Monday, August 2, 2010

விடுதலைப் புலிகளின் குரூர முகம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் தூள் தூளாக போனது இவர்கள் இருவரின் பதிவுகளையும் வாசித்த போது.. இதற்கு எதிர்மறையான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

நன்றி. ஸபீர் ‍ஹபீஸ்,சர்ஹூன்

விடுதலையின் பெயரால் நசுக்கப்பட்ட முஸ்லிம்கள்


இது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான ஒரு பதிவல்ல. ஒரு பாதிக்கப்பட்டவனின் புலம்பல் அல்லது வாக்குமூலம். இதில் உள்ள நியாங்களினை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்பது எனது திண்ணம்.
(சில விடயங்கள் மன்னிக்கப்படலாம் ஆனால் மறக்கடிக்கப்படமுடியாது)

தமிழ் விடுதலை, தமிழர் உரிமைகள் என அது தொடர்பில் பல விடயங்கள் எங்கும் எதிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இலங்கையில், இன அடக்கு முறைக்கு எதிராக, ஆயுதங்களினை கையில் ஏந்திய விடுதலை இயக்கங்களில், விடுதலைப்புலிகளின் அஸ்திவாரம் மிக உறுதியானது. இன்று தமிழர் விடுதலை என்றால், புலிகளினை தவிர்த்து நோக்க முடியாமல் இருக்கின்றது.

எந்த ஒரு அடக்குமுறைக்கு எதிராக இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்ட்த்தில் குதித்தார்களோ, அதே அடக்குமுறையினை இன்னொரு சமூகத்தின் மீது அவர்களின் கை ஓங்கி இருந்த காலத்தில் திணித்தார்கள் என்பது பற்றி அறிவீர்களா நண்பர்களே? அவர்கள் முஸ்லீம்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் முஸ்லிம்கள்.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சுமூக உறவு, விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பங்களில் ஆரோக்கியமாக இருந்தது. பல முஸ்லிம் இளைஞர்கள் தாமாகவே தம்மை விடுதலை இயக்கங்களில் இணைத்துக்கொண்டனர். ஆனால், பின்னர் ஏற்பட்ட சில பல கசப்பான அனுபவங்கள், பழிவாங்கல்கள் போன்றவற்றால் இறந்து போனது. அடித்தட்டு மக்களிடம், இன்னும் அவை சில சந்தர்ப்பவாதிகளாலும் இன்னும் தூபமிட்டு வளர்க்கப்படுகின்றது. அது அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் நன்மைக்கும் அமைவாக அமைந்தாலும், சில உண்மைகளினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் நான் பல தமிழக நண்பர்களினை சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவரதும் ஆதங்கம், ஈழத்தமிழ் உறவுகள் பற்றியதாக இருக்கும். அங்கு தமிழர்கள் படும் அவலங்கள், அழிவுகள் பற்றி எல்லாம் மிக மிக கவலையுடன் பகிர்ந்து கொள்வதைப்பார்க்கும் போது, எனக்குள் எழும் மற்றொரு கேள்வி- இதே இனப்பிரச்சினையால்,வேறொரு வகையில் பாதிக்கப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் பற்றி ஏன் ஒருவரும் கவலைப்படவில்லை? அவர்களின் அவலங்கள் வெளியுலகுக்கு தெரியாமல் இருட்டடிக்கப்படுகின்றனவா? என்பது போன்ற வினாக்கள் என்னை அரித்துக்கொண்டிருக்கின்றன.

உடுத்த ஆடைகளுடன் மட்டும் நிர்க்கதியானவர்களாக யாழினை விட்டு முஸ்லிம்கள் வெளியேறி 20 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்னும் அவர்கள் அகதிகளாக புத்தளம் எனும் ஊரில் வாழ்கின்றனர். யாழின் பொருளாதாரத்தில் அன்று முக்கிய பங்காளிகளாக இருந்த மக்கள் இன்று அகதிகள். இந்நிலைக்கு காரணம் யார்?

அடக்கு முறைக்கு எதிரான விடுதலைப்போராட்டம் என்பது, இன்னொரு இனம் மீதான திணிப்பா? யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்.
அதே போல், கிழக்கில் எத்தனை முஸ்லிம் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன? எதற்காக இறக்கின்றோம் என்பதனை அறியாமல் இறந்த உயிர்கள் எத்தனை? பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த போது கொலைவெறியாட்டம் நடத்தப்பட்டது.

ஏறாவூரில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். சிறு குழந்தைகள் பெண்கள் கோரமாக கொல்லப்பட்டனர். கர்ப்பிணிகள் வயிற்றினை கிழித்துக்கொல்லப்பட்டனர். கிறவல் குழி எனும் இடத்தில், விவசாயிகள் கைகள் கண்கள் கட்டப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டனர். இன்னும், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பிரதான ஜீவனோபாயமான விவசாயமும் விடுதலையின் பெயரால் கபளீகரிக்கப்பட்டிருக்கின்றன. பல நூற்றுக்கணக்கான வயல் காணிகள் “ மேய்ச்சல் நிலங்கள் “ என பிரகடனப்படுத்தப்பட்ட அடாவடித்தனங்களும் விடுதலை எனும் பெயரால் நிகழ்த்தப்பட்டன.

ஏறாவூர் மற்றும் காத்தான்குடி படுகொலைகள் பற்றி இன்று பேச யார் உள்ளார்கள். விடுதலை எனும் பேரில் அப்பாவிகள் மீது நிகழ்த்தப்பட்ட சில அக்கிரமங்களின் பதிவுகள் இவை.







http://www.youtube.com/watch?v=VwIq4dACsMo

இவைகளின் நினைவுகள் ஒவ்வொரு முஸ்லிம்களின் மனங்களிலும் இன்னும் உள்ளன. தமிழர்களுக்கு எப்படி, முள்ளிவாய்க்கல் மற்றும் இன்னும் பலவோ அப்படி முஸ்லிம்களுக்கும் ஏறாவூர்,காத்தான் குடி, கிறவல் குழி என பலவும் உண்டு என்பதையும் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் என்பது தமிழர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்பது புரியப்பட வேண்டும். அப்புரிதல் அரசியல் தவிர்ந்து மன ரீதியாக நிகழ்ந்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

அனைவரும் அவரவர் உரிமைகளுடன் மகிழ்சியாக வாழ வேண்டும் என்பதே எல்லோரது பிரார்த்தனையும், விட்ட தவறுகள் மேலும் எழாமல் பார்த்துக்கொள்வதும் எமக்கான கடமைகள் .
ஹ்த்ம்ல்">http://sarhoon.blogspot.com/2010/07/blog-post_05.ஹ்த்ம்ல்
======================================================
இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள்
சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள். ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே. புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே. புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே. எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர். அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

ஏறாவூர் நகரில், எல்லைக் கிராமங்களில், தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களின் கதவுகளை உடைத்து, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த புலிகள், அங்கு உறக்கத்திலிருந்த மக்களை சுட்டுக் கொன்றனர். கற்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே இழுத்தெடுத்து, சுவரில் அடித்துக் கொன்றனர். அன்று படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 201. இவர்களுள் கற்பழிக்கப்பட்ட யுவதிகளும், கழுத்தறுக்கப்பட்ட இளைஞர்களும் அதிகம். குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி புலிகளினால் இப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

காத்தான்குடி நகரில், பள்ளிவாயலொன்றில் தொழுகையிலிருந்த மக்களை புலிகள் புறமுதுகில் சுட்டுக் கொன்றனர். இதில், சிறுவர்கள் பெரியோர்கள் உள்ளடங்கலாக 213 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அழிஞ்சிப் பொத்தானை எனும் கிராமத்தில், ஓர் நள்ளிரவில், ஆயுதங்களுடன் உட்புகுந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த மக்களை சுட்டும் வெட்டியும் கொன்று குவித்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 77.

முஸ்லிம் காலனி மக்களில் 56 பேர், புனித மக்கா நகருக்குச் சென்று தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு, பரிசுத்தமான நிலையில் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழிமறித்த புலிகள், அவர்கள் அனைவரையும் வாகனத்திலிருந்து இறக்கி, வரிசையாக நிறுத்தி வைத்து, கண்களையும் கைகளையும் கட்டி விட்டு, நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றனர். வாகனத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர். வடக்கில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, ஒரே இரவில், புலிகள் அச்சுறுத்தி வெளியேற்றினர். வெளியேற மறுத்தவர்களை அடித்துத் துன்புறுத்தினர். ஐம்பது ரூபா பணமும் ஒரு மாற்றுடையும் தவிர எதனையும் கொண்டு செல்ல முடியாது என்று நிபந்தனை விதித்தனர். தமது பூர்வீக மண், தமது வயல் நிலங்கள், தமது வீடுகள், சொத்து சுகங்கள், கோடிக்கணக்கான வர்த்தகப் பொருட்கள் அனைத்தையும் பறித்தெடுத்துக் கொண்டு அந்த வடபுலத்து முஸ்லிம்களை அகதிகளாக விரட்டியடித்தனர் இந்தப் புலிகள்.

மூதூரில், சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வரும் முஸ்லிம் இளைஞர்களை இனங்கண்டு, அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று, வரிசையில் நிறுத்தி வைத்து சுட்டுக் கொன்றனர். 25க்கும் அதிகமான துடிப்பான முஸ்லிம் இளைஞர்கள் இதன்போது படுகொலை செய்யப்பட்டனர்.வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 250 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது. அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும். இது தவிர, புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் போன்றோரின் தொகையும் அளப்பரியது.

400க்கு மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள், 113 முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், 50க்கு மேற்பட்ட முஸ்லிம் சிற்றூழியர்கள், 25க்கு மேற்பட்ட கல்வி நிருவாக சேவை அதிகாரிகள், 10 நிருவாக சேவை அதிகாரிகள் எனத் தொடரும் இப்பட்டியல், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருவறுத்த புலிகளின் குரூரத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுவப் போதுமானவையாகும்.

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை 5000க்கும் அதிகமாகும்.மன்னார் அரச அதிபர் மக்பூல், மூதூர் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மத், ஓட்டமாவடி உதவி அரச அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் வை. அஹ்மது, காத்தான்குடி உதவி அரச அதிபர் ஏ.எல். பளீல் போன்றோர் இத்தகைய முஸ்லிம் புத்தி ஜீவிகள் உயரதிகாரிகள் போன்றவர்களுள் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் எஸ்.எல்.ஏ.எஸ். மற்றும் எஸ்.எல்.ஈ.ஏ.எஸ். போன்ற நாட்டின் அதியுயா நிருவாகப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்து, மாவட்ட நிருவாக அதிகாரிகளாகக் கடமையாற்றிய மிகப் பெரும் முஸ்லிம் ஆளுமைகள். இவர்கள் மீதான புலிகளின் படுகொலைகள், முஸ்லிம் சமூகத்தின் மீது அவர்களுக்கிருந்த இனவெறியையும் குரூரத்தையுமே காட்டுகின்றன. இவை தவிர, புலிகளினால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய பொருளாதாரங்கள் என்பனவற்றின் மொத்தப் பெறுமதி 50 கோடிகளுக்கும் அதிகமானதாகும்.

ஒட்டுமொத்தமாக, படுகொலைகள் எனும் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட பாதகச் செயல்களின் மொத்த வடிவமே இந்தப் புலிகள் இயக்கமாகும். ஆரம்பத்தில் தமது சக போராட்டக் குழுக்களை அழிப்பதில் கவனம் செலுத்திய புலித் தலைவர் பிரபாகரன், அதன்பின், தனது போராட்ட நடவடிக்கைகளை மறுக்கின்ற, எதிர்க்கின்ற, மற்றும் நியாயம் பேசுகின்ற தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் கொன்றொழித்தார். துரோகம் என, தான் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு நியாயமும் கற்பித்தார்.அதன்பின், முஸ்லிம் சமூகத்திலிருந்த கல்விமான்கள், புத்திஜீவிகளையும் சமூக முன்னோடிகளையும் தேடித் தேடிக் கருவறுத்தார். முஸ்லிம்களின் பொருளாதாரங்களை சூறையாடினார். குறிப்பாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புலித்தலைவர் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு அவர்களை அகதிகளாக விரட்டி விட்டார்.

முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக நசுக்கியது போதாதென்று, கல்வி ரீதியாகவும் அவர்களை நசுக்க முனைந்தனர் புலிகள். தமக்கு ஆதரவாக உள்ள தமிழ் நிருவாக அதிகாரிகள் மற்றும் கல்வி நிருவாக சேவை அதிகாரிகளைக் கொண்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்து வந்த கல்வி வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்தெடுத்தனர். இதற்கும் மேலாக முஸ்லிம்களின் காணிகளையும் வயல் நிலங்களையும் பறிமுதல் செய்து, அதில் தமது ஆதரவாளர்களைக் குடியமர்த்தியதோடு முஸ்லிம்களின் வயல் நிலங்களில் தாங்கள் பயிர்களையும் விவசாயங்களையும் மேற்கொள்ளவும், அல்லது முஸ்லிம்களை விவசாயம் மேற்கொள்ள அனுமதித்து விட்டு, அறுவடைக் காலப்பகுதியில் அவர்களை அச்சுறுத்தி, பிரதேசத்துக்குள் வர விடாது தடுத்து தாங்களே அறுவடை செய்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ளவும் அவர்கள் நன்கு பழக்கப்பட்டுப் போயினர். முஸ்லிம்கள் தமது விவசாயத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த வாகனங்கள், அன்றாடப் பாவனைக்காக வைத்திருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் புலிகளினால் பறித்துச் செல்லப்பட்டுள்ளன. அவை ஒரு போதும் மீள ஒப்படைக்கப்பட்டது கிடையாது. ஜீரணிக்க முடியாமல் தமது வாகனங்களைத் தேடித் தமிழ்ப் பகுதிக்குள் செல்லும் முஸ்லிம்கள் திரும்பி வந்தால் சடலமாக வருவார்கள், அல்லது காணாமல் போவார்கள். இவ்வாறு அரசியல், கல்வி, அபிவிருத்தி, பொருளாதாரம், வர்த்தகம், நிலம் என எல்லா வகையிலும் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பேரிழப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் மற்றும் அவரது சகாக்களும்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு குரூரத்தையும் செய்து முடித்த பின்னும், பிரபாகரனை தேசியத் தலைவர் என்றும், புலிகள் விடுதலைப் போராளிகள் என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் சில இந்திய அரசியற் கட்சித் தலைவர்கள் குறித்தும் நாம் மிகவும் விசனங் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.தமது அற்ப அரசியல் நலன்களுக்காகவும், பிழைப்புவாதத்துக்காவுமே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி, புலிகள் கொல்லப்பட்டமையைக் கண்டித்தும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டமையை எதிர்த்தும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தி வரும் இவர்கள், சில காலங்களுக்கு முன்பு, புலிகளின் பாசிசவாதத்தினால் தமிழ் மக்கள் சுதந்திரமும் உரிமையும் இழந்து சிறைப்படுத்தப்பட்ட கைதிகள் போன்ற வாழ்ந்த போதும், புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எவ்வித நியாயமுமின்றிக் கொன்று குவிக்கப்பட்டு வந்த போதும் எங்கே போயிருந்தார்கள்?

உண்மையில் இவர்களது நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா? அல்லது தமது அரசியல் பிழைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு கொழுகம்பாகப் பயன்படுத்திக் கொள்வதா?எவ்வாறாயினும்,இத்தகைய குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட பிழைப்புவாத அரசியல்வாதிகளின் கைகளுக்குள் சிக்கி விடாமல், சுயமாகச் சிந்தித்து சொந்த புத்தியுடன் நடப்பதொன்றுதான், இந்தியத் தமிழ் மக்கள், இலங்கையிலுள்ள மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் செய்யும் பேருதவியாக அமையும்.
http://irukkam.blogspot.com/2010/06/blog-post_14.html

3 comments:

RK Anburaja said...

போயாங்க

Mohamed Faaique said...

ரொம்ப நாளாக நான் எழுத நினைத்த விடயம். நல்லதொரு படைப்பு. ஆனாலும் மாற மண்டைகளுக்கு ஏறப்போவதில்லை. ....

THE UFO said...

பாலஸ்தீன மக்களுக்காக இந்திய முஸ்லிம்கள் கண்ணீர் வடித்தால் அவர்களுக்கு உலக பயங்கரவாதி பட்டம்.

காஷ்மீர் முஸ்லிம்களுக்காக இந்திய முஸ்லிம்கள் கண்ணீர்வடித்தால், அவர்களுக்கு தேசத்துரோகி பட்டம்.

குஜராத் முஸ்லிம்களுக்காக கண்ணீர்வடித்தால் கூட மதவெறி கொண்டவர்கள் தீவிரவாதி பட்டம் கொடுக்கின்றனர்.

இந்நிலையில்...

ஈழ முஸ்லிம்களுக்காக தமிழக முஸ்லிம்கள் கண்ணீர்வடித்தால் தமிழினத்துரோகி-நயவஞ்சகன் பட்டம்.

இத்தனைவருஷம் அடக்கிவைத்த இந்த கண்ணீரைக்கூடக்கூட புலிப்பாசிசம் ஒழிந்த பின்னால்தான் தைரியமாக விட முடிகிறது என்றால்...

பாசிச யூத-அமெரிக்காவைவிட, பாசிச இந்திய-ஹிந்துத்வாவை விட, தமிழ்தேசிய பாசிசம் அல்லது புலிப்பாசிசம் அபாயகரமானதாக இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது என்று புரிகிறது.

முஸ்லிம்கள் நிலை ஏனிப்படி இருக்கிறது?

சமீபத்திய கெட்ட உதாரணம்:

//கீற்று.காம் நடத்திய அத்தளத்தின் ஆறாம் ஆண்டு விழாவில் இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள் (பாதிக்கப்பட்ட சகோதரர்களின் வாக்குமூலங்கள்) அமர்வில் வாக்குமூலம் கொடுக்கவந்த இலங்கை இஸ்லாமியத் தோழர் ஒருவருக்கு தமிழ்மண்ணில் நிகழ்த்தப்பட்ட அவமானங்கள்.//

\\\\\

கீற்றுவில் அரங்கேறிய தமிழ்ப் பாசிஸம்!

http://www.luckylookonline.com/2010/07/blog-post_27.html

\\\\\

//போயாங்க//---போடாங்க...