Wednesday, August 18, 2010

மதானி. குற்றமும்..பின்னணியும்..


மதானி எப்போதுமே தலைப்புச் செய்திகளில் இடம் பெறுபவர் என்பதால் கேரள அரசியல் தலைவர்களுக்கு மதானி என்றால் எப்போதுமே வேப்பங்காய்தான்.


கோவை குண்டு வெடிப்பில் செய்யாத குற்றத்திற்காக 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து மூன்றாண்டு முடிவதற்குள் மீண்டும் ஒரு சிறை வாசம் அவரை வா வா என அழைக்கிறது.


ஒரு மார்க்க அறிஞராக உலகத்தில் அறியப்பட்ட அப்துன் நாசர் மதானி அரசியல் தலைவராக தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்காக அரசியல் அரங்கில் அவர்களின் உரிமைக்காக போராட ஆரம்பித்ததுதான் அங்குள்ள பழம்பெருச்சாளி அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையாக வாய்த்தது என கூறுகிறார்கள்.


அப்துன்நாசர் மதானி 1965 ஆம் ஆண்டு அப்துஸ்ஸமத் மாஸ்டரின் மகனாகப் பிறந்தார். அடிப்படை கல்வி கற்றபின் கொல்லத்தில் உள்ள மதீனுல் உலூம் அரபிக் கல்லூரியில் மார்க்கக்கல்வி கற்றார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜாமியா நூரிய்யாவில் கல்வி கற்று முடித்த அவர் மார்க்கப் பிரச்சாரகராக மாறினார். அவரது உரை தென்பகுதி கேரளாவில் மிகவும் பிரபலமான ஒன்றாக பாராட்டைப் பெற்றது. அவரது உரையை கேட்க கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மக்கள் வெள்ளம் அணிதிரண்டது.

இதே காலகட்டத்தில் மதானி தனது தந்தையுடன் அன்வராசேரி அநாதை நிலையத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். 1987&ல் உருவாக்கப் பட்ட அன்வராசேரி அநாதை நிலையத்தில் இலவச மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும் வழங்கப்பட்டதால் அன்வராசேரி புகழ்பெறத் தொடங்கியது. மதானியின் அனல் பறக்கும் பேச்சால் அவருக்கு என தனியான கூட்டம் ஒன்று உருவாகியது. 1990ம் ஆண்டு இஸ்லாமிய சேவா சங்கம் என்ற அமைப்பினை தொடங்கினார்.
பாசிஸ ஆர்.எஸ்.எஸ்க்கு தனது இஸ்லாமிய சேவா சங்கம்(ஐ.எஸ்.எஸ்) அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்கும் எனக் கூறினார்.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட 1992ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதை அடுத்து மதானியின் ஐ.எஸ்.எஸ்யையும் மத்திய அரசு தடை செய்தது. அதனால் தளர்ந்து விடவில்லை. 1993ம் ஆண்டு கேரள மக்கள் ஜனநாயகக்கட்சி என்ற அரசியல் கட்சியை மதானி தொடங்கினார். ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான இயக்கம் இது என பிரகடனப்படுத்தினார். பல தேர்தல்களில் இடது சாரிகளுக்காக மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சி பாடுபட்டது. மதானியின் சொந்த மாவட்டமான கொல்லம் பகுதியில் மட்டும் மதானியின் செல்வாக்கு இருந்தது. முஸ்லிம்களின் வாக்குகளை கேரளாவில் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் லீக் அதிக அளவில் சேகரித்து வந்ததால் முஸ்லிம்& தலித்&பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் என்ற முழக்கத்தினை மதானி முன்னெடுத்தார்.

1998ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டார். முதலில் கேரள காவல்துறை அவரை கைது செய்து ஒருநாள் வைத்திருந்து தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தது. கோவையிலும் சேலத்திலும் 9 ஆண்டுகள் மதானி சிறையில் அடைக்கப்பட்டார். முதல் நான்கு ஆண்டுகாலம் மதானி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதானி உள்ளே தள்ளப்பட்டதால் ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் லீக் அமைப்புகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

மதானியை விடுவிக்க தொடக்க முதலே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் குரல் கொடுத்தது. சமூக நல அமைப்புகளின் தீவிர முயற்சியால் கேரள அரசியலில் மதானி விவகாரம் பலத்த அதிர்வினை ஏற்படுத்தியது.

மதானியை மனிதாபிமான முறையில் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கேரள சட்டமன்றம் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது.
கேரள அரசியல் தலைவர்கள் கோவை சிறையில் இருந்த மதானியை சந்தித்தனர்.
மதானியை விடுவித்தால் கேரளாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறிய காங்கிரஸும் ஒரு வழியாக மதானி ஆதரவு நிலைக்கு திரும்பியது.

ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மதானி குற்றமற்றவராக கோவை குண்டுவெடிப்பு வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். 40 வயதிலேயே தளர்ந்த உடல் நலத்துடன் வெறும் 40 கிலோ எடையுடன் மதானி விடுதலையானார்.

விடுதலையான மதானி பெரும் மக்கள் திரளுக்கிடையே வரவேற்கப்பட்டார். மாநில அமைச்சர்கள் அங்கே வீற்றிருந்தனர். பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மதானியை வரவேற்கும் விழாவில் பங்கேற்றனர். வரவேற்பு விழாக்கள் கேரள மாநிலம் எங்கும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. முஸ்லிம் லீக் செல்வாக்கு நிறைந்த கோழிக்கோடு பொன்னானி பகுதிகளில் கூட மதானி மிகுந்த மக்கள் வெள்ளத்துக்கிடையே வரவேற்கப்பட்டார்.

மதானியிடம் முன்பு இருந்த அனல்பொறி பேச்சை கூடியிருந்த மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மதானியின் மனப்பாங்கை சிறை வாழ்க்கை மாற்றியிருந்தது. கடந்த காலங்களில் தான் பேசிய வேகமான பேச்சுக்களுக்காக மதானி பகிரங்க மன்னிப்புக் கேட்டார். முஸ்லிம் & தலித் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது என்றும் முழங்கினார். உடல் பரிசோதனை மற்றும் சிகிக்சைக்கு பின் தீவிர அரசியலில் மதானி இறங்கினார்.

2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக களம் இறங்கினார் மதானி. இந்த தேர்தலில் மதானியின் வேட்பாளராக பொன்னானி தொகுதியில் போட்டியிட்ட ஹூஸைன் ரன்ததானி முஸ்லிம் லீகின் ஈ.டி.முஹம்மது பஷீரிடம் பெருவாரியான வாக்குகளின் வித்தியாசத்தில் தோற்றார். இடது சாரிகளுக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தோல்வி முதன் முதலாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மதானி கட்சியையும் தொற்றியது. மதானி&மார்க்சிஸ்ட்டுகள் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

தற்போது மதானி மீது பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதானியை கைதுசெய்ய கர்நாடக காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டுவரும் சூழலில் பிணை கோரி மதானி பெங்களூரு நீதிமன்றத்துக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கும் மனு செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தில் மதானி மீதான ஜாமீன் மனு உடனடியாக நிராகரிக்கப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் மதானி மீதான ஜாமீன் மனுவை ஆகஸ்ட் மூன்றாம் தேதி தள்ளுபடி செய்தது.

மதானியை கைது செய்ய தீவிரம் காட்டும் அளவுக்கு மாலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்படும் ஹிந்துத்துவ பெரும்புள்ளிகள் மீது பாயாதது ஏன்? என்ற கேள்வி இந்தியர்கள் அனைவர் உள்ளங்களில் எழுகிறது.

முக்கிய குற்றவாளியா?
மதானி பெங்களூரு குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி என சன்.டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது. மதானி குற்றம் சாட்டப்படுபவர் பட்டியலில் 31 வதாக சேர்க்கப் பட்டிருக்கிறார். 31-&வது நபர் எப்படி முக்கிய குற்றவாளியாவார்-? இது பொருத்தமற்ற ஒரு சொல் என்பது சராசரி அறிவுள்ளவனுக்கு கூட தெரியும். ஆனாலும் பெங்களூரு குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளி மதானி என்றே தொடர்ந்து ஊடகங்களில் வெளியிட்டு வரும் அறிவு சூன்யங்களை என்னவென்று சொல்வது?

நசீர் கைது செய்யப்பட்ட ஐந்து மாதத்திற்கு பிறகு குற்றப்பத்திரிகை :

பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் பொய் கூட இங்கு பொருத்தமாக சொல்லப்படவில்லை.
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட நசீர் மதானியின் பெயரை குறிப்பிட்டது எப்போது தெரியுமா? கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களுக்குப்பிறகு தான். இது நசீர் தானாக அளித்த வாக்கு மூலமா? வற்புறுத்தி, துன்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலமா? என்ற சந்தேகம் நடுநிலையாளர்களின் உள்ளங்களில் கனன்று எழுகிறது.

மதானி பற்றி கூறவில்லை - நசீர்

மதானிக்கும் பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக காவல் துறையினரிடம் கூறியதாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தை கொச்சி நீதிமன்றத்தில் நசீர் மறுத்தார். பெங்களூரு குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு இருப்பதாக தான் கூறவே இல்லை என்றார். இது எந்த வெகுஜன ஊடகத்திலும் வரவில்லை. கர்நாடக காவல்துறையின் குற்றச்சாட்டிலும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுவும் நடுநிலையாளர்கள் மனதில் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

மன்னிப்பு வழங்கியவருக்கு இந்த நிலையா?

1990ம் ஆண்டு மதானியை கொல்ல ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் சதி செய்தனர். மதானி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடந்ததில் மதானி தனது வலது காலை இழந்தார். ஆனால் அவர்களையும் மதானி மன்னித்து விட்டார். கோவை வழக்கில் இருந்து நிரபராதியாக வெளிவந்த மதானி தன்னை கொல்ல முயற்சித்தவர்களை மன்னிப்பதாக அறிவித்தார்.

நன்றி : மன்னடி

"எனது காலை உடைத்த ஆர்.எஸ்.எஸ். காரர்களை மன்னியுங்கள்"

"கைதியின் கதை" மதானி குறித்த ஆவணப்படம். அவர் அநியாயமாக கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் விசாரணைக் கைதியாக பிணை கூட மறுக்கப்பட்ட நிலையில் வாடியபோது, இது வெளியிடப்பட்டது. இந்த சுட்டியில் காணலாம்.

http://www.tmpolitics.net/tmmedia/madhani.htm

No comments: