரணடைய விரும்புவதாக அறிவித்தவர் மதானி. அப்படிப்பட்ட ஒருவரை, ”ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டதாக” சன் டிவி தலைப்புச் செய்தி சொன்னது. செய்தியின் உள்ளீடாக, ”மதானி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர்” என்று சொல்லி வரலாற்றுத் திரிபு செய்தது. விசாரணை கைதியாக கோவை சிறையில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்து, குற்றமற்றவர் என்று விடுதலையான மதானியின் உண்மை முகத்தைக் காட்டுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை.

மதானியைக் கொச்சைப்படுத்தும் போர்வையில், முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய சன் டிவிக்கு தமிழக முஸ்லிம்கள் உடனடி பதிலடி கொடுத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அலைக்குப் பணிந்து, தனது தவறை உணர்ந்ததாக வருந்தியது சன் டிவி.

இணைய தளங்களில் ஜெயமோகன் போன்ற இந்துத்துவ சிந்தனை உடைய இலக்கிய பயங்கரவாதிகள், மதானியை தீவிரவாதத்தின் ஊற்றாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலை முறையினரின் களமாகத் திகழும் இணைய தளத்தில், முஸ்லிம் சமூகத்தின் போராளிகளை கொடூரமானவர்களாகவும், மனித குல விரோதிகளாகவும் காட்டுவதன் மூலம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெகு மக்களிடம் பற்றிப் பரவுவதற்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

அறியாமையில் சிக்கி உழலும் முஸ்லிம் சமூகத்திற்கு, ஜெயமோகனையும் தெரியாது; இணைய தளமும் புரியாது என்பதுதான், உச்சக்கட்ட பரிதாபம்.
கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வலிமை மிகுந்த களமான ஊடகத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பதுதான், இத்தகைய அவலங்களுக்கு காரணமாக இருக்கிறது.

முஸ்லிம்கள் ஊடகத்தில் மட்டுமா இல்லை? அரசியலில் இல்லை; அதிகாரத்தில் இல்லை; கலை இலக்கியத்தில் இல்லை; பண்பாட்டுத் தளத்திலும் இல்லை…… இல்லை, இல்லை, இல்லவே இல்லை… இருப்பதெல்லாம் உள் முரண்பாடுகளும், குழுச் சண்டையும், கொள்கை மோதலும் தான்…

முஸ்லிம்களே! இனியும் இழப்பதற்கு எதுவுமில்லை; மீட்பதற்கோ ஆயிரம் இருக்கிறது.

[நன்றி: சமநிலைச் சமுதாயம்]
- ஆளூர் ஷாநவாஸ்
http://aloorshanavas.blogspot.com/

Wednesday, August 18, 2010

மதானி. குற்றமும்..பின்னணியும்..


மதானி எப்போதுமே தலைப்புச் செய்திகளில் இடம் பெறுபவர் என்பதால் கேரள அரசியல் தலைவர்களுக்கு மதானி என்றால் எப்போதுமே வேப்பங்காய்தான்.


கோவை குண்டு வெடிப்பில் செய்யாத குற்றத்திற்காக 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து மூன்றாண்டு முடிவதற்குள் மீண்டும் ஒரு சிறை வாசம் அவரை வா வா என அழைக்கிறது.


ஒரு மார்க்க அறிஞராக உலகத்தில் அறியப்பட்ட அப்துன் நாசர் மதானி அரசியல் தலைவராக தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்காக அரசியல் அரங்கில் அவர்களின் உரிமைக்காக போராட ஆரம்பித்ததுதான் அங்குள்ள பழம்பெருச்சாளி அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையாக வாய்த்தது என கூறுகிறார்கள்.


அப்துன்நாசர் மதானி 1965 ஆம் ஆண்டு அப்துஸ்ஸமத் மாஸ்டரின் மகனாகப் பிறந்தார். அடிப்படை கல்வி கற்றபின் கொல்லத்தில் உள்ள மதீனுல் உலூம் அரபிக் கல்லூரியில் மார்க்கக்கல்வி கற்றார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜாமியா நூரிய்யாவில் கல்வி கற்று முடித்த அவர் மார்க்கப் பிரச்சாரகராக மாறினார். அவரது உரை தென்பகுதி கேரளாவில் மிகவும் பிரபலமான ஒன்றாக பாராட்டைப் பெற்றது. அவரது உரையை கேட்க கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மக்கள் வெள்ளம் அணிதிரண்டது.

இதே காலகட்டத்தில் மதானி தனது தந்தையுடன் அன்வராசேரி அநாதை நிலையத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். 1987&ல் உருவாக்கப் பட்ட அன்வராசேரி அநாதை நிலையத்தில் இலவச மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும் வழங்கப்பட்டதால் அன்வராசேரி புகழ்பெறத் தொடங்கியது. மதானியின் அனல் பறக்கும் பேச்சால் அவருக்கு என தனியான கூட்டம் ஒன்று உருவாகியது. 1990ம் ஆண்டு இஸ்லாமிய சேவா சங்கம் என்ற அமைப்பினை தொடங்கினார்.
பாசிஸ ஆர்.எஸ்.எஸ்க்கு தனது இஸ்லாமிய சேவா சங்கம்(ஐ.எஸ்.எஸ்) அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்கும் எனக் கூறினார்.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட 1992ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதை அடுத்து மதானியின் ஐ.எஸ்.எஸ்யையும் மத்திய அரசு தடை செய்தது. அதனால் தளர்ந்து விடவில்லை. 1993ம் ஆண்டு கேரள மக்கள் ஜனநாயகக்கட்சி என்ற அரசியல் கட்சியை மதானி தொடங்கினார். ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான இயக்கம் இது என பிரகடனப்படுத்தினார். பல தேர்தல்களில் இடது சாரிகளுக்காக மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சி பாடுபட்டது. மதானியின் சொந்த மாவட்டமான கொல்லம் பகுதியில் மட்டும் மதானியின் செல்வாக்கு இருந்தது. முஸ்லிம்களின் வாக்குகளை கேரளாவில் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் லீக் அதிக அளவில் சேகரித்து வந்ததால் முஸ்லிம்& தலித்&பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் என்ற முழக்கத்தினை மதானி முன்னெடுத்தார்.

1998ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டார். முதலில் கேரள காவல்துறை அவரை கைது செய்து ஒருநாள் வைத்திருந்து தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தது. கோவையிலும் சேலத்திலும் 9 ஆண்டுகள் மதானி சிறையில் அடைக்கப்பட்டார். முதல் நான்கு ஆண்டுகாலம் மதானி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதானி உள்ளே தள்ளப்பட்டதால் ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் லீக் அமைப்புகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

மதானியை விடுவிக்க தொடக்க முதலே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் குரல் கொடுத்தது. சமூக நல அமைப்புகளின் தீவிர முயற்சியால் கேரள அரசியலில் மதானி விவகாரம் பலத்த அதிர்வினை ஏற்படுத்தியது.

மதானியை மனிதாபிமான முறையில் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கேரள சட்டமன்றம் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது.
கேரள அரசியல் தலைவர்கள் கோவை சிறையில் இருந்த மதானியை சந்தித்தனர்.
மதானியை விடுவித்தால் கேரளாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறிய காங்கிரஸும் ஒரு வழியாக மதானி ஆதரவு நிலைக்கு திரும்பியது.

ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மதானி குற்றமற்றவராக கோவை குண்டுவெடிப்பு வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். 40 வயதிலேயே தளர்ந்த உடல் நலத்துடன் வெறும் 40 கிலோ எடையுடன் மதானி விடுதலையானார்.

விடுதலையான மதானி பெரும் மக்கள் திரளுக்கிடையே வரவேற்கப்பட்டார். மாநில அமைச்சர்கள் அங்கே வீற்றிருந்தனர். பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மதானியை வரவேற்கும் விழாவில் பங்கேற்றனர். வரவேற்பு விழாக்கள் கேரள மாநிலம் எங்கும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. முஸ்லிம் லீக் செல்வாக்கு நிறைந்த கோழிக்கோடு பொன்னானி பகுதிகளில் கூட மதானி மிகுந்த மக்கள் வெள்ளத்துக்கிடையே வரவேற்கப்பட்டார்.

மதானியிடம் முன்பு இருந்த அனல்பொறி பேச்சை கூடியிருந்த மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மதானியின் மனப்பாங்கை சிறை வாழ்க்கை மாற்றியிருந்தது. கடந்த காலங்களில் தான் பேசிய வேகமான பேச்சுக்களுக்காக மதானி பகிரங்க மன்னிப்புக் கேட்டார். முஸ்லிம் & தலித் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது என்றும் முழங்கினார். உடல் பரிசோதனை மற்றும் சிகிக்சைக்கு பின் தீவிர அரசியலில் மதானி இறங்கினார்.

2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக களம் இறங்கினார் மதானி. இந்த தேர்தலில் மதானியின் வேட்பாளராக பொன்னானி தொகுதியில் போட்டியிட்ட ஹூஸைன் ரன்ததானி முஸ்லிம் லீகின் ஈ.டி.முஹம்மது பஷீரிடம் பெருவாரியான வாக்குகளின் வித்தியாசத்தில் தோற்றார். இடது சாரிகளுக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தோல்வி முதன் முதலாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மதானி கட்சியையும் தொற்றியது. மதானி&மார்க்சிஸ்ட்டுகள் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

தற்போது மதானி மீது பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதானியை கைதுசெய்ய கர்நாடக காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டுவரும் சூழலில் பிணை கோரி மதானி பெங்களூரு நீதிமன்றத்துக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கும் மனு செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தில் மதானி மீதான ஜாமீன் மனு உடனடியாக நிராகரிக்கப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் மதானி மீதான ஜாமீன் மனுவை ஆகஸ்ட் மூன்றாம் தேதி தள்ளுபடி செய்தது.

மதானியை கைது செய்ய தீவிரம் காட்டும் அளவுக்கு மாலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்படும் ஹிந்துத்துவ பெரும்புள்ளிகள் மீது பாயாதது ஏன்? என்ற கேள்வி இந்தியர்கள் அனைவர் உள்ளங்களில் எழுகிறது.

முக்கிய குற்றவாளியா?
மதானி பெங்களூரு குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி என சன்.டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது. மதானி குற்றம் சாட்டப்படுபவர் பட்டியலில் 31 வதாக சேர்க்கப் பட்டிருக்கிறார். 31-&வது நபர் எப்படி முக்கிய குற்றவாளியாவார்-? இது பொருத்தமற்ற ஒரு சொல் என்பது சராசரி அறிவுள்ளவனுக்கு கூட தெரியும். ஆனாலும் பெங்களூரு குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளி மதானி என்றே தொடர்ந்து ஊடகங்களில் வெளியிட்டு வரும் அறிவு சூன்யங்களை என்னவென்று சொல்வது?

நசீர் கைது செய்யப்பட்ட ஐந்து மாதத்திற்கு பிறகு குற்றப்பத்திரிகை :

பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் பொய் கூட இங்கு பொருத்தமாக சொல்லப்படவில்லை.
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட நசீர் மதானியின் பெயரை குறிப்பிட்டது எப்போது தெரியுமா? கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களுக்குப்பிறகு தான். இது நசீர் தானாக அளித்த வாக்கு மூலமா? வற்புறுத்தி, துன்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலமா? என்ற சந்தேகம் நடுநிலையாளர்களின் உள்ளங்களில் கனன்று எழுகிறது.

மதானி பற்றி கூறவில்லை - நசீர்

மதானிக்கும் பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக காவல் துறையினரிடம் கூறியதாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தை கொச்சி நீதிமன்றத்தில் நசீர் மறுத்தார். பெங்களூரு குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு இருப்பதாக தான் கூறவே இல்லை என்றார். இது எந்த வெகுஜன ஊடகத்திலும் வரவில்லை. கர்நாடக காவல்துறையின் குற்றச்சாட்டிலும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுவும் நடுநிலையாளர்கள் மனதில் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

மன்னிப்பு வழங்கியவருக்கு இந்த நிலையா?

1990ம் ஆண்டு மதானியை கொல்ல ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் சதி செய்தனர். மதானி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடந்ததில் மதானி தனது வலது காலை இழந்தார். ஆனால் அவர்களையும் மதானி மன்னித்து விட்டார். கோவை வழக்கில் இருந்து நிரபராதியாக வெளிவந்த மதானி தன்னை கொல்ல முயற்சித்தவர்களை மன்னிப்பதாக அறிவித்தார்.

நன்றி : மன்னடி

"எனது காலை உடைத்த ஆர்.எஸ்.எஸ். காரர்களை மன்னியுங்கள்"

"கைதியின் கதை" மதானி குறித்த ஆவணப்படம். அவர் அநியாயமாக கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் விசாரணைக் கைதியாக பிணை கூட மறுக்கப்பட்ட நிலையில் வாடியபோது, இது வெளியிடப்பட்டது. இந்த சுட்டியில் காணலாம்.

http://www.tmpolitics.net/tmmedia/madhani.htm

Sunday, August 8, 2010

வரலாற்றுப் புரட்டுக்கள்!

திரிக்கப்பட்ட முஸ்லிம் படையெடுப்புகளும், மறைக்கப்பட்ட இந்து படையெடுப்புகளும்.. இந்தப் பதிவிற்காக பின்னூட்டமும் அதற்காக எனது எதிர்வினையும்.

http://pakirndhun.blogspot.com/2010/08/pinnoottam-7-august-2010.html#comment-form

ஐயா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் இஸ்லாத்தை தவறாக விளங்கியதன் விளைவு தான் "ஜிகாத்" பற்றிய உங்கள் அபிப்ராயம். அதுவும் "கேள்விபடுகிறேன்" என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் உங்களுக்கு ஜிகாத் மற்றும் திருக்குரான் பற்றிய தவறான தகவல்கள் தான் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. குரான் தமிழில் இருக்கிறது படித்து பாருங்கள் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள நேரிடலாம். மேலும் அறிய எனது பழைய பதிவை இங்கே சென்று பாருங்கள். உங்களுக்கு ஜிகாத் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கலாம். http://meiyeluthu.blogspot.com/2009/01/blog-post.html

அடுத்து நாம் வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி ஆராய( சிவசுப்பிரமணியன் போல) வேண்டும். அப்படியே முஸ்லிம் மன்னர்கள் வாள்முனையில் மதம் மாற்றியிருந்தால் அது இஸ்லாத்திற்கு எதிரானதே.

பாபர் தன் நோயுற்ற கடைசி காலங்களில் தன் மகன் ஹுமாயுனிடம் " நீ முஸ்லிமல்லாத மக்கள் நிரம்பிய ஒரு தேசத்தை ஆளப்போகிறாய். அவர்கள் பசுவை தெய்வமாக வழிபடுகின்றனர், உன் மார்க்கத்தில் பசுவை பலியிடுவது தவறு இல்லையென்றாலும் அவர்களின் மனதை புண்படுத்தாமலிருக்க நீ பசுவை பலியிடுவதை தடுத்துக்கொள்வது நல்லது" என்கிற ரீதியில் அறிவுரை சொன்னதாக பாபரின் சுயசரிதையான "பாபர் நாமா" வில் இருக்கிறதாக படிக்கிறோம். அது இன்னளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவரா ராமர் கோவிலை இடித்திருப்பார் என்ற ஐயம் ஏற்படுகிறது.

அடுத்து ஜிஸ்யா வரி பற்றிய உங்களது புரிதலும் பிழைதான். மொகல் மன்னர்களில் அவுரங்கசீப் ஓரளவு முஸ்லிமாக வாழ்ந்தவர் என்றும் எளிமையான வாழ்வும் கிட்டத்தட்ட இந்தியாவியே ஆண்ட மிகப் பெரிய சக்ரவர்த்தியாக இருந்த போதும் தன் உழைப்பால் உண்டவர் என்பது வரலாற்றுப்பக்கங்களில் காணலாம். அவர் பல கோயில்களூக்கு மானியம் வழங்கியுள்ளார் என்பது கோயில் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. இந்த தகவல் எல்லாம் இணையத்தில் கிடைக்கிறது.

ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்திருந்தால், முஸ்லிம்களை விட இந்துக்கள் நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையில் எவ்வாறு வாழ முடியும்? என பாபு நாகேந்திரநாத் பானர்ஜி என்ற வரலாற்றாசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒளரங்கசீப்பின் படையில் தலைமைத் தளபதியாக இருந்தவர் ஒரு இந்து. ஜஸ்வந் சிங், ஜெயசிங் என்ற இரண்டு முக்கிய இந்து தளபதிகள் 2000 முதல் 5000 வரை உள்ள படைகளுக்கு தளபதிகளாக இருந்துள்ளனர். ராஜாவீம் சிங், இந்திரா சிங், அச்சால்ஜி ஆரியால்ஜி போன்றவர்கள் எல்லாம் ஒளரங்கசீப் படையில் தளபதிகளாக இருந்துள்ளனர்.
நிர்வாகத்தில் கஜானா பாதுகாப்பில், பொருளாதார அமைப்பின் முக்கியப் பொறுப்புகளில் இரண்டு இந்துக்கள் இருந்துள்ளனர். சில முஸ்லிம்கள் இதுபற்றி புகார் செய்தபோது, சரியான நபர்களை சரியான பொறுப்புகளில் நியமிக்க எனது மார்க்கம் வழிகாட்டுகிறது என்று ஒளரங்கசீப் பதில் கூறியுள்ளார்.

மேலும் ஜஸ்வந்தர் சிங், ராஜா ரூப், கபீர் சிங், பிரேம் சிங், திலீப்ராய், ராசிகால்ராய் போன்றோர் உயர் அதிகாரிகளாக இருந்துவந்தனர்.ஒளரங்கசீப் ஆட்சிப் பற்றி ஸ்ரீ சர்மா என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடும் போது, ''அவர் உண்மையான மதச்சார்பற்றவராக இருந்தார்; அக்பரின் அரசவையிலே 16 இந்துக்கள்தான் உயர் அதிகாரிகளாக இருந்தனர்; ஆனால் ஒளரங்கசீப் ஆட்சியில் 148 இந்துக்கள் உயர் அரசுப் பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.அலெக்ஸான்டர் காமிங்டன் என்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் குறிப்பிடும் போது ''ஒளரங்கசீப் மொத்தம் 52 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். அவரது ஆட்சியில் மக்கள் சொந்த விருப்பத்தின்படி தங்கள் மதவழிபாட்டை நடத்திக்கொள்ள சுதந்திரமளித்தார்'' என்று குறிப்பிடுகிறார்.

'ஜிஸ்யா வரி விதித்து இந்துக்களை கொடுமைப்படுத்தினார்' என்றும் ஒளரங்கசீப் மீது குற்றம்சாட்டுகின்றனர். இந்துக்களில் போருக்கு வராத திடகாத்திரமான ஆண்கள் அதிலும் இளைஞர்கள் மீது மட்டுமே ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், முதியோர்கள் மீது ஜிஸ்யா வரி விதிக்கப்படவில்லை. அதேநேரம், முஸ்லிம்களுக்கு ஜகாத், முஷ்ரி என்று பல்வேறு வரிகள் இருந்துள்ளன. விவசாயம், வருமானம் தொடர்பான வரிகள் இருந்துள்ளன. இந்துக்களுக்கு ஜிஸ்யா வரி மட்டும்தான் இருந்தது என்று ஜிமதலா சர்கார் சொல்கிறார். மேலும், மக்களுக்கு 65 வகையான வரிகளை முற்றிலுமாக நீக்கினார் எனவும் குறிப்பிடுகிறார்.

நாம் விஷமக் கருத்துக்கள் பரப்பப்படும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம், எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து இதுபோன்ற அவதூறுப் பிரச்சாரங்களை தடுத்துநிறுத்த வேண்டும்.

ஒளரங்கசீப்பின் அரசபையில் வங்காள கவர்னராக இருந்தவர் வள்ளல் சீதக்காதி அவர்கள் ஆவார்கள். அவரை சேதுபதி மன்னன் தன் உறவு முறையில் ஒருவராக ஏற்றுக் கொண்டு பட்டத்து பெரிய தம்பியாக ஆக்கினார். சேதுபதி மன்னர் இவருக்கு ரவிகுல ரகுநாத முத்து விஜய பெரிய தம்பி பட்டத்து மரைக்காயர் எனப் பட்டம் கொடுத்து சிறப்பித்தார். வள்ளல் சீதக்காதி அவர்களிடமே ஒளரங்கசீப் தம் பூமியான இராமேஸ்வரத்தில் இராமநாதன் கோவிலைக் கட்டும் பணியையும் ஒப்படைத்து அதை அவர் செய்து முடித்து சமயங்களிற்கப்பால் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலை நிறுத்திய வரலாறு இன்று வரை நிமிர்ந்து நிற்கிறது. இதே சிற்பிகளையும் கற்களையும் வைத்து கீழ்க்கரையில் ஒரு பள்ளி வாசலையும் கட்டியுள்ளார். ஒளரங்கசீப்பை மதவெறியர் என்று கூறுவது ஒரு பொய்யான இட்டுக் கட்டப்பட்ட குற்றச்சாட்டாகும்.

ஜிஸ்யா வரியை வசூலித்ததன் நோக்கமே போரில் கலந்து கொள்ள இயலாத முஸ்லீமல்லாத குடிமக்களின் பாதுகாப்பையும் கருதி தான் என்ற உண்மையை எவரும் மறந்து விடக்கூடாது.

ஜஸ்யா வரி மூலம் இஸ்லாம் புகுத்தப்பட்டது என்பதும் வரலாற்றைத் திரிப்பதற்கு சமம்.

ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது என்று சிறு விளக்கம்.
முஸ்லிம்கள்மீது இஸ்லாமும் அதன் ஆட்சியாளர்களும் 'ஜகாத் ' எனும் ஏழைவரியைக் கடமையாக விதித்திருந்தனர்.

முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, மற்றும் கரன்சிகள், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால் நடைகள், தானியங்கள், பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் 'ஜகாத் ' செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவிகிதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவிகிதமும்,

இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவிகிதமும் முஸ்லிம்கள் 'ஜகாத் ' எனும் வரியாகச் செலுத்தியாகவேண்டும்.

இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மமல்ல இது.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்தாக வேண்டிய கட்டாய கடமையாகும் இது.

எனவே 'ஜகாத் ' என்ற பெயரில் கணிசமான தொகையை அரசுக்கு செலுத்த இஸ்லாமிய சமுதாயம் கடமைப்பட்டிருந்தது.

ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கள், அடிமைகளாக இருந்தவர்கள், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் ஆகியோருக்காக இந்த வரிப்பணத்தை அரசாங்கம் செலவு செய்தது.

குடிமக்கள் அனைவரும் சமம் என்ற அளவில், முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தியபோது, மற்றவர்கள் எப்படி செலுத்தாமல் இருக்க முடியும் ? அது எப்படி நியாயமாகும் ?

ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது 'ஜகாத் 'தை விதிக்க முடியாது.

ஒரு மார்க்கத்தின் சட்டத்தை இன்னொரு மார்க்கத்தின் மீது திணிப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது.

ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பது இறைவன் வகுத்த விதியாகும்.

வரி ஏதும் வாங்காமல் விட்டால், அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாக அர்த்தமாகும்.

அவர்களுடைய பாதுகாப்புக்கு அரசு எப்படி பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியும் ?

எனவேதான் 'ஜிஸ்யா ' வந்தது.

இந்த வரி விதிக்கும்போது கூட, பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

திடகாத்திரமான ஆண்கள்மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.

சரி எவ்வளவு வரி விதிக்கப்பட்டது ?

சகட்டு மேனிக்கு எல்லாரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி ஆகவேண்டும் என்று சொல்லாமல், மக்களின் பொருளாதார வசதியின் அடிப்படையில் 'ஜஸியா ' விதிக்கப்பட்டது.

தனி நபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் என்றும்,

வருவாய்க் குறைவாக உள்ள எமன் வாசிகளுக்கு, தலைக்கு ஒரு தீனார் என்றும் பெருமானாரால் ஜஸியா விதிக்கப்பட்டது.

இந்த ஒரு தீனார் என்பது ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியைவிட பலமடங்கு குறைவானதே.

சொத்துவரி, விற்பனை வரி, சாலைவரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை இந்தியன் இன்றுவரி செலுத்துகிறான்.

இந்த வரியை விட பலமடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த 'ஜஸியா '.

இந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம், இஸ்லாமியக் குடியரசில், முஸ்லிம்கள் பெற்ற அத்தனை உரிமைகளையும் சலுகைகளையும் மற்றவரும் பெற முடிந்தது.

அவர்களின் வழிபாட்டு உரிமைககள் காக்கப்பட்டன.

அவர்களுடைய ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. சொத்துரிமை பேணப்பட்டது.

T.W. ஆர்னால்டு தனது The Preaching of Islam என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார் :

'"ஜஸியா என்பது சிலர் நினைப்பது போல, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்காக விதிக்கப்பட்ட வரியல்ல".

ஆனால் முஸ்லிமல்லாதோர், இஸ்லாமிய ஆட்சியில் இருந்த ராணுவத்தில் பணிபுரிவதை தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி விரும்பவில்லையென்றால், இஸ்லாமிய ஆட்சி அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும், எதிரிகள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து அபாயம் வராமல் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப் பட்டதே ஆகும்.

' ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் பணியாற்றியபோது அவர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஜிகாத் என்றால் என்ன?

Monday, August 2, 2010

விடுதலைப் புலிகளின் குரூர முகம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் தூள் தூளாக போனது இவர்கள் இருவரின் பதிவுகளையும் வாசித்த போது.. இதற்கு எதிர்மறையான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

நன்றி. ஸபீர் ‍ஹபீஸ்,சர்ஹூன்

விடுதலையின் பெயரால் நசுக்கப்பட்ட முஸ்லிம்கள்


இது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான ஒரு பதிவல்ல. ஒரு பாதிக்கப்பட்டவனின் புலம்பல் அல்லது வாக்குமூலம். இதில் உள்ள நியாங்களினை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்பது எனது திண்ணம்.
(சில விடயங்கள் மன்னிக்கப்படலாம் ஆனால் மறக்கடிக்கப்படமுடியாது)

தமிழ் விடுதலை, தமிழர் உரிமைகள் என அது தொடர்பில் பல விடயங்கள் எங்கும் எதிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இலங்கையில், இன அடக்கு முறைக்கு எதிராக, ஆயுதங்களினை கையில் ஏந்திய விடுதலை இயக்கங்களில், விடுதலைப்புலிகளின் அஸ்திவாரம் மிக உறுதியானது. இன்று தமிழர் விடுதலை என்றால், புலிகளினை தவிர்த்து நோக்க முடியாமல் இருக்கின்றது.

எந்த ஒரு அடக்குமுறைக்கு எதிராக இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்ட்த்தில் குதித்தார்களோ, அதே அடக்குமுறையினை இன்னொரு சமூகத்தின் மீது அவர்களின் கை ஓங்கி இருந்த காலத்தில் திணித்தார்கள் என்பது பற்றி அறிவீர்களா நண்பர்களே? அவர்கள் முஸ்லீம்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் முஸ்லிம்கள்.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சுமூக உறவு, விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பங்களில் ஆரோக்கியமாக இருந்தது. பல முஸ்லிம் இளைஞர்கள் தாமாகவே தம்மை விடுதலை இயக்கங்களில் இணைத்துக்கொண்டனர். ஆனால், பின்னர் ஏற்பட்ட சில பல கசப்பான அனுபவங்கள், பழிவாங்கல்கள் போன்றவற்றால் இறந்து போனது. அடித்தட்டு மக்களிடம், இன்னும் அவை சில சந்தர்ப்பவாதிகளாலும் இன்னும் தூபமிட்டு வளர்க்கப்படுகின்றது. அது அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் நன்மைக்கும் அமைவாக அமைந்தாலும், சில உண்மைகளினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் நான் பல தமிழக நண்பர்களினை சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவரதும் ஆதங்கம், ஈழத்தமிழ் உறவுகள் பற்றியதாக இருக்கும். அங்கு தமிழர்கள் படும் அவலங்கள், அழிவுகள் பற்றி எல்லாம் மிக மிக கவலையுடன் பகிர்ந்து கொள்வதைப்பார்க்கும் போது, எனக்குள் எழும் மற்றொரு கேள்வி- இதே இனப்பிரச்சினையால்,வேறொரு வகையில் பாதிக்கப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் பற்றி ஏன் ஒருவரும் கவலைப்படவில்லை? அவர்களின் அவலங்கள் வெளியுலகுக்கு தெரியாமல் இருட்டடிக்கப்படுகின்றனவா? என்பது போன்ற வினாக்கள் என்னை அரித்துக்கொண்டிருக்கின்றன.

உடுத்த ஆடைகளுடன் மட்டும் நிர்க்கதியானவர்களாக யாழினை விட்டு முஸ்லிம்கள் வெளியேறி 20 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்னும் அவர்கள் அகதிகளாக புத்தளம் எனும் ஊரில் வாழ்கின்றனர். யாழின் பொருளாதாரத்தில் அன்று முக்கிய பங்காளிகளாக இருந்த மக்கள் இன்று அகதிகள். இந்நிலைக்கு காரணம் யார்?

அடக்கு முறைக்கு எதிரான விடுதலைப்போராட்டம் என்பது, இன்னொரு இனம் மீதான திணிப்பா? யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்.
அதே போல், கிழக்கில் எத்தனை முஸ்லிம் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன? எதற்காக இறக்கின்றோம் என்பதனை அறியாமல் இறந்த உயிர்கள் எத்தனை? பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த போது கொலைவெறியாட்டம் நடத்தப்பட்டது.

ஏறாவூரில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். சிறு குழந்தைகள் பெண்கள் கோரமாக கொல்லப்பட்டனர். கர்ப்பிணிகள் வயிற்றினை கிழித்துக்கொல்லப்பட்டனர். கிறவல் குழி எனும் இடத்தில், விவசாயிகள் கைகள் கண்கள் கட்டப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டனர். இன்னும், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பிரதான ஜீவனோபாயமான விவசாயமும் விடுதலையின் பெயரால் கபளீகரிக்கப்பட்டிருக்கின்றன. பல நூற்றுக்கணக்கான வயல் காணிகள் “ மேய்ச்சல் நிலங்கள் “ என பிரகடனப்படுத்தப்பட்ட அடாவடித்தனங்களும் விடுதலை எனும் பெயரால் நிகழ்த்தப்பட்டன.

ஏறாவூர் மற்றும் காத்தான்குடி படுகொலைகள் பற்றி இன்று பேச யார் உள்ளார்கள். விடுதலை எனும் பேரில் அப்பாவிகள் மீது நிகழ்த்தப்பட்ட சில அக்கிரமங்களின் பதிவுகள் இவை.







http://www.youtube.com/watch?v=VwIq4dACsMo

இவைகளின் நினைவுகள் ஒவ்வொரு முஸ்லிம்களின் மனங்களிலும் இன்னும் உள்ளன. தமிழர்களுக்கு எப்படி, முள்ளிவாய்க்கல் மற்றும் இன்னும் பலவோ அப்படி முஸ்லிம்களுக்கும் ஏறாவூர்,காத்தான் குடி, கிறவல் குழி என பலவும் உண்டு என்பதையும் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் என்பது தமிழர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்பது புரியப்பட வேண்டும். அப்புரிதல் அரசியல் தவிர்ந்து மன ரீதியாக நிகழ்ந்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

அனைவரும் அவரவர் உரிமைகளுடன் மகிழ்சியாக வாழ வேண்டும் என்பதே எல்லோரது பிரார்த்தனையும், விட்ட தவறுகள் மேலும் எழாமல் பார்த்துக்கொள்வதும் எமக்கான கடமைகள் .
ஹ்த்ம்ல்">http://sarhoon.blogspot.com/2010/07/blog-post_05.ஹ்த்ம்ல்
======================================================
இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள்
சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள். ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே. புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே. புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே. எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர். அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

ஏறாவூர் நகரில், எல்லைக் கிராமங்களில், தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களின் கதவுகளை உடைத்து, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த புலிகள், அங்கு உறக்கத்திலிருந்த மக்களை சுட்டுக் கொன்றனர். கற்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே இழுத்தெடுத்து, சுவரில் அடித்துக் கொன்றனர். அன்று படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 201. இவர்களுள் கற்பழிக்கப்பட்ட யுவதிகளும், கழுத்தறுக்கப்பட்ட இளைஞர்களும் அதிகம். குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி புலிகளினால் இப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

காத்தான்குடி நகரில், பள்ளிவாயலொன்றில் தொழுகையிலிருந்த மக்களை புலிகள் புறமுதுகில் சுட்டுக் கொன்றனர். இதில், சிறுவர்கள் பெரியோர்கள் உள்ளடங்கலாக 213 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அழிஞ்சிப் பொத்தானை எனும் கிராமத்தில், ஓர் நள்ளிரவில், ஆயுதங்களுடன் உட்புகுந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த மக்களை சுட்டும் வெட்டியும் கொன்று குவித்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 77.

முஸ்லிம் காலனி மக்களில் 56 பேர், புனித மக்கா நகருக்குச் சென்று தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு, பரிசுத்தமான நிலையில் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழிமறித்த புலிகள், அவர்கள் அனைவரையும் வாகனத்திலிருந்து இறக்கி, வரிசையாக நிறுத்தி வைத்து, கண்களையும் கைகளையும் கட்டி விட்டு, நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றனர். வாகனத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர். வடக்கில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, ஒரே இரவில், புலிகள் அச்சுறுத்தி வெளியேற்றினர். வெளியேற மறுத்தவர்களை அடித்துத் துன்புறுத்தினர். ஐம்பது ரூபா பணமும் ஒரு மாற்றுடையும் தவிர எதனையும் கொண்டு செல்ல முடியாது என்று நிபந்தனை விதித்தனர். தமது பூர்வீக மண், தமது வயல் நிலங்கள், தமது வீடுகள், சொத்து சுகங்கள், கோடிக்கணக்கான வர்த்தகப் பொருட்கள் அனைத்தையும் பறித்தெடுத்துக் கொண்டு அந்த வடபுலத்து முஸ்லிம்களை அகதிகளாக விரட்டியடித்தனர் இந்தப் புலிகள்.

மூதூரில், சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வரும் முஸ்லிம் இளைஞர்களை இனங்கண்டு, அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று, வரிசையில் நிறுத்தி வைத்து சுட்டுக் கொன்றனர். 25க்கும் அதிகமான துடிப்பான முஸ்லிம் இளைஞர்கள் இதன்போது படுகொலை செய்யப்பட்டனர்.வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 250 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது. அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும். இது தவிர, புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் போன்றோரின் தொகையும் அளப்பரியது.

400க்கு மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள், 113 முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், 50க்கு மேற்பட்ட முஸ்லிம் சிற்றூழியர்கள், 25க்கு மேற்பட்ட கல்வி நிருவாக சேவை அதிகாரிகள், 10 நிருவாக சேவை அதிகாரிகள் எனத் தொடரும் இப்பட்டியல், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருவறுத்த புலிகளின் குரூரத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுவப் போதுமானவையாகும்.

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை 5000க்கும் அதிகமாகும்.மன்னார் அரச அதிபர் மக்பூல், மூதூர் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மத், ஓட்டமாவடி உதவி அரச அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் வை. அஹ்மது, காத்தான்குடி உதவி அரச அதிபர் ஏ.எல். பளீல் போன்றோர் இத்தகைய முஸ்லிம் புத்தி ஜீவிகள் உயரதிகாரிகள் போன்றவர்களுள் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் எஸ்.எல்.ஏ.எஸ். மற்றும் எஸ்.எல்.ஈ.ஏ.எஸ். போன்ற நாட்டின் அதியுயா நிருவாகப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்து, மாவட்ட நிருவாக அதிகாரிகளாகக் கடமையாற்றிய மிகப் பெரும் முஸ்லிம் ஆளுமைகள். இவர்கள் மீதான புலிகளின் படுகொலைகள், முஸ்லிம் சமூகத்தின் மீது அவர்களுக்கிருந்த இனவெறியையும் குரூரத்தையுமே காட்டுகின்றன. இவை தவிர, புலிகளினால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய பொருளாதாரங்கள் என்பனவற்றின் மொத்தப் பெறுமதி 50 கோடிகளுக்கும் அதிகமானதாகும்.

ஒட்டுமொத்தமாக, படுகொலைகள் எனும் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட பாதகச் செயல்களின் மொத்த வடிவமே இந்தப் புலிகள் இயக்கமாகும். ஆரம்பத்தில் தமது சக போராட்டக் குழுக்களை அழிப்பதில் கவனம் செலுத்திய புலித் தலைவர் பிரபாகரன், அதன்பின், தனது போராட்ட நடவடிக்கைகளை மறுக்கின்ற, எதிர்க்கின்ற, மற்றும் நியாயம் பேசுகின்ற தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் கொன்றொழித்தார். துரோகம் என, தான் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு நியாயமும் கற்பித்தார்.அதன்பின், முஸ்லிம் சமூகத்திலிருந்த கல்விமான்கள், புத்திஜீவிகளையும் சமூக முன்னோடிகளையும் தேடித் தேடிக் கருவறுத்தார். முஸ்லிம்களின் பொருளாதாரங்களை சூறையாடினார். குறிப்பாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புலித்தலைவர் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு அவர்களை அகதிகளாக விரட்டி விட்டார்.

முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக நசுக்கியது போதாதென்று, கல்வி ரீதியாகவும் அவர்களை நசுக்க முனைந்தனர் புலிகள். தமக்கு ஆதரவாக உள்ள தமிழ் நிருவாக அதிகாரிகள் மற்றும் கல்வி நிருவாக சேவை அதிகாரிகளைக் கொண்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்து வந்த கல்வி வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்தெடுத்தனர். இதற்கும் மேலாக முஸ்லிம்களின் காணிகளையும் வயல் நிலங்களையும் பறிமுதல் செய்து, அதில் தமது ஆதரவாளர்களைக் குடியமர்த்தியதோடு முஸ்லிம்களின் வயல் நிலங்களில் தாங்கள் பயிர்களையும் விவசாயங்களையும் மேற்கொள்ளவும், அல்லது முஸ்லிம்களை விவசாயம் மேற்கொள்ள அனுமதித்து விட்டு, அறுவடைக் காலப்பகுதியில் அவர்களை அச்சுறுத்தி, பிரதேசத்துக்குள் வர விடாது தடுத்து தாங்களே அறுவடை செய்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ளவும் அவர்கள் நன்கு பழக்கப்பட்டுப் போயினர். முஸ்லிம்கள் தமது விவசாயத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த வாகனங்கள், அன்றாடப் பாவனைக்காக வைத்திருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் புலிகளினால் பறித்துச் செல்லப்பட்டுள்ளன. அவை ஒரு போதும் மீள ஒப்படைக்கப்பட்டது கிடையாது. ஜீரணிக்க முடியாமல் தமது வாகனங்களைத் தேடித் தமிழ்ப் பகுதிக்குள் செல்லும் முஸ்லிம்கள் திரும்பி வந்தால் சடலமாக வருவார்கள், அல்லது காணாமல் போவார்கள். இவ்வாறு அரசியல், கல்வி, அபிவிருத்தி, பொருளாதாரம், வர்த்தகம், நிலம் என எல்லா வகையிலும் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பேரிழப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் மற்றும் அவரது சகாக்களும்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு குரூரத்தையும் செய்து முடித்த பின்னும், பிரபாகரனை தேசியத் தலைவர் என்றும், புலிகள் விடுதலைப் போராளிகள் என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் சில இந்திய அரசியற் கட்சித் தலைவர்கள் குறித்தும் நாம் மிகவும் விசனங் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.தமது அற்ப அரசியல் நலன்களுக்காகவும், பிழைப்புவாதத்துக்காவுமே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி, புலிகள் கொல்லப்பட்டமையைக் கண்டித்தும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டமையை எதிர்த்தும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தி வரும் இவர்கள், சில காலங்களுக்கு முன்பு, புலிகளின் பாசிசவாதத்தினால் தமிழ் மக்கள் சுதந்திரமும் உரிமையும் இழந்து சிறைப்படுத்தப்பட்ட கைதிகள் போன்ற வாழ்ந்த போதும், புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எவ்வித நியாயமுமின்றிக் கொன்று குவிக்கப்பட்டு வந்த போதும் எங்கே போயிருந்தார்கள்?

உண்மையில் இவர்களது நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா? அல்லது தமது அரசியல் பிழைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு கொழுகம்பாகப் பயன்படுத்திக் கொள்வதா?எவ்வாறாயினும்,இத்தகைய குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட பிழைப்புவாத அரசியல்வாதிகளின் கைகளுக்குள் சிக்கி விடாமல், சுயமாகச் சிந்தித்து சொந்த புத்தியுடன் நடப்பதொன்றுதான், இந்தியத் தமிழ் மக்கள், இலங்கையிலுள்ள மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் செய்யும் பேருதவியாக அமையும்.
http://irukkam.blogspot.com/2010/06/blog-post_14.html