Friday, January 30, 2009

ஹிந்துத்துவப் பயங்கரவாதத்தின் முதல் பலி!

மகாத்மாவை கொன்றவர்களை நினைவில் வைப்போம்!-எஸ். கண்ணன்
Thanks to "rootsredindia.blogspot.com"

“மறந்து கொண்டேஇருப்பது மக்களின் இயல்பு நினைவூட்டிக் கொண்டேஇருப்பது வரலாற்றாசிரியரின் கடமை”

உலகப் புகழ் பெற்ற இடதுசாரி வரலாற்று ஆசிரியர் எரிக் ஹாப்ஸ்வாம் சொன்னதை மக்கள் இயக்கங்கள் சிரமேற்கொண்டு செய்ய வேண்டியுள்ளது. குஜராத் இனப்படுகொலை துவங்கி, கும்பகோணம் குழந்தைகள் சாவு வரை, மிகச் சாதாரண செய்தியாக வாசிக்கப்படுகிறது. இரண்டு மூன்று நாள்கள் உரையாடி வலியை குறைத்துக் கொள்வோராக பொது மக்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.


ஜன-30 மீண்டும் மீண்டும் நினைக்கப்பட வேண்டிய நாள். மகாத்மா காந்தியின் நினைவு நாள் என்று சொல்லப்படுவதை விட, மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் கொல்லப்பட்ட நாள் என்பதை நினைத்துப் பார்ப்பதே சரியானது. பழி உணர்ச்சியுடன் அல்ல, மீண்டும் கொடூரங்கள் நடந்து விடாமல் இருக்க. மகாத்மாவை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் கொலை செய்வதற்கு காரணமாக இருந்தது. அவர் கடைப்பிடித்த, பிரச்சாரம் செய்த “மதச்சார்பின்மை” கொள்கை ஆகும்.


மதச்சார்பின்மை என்ற வார்த்தை மதவெறி அமைப்புகளுக்கு எட்டிக்காயை விட கசப்பானதாக இன்றைக்கும் இருக்கிறது. “நம்முடைய கோழைத்தனத்தாலும், பயத்தாலும்தான் நாம் பிறரோடு மோதுகிறோம். நாம் நம்முடைய நிழலைக் கண்டு அஞ்சம் நிலைக்குத் தாழ்ந்து விட்டோமா? நம்முடைய மதத்தில் உண்மையான நம்பிக்கை வைத்திருந்தால் மற்ற மதத் தினர் நம் மதத்தை அழித்து விடுவார்கள் என்று அஞ்ச வேண்டியதில்லை!” என்று காந்தியடிகள் இந்து மதத்தின் சார்பில் கலவரத்தை தூண்டி யவர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.


இன்று வரை இந்துத்துவா அமைப்பினரின் பேச்சு காந்தி வருத்தப்பட்டதைப் போல்தான் இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்டு நடத்தப் பட்டுக் கொண்டிருக்கும், வெறியேற்றும் பிரச்சாரம் அது. சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிராக எல். கே. அத்வானியில் இருந்து கீழ்மட்டத் தலைவர்கள் அனைவரும் பேசுவது சமீபத்திய உதாரணம். 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒற்றுமை உணர்வு மேலோங்கி இருந்ததாலும், காந்தி, நேரு போன்றோர் உறுதியாக இருந்ததாலும் மேற்படி இஸ்லாமியர்கள் மீதான அவதூறு பிரச்சாரம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு உடனடியாக கைகூடவில்லை. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெறும் தேர்தலில் அவதூறு பிரச்சாரம் கைகொடுத்துள்ளது. விளைவு ஆய்வுக் கூடங்களை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


குஜராத் மாநிலம் டங்ஸ் மாவட்டத்தில் கிருத்துவர்கள் மீதான தாக்குதலைத் தொடுத்தனர். அதே வடிவத்தை இப்போது ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில் அரங்கேற்றி, “ஒரிசா எங்களது அடுத்த ஆய்வுக்கூடம்” என ஒப்புதல் வாக்கு மூலம் தந்துள்ளனர். ஒப்புதல் புதிதல்ல குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது, வழக்கறிஞர் சிராபுதீனை என் கௌண்டரில் கொல்லச் சொன்னது உண்மை, என்று நரேந்திர மோடி பகிரங்கமாக பொதுக் கூட்டங்களில் பேசினார். 2007, அக்டோபர் இறுதியில், தெஹல்கா வீடியோ பத்திரிக்கை, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. பா.ஜ.க, போன்ற இந்துத்துவா அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஒப்புதல் வாக்கு மூலத்தை பதிவு செய்து வெளியிட்டது. வெறி கலந்த மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தனர்.. திட்டமிட்டோம், அரசு அதிகாரத்தை, அதிகாரிகளைப் பயன்படுத்தினோம், கொலை செய்தோம், பாலியல் கொடுமைகளை களிப்புடன் நடத்தினோம்,” என பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.


“நான் நாதுராம் விநாயக் கோட்ஸே பேசுகிறேன்” என்ற நாடகத்தின் மூலம், காந்தியைக் கொன்றது நியாயமானதே, என்ற பிரச்சாரத்தை 1993, நவ-15 கோட்ஸேயின் நினைவு நாளில், திட்டமிட்டு செய்தனர். குஜராத் மாநில பாடப்புத்தகத்தில் காந்தி இந்து மதத்திற்கு எதிராக இருந்ததால், கோட்ஸே கொன்றார் என எழுதி வைத்துள்ளனர். கோபால் கோட்ஸே 1995ம் ஆண்டு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நாது ராம் கோட்ஸே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்தவன், ஆர்.எஸ்.எஸ். இயக் கத்தினால் திட்டமிட்டு தான் காந்தி கொலை செய்யப்பட்டார் என கூறியுள்ளார்.


கோட்ஸேக்கும் எங்களுக்கும், சம்பந்தமில்லை என்று பசப்பு வார்த்தைகள் பேசி வந்த ஆர்.எஸ்.எஸ் திடீரென்று 1990க்குப்பின் திட்டமிட்டு காந்தியின் கொலையை நியாயப்படுத்துவது எதனால்? காரணம் காந்தி கொல்லப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அப்போது தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்று “ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார இயக்கம்” என்று நீதி மன்றமே சொல்கிறது. எனவே ஆர்.எஸ்.எஸ்ற்கும், அதன் அமைப்பு களுக்கும் ஒப்புக்கொள்ளும் தைரியம் வந்து விட்டது. காந்தியைக் கொன்ற கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கிய இடத்தில், காவிப்பல் காட்டி நீதி வழங்கும் நீதிபதிகளும் வந்து விட்டனர்.


ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்க வேண்டும் என்பதற்காக அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலிடம் “அரசியலைத் துறந்து வெறும் கலாச்சாரப் பணியை மட்டுமே செய்வோம்”, என அன்றைய ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் எழுதிக் கொடுத்தனர். ஆனால் அரசியல் இயக்கங்களில் மட்டுமல்லாமல், பல்வேறு அமைப்புகளிலும், நிர்வாகங்களிலும் பங்கேற்றனர்.1961 முதல் 70க்குள் மிகப் பெரிய மதக் கலவரங்களை நடத்தினர். இதன் காரணமாக கட்சி சார்பற்ற ஒரு குழு, பாராளுமன்ற உறுப் பினராக இருந்த திருமதி. சுபத்ரா ஜோஷி தலைமையில் அமைக்கப்பட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்த இளைஞர்கள் அனைவருமே, “ஆர்.எஸ்.எஸ். பலாத்கார பாசிச மதவெறி சங்கம் தான்” என்று ஒப்புக் கொண்டனர். “சிறுபான்மை மதங்களை வெறுக்கவும், தூஷிக்கவும் கற்றுத் தருவதே, இவர்களுக்கான முதல் வேலை”, என குறிப்பிட்டனர். இப்படி தொடர்ந்து ஒப்புக் கொள்வதன் மூலம் அச்சத்தை நிலை நாட்ட முயற்சிக்கின்றனர்.


1948 ஜன-30-ல் காந்தியை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ், தனது கொலை வெறியை நிறுத்திக் கொள்ளவில்லை. அன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், பசுவதைத் தடைச் சட்டம் கோரி ஆர்.எஸ்.எஸ்.இந்து சாமியார்கள் நடத்தப் போகும் ஆர்ப்பாட்டதைக் கண்டித்ததோடு, இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் இந்து பாசிசவாதிகளால் இந்திய அரசின் மதச்சார்பற்ற கொள்கைக்கே பங்கம் வந்து சேரும் என்பதை விவரித்து கண்டித்துள்ளார். இதற்காக 1966 நவம்பர் 7ம்தேதி, சூலாயுதம், வேலாயுதம், குண்டாந்தடி, கத்தி போன்ற ஆயுதங்களுடன், காமராஜரின் வீட்டை அடித்து தீ வைத்து கொளுத்தினர். காமராஜரின் இல்லத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அவரை பின்புற வாசல் வழியாக தப்பிச் செல்ல வைத்தனர். அதே 1966-ல் இந்திரா காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் துணை அமைப்புகள் வெளியிட்ட கருத்துக்கள் சகிக்க முடியாத கொடுமையாகும்.


“ஒரு பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் விதவையான இந்திரா காந்தி பிரதமராகி உள்ளது, இந்து கொள்கைக்கும், மரபுக்கும் இசைந்ததல்ல”, என்று ஆர்கனைசர் ஏட்டின் 03-06-1966, தேதிய இதழ் குறிப்பிடுகிறது. 33 சத இடஒதுக்கீடு குறித்து எப்போதாவது பேசுகிற ஜெயலலிதாவுக்கு இது புரிய, தெரியவில்லை.


காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவரைக் கொன்றவர் முஸ்லீம் என்ற வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து கலவரத் தீ நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் சில நகரங்களில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். உடமை அழிப்பிற்கும் ஆளானார்கள். பின்னர் அரசு, வானொலி மூலம், “காந்தியாரை சுட்டுக் கொன்றது முஸ்லீம் அல்ல, இந்து பிராமணன் என்று தொடர்ந்து அறிவிப்பு செய்து கலவரத்தை அடங்கியுள்ளனர். பெரியார் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார். மதச்சார் பின்மையை பாதுகாக்கும் தமிழகத்தின் இத்தகைய பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டியுள்ளது.


ஹிட்லர் பாணி பிரச்சாரம் இந்தியாவில் சில இஸ்லாமியத் தீவிரவாதிகள் செய்கிற தவறைப் பயன்படுத்தி, மொத்த சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கிற செயலை, திட்டுமிட்டு இந்துத்துவா அமைப்புகள் செய்து வருகின்றன. தீவிரவாதத்தின் வேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும், என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஒரு நபரின் தீவிரவாதச் செயல், பல அப்பாவிகளின் சாவுக்கு துணை போகிறது.


கோட்ஸே என்கிற இந்து மத தீவிரவாதி காந்தியைக் கொன்றதற்கும், இஸ்லாமிய அடையாளம் கொண்ட தீவிரவாதி வைத்த வெடிகுண்டில் மனித உயிர்கள் பலியான சம்பவத்திற்கும் வித்தியாசம் இல்லை. இரண்டுமே மன்னிப்பை கடந்த குற்றம். இத்தகைய சம்பவங்களை இந்து மதவெறி அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ்-சும் தங்களுக்கு சாதக மாக்கிக் கொள்ள முனைகின்றன. எனவே “மத வெறி கொண்ட எதேச்சதிகாரமான ஒரு பாசிச அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.” என்று காந்தி குறிப்பிட்டதை நினைவு கூர்வோம்.


மதவெறி மாய்ப்போம்! தீவிரவாதம் ஒழிப்போம்!





1 comment:

Anonymous said...

மங்களூர், ஜன. 30- மங்களூரில் மகளிர்மீது தாக்குதல் நடத்திய இந்து மதவெறி அமைப்பான ராமசேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் மீது 45 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 17 ஆம் தேதியன்று அவர் பேசிய பேச்சு தற்போது வெளிவந்துள்ளது. இந்து தரும ஜாக்ருதி சபை கூட்டத்தில் அவர் பேசும்போது மாலேகாவ்ன் சம்பவம் பின்னாலே இந்த நாட்டில் நடக்கவிருக்கும் சம்பவங்களுக்கான முன்னோடி எனவும், இந்துக்கள் ராணுவ அவதாரம் எடுத்திட வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் பேசியிருக்கிறார்.

மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதியில் ஈடுபட்ட சாத்வி பிரக்யாசிங் தாக்கூரின் செயலைப் பாராட்டிப் பேசியதுடன், அவர் போல பல பிரக்யாசிங்குகள் ஒவ்வொரு இந்து வீட்டிலும் தோன்றப் போகிறார்கள் என்றும் வெறித்தனமாகப் பேசியிருக்கிறார்.

ஒவ்வொரு தாய்மாரும் சமையல் கருவிகளுக்குப் பதில் வெடிகுண்டுகளை ஏந்தினால், என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று அவர் குறிப்பிட்டபோது, கூட்டத்தினர் அரகர மகாதேவா என்று கூச்சல் போட்டனராம்.

இவ்வாறு பேசுவதற்கு நான் ஏன் பயப்படவேண்டும்? எனக் கேட்டு மதவெறித்தூண்டுதல் பேச்சை நிகழ்த்தியிருக்கிறார்.

ராமசேனாவின் துணை அமைப்பான இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பு தர்ம சக்தி சேனா என்ற அமைப்புக்கு இளைஞர்களைச் சேர்த்து வருகிறது. இதற்கான கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு அவற்றில் பல்வேறு கொலைக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன எனும் செய்தி இவர்களின் நோக்கம், செயல் ஆகியவற்றைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் தெரிவிக்கிறது.

துணித்திரைகளால் சுற்றிலும் மறைக்கப்பட்ட இடத்தில் கமுக்கக் கூட்டம் நடந்துள்ளது.

இதில் பா.ஜ.க. உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் யோகிஷ் பட், பெஜாவர் மடத்தலைவர் உடுப்பி விஸ்வேஷ தீர்த்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதேபோன்ற ஒரு கூட்டத்தை ஜனவரி 11 இல் கூட நடத்தியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்கள் வெளிப்படையாகச் சல்லடம் கட்டிவிட்டனர்!
http://files.periyar.org.in/viduthalai/20090130/news02.html Posted by சிந்திக்க உண்மைகள்.