Friday, July 16, 2010

இந்துத் தீவிரவாதிகளுடன் தொடர்பு; CBI கண்காணிப்பில் RSS



ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த அஷோக் பெர்ரி, அஷோக் வர்ஷ்னே ஆகிய இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவ்விருவரும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியாகிய தேவேந்தர் குப்தாவுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.


புலனாய்வுத் துறை கண்காணிப்பில் இருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இரு மூத்த செயல்வீரர்களின் விசாரணை அறிக்கை, தற்போது CNN-IBN நிருபர்கள் கைவசமுள்ளது. முக்கியக் குற்றவாளியோடு அவ்விருவருக்கும் தொடர்புள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆயினும், ஆர்.எஸ்.எஸுக்குப் புதிய தலைவலியாக இப்போது உருவாகியுள்ளவர் அதனுடைய தலைமைச் செயற்குழுவின் உறுப்பினரும் மூத்தத் தொண்டருமான இந்திரேஷ் குமார் என்பவராவார். இவருக்குத் தீவிரவாதச் செயல்களோடு தொடர்புடைய பல குற்றவாளிகளோடு நெருக்கமுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் இந்தோரில் உள்ள 12 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்டு அப்பன்னிருவரும் தற்போது புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களும் இந்திரேஷுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


ஸீபிஐ எனும் புலனாய்வுத்துறை இத்தகவல்களை வெளியே விடாமல் இருப்பதற்கு எவ்வளவோ முயன்றும் இத்தகவல் இப்போது கசிந்து வெளிவந்திருப்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிகப் பெரும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என்பதால் சென்ற வாரம் ஆர்.எஸ்.எஸின் உயர்மட்டத் தலைவர்கள் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டும் கட்டாயத்துக்குள்ளாயினர்.
கூட்டத்திற்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், "சங் பரிவாரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்" என்று வாக்குறுதியளித்தார்.


"நாங்கள் எவ்வித விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால், அதில் எங்களைக் களங்கப் படுத்தும் முயற்சியோ முறைக்கேடோ இருக்கக் கூடாது" என்று ராம் மாதவ் நிபந்தனை விதித்திருக்கிறார்.


2007ஆம் ஆண்டு மே 18 அன்று ஹைதராபாத் பழைய நகரப் பகுதியிலுள்ள மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் 9 பேர் மாண்டனர். குண்டு வெடிப்பு என்றால் உடனேயே கைது செய்யப் படுவதற்கு முஸ்லிம்களுக்கா பஞ்சம்? "மஸ்ஜிதில் குண்டு வைத்தவர்கள்" என்பதாகக் கூறி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷுஹைப் ஜகிர்தர், அவரின் மருமகன் இம்ரான்கான், முஹம்மது கலீம், அப்துல் மஜீத் என்ற நால்வரைக் கைது செய்து வழக்கு ஜோடித்தது காவல்துறை. வழக்கு நடந்தது. காவல்துறையின்மீது காறித் துப்பாத குறையாக, "நால்வரும் அப்பாவிகள்" என நீதிபதி தீர்ப்பளித்து விடுவித்தார்.


அதற்கு முன்னரே, மக்கா மஸ்ஜித் வழக்கை ஸீபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என நாடு முழுதும் கோரிக்கைக் குரல் உயர்ந்தது. மஸ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்திலும் தவ்ஹீது ஜமாஅத் போராட்டம் நடத்தியது. முதலாவது நாடகம் முடிவுக்கு வந்தது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு ஸீபீஐயிடம் ஒப்படைக்கப் பட்டது.
இப்போது, அந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, ஏற்கனவே கைதாகியுள்ள தேவேந்திர குப்தாவுக்கு அதே குண்டு வெடிப்பில் வர்ஷனேயும் பெர்ரியும் முழு ஒத்துழைப்பு நல்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு ஜூன் 21முதல் ஜுன் 25வரை வர்ஷ்னே, பெர்ரி மற்றும் தேவேந்திர குப்தா ஆகிய மூவர் மீதும் ஹைதராபாத்தைச் சேர்ந்த புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தினர்.


இவ்விசாரணையின்போது மூவரும் தாங்கள் ஒருவரையொருவர் நன்கு தெரிந்தவர்கள்தாம் என்பதை ஒப்புகொண்டதோடு, தாங்கள் கான்பூர், அயோத்தி, மற்றும் ஃபைஸாபாதில் தனியாகச் சந்தித்ததையும் வெளிபடுத்தியுள்ளனர். ஆயினும் வர்ஷ்னேவும் பெர்ரியும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புச் சதியில் தங்களிருவருக்கும் பங்கில்லை என்று மறுத்தனர்.
விடை காணமுடியாத வினாக்கள்:


"ஆர்.எஸ்.எஸ் காரர்கள்மீது விசாரணை ஏதும் நடக்கவில்லை" என்று ஸீபீஐ புலனாய்வுத்துறை மூலம் தொடர்ந்து அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் காரர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டது உண்மை; அந்த விசாரணையின் ஆவணங்கள் தங்கள் கைவசம் உள்ளன என IBN-CNN நிருபர்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர். இந்த முரண்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஸீபீஐயின் 'விசாரணை முறை'யைப் பற்றிப் பல கேள்விகள் எழுகின்றன:


முதலாவதாக, குண்டு வெடிப்புடன் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி தேவேந்திர குப்தாவின் முன்னிலையில் வைத்து ஆர்.எஸ்.எஸ் காரர்களான வர்ஷ்னேயும் பெர்ரியும் விசாரணை செய்யப்பட்டது ஏன்?


தேவேந்திர குப்தாவிற்கு இவ்வருவரும் ஸிம் கார்டு மற்றும் தங்குமிடம் போன்ற இதர முக்கிய வசதிகள் ஏற்பாடு செய்தபோது, அவருடைய குற்றப் பின்னணி இவ்விருவருக்கும் தெரியாதா?


இந்தோரில் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ள ஆர்.எஸ்.எஸ் காரர்கள், மாலேகாவ் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸாத்வீ பிரக்யா தாகூரோடு தொடர்புடையவர்களா?
ஆர்.எஸ்.எஸ்ஸின் மடியில் கனமில்லை என்றால் அவர்களது உயர்மட்டத் தலைவர்களின் அவசரக் கூட்டங்கள் தில்லியிலும் இராஜஸ்தானிலும் நடைபெற வேண்டிய கட்டாயம் என்ன?


இந்துத்துவத் தீவிரவாதம் என்பதை மத்திய அரசு இந்நேரம் பார்த்து வெளிக்கொணர்வது, தம் தொண்டர்களைச் செயலிழக்கச் செய்யப்படும் உத்தி என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் இப்போதைய அச்சங் கலந்த குற்றச்சாட்டு. அதன் தொண்டர்கள் தீவிரவாதிகளோடு கலந்து களத்தில் நிற்பதைக் கண்ணாரக் கண்டு கொண்டே அந்த யதார்த்ததை அச்சம் எனும் முகமூடியைப் போட்டு மூடிக் கொள்ளப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்.
கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசுகின்ற சங்பரிவார், தீவிரவாதிகளுடனான இந்திரேஷ் குமாரின் தொடர்பை வெளியிட்ட ஐபிஎன்-ஸீஎன்என் தொலைக்காட்சி நிலையத்தைத் தாக்குவதற்காகத் தன் தொண்டர்களை இன்று அனுப்பி வைத்துத் தன் உண்மை முகத்தைச் சற்றே வெளிக்காட்டியுள்ளது.


எவ்வாறாயினும், தீவிரவாதப் பின்னணி உள்ளவர்களோடு எந்த மாதிரியான அணுக்கத்தைக் கடைப்பிடிப்பது? என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரம் எதிர் நோக்கும் தற்போதைய தலையாயக் கேள்வி.


நன்றி : இந்நேரம், ஐபிஎன

சத்தியமார்க்கம் .

Wednesday, July 7, 2010

கேள்விக்குறியாகும் பத்திரிகைகளின் நேர்மை!



தாமதிக்கும் நீதி மறுக்கப்படும் நீதி' என்பது வழக்காடு மன்றங்களில் வழக்கமாக ஒலிக்கும் பிரபலமான சொலவடை.

ஆனால், அனேக நிகழ்வுகளில் முஸ்லிம்களுக்கான நீதி தாமதப்படுத்தப்பட்டே வந்துள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் முஸ்லிம்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் ஏன் உலகம் முழுவதிலும் இதுதான் வழமையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சுமார் 300 ஈரானிய பயணிகளுடன் வானில் பறந்த பயணிகள் விமானத்தை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் சுட்டு வீழ்த்தி கடலில் மூழ்கடித்ததை 22 வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாக தற்பொழுது அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழகத்திலும் கூட 13 ஆண்டுகளுக்கு முன் எவ்வித ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டு, 13 வருடங்களாக பிணையும் மறுக்கப்பட்ட குணங்குடி ஹனீபா சென்ற மாதம் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

ஆக முஸ்லிம்களை கைது செய்து சிறையில் தள்ளுவதில் காட்டப்படும் வேகம், அவ்வழக்கை நடத்துவதிலோ, முறையான ஆதாரங்கள் இல்லையென்பதனை ஒப்புக் கொள்வதிலோ, அவர்களை விடுதலை செய்வதிலோ காட்டப்படுவதில்லை.

காவல்துறையினரின் இத்தகைய அதிகார துஷ்பிரயோகங்களை தட்டிக் கேட்க வேண்டிய பத்திரிக்கையாளர்களின் செயல்பாடு அனைத்தையும் விட மோசமானதாக உள்ளது.

ஒரு சம்பவம் நடைபெறும் பொழுது, அது குறித்த முதற்கட்ட விசாரணை கூட முடிவு பெறாத நிலையில் காவல் துறையினரின் கற்பனையில் உதித்கும் இயக்கத்தோடு முடிச்சுப் போட்டு முழுக் கதையையும் எழுதி முடிவுரையையும் எமுதத் துணிந்து விடுகின்றனர்.

இவ்வாறு தான் உருவாக்கிய கருத்துருவாக்கத்திற்கு மாற்றமான செய்தியோ, தீர்ப்போ வெளியானால், தான் வெளியிட்ட முந்தய செய்திக்கு மறுப்போ, வறுத்தமோ தெரிவிக்கவும் முன்வருவதில்லை.

"இந்துத்துவா' சார்பு பத்திரிக்கைகள் மட்டுமல்ல, 'த ஹிந்து' பத்திரிக்கையும் கூட இந்த நடைமுறையைத் தான் கடைப்பிடிக்கிறது.

பொதுவாக 'த ஹிந்து' பத்திரிக்கை குறித்து அவர்களுடைய நேர்மை குறித்து – 'அவர்கள் மரண அறிவிப்பு விளம்பரம் கொடுத்தால் கூட மரணச் சான்றிதழ் காட்டினால் தான் பிரசுரிப்பார்கள்' - என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அங்கும் சில காவியாடுகள் நுழைந்து விட்டன போலும்.

மாவீரன் ஹேமந்த் கர்கரேவின் தீவிர புலனாய்விற்குப் பின்னர், நாட்டில் நடைபெற்ற ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பின்னணியிலும் ஹிந்துத்துவ சக்திகள் செயல்படுவதை நாட்டு மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். அந்த வகையில் 2007 மே மாதம் நடைபெற்ற ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகி தற்சமயம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஆனால், 2007 அக்டோபர் 15 இல் வெளியான ஹிந்து பத்திரிக்கை 'இஸ்லாமிய தீவிரவாதத்தின் சவால்' என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியது. அதில் 'அஜ்மீரிலுள்ள ஹாஜா மொய்னுத்தீன் சிஸ்தி தர்ஹா தீவிரவாத தாக்குதலைப் போலவே ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் ஹர்க்கத் அல் ஜிஹாத் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் சுட்டிக் காட்டப்படுகிறது.
கடவுளின் படைப்பினங்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த பிரச்சாரம் மேற்கொண்ட துறவிகளின் மடங்களையே தகர்க்கத் துணிந்தவர்கள், மனித குலத்தையே வெறுப்பவர்கள் எத்துணை அபாயகரமானவர்கள். இத்தகைய கொடூர தாக்குதலை நடத்துபவர்கள் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷி முஹம்மது மற்றும் ஹக்கத் அல் ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் என விசாரணை அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்'.
ஒரு பத்திரிக்கையின் தலையங்கம் என்பது அப்பத்திரிக்கையின் தரத்தை நிறுவக்கூடியதாகும். இத்தலையங்கம் அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் சம்பவங்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தான் காரணம் என அறுதியிட்டுக் கூறியுள்ளது.

விசாரணையின் நோக்கத்தை திசை திருப்பி விடும் பாசிச ஹிந்துத்துவ சக்திகளின் உத்தி. இதற்காகவே பயிற்சியளிக்கப்பட்ட பலரை பத்திரிக்கை உலகில் இந்துத்துவாவாதிகள் ஊடுருவ விட்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் 'த ஹிந்து' பத்திரிக்கையின் தீவிரவாத சிறப்பு செய்தியாளர் திரு.ப்ரவீன் ஸ்வாமி.




இந்த பிரவீன் ஸ்வாமி தான், மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்கு 5 நாள் கழித்து 'மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பின் பின்னணியில்' என்று எழுதிய செய்திக் கட்டுரையில் இதற்கு முழு காரணமும் யார் என்று தீர்மானமாக முடிவெடுத்து உறுதியாக எழுதுகிறார்'" மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தெளிவாக நாட்டுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், பம்பாய் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னும், இந்திய நகரங்களை தாக்குவதென்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என்பது தான்'.
மீண்டும் 2007 அக்டோபர் 14 ஆம் தேதிய நாளேட்டின் முதல் பக்கத்தில் 'அஜ்மீர் குண்டு வெடிப்பில் ஹர்க்கத் அல் ஜிஹாதின் பங்கு – புதிய தகவல்கள்' என்ற தலைப்பில் ஹுஜி அமைப்பைச் சேர்ந்த இரு பங்காளிகள் டெ;டனேட்டர்களை செல்போனுடன் இணைத்து அதனை மக்கா மஸ்ஜிதில் வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்' என்று எழுதினார்.

இவ்வாறு காவல் துறையின் ஊதுகுழலாக தனது கட்டுரைகளை எழுதுவது மட்டுமல்லாமல், ஆசிரியர் குழுவில் தனக்குள்ள செல்வாக்கினால் தலையங்கங்களை கூட தனது விருப்பத்திற்கிணங்க வெளியிட காரணமாகியுள்ளார்.

இன்று அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் சம்பவங்களின் பின்னணியில் அபினவ் பாரத் என்ற தீவிர ஹிந்துத்துவ அமைப்பும், ஆர்எஸ்எஸ் குண்டர்களும் சம்பந்தப்பட்டுள்ள உண்மை வெட்ட வெளிச்சமான பின்பு – 2007 தலையங்கம் மற்றும் செய்தி வெளியீட்டிற்காக 'தஹிந்து' மறுப்போ, வருத்தமோ தெரிவிக்க முன்வருமா?

பத்திரிக்கையின் தரத்தை கேள்விக்குறியாக்கிய பிரவின் ஸ்வாமியை ஓரம் கட்டுமா?

ஈரானிய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை அமெரிக்கா தற்சமயம் ஒப்புக் கொண்டதும், அமெரிக்கா வருத்தம் தெரிவிக்க வேண்டும், நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறன்றது.

அதுபோல் ஹிந்துவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும், நஷ்ட ஈடு வழங்கவேண்டுமென நாமும் போராட ஆரம்பித்தால் தான் முஸ்லிம்களின் மீதான பத்திரிக்கை தீவிரவாதம் சற்று மட்டுப்படும்.