Tuesday, December 23, 2008

அரசியல்வாதிகளில் அந்துலே என்றொரு மானஸ்தன்

நாடாளுமன்றத்தில் நெறிக்கப்படும் உரிமைக்குரல்

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ.ஆர் அந்துலே, மராட்டிய மாநில தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்துலே தனது பதவியை சுய இழப்பு (ராஜினாமா) செய்யும் அளவுக்கு நிர்பந்திக்கப்பட்டார்.

இந்துத்துவ பாசிச சக்திகள் கர்கரேயின் மரணத்தால் மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த மகிழ்ச்சியில் மண் அள்ளிப்போடும் ஒரு கேள்வியைத் தான் அந்துலே எழுப்பினார். மராட்டிய மாநிலத்தின் மலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஸ்ரீ காந்த் புரோகித் என்ற ராணுவ அதிகாரி, அமிர்தானந்தா என்ற ஆண் சாமியார், பிரக்யாசிங் தாக்கூர் என்ற பெண் சாமியார் உட்பட 10 இந்துத்துவ தீவிரவாதிகளின் கூட்டுச் சதியைக் கண்டறிந்து கர்கரே தேசத்துக்கு வெளிப்படுத்தினார். இது, தீவிரவாதிகள் எல்லாம் முஸ்லிம்கள் என்று கூறிவந்த இந்துத்துவ பாசிஸ்டுகள் வயிற்றில் சயனைடை கரைத்தது.


முஸ்லிம்களின் கணக்கில் வரவு வைத்த சாமியார்களின் குண்டுவெடிப்புகளை சல்லடை போட்டு அலசியவர் என்பதால் கர்கரேயின் திடீர் மரணம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் தந்தது. தில்லி ஜாமியா நகர் துப்பாக்கி சூட்டில் முஸ்லிம் இளைஞர்களால் சுட்டு கொல்லப்பட்டார் என்று கூறப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சர்மாவின் சடலப் பரிசோதனை காவல்துறை அறிவித்த தகவலை புரட்டிப் போட்டது அனைவரும் அறிந்ததே. பின் மண்டையில் சுடப்பட்டு முன் நெற்றி வழியே துப்பாக்கி ரவை வெளியேறியதாக மருத்துவ அறிக்கை கூறியது.


இச்சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், காவல்துறை அதிகாரிகளை தீவிர வாதிகள் மட்டும் கொல்வதில்லை என்ற பூடகமான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. இந்துத்துவ சக்திகளால் கடுமையாக கண்டிக்கப்பட்ட கர்கரே தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறியிருந்தார். இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் மும்பை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை சாதகமாக்கிக் கொண்டு வேறு சக்திகள் கர்கரேயை கொன்றிருக்க முடியுமோ என்ற சந்தேகம் பரவலாக உள்ளது. இதையே அந்துலேயின் கேள்வியும் உறுதி செய்கிறது. மக்கள் மனதில் உள்ள எண்ணங்களையே தனது கேள்வி வெளிப்படுத்தியதாக அந்துலே கூறியுள்ளார்.


மும்பை நகரத்தை பயங்கரவாதிகள் தாக்கிக் கொண்டிருந்த போது அந்த பயங்கரவாதிகள் சுடும் இடத்தை நோக்கி மூன்று முக்கிய அதிகாரிகளை வழி நடத்தியது யார் என்று தான் நாடாளுமன்றத்தில் அந்துலே கேள்வி எழுப்பினார். இக்கேள்வியை எதிர்கொண்ட நேரத்தில் ஜனநாயகத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ஆவேசக் குரல் எழுப்பினர், வெளிநடப்பு செய்தனர். அவையில் குளறுபடி செய்ய இதனை ஒரு வாய்ப்பாக்கினர். தாவூத் இபுராஹிம், ஐ.எஸ்.ஐ. யின் கைப்பாவை என்றும் அந்துலேயை அவமானப்படுத்தினர். அந்த நேரம், லல்லு பிரசாத்தை தவிர வேறு யாரும் ஆதரவாக பேசவில்லை. காங்கிரஸில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மௌனிக்க, அதிலும் ஒரு கூட்டம் அந்துலேவுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பியது.


பிரதமர் மன்மோகன் சிங் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்துள்ளார். தனது கட்சியை சார்ந்த ஒருவர் அதுவும் குறிப்பாக, சிறுபான்மை நலத்துறை சார்ந்த அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு இருக்கும் உரிமை குறித்து பிரதமர், சபாநாயகர் முதலானோர் பேசாமல் இருந்தது கண்டிக்கத்தக்கது. தனது கட்சியே தனக்கு ஆதரவளிக்காததும், அதில் இருந்தே எதிர்ப்புக் குரல் எழுந்ததும், பிரதமரே மௌனமாக இருந்துள்ளதும், அந்துலே தனது பதவியை சுய இழப்பு (ராஜினாமா) செய்யக் காரணமாக அமைந்தது. கர்கரேயின் திடீர் மரணத்தால் சிறுபான்மை சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியில் குறைபாடு வந்து விடுமோ என்ற ஆதங்கம் சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு ஏன் வரக் கூடாது? இதைக்கூட கேட்காமல் பின்னர் எதற்காக அவர் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்க வேண்டும். அதே நேரம் கர்கரே பற்றி நரேந்திர மோடி கூறிய விமர்சனம் விவாதிக்கப்படுவதில்லை என்பதையும் கவனிக்க. மோடி விமர்சித்த காரணத்தால் அவர் வழங்கிய நிவாரண தொகையை கர்கரே மனைவி வாங்க மறுத்தது பற்றி விவாதிக்கப்படுவதில்லை.


பாபர் மஸ்ஜித் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படக்கூடாது என்பதற்காகவே இந்த வருடம் டிசம்பர் 6க்கு பிறகு நாடாளுமன்றத்தை கூட்டியிருக்கும் காங்கிரஸிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அமரும் பொதுக்கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை, மனக்குறைகளை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் தனது அமைச்சர் பொறுப்புக்கு ஏற்ப நடந்து கொண்ட அமைச்சர் அந்துலே பாராட்டுக்குரியவர்.சிறுபான்மை நலனுக்காக கேள்வி கேட்க முடியாத ஒரு பதவி தனக்குத் தேவையில்லை என்று பதவியை இழக்க முன்வந்துள்ளார் அந்துலே.


குலாம் மஹ்மூது பனாத்வாலா போன்ற உறுதிமிக்க அறிவுசார் முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசிய தருணங்களில் எல்லாம், பல கட்சியினர், அவர்களது உரையின் குரல்வளையை நெறிக்கப்பார்ப்பார்கள். இன்று முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக் கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே சிறுபான்மை உறுப்பினர்கள் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர். அதனால் அதிர்வுகள் அதிகரிக்கின்றன. அதே நேரம், கேள்வி கேட்டும் உரிமைகள், முஸ்லிம் சமூகத்திற்கு நாடாளுமன்றத்திலும் மறுக்கப்படுகிறது என்ற உண்மை அந்துலே வழியாக வெளிப்படுகிறது. அந்துலேவுடன் இணைந்து குரல் கொடுக்கவும் வெளிநடப்பு செய்யவும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை இருந்திருக்குமானால் பாசிஸ்டுகளின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் குரல்வளை நெறிக்கப்படுவதற்கு எதிராக முஸ்லிம் சமூகம் எழுச்சி பெற வேண்டும்

Thanks to TMMK website.

2 comments:

Anonymous said...

டெல்லி: மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே மரணம் குறித்து அரசு தெளிவுபடுத்தி விட்டது. இதுதொடர்பாக விசாரணை தேவையில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நான் விலக மாட்டேன். வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் வந்து எனது காலில் விழட்டும் என்று மத்தி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே கூறியுள்ளார்.

கர்கரே விவகாரம் தொடர்பாக அந்துலே எழுப்பிய சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் லோக்சபாவில் இன்று அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், கர்கரேவை கொன்றது தீவிரவாதிகள்தான். இதில் எந்த சதிச் செயலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து லோக்சபா கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த அந்துலேவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உள்துறை அமைச்சரின் அறிக்கை அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்தி விட்டது. சபையில் ஒரு அறிக்கையை உள்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார். அதை அனைவரும் நம்ப வேண்டும்.


ப.சிதம்பரம் தெளிவான விளக்கத்தை அளித்து விட்டதால் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கத் தேவையில்லை.

என்னைப் பொருத்தவரை விவகாரம் இத்துடன் முடிந்து விட்டது. எனது வேண்டுகோள் என்னவென்றால், விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே. விசாரணைக்குப் பின்னரே உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

நான் விலகும் பேச்சுக்கே இடமில்லை. அப்படிக் கோரும் எதிர்க்கட்சியினர் எனது காலைத் தொட்டுக் கும்பி விட்டு விட்டு கேட்கும். அல்லது பிரதமரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு அந்துலேவை நீக்குங்கள் என்று கூறட்டும்.

கர்கரே மரணம் தொடர்பாக சதி நடந்திருப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை. சந்தேகம் இருப்பதாகத்தான் தெரிவித்திருந்தேன் என்றார் அந்துலே

thatstamil


அந்தர்பல்டி அடிக்கும் இவனா மானஸ்தன்? யோசித்து எழுதுங்கள்

Anonymous said...

அந்துலே அய்யப்படுவதில் அர்த்தம் உண்டு



2008 செப்டம்பர் 29 ஒரு முக்கிய நாள் - அன்று தான் மகாராட்டிர மாநிலம் மாலேகாவ்ன் நகரில் குண்டு வெடிப்பு!

இந்தக் குண்டு வெடிப்புக்குக் காரணமாக இருந்தவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்த போது நாடே அதிர்ச்சிக்கு ஆளாகியது.

சிறீகாந்த் புரோகித் என்பவர் ஒரு இராணுவ அதிகாரி, அமிந்தானந்தா என்பவர் ஒரு சாமியார், பிரக்யாசிங் தாகூர் என்பவர் பெண் சந்நியாசினி - இவர்கள் உள்ளிட்ட பத்துப் பேர் கூட்டுச் சதியில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்பது வெளியில் வந்தபின் சங்பரிவார் வட்டாரத்தில் இடி விழுந்தது போல் ஆகி விட்டது.

அதுவரை பயங்கரவாதம், தீவிரவாதம் என்றாலே அதன் தலைப்புச் செய்தி முஸ்லிம் தீவிரவாதம் என்பதாகத் தானே இருக்கும்.

இந்தத் திட்டமிட்ட பிரச்சாரத்தின் முகமூடி இப்பொழுது கிழிந்து தொங்கும்படி ஆகிவிட்டதே என்ற போது அவர்களின் முகங்கள் வீங்கித் தொங்க ஆரம்பித்து விட்டன.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே வீராவேசத் துடன் சங்பரிவாரில் உள்ள ஒரு சிலர் நியாயவாதிகள் போலவும் சட்டத்தைக் காப்பாற்றும் சபாஷ் மனிதர்கள் போலவும் திருவாய் மலர்ந்தனர்.

சங்பரிவாரில் உள்ள ஆர். எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இந்தக் குரலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அதன்பிறகு இது ஒரு திட்டமிட்ட சதி - பொய்ப் பிரச்சாரம்! என்று அவர்களின் உதடுகள் அசைய ஆரம்பித்தன. சட்ட ரீதியான உதவி களை செய்வோம் என்று சொல்லி முன் வந்தனர்.

குற்றம் நிரூபிக்கப்படும் என்கிற அளவுக்கு ஆதாரங்கள் வலிமை பெற்று விட்டன என்ற ஒரு நிலை வந்த போது வெலவெலத்துப் போய் இந்துக்கள் குற்றம் செய்திருந் தாலும் அவர்களின்மீது விசாரணையே கூடாது என்கிற அளவுக்குக் கூசாமல் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

ஒருபடி மேலே சென்று சிவில் யுத்தம் தொடுப்போம்! என்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் பேசியிருக்கிறார்.

ஒகேனக்கல்லில் செய்தியா ளர்களிடம் (25.12.2008) பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இதுபற்றி ஒரு கருத்தை வெளியிட்டார் இப்படி சொல்வது எவ் வளவு பெரிய தேசியக் குற்றம். இதையே வேறு எவராவது சொல்லியிருந்தால் பூகம்பம் வெடித்திருக்காதா? ஊடகங்கள் ஊதிப்பெருக்கி உயிரை வாங்கியிருக்காதா? அவ்வாறு கூறியதற்குப் பிறகும் மத்திய அரசும்கூட மவுனமாகப் போனதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதிகாரர்களை வெளியில் கொண்டு வருவதில் முன்னணி மாமனிதராகயிருந்த மகாராட்டிர மாநில தீவிர வாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே அசோக் காம்தே, விஜய் சாலஸ்க்கர் ஆகிய மூன்று பேரும் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றால் அதிர்ச்சி ஒரு பக்கம், ஆவேசம் இன்னொரு பக்கம், அய்யப்பாடு மற்றொரு பக்கம் ஏற்படாதா? ஏற்படக் கூடாதா?

அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டுதான் மத்திய சிறு பான்மை நலத்துறை அமைச்சர் (மகாராட்டிர) மாநில முன்னாள் முதல் அமைச்சரும்கூட அப்துல்ரகுமான் அந்துலே (ஏ.ஆர். அந்துலே) நாடாளுமன் றத்திலே அர்த்தமுள்ள வினாக்கணை தொடுத்தார்.

காவல்துறையின் நேர்மையான அதிகாரி கர்கரேயைக் கொன்றது யார்? மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதியில் சம்பந்தப்பட்ட மதத் தீவிர வாதிகளை அப்படியே கொத்தாகக் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த அந்த அதிகாரியை காமா மருத்துவமனைக்குச் செல்லுமாறு வழி நடத்தியவர்கள் யார்?

மும்பையில் நவம்பர் 26-இல் (2006) பயங்கரவாரத் தாக்குதலுக்கு ஆளான தாஜ் ஓட்டலுக்கோ, டிரைடன்ட் ஒபாராய் ஓட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலை யத்துக்கோ நரிமன் இல்லத் துக்கோ செல்ல விடாமல், காமா மருத்துவமனை வளாகத்துக்கு அவர்களைச் செல்லு மாறு பணித்தவர்கள் அல்லது வழி காட்டியவர்கள் யார்? அந்த ஆணை எங்கிருந்து பிறப்பிக்கப்பட்டது? என்ற ஆழமான, அவசியமான, அய்யம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே அந்துலே வினா எழுப்பினார்; சந்து முனையில் அல்ல சாட் சாத் நாடாளுமன்றத்திலேயே அனல் கக்கினார்.

அவ்வளவுதான்! சங்பரிவார் கூட்டத்தின் அக்குளில் தேள் கொட்டியது போல குதியாட்டம் போட்டனர். தங்களுக்கே உரித்தான ஆத்திர விசையோடு நாடாளுமன்றத்தையே ரணகளமாக்கினர் - கடைசி ஆயுதமாக வெளிநடப்புச் செய்தனர்.

போதும் போதாதற்குக் காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளும் சேர்ந்து கொண்டனர். ஒரு லாலு பிரசாத் யாதவு்க்குத்தான் முதுகெலும்பு இருந்தது என்று நிரூபித்துக் கொள்ளும் வகையில் ஆதரவுக் குரலும் கொடுத்திருக்கிறார்.

பா.ஜ.க.வினர் உத்தம புத்திரர்கள் என்றால் அந்துலே சொல்வது முக்கியமானது. அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றுதானே பேசியிருக்க வேண்டும்.

யாரையும் குறிப்பிட்டுக் குற்றப் பத்திரிகை படிக்க வில்லையே அந்துலே! அப்படியிருக்கும்போது பா.ஜ.க.வினர் நெஞ்சம் மட்டும் ஏன் குறுகுறுக்கிறது? பொதுவான பழமொழி குற்றமுள்ள நெஞ்சுதான் குறு குறுக்கும் என்பதாகும். அப் படியானால் அவர்கள் குற்றவாளிகள்தான் என்ற அய்யப்பாடு அறிவைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படத்தானே செய்யும்.

கார்கரே படுகொலை செய்யப்பட்டது குறித்து பலப்பல தகவல்கள் முரண்பாடான தகவல்கள் குவிந்து கொண்டே யிருக்கின்றன.

1) தீவிரவாத எதிர்ப்பு போலீஸ் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே

2) என்கவுன்டர் ஸ்பெஷ லிஸ்ட் விஜய் சாலஸ்கர்.

3) உதவி ஆணையர் அசோக் காம்தே.

கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரிகள்மீது இந்துத்துவவாதிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி கருத்துக் களைக் கூறி வந்திருக் கிறார்கள்.

மூன்று பேரும் ஒரே இடத்திலே கொல்லப்பட்டனர் என்று தகவல்; இல்லை இல்லை வெவ்வேறு இடங் களில் கொல்லப்பட்டனர் என்பது மற்றொரு தகவல்: இந்த மூன்று அதிகாரிகளும் ஒரே காரில் சென்றபோது எப்படி வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டு இருக்க முடியும் என்ற நியாயமான சந்தேகம்.

விக்டோரியா டெர்மினஸில் கொல்லப்பட்டனர்; மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து தீவிரவாதிகள் சுட்டனர்.மக்கள் நடமாட்டமே இல் லாத ஒரு சந்தில் சுடப்பட்டார்கள் என்று மாறி மாறி தகவல்கள் வருகின்றன என் றால் நியாயமாக இதன்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பது தானே நியாயம்? அந்த நியாயத்தின் அடிப்படையிலே தானே அந்துலே வினாக்கணை தொடுத்தார். அவர் சிறுபான்மை முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் நியாயத்துக்காகக் குரல் கொடுக்க அவர் உரிமையற்றவர் ஆகி விடுவாரா? சரி அந்துலேக்கு மட்டும் தான் இந்த சந்தேகம் வந்துள்ளதா? கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தும் எவருக்கு இந்தச் சந்தேகம் வரத்தானே செய்யும். நடத்திருக் கக்கூடிய சூழல் முரண் பாடான தகவல்கள், கொல் லப்பட்டவர்கள் அதற்குமுன் யாரால் எப்படி விமர்சிக் கப்பட்டுள்ளனர் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா?

ஏதோ அந்துலே மட்டும் தான் கேள்வி எழுப்பியிருக்கிறார் என்றும் சொல்ல முடியுமா? காங்கிரஸ் கட்சி யின் பொதுச் செயலாளர் களுள் ஒருவரான திக்விஜய்சிங் அந்துலேயின் நிலையை ஆதரித்துள்ளாரே. சமாஜ் வாத கட்சியின் தலைவர் முலாயம்சிங், உ.பி. முதல் அமைச்சர் மாயாவதி, இந் தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் து.ராஜா எம்.பி., சி.பி.எம். கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சீதாராம் யெச்சூரி போன்றோர்களும் பா.ஜ.க.வை நோக்கி கேள்விக் குண்டுகளை வீசியெறிந்திருக்கிறார்களே!

சங்பரிவார்கள் கும்பலின் சூழ்ச்சிகளையும் கடந்த கால நடப்புகளையும் அறிந்தவர்கள், ஹேமந்த் கார்கரேயின் படுகொலையில் சந்தேகப்படுவது என்பது நூற்றுக்கு நூறு சரிதானே!

தேசப்பிதா என்று கருதப்பட்ட காந்தியார் படுகொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களே காணாமல் போய்விடவில்லையா?

வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்காக குறிப் பிட்ட சில பேர் கொலை செய்யப்படுவது, ஆவணங் களை அழிக்க அந்த ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் எரிப்பு என்பது போன்றவை எல்லாம் இதற்கு முன்நடந்ததில்லையா?

இந்தக் கண்ணோட்டத்தில் அந்துலே எழுப்பிய அய்யங்களுக்கு விடை காணப்பட வேண்டியது அவசியமே.

----------------- மின்சாரம் அவர்கள் 27-12-2008 "விடுதலை"