Monday, March 8, 2010

குஜராத்திலிருந்து முஸ்லிம்களை துடைத்தெறிய முயலும் மோடி!


குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை பயங்கரவாத முதலமைச்சர் என்றே அழைக்கின்றனர். இவர் தலைமையில் அரசு அமைந்த நாள் முதல், குஜராத்தில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் வசித்து வருகிறார்கள் என்ற கணக்கெடுப்பை எடுத்து வருகிறார். இதற்கு முன்னர் 1999 ல் இவரது கணக்கெடுப்பை உயர்நீதி மன்றம் தடுத்து நிறுத்தியது. சட்டத்தை மீறுவது என்பது இந்துத்துவவாதிகளுக்கு வழமையான விடயம் என்பதால் இப்போது மீண்டும் துவங்கி விட்டார்.


இப்போது, முஸ்லிம்கள் எப்படி வாழ்கிறார்கள்? எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்கள் என்று கண்டறிய ஒரு விசாரணை கமிஷன் அமைத்து இருக்கிறார். இதேப் போல் மற்றொரு சிறுபான்மையினமாகிய கிறிஸ்தவர்களின் கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. இதனை 1949 ம் ஆண்டிலிருந்து துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த கணக்கெடுப்புகளின் நோக்கம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இல்லாத குஜராத்தை உருவாக்குவதே. மேலும் முஸ்லிம்களின் பொருளாதர நிலை குறித்து ஆய்வு செய்யவும் மோடி பணித்துள்ளார். நிலத்தை வாங்கி விற்பவர்களின் கூட்டமைப்பு கூட, முஸ்லிம்களுக்கு நிலத்தை விற்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுபோல அரசியல் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாமல் போனது ஏன்? என்று தெரியவில்லை. குஜராத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்களையும் கணக்கெடுக்கவும் மோடி அரசு தவறவில்லை.


இதற்காக மோடி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சேத்னா என்பவரை நியமித்துள்ளார். இந்த சேத்னா, 2004 ல் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை தீ வைத்து கொளுத்திய 21 பேரை ஒட்டு மொத்தமாக விடுதலை செய்தவர்.


குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜோஹ்புராவில் எந்த அடிப்படை வசதியும் செய்திடாமல் வதைத்து வருகிறார் மோடி. இந்துத்துவா சிந்தனையின் சோதனைக் களம் என்று வருணிக்கப்படும் காந்தி மண் காவிப் புழுதியால் மறைக்கப்பட்டு வருகிறது. குஜராத் முஸ்லிம்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் சூழ்நிலையில், தங்கள் இசுலாமிய அடையாளங்களை மறைத்து இந்து பெயர்களுடன் ஜீவித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். மேலும் சங் பரிவார்கள் ஊடகங்களில், குஜராத் சிறந்த நிர்வாகியால் ஆளப்படுவதாக பீலா விடுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதுவல்ல.


ஆதாரம். தி சண்டே இண்டியன்


No comments: